தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ

திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி "திருவிடர்கள்" அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார.

இந்தத் திராவிடர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களாகக் காணப்படுகின்றார்கள். அப்படியானால், திராவிட மொழிகள் எவை? என்று அறியவேண்டியது அவசியம். திராவிட மொழிகளில் முக்கியமானவையாகக் கருதப்படுவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், வேறு பல இடங்களிலும் பேசப்படுகின்றன. அவற்றிலே சில வடமொழிக் கலப்புடையனவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 85 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில் இருக்கின்றன என்று அறிஞர்கள் சான்று கூறுகின்றார்கள். ஆனால், தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.

திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற பெயரிலே ராபர்ட் கால்டுவெல் (சுழடிநசவ ஊயடனறநடட) என்பவர் திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்து 1856 இல் ஒரு நூலை எழுதினார். அதற்குப் பிறகுதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதாவது இந்த நூல்த்தான் திராவிட மொழிகளை உலகத்தின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இனங்காட்டியது.

அடுத்து திராவிட மொழி இலக்கியகர்த்தாக்கள் யாரென்று பார்த்தால், தேவநேயப்பாவணர், பாரதிதாசன், சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ். தென்னரசு, கருணாநிதி, இலக்குவனார், சாலை இளந்திரையன், சாமி சிதம்பரனார், விந்தன், மு.வரதராசனார், குலோத்துங்கன், புலவர் ஆ.பழனி, பெருஞ்சித்திரனார், போன்று பலர் காணப்படுகின்றார்கள். அதிலே

“அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு
பிரிவிலை எங்கும் பேதமிலை”

என்று விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கும் படிக் கூறிய பாரதிதாசன் அவர்கள் பற்றியே இக்கட்டுரை எடுத்துறைக்கிறது. அவருடைய இப்பாடலிலே அறிவு என்பது விரிவுபட்டதாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். வாசிப்பே சிறப்பு. நூல்கள் வாசிப்பதனால், எம்முடைய அறிவு வளரும். விரியும், அதுதான் அறிவை அகண்ட அறிவாக மாற்றும். அதற்குப் பாடசாலைக் கல்வி மாத்திரமல்ல. நூல்கள் பல கற்பதும் அறிவுக்கு விருந்தாகின்றது. பேரரிஞன் பிளேட்டோ படிக்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பது மேல் என்று கூறினார். அதனால் படிப்பு அவசியம். அந்தப் படிப்பினால், அறியாமை விலகும். அறியாமை என்பது வெட்கப்படவேண்டியதுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடு என்று பெஞ்சமின் பிராங்ளின் சொல்லியிருக்கின்றார்.

அதோடு பல நூல்களைக் கற்கின்ற போது எமது சிந்தனை விரியும், எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்கத் தூண்டும். அதுதான் வள்ளுவர் கூறியது போல் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நாம் விளங்கிக் கொள்வோம். ஒரு நூலிலே ஒரு விடயத்தைச் சொன்னால், அதிலுள்ள ஒரு சந்தேகத்தைத் தீர்க்க அடுத்த நூலைத் தேடுவோம். இவ்வாறு தேடல் அதிகரிக்க அறிவும் விரிவாகும். உதாரணத்திற்கு நான் இன்று திராவிடம் என்று சொன்னால், அது என்ன? என்று தேட, அதன் பின் அதற்குரிய இலக்கியம் என்ன என்று தேட, அதன்பின் இலக்கியகரத்தாக்கள் என்று தேட ஒரு நூல் பல நூல்களை வாசிக்க உங்களைத் தூண்டும். அதனாலேயே இந்த வரிகளைப் பாரதிதாசன் எழுதினார். இப்போது யார் அந்த பாரதிதாசன் என்று பார்ப்போம்.

பாண்டிச்சேரியிலே 29.04.1891 அன்று கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தை தனது எழுத்து வன்மையினாலும் புரட்சிப்போக்காலும், பொதுவுடமை கொள்கையினாலும் தமிழகத்தின் சிந்தனையை எதிர்காலத்தில் தூண்டச் செய்யும் என்பதைப் பிறந்தபோது யாருக்கும் புரியவில்லை. அந்தக் குழந்தையே சுப்புரெத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனாகும்.

இவர் மகாகவி பாரதியார் மேல் பேரன்பு கொண்டு பாரதியார் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். சுப்புரெத்தினமாக இருந்த தன்னுடைய பெயரைப் பாரதிதாசனாக மாற்றினார். இவர் தமிழியக்கம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பாண்டியன் பரிசு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, மணிமேகலை வெண்பா, இசை அமுது, எதிர்பாராத முத்தம், பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், சஞ்சீவி பர்வதத்ததின் சாரல், வீரத்தாய், சிறு காப்பியம், காதலா கடமையா, இரணியன் ஓர் இணையற்ற வீரன், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்னும் புனை பெயர்களில் தன்னுடைய படைப்புக்களை எழுதி வந்தார். இவருடைய பாடல்களிலே பொதுவுடமை, இன விடுதலை, திராவிட உணர்வு, மொழிப் பற்று, தமிழ் தேசியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பண்புகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்னும் பாராட்டைப் பெற்று 25.000 ரூபாய் பரிசு பெற்றார். 1970 இல் இவருடைய பிசிராந்தையார் என்னும் நாடக நூல் சாகித்திய அகடமி பரிசு பெற்றது.

இவர் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்துப் பாடிய பாடல் பாரதியாரால் ஸ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. “எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று பாடிய பாரதிதாசனே பின் ஒருமுறை சுத்தானந்தபாரதியார் “கடவுள் இல்லையென்று என்று சொன்னவன் யாரடா என் அப்பனை தில்லையில் வந்து பாரடா” என்று கூற “சிற்றப்பலத்தானையும் சிதம்பரத்தானையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் என்னாளோ” என்று சமயமறுப்புக் கொள்கையுடன் பாடியிருக்கின்றார். இதற்குக் காரணம் என்ன நூல்களைக் கற்று இவறறின் கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்த அறிவு விரிவுதான் இவ்வாறு கூறக் காரணமாக இருந்தது.

கேள்வி கேட்கக் கேட்ட தெளிவு பிறக்கும் என்னும் சிந்தனைப் போக்கை தெளிவுறுத்தும் வகையில் கேள்வியால் அகலும் மடைமைபோல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது என விடிபுனல் பற்றி அவர் விதந்துரைத்த வார்த்தையிலே தன் பகுத்தறிவு சிந்தனையை உலகத்தின் விடியலுக்காக அவர் விளக்கினார்.

தமிழ்மொழி உலகத்தின் முதன்மொழி என்றும் அதன் சிறப்புப் பற்றியும் அந்நியநாட்டவர்கள் ஆராய்ந்து பேசியிருக்கின்றார்கள். அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த இடத்திலும் தாய்மொழியைத் தரக்குறைவாக எண்ணக்கூடாது. அது மட்டுமன்றி சிந்தனையில் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். ஏன் ஏன் என்று கேள்விகளைக் கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

கிரேக்கத் தத்துவஞானி சொக்ரடீஸ் . “யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்” என்று சொன்னார். அதாவது சிந்திக்கச் சிந்திக்கக் கேள்வி பிறக்கும் கேள்வி பிறக்கப் பிறக்க அறிவு விரிவுபடும்.

தமிழ்மொழியைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகின்றபோது

“தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்“ என்று

மொழிமேல் பற்றுக்கொண்டு பாடியிருக்கின்றார். இந்த மொழியுணர்வு பாடல்களைப் போலவே காதலுணர்வுப் பாடல்களையும் திராவிட இனத்தின் மேல் அவர் கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் பாடல்களையும் பாடியிருக்கின்றார். தான் ஒரு திராவிடன் என்பதில் அவருக்குப் பெரிய பெருமை இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ

இனப்பெயர் ஏன் என்று கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
நான் தான் திராவிடன் என்று நவில்கையிலே
தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்

என்று பெருமைப்படுகின்றார். தன்னுடைய இனத்தைப் பற்றிச் சொல்லும் போது

சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப் போர்த்திறத்தால், இயற்கை புனைந்த ஓருயிர் நான். என்னுடைய உயிர் இனம் திராவிடம் என்று சொல்வது மகிழ்ச்சிதான், பெருமைதான். ஆனாலும் அதைவிட ஒரு விடயத்தில் எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறி என்ன சொல்கிறார் என்றால், நான் ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி. அதனாலே, உன்னுடைய இனப்பெயர் என்ன என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீண்டும் மீண்டும் இன்பம் விழைவதாம். என்கிறார். ஆரியன் என்னும் சொல்லிலே அவருக்கு எப்படி வெறுப்பு இருந்திருக்கிறது பாருங்களேன்.

அவர் நேசிக்கின்ற திராவிடர்களுடைய கடமைகளாக அவர் சொல்வது

மண்வீட்டைத் திறப்பாய் - சாதி
மதக்கத வுடைத்தே

என சாதி மதக் கொள்கையை விடச்சொல்கிறார். அத்தோடு

புனைசுருட் டுக்குப்பை அன்றோ – பழம்
புராணவழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டு வைக்காதே

என்கிறார். இந்தப் புராணக் குப்பைக்கு உதாரணமாக இரண்டு கதைகளை உங்களுக்குச் சொல்லுகின்றேன். அடியாருக்கு பிள்ளைக்கறி சமைத்த கதை ஒன்று அடுத்தது விநாயகக் கடவுளுக்கு யானைத் தலை வந்த கதை. முதலாவதாக பிள்ளைக்கறி சமைத்த கதையை எடுத்துப் பார்த்தால், சிறுத்தொண்டர் என்னும் ஒரு சிவ பக்தருக்கு ஒரே ஒரு பிள்ளையாகிய சீராளன் என்னும் ஒரு மகன் இருந்தான். ஒருநாள் சிவபெருமான் சிவதொண்டர் வடிவத்திலே சிறுத்தொண்டர் வீட்டிற்கு வந்து எனக்கு ஒரு பிள்ளை இருக்கும் வீட்டிலுள்ள பிள்ளையைக் கறி சமைத்துத் தர வேண்டும். அந்தப்பிள்ளையை அம்மா பிடித்திருக்க அப்பா அரிந்து தர வேண்டும் என்று கேட்டாராம். உடனே சிறுத் தொண்டரும் தன்னுடைய மகனைச் சமைத்து சிவஅடியாராக வந்திருந்த சிவபெருமானுக்கு உணவாகப் படைத்தாராம். சிவபெருமானும் உன்னுடைய பிள்ளையைக் கூப்பிடு அவனுடனேயே உணவருந்த வேண்டும் என்று சொன்னாராம். உடனே சிறுத்தொண்டர் சீராளன் என்று தன்னுடைய மகனை அழைக்க அவனும் அங்கே ஓடி வந்தானாம். இந்தக் கதையை உள்வாங்குங்கள்.

இதேபோல் அடுத்த கதையாக ஏன் விநாயனருக்கு யானைத்தலை இருக்கின்றது என்று பார்ப்போம். பிள்ளையாரைக் காவலுக்கு வைத்து விட்டு பார்வதியாகிய அம்மா நீராடச் சென்றாராம். யாராவது இந்தப் பக்கம் வந்தால், விடாதே என்று சொல்லிவிட்டுப் போனாராம். இந்த நேரத்திலே சிவபெருமான் அந்தப் பக்கம் வந்து பார்வதியைப் பார்க்கப் போக பிள்ளையார் தடுத்தாராம். அதைக்கேளாமல் சிவபெருமான் மீண்டும் போக பிள்ளையார் விடவில்லையாம். அதனால், கோபம்கொண்ட சிவபெருமானும் தன்னுடைய சூலாயுமதத்தால் பிள்ளையாருடைய தலையைச் சீவினாராம். தலையறுந்து கிடக்கும் தன்னுடைய பிள்ளையைக்க ண்டு உமாதேவியார் அழுதபோது. நீ கவலைப்படாதே நம்முடைய மகனுக்குத் தலையைப் பொருத்தி விடலாம் என்று சொல்லி அங்கு வந்த தேவகணங்களிடம் யாராவது வடக்கே பார்த்துக் கொண்டு தூங்கினால், அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாராம். அவர்களுக்கு முதலில் அகப்பட்டது யானைதானாம். அதனால், அதனுடைய தலையை வெட்டினார்களாம். பாவம் அந்த யானை. அவர்கள் கொண்டு வந்த யானைத தலையைