மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் இன்று மறைந்ததாக அறிந்தோம்.  உலகத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்குப் பதிவுகள் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பதிவுகள் இணைய இதழில்  எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள்  ' சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை 'யில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சை.பீர்முகம்மது பற்றிய குறிப்பையும், அறிமுகப்படுத்திய சை பீர்முகம்மது அவர்களின் சிறுகதையினையும்  அவர் நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம்.


 சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 8!
அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது   - ஜெயந்தி சங்கர் -

மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.

பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதான காலங்களில் சிங்கப்பூரின் தமிழ்முரசு இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கியதால் விடாமல் வாசித்தார். மாணவர் மணிமன்றத்தில் நிறைய மாணவர்கள் எழுதினார்கள். தானும் எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தவர் சின்னச்சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு பேச்சுப்போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். பள்ளியில் சை.பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தமிழர்கள்.

தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனான இவர் பத்து வயதில் தான் பள்ளியில் சேர்க்கப் பட்டிருக்கிறார். சில ஆண்டுகளிலேயே இவரது தந்தை தனது இரண்டாம் மனைவியின் மூலம் வரிசையாகப் பிறந்த 13 குழந்தைகளையும் குடும்பம் பெருகுவதையும் காரணம் காட்டி படிப்பை நிறுத்திக் கொள்ளச் சொன்னார். இதைக் கேட்ட சை.பீர்முகம்மது வீட்டை விட்டு ஓடிப்போய், பெரியப்பா வந்து கூட்டிப் போகும் வரை ஒரு பஞ்சாபி குடும்பத்துடன் நான்காண்டுகள் வசித்தார். நான்கு மணிக்கு எழுந்து பஞ்சாபி வீட்டு மாடுகளையும் கொட்டிலையும் சுத்தப்படுத்திப் பராமரிந்து வந்திருக்கிறார். பள்ளி விட்டு வீடு திரும்பி மாடுகளை மேய்க்கக் கூட்டிப்போய் வந்து இரவில் தான் தன் பாடத்தைப் படிப்பார்.

பள்ளியை விட்டு வெளியேறியது பிறகும் இவருக்கு மாணவர் மணிமன்றம் போன்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டிருக்கிறது. மாணவர் மணிமன்றம் போன்ற ஓர் அமைப்பை குவாலலம்பூரில் துவங்கினர். 1964ல் பினாங்கில் ஒரு மாநாடும் நடந்திருக்கிறது. ஏழு ஊர்களில் இதேபோல ஆரம்பிக்கப்பட்ட மன்றங்கள் சேர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. இதன் முதல் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் இந்த அமைப்பு மலேசியாவெங்கும் விரிந்து பல கிளைகள் உருவாகின.

இளமையில் கல்கண்டு பத்திரிக்கையின் கேள்வி பதில் அங்கத்தை வாசித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டதாகச் சொல்லும் இவர் ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து நடத்திய முத்தமிழ்ப் படிப்பகம் என்ற தனியார் நூலகத்தைத் தன் வாசிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார். படிப்பு நின்று போனதும் ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட்டிடம் வேலைக்குச் சேர்ந்து வேலைக்கு இடையில் தமிழகத்திலிருந்து வந்த அனைத்து இதழ்களையும் வாசித்தார்.

மு.வ, அகிலன், நா.பா, க.நா.சு, புதுமைப்பித்தன் என்று துவங்கிய இவரது வாசிப்பு ஜெயகாந்தனில் வலுப்பெற்று மௌனி, லா.ச.ரா என்று நீண்டு சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களில் லயித்திருக்கிறது. குறிப்பாக பிரபஞ்சனின் 'பிரும்மம்' சிறுகதை இவருக்குள் மாற்றுச் சிந்தனையை விதைத்ததாகச் சொல்வார். இவரது கணிப்பில் ஜோ.டி.குரூஸ் எழுதிய ஆழிசூழ் உலகு 2000க்குப் பிறகு வெளியான புதினங்களில் முக்கியமானது.

'வண்மணல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'பெண் குதிரை' எனும் நாவல், 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் பயண நூல், 'மண்ணும் மனிதர்களும்' எனும் வரலாற்றும் இந்தியப் பயண நூல், 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்' ஆகியவை இவரது நூல்கள். இது தவிர, மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் எனும் கட்டுரை நூலையும் தொகுத்துள்ளார். 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் நூலை எழுதியதன் மூலம் இவர் மலேசியநாட்டில் பயண இலக்கியக் கட்டுரைகளுக்கான புதுப் பாதையை வகுத்துள்ளார். இந்நூலில் தன் திறமையின் மூலம் கட்டுரைக்குள் கதைக்குரிய சுவாரஸியத்தைக் கொணரமுடியும் என்றும் நிரூபித்துள்ளார். மலேசியத் தமிழிலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனும் முக்கிய நோக்கத்துடன் 93 மலேசிய எழுத்தாளர்களுடைய 50 ஆண்டு சிறுகதைகளை 'வேரும் வாழ்வும்' எனும் பெயிரில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார்.

பிற இனங்களையும் சமயங்களையும் அவற்றின் சிறப்பான கொள்கைகளையும் கூறுகளையும் போற்றி மதிக்கும் மாண்புடைய இவர் எங்கே குறை கண்டாலும் வெறுப்பவராக இருக்கிறார். அத்துடன் அதை வெளிப்படுத்தத் தயங்காத துணிச்சல் கொண்டவராகவும் அறியப் பெறுகிற இவரின் படைப்பு முதன்முதலில் தமிழகப் பத்திரிக்கையில் பிரசுரமானது 1966ல். சிங்கப்பூர் மலேசியாவுக்கு வந்திருந்த தீபம் இதழின் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள் இவருக்கு நண்பராகி, சை.பீர்முகம்மது எழுதியனுப்பிய மலேசிய நிகழ்வுகளை 'கடல் கடந்த இலக்கியம்' என்ற பெயரில் தொடராகப் பிரசுரித்தார்.

இளம்/வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பண்பாளருமான இவர் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், உதவித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து இந்திய குத்தகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நல்ல எழுத்தையோ படைப்பையோ அடையாளம் காணும் போது அங்கீகரிக்கும் மூத்த மலேசிய எழுத்தாளர் மட்டுமின்றி தமிழிலக்கியம் சார்ந்த விலாசமான அறிவுடைய இவர் சுவாரஸியமான ஒரு மேடைப் பேச்சாளரும் கூட.


சிறுகதை: சிவப்பு விளக்கு - சை.பீர்முகம்மது -

கோலாம்பூர் ‘ரயில்வே ஸ்டேசனி’ லிருந்து கூச்சல், சுறுசுறுப்பு, வெளிச்சம் ஆகிய அனைத்தையும் வாரிப்போட்டுக் கொண்டு அந்தக் கடைசி வண்டி போய்விட்ட பிறகு, பிச்சைக்காரன் சாப்பிட்டுவிட்டுப் போட்ட எச்சில் இலையைப் போல் 'ஸ்டேசன்’ ஹோவென்று இருந்தது. தூரத்தே ‘கேபினுக்கு’ப் பக்கத்தில் நின்ற கைகாட்டியின் சிவப்பு விளக்கு மாத்திரம் அந்த இரவு நேரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் ‘கொட்டக் கொட்ட’ விழித்துக் கொண்டிருந்தது.

அந்த சிவப்பு விளக்கிலிருந்து தனது பார்வையை எடுக்காமல் கடைசியாகப் பீடித் துண்டை நன்றாக உறிஞ்சி இழுத்துப் புகையை வெளியே விடாமல் ‘தம்’ பிடித்த வாறே பீடித் துண்டைத் தூக்கிச் சாலையில் வீசினான் காளிமுத்து. வீசப்பட்ட வேகத்தில் பீடித்துண்டில் இருந்த நெருப்பு, பொறிகளாகி அழகு காட்டிப் பின் அவ்வழியே சென்ற காரில் அடிப்பட்டுத் தன் கடைசி மூச்சை விட்டது. காளிமுத்து ‘தம்’ பிடித்து அடக்கி வைத்திருந்த புகையை இலேசாக வெளியே விட்டான். வலப்புறத்தில் மடித்து வைத்திருந்த காகிதக் கட்டை அவிழ்த்து அதிலிருந்த இரண்டு முரட்டுக் காகிதங்களை ஒன்றாக இணைத்துத் தரையில் விரித்தான்.பின் தனது கட்டையை அதில் கிடத்தினான். கைகள் தாமாகவே தலைக்குக் கீழ் தலையணையாகப் போய்ப் பொருதிக் கொண்டன. மனத்தில் எந்தக் கவலையும் இன்றி-எதிர்காலம் பற்றிய இலட்சியமோ-கனவோ-டிகாள்கையோ இன்னும் எதை எதை இங்கே சொல்லலாமோ அவை எல்லாவற்றையுமே மறந்த நிலையில் துடைத்து வழிக்கப் பட்ட மனத்தினனாய் கால்மேல் கால் போட்டுக் கொண்டு காளிமுத்து கண்ணை இலேசாக மூடினான்.ஓ...! அது தான் எவ்வளவு சுகமான ஏகாந்த நிலை!

கோலாம்பூர் ‘ரல்யில்வே ஸ்டேசனு’க்குப் பக்கத்தில் இந்நாட்டின் பொருளாதாரத்தை- அதன் வளத்தை எடுத்துக் காட்டியவாறு தலைக்கு மேல் கிழக்கு மேற்காக ஓடிய மேம்பாலத்தை உறுதியாகத் தாங்கி நின்ற ‘சிமிண்ட்’ சுவருக்கடியில் தான் காளிமுத்துவின் இரவு நேர வாழ்க்கை நடந்து கொண்டு வருகின்றது. பகலில் காளிமுத்து எங்கெங்கோ போவான், எதை எதையோ செய்வான், அவன் அப்படிச் செய்துதான் ஆக வேண்டும். வயிறென்ற ஓன்றும் அதனோடு சேர்ந்தே அவதரித்த பசியென்ற ஒன்றும் இருக்கும் பொழுது எதையாவது செய்து தானே தீர வேண்டியிருக்கின்றது! ரிஷிமூலமும் நதிமூலமும் பார்க்கக் கூடாதது போல் காளிமுத்துவின் பகல்நேர வாழ்கையும் ஆராயாமல் விட்டு விடக் கூடியது அல்ல.

காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்புறமாக இருக்கும் குப்பைத்தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொருக்கிக் கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு ‘சௌக்கிட் ரோட்’ வெள்ளை மாளிகையில் ஒரு’பாயுண்ட்’ அடிக்க வந்து விடுவான். அங்கே ஏழரை மணி வரையில் பொழுது இனிமையாகக் கழியும். அதன் பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் தூங்க வந்துவிடுவான். மீண்டும் மறு நாள் காலையில் பெரிய மார்க்கெட், குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை...

காளிமுத்து கண்ணை இலேசாக மூடினான். மேம்பாலத்தினடியில் இருந்த சுற்றைச் சுற்றிக் கொண்டு ஓடிய வாகனங்கள் அவனது தூக்கத்தை எப்பொழுதுமே கொடுத்ததில்லை. ஆனால் இன்று, காளிமுத்துவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அதற்குக் காரணம் பக்கத்தில் தொடர்ந்து விடாமல் கேட்டுக்கொண்டிருந்த ‘முனகல்’ சத்தம்தான்.

மேம்பாலத்தின் ‘சிமிண்ட்’ சுவருக்கருகே காளிமுத்து மட்டுமே தூங்கவில்லை. இன்னும் சொந்தத்தில் கூரையில்லாத சிலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் மவுண்ட் பாட்டன் ரோட்டின் வாடிக்கைக்காரன் அமீது, ’முனிசிபல் கார்பார்க்’ ஆபெங்’ இன்னும் பலருக்கு தஞ்சமளித்திருந்தது.

இந்த மேம்பாலம். அமீதும் ஆபெங்கும் தான் காளிமுத்துவின் நெருங்கிய நண்பர்களாகக் கடந்த வாரம் வரையிலும் இருந்தார்கள். அமீதுக்கு அரசாங்க ஆதரவில் ஏதோ ஓர் இடத்தில் தஞ்சமடையும் பாக்கியம் கிடைத்துவிட்டதாக நேற்று தான் கள்ளுக்கடையில் அவன் கேள்விப் பட்டிருந்தான். இனி அமீது பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை. ஆபெங்கிற்கும் காளிமுத்துவிற்கும் பழைய நிலை தான்.என்றாலும் இருவரும் கடந்த ஒரு வார காலமாகப் பேசிக் கொள்வதில்லை. ‘ஆபெங்’ அத்துமீறி பெரிய மார்க்கெட் எல்லையில் புகுந்து பிச்சை எடுக்க ஆரம்பித்ததால் இருவருக்கும் தகராறு. இரண்டு நாட்களாகவே ஆபெங் தொழிலுக்குப் போகவில்லை. சரியான காய்ச்சல். முக்கலும் முனங்கலுமாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். காளிமுத்துவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நட்பு முறிந்து நின்றாலும் அன்பும் பண்பும் இதயத்தில் பின்னி அவனை எழுந்து உட்கார வைத்தன. எப்படிப் போய் பேசுவது?

அன்புக்கு வாய்மொழி ஏது? காளிமுத்து ‘பொசு’க் கென்று எழுந்து ஆபெங்கின் அருகில் சென்று அவனைத் தொட்டுப் பார்த்தான். கை சுரீரென்று சுட்டுவிடவே கையை எடுத்துக் கொண்டான்.’பகல் பன்னிரென்டு மணி வெயிலு போலக் காய்ச்ச அடிக்குது. இப்படிப் பொணம் போல கிடக்கிறானே. பாவி மகன்’- காளிமுத்து விறுவிறுவென்று ரயில்வே பாலத்தைத் தாண்டிப் பதினைந்தாம் கட்டை இறக்கத்தில் இருந்த சாப்பாட்டுக் கடையில் நுழைந்தான். திரும்பி வரும் பொழுது கையில் ‘பட்டர்’ தடவிய ரொட்டித் துண்டுகளும் ஒரு பால் டின் குவளையில் வறக் கொப்பியும் ‘ஆஸ்ப்ரோ’ மாத்திரைகளும் இருந்தன.

ஆபெங்கை எழுப்பினான் காளிமுத்து. அவன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தானேயொழிய எழுவதாகக் காணோம். கையிலிருந்த பொருட்களைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி தனது உடலோடு சாய்த்துக் கொண்டு மாத்திரைகளை வாயில் பொட்டு, கொப்பியையும் ஊற்றினான். இரண்டு ‘மொனரு’ குடித்த பிறகு ஆபெங் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ரொட்டித் துண்டையும் கொப்பிக் குவளையையும் அவன் கையில் கொடுத்துத் தின்னும்படி சொன்னான் காளிமுத்து.

ஆபெங்கின் உடல் வியர்த்தது. பக்கத்தில் ரயில்வே ஸ்டேசனில் எப்பொழுதாவது கண்ணில் படும், கரி போட்டு ஓடும் ரயில் என்ஜினின் நிறத்தில் ஒரு துணி இருந்தது. அதை எடுத்து ஆபெங்கின் வியர்வையைத் துவட்டி எடுத்தான் காளிமுத்து.

“நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போயேன்”-காளிமுத்து அந்த துண்டை தரையில் விரித்து வைத்துவிட்டு ஆபெங்கை நிமிர்ந்து பார்த்தான்.
“போகத் தான் வேண்டும். அந்த ஜெனரல் ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சாலாவது இந்தக் காய்ச்சல் குறையுமென்று நான் நினைச்சேன். அங்கேயும் இப்போது ‘கார்ட்’ எடுக்க ஐம்பது காசு கொடுக்கணுமாம். நான் எங்கே போவேன். இந்த நாளா தொழிலுக்கு வேறே போகலே. இந்த உடம்போட நான் தனியா எப்படிப் போறது? ஆடிபங் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பேசி முடித்தான். அவனுடைய குரலில் ஏக்கமும் பழைய பகை மறைந்த நிலையும் இருந்ததை காளிமுத்து உணர்ந்தான்.

சரி, நாளைக்குக் காலையிலே நான் உங்கூட வர்றேன். உன்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மருந்து வாங்கிக் கொடுத்துட்டு அப்புறம் நான் ‘பெரிய மார்க்கெட்’டுக்குப் போறேன். ஆனால் அதுக்குள்ளாற என் காலை வரும்படி போயிடும். அதுகென்ன...காசு பெருசா-உன் உடம்பு பெருசா? சரி சரி; காலையிலே எழுந்திரிச்சு, ஆக வேண்டியதைக் கவனிப்போம். நீ படுத்துக்கோ! இந்தா? இது இன்னிக்கு மார்க்கெட் ஸ்தீரிட் சந்தில் கிடைத்த போர்வை. இதை எடுத்து போர்த்திக்க. காளிமுத்து தனது படுக்கையில் சுருட்டி வைத்திருந்த கிழிசல் விழுந்த-குடலைப்பிடுங்கும் நாற்றமெடுத்த அந்த பொர்வையை எடுத்து ஆபெங்கிடம் நீட்டினான். அவன் அதை வாங்கிக் கொண்டான். அந்தக் கிழிசலும் நாற்றமும் அவர்களுக்குள் பழகிப் போய்விட்டது. அவர்களிடையே அத்தரும்- பவுடரும் மணந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிலை. நாற்றமும்-கிழிசலும்-புண்ணும்-சிரங்கும்-சீழும் தான் அவர்களுடைய வாழ்க்கை மூலதனம்.

காளிமுத்து இருட்டில் எழுந்து போய் சிறிது நேரம் ‘நின்றுவிட்டு’வந்து படுத்துக் கொண்டான். ஆபெங்கும் அந்தக் கிழிசல் போர்வையைப் போர்த்திக்கொண்டு கட்டையைச் சாய்த்துக் கொண்டான்.

அன்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களாகவும் ஆபெங்கை அந்த இடத்தில் காணவேயில்லை. ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்த இரண்டு நாட்களிலேயே அவன் புதிய தெம்பும் உற்சாகமும் பெற்றுவிட்டான். கடந்த மூன்று நாட்களாக அவனை மேம்பாலத்தினடியில் காணவேயில்லை. காளிமுத்து படுக்க வரும்பொழுதெல்லாம் ஆபெங்கின் இடம் ‘ஹோ’ வென்று காலியாகக் கிடந்தது.

மறுநாள் காலையில் ‘முனிசிபல் கார்பார்க்’ வழியாக காளிமுத்து பொய்க் கொண்டிருந்தான். அங்கே கார் பார்க்கின் நடுவில் நின்ற ஒரு பெரிய காரை ஆடிபங் கழுவிக் கொண்டிருந்தான். காளிமுத்துவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இப்பொழுது அவன் கண்கூடாகப் பார்க்கும் வரை ஆபெங் ஓர் உண்மையான நொண்டி என்று தான் அவன் நினைத்திருந்தான். அவர்களுடைய தொழிலில் பல ஏமாற்று வேலைகள் உண்டு தான். ஆனால், அந்தத் ‘தொழில்’ ரகசியம் வெளியாட்களுக்குத்தானேயொழிய அவர்களிடையே அல்ல! ஆபெங் இது நாள் வரையில் தன்னையே ஏமாற்றி வந்திருக்கிறானே? காளிமுத்து மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.தனது காலை இழுத்து இழுத்து நடந்தவாறு அவன் ஆபெங்கின் அருகில் சென்றான்.

‘’ஆபெங்!’’ காளிமுத்துவின் அழைப்பைக் கேட்டு தலைநிமிர்ந்துப் பார்த்தான்.’’ அடடே காளிமுத்துவா! வா! உன்னைத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று நாட்களாக உன்னைப்பார்க்க முடியவில்லை காளிமுத்து. நான் பிச்சை எடுக்கிறதை விட்டுட்டேன். இந்தக் காடி கழுவுற தொழில்லே நாலு அஞ்சு வரும்படி வருது. கொஞ்சம் உடலை வளைச்சு வேலை செய்யணும் அவ்வளவு தான். நான் இப்ப இங்கேதான் படுத்துக்கறன். நீயும் இந்தத் தொழிலுக்கு வந்துடேன்.’’ ஆபெங்’படபட’ வென்று பேசினான்.

காளிமுத்து சிரித்துக் கொண்டான்.’’சேச்சே! நமக்கு இந்தத் தொழில் ஒத்து வராது. பெரிய தொழிலே பழகிப் போச்சு. நீ நல்லா இருந்தா சரி, நான் வர்றேன்!’’ காளிமுத்து அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தான். ‘’காளிமுத்து, இந்தா இதை வச்சுக்கோ!’’ ஆபெங் ஒரு ஐம்பது காசு நாணயத்தை எடுத்து நீட்டினான். ஆனால் காளிமுத்து அதை வாங்கிக்கொள்ளவில்லை. அவனுள் ஏதோ ஓர் உணர்வு அதை வாங்கிக் கொள்ளத் தடுத்தது.

‘’பரவாயில்லை-நீ வச்சுக்கோ. என் கிட்ட காசு இருக்கு’’ காளிமுத்து காலை இழுத்து இழுத்துப் பெரிய மார்க்கெட்டை நோக்கி நடந்தான்.
அதன் பிறகு இரண்டு மூன்று மாதங்களாக இருவரும் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. அன்று மாலை மீண்டுமொருமுறை அந்த எதிர் பாராத சந்திப்பு நிகழ்ந்தது.

காளிமுத்து கள்ளுக்கடைக்கு மணியாகிவிட்டது என்று வேகமாக’மலாக்கா ஸ்தீரீட்’ பஸ்ஸ்டாண்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பின்னே சைக்கிள்; மணி பலமாக அடிக்கும் சத்தம் கெட்டுத் திரும்பிப் பார்த்தான். சைக்கிளில்’ஆபெங்’ சிரித்துக் கொண்டு மெதுவாக அவனருகில் வந்து நின்றான்.

காளிமுத்துவால் ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை சைக்கிளின் பின்னால் ‘கேரிய’ரில் சேர்த்துக் கட்டப்பட்ட ‘ஐஸ் கிரீம்’ பெட்டியுடன் சாம்பல் நிறச் சட்டையும் கால் சட்டையுமாக ஆளே மாறிய நிலையில் ஆபெங் காட்சியளித்தான்.

‘’என்ன காளிமுத்து! அப்படிப் பார்க்கிறே. நான்தான்! இப்போ காடி கழுவும் வேலையை விட்டுவிட்டு இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சு இருக்கிறேன். ஒரு நாளைக்குப் பத்துப் பதினைஞ்சு வருது! நாம் எப்பவும் இப்படியே இருக்க முடியுமா? வாழ்க்கையில் முன்னேறணும்-நீ எங்வே கள்ளுக் கடைக்குத் தானே போறே. சரி சரி; எனக்கு நேரமாகிவிட்டது -நான் ராத்திரியில் நாலு வீட்டில் காடி கழுவுகிறேன். அதையும் போய் கவனிக்க வேண்டும். இந்தா முப்பது காசு ஐஸ் கிரீமை ஒரு கை பாரு. நான் வர்றேன். வந்த வேகத்திலேயே அவன் ஓர் ஐஸ் கிரீமை காளிமுத்துவின் கையில் திணித்துவிட்டு சைக்கிளில் வேகமாகச் சென்றுவிட்டான். அப்பொழுது ‘மலாக்கா ஸ்தீரீட்’ பஸ் ஸ்டாண்டின் பக்கத்தில் இருந்த சாலை விளக்கு பச்சை நிறத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆபெங் விருட்டென்று அந்த விளக்கைத் தாண்டிச்சென்று விட்டான், கார்களும் சைக்கிள்களும் பச்சை நிறம் வருவதற்காக ‘கொடுக்குப் பிடித்து’ நின்றன. காளிமுத்துவின் மனம் சரியான நிலையிலில்லை. அவன் கள்ளுக் கடைக்குச் சென்று நிறையக் குடித்தான். அவன் மேம்பாலத்தடிக்குத் திரும்பும் போது சிங்கப்பூர் வண்டி புறப்பட்டுக் கொண்டிருந்தது. காளிமுத்து தாட்களைக் நீடி விரித்து அதில் ‘பொத்’தென்று விழுந்தான்.

தூரத்தே சிங்கப்பூர் வண்டி ஓடிமறைந்தது. கைகாட்டி சிவப்பு வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. காளிமுத்து அந்த சிவப்பு விளக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்கப்பூர் வண்டியில் ஏறியிருந்த அனைவருக்கும் பச்சை விளக்கைக் காட்டிய அந்தக்கைக் காட்டி அவனுக்கு மட்டும் சிவப்புவிளக்கைக் காட்டிக் கொண்டிருந்தது. காளிமுத்து பச்சை விளக்கு எரியும் போது கவனப்பிசகாக இருந்து விடுகிறான். அதனால் ஒரு நாளாவது அவன் கண்ணில் அந்தப் பச்சை விளக்குத் தெரியவில்லை.

ஆண்டுகள் பல ஓடி மறைந்தன. அன்று ஒரு பெரிய சீன சவ ஊர்வலம் அம்பாங் சாலை வழியாகச் சென்றது. பேண்ட் வாத்திய முழக்கமும் சீன இசையும் அம்பாங் சாலை முழுவதும் நிறைந்திருந்தது. போக்குவரத்து நின்றுபோய் விட்டிருந்தது. சவ ஊர்வலத்தில் கொடிகளும் கம்பங்களும் பல வர்ணத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பல பட்டுத் துணிகளில் பிரபல சீனவர்த்தக நிறுவனங்கள் அனுப்பி வைத்திருந்த அனுதாபச் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. சவ வண்டியின் முன்புறத்தில் ஆபெங்கின் படம் பெரிதாக மாட்டப் பட்டிருந்தது.

இந்த சவ ஊர்வலம் நடந்து சரியாக மூன்று மாதத்திற்குப் பிறகு மேம்பாலத்தினடியிலிருந்து ஓர் அனாதைப் பிணத்தை போலீசார் அகற்றினார்கள். அந்தப் பிணத்தின் கண்கள் தூரத்தே தெரிந்த கை காட்டியின் சிவப்பு விளக்கின் மேலே நிலைகுத்தி நின்றன.

நன்றி: பதிவுகள் ஆகஸ்ட் 2009


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here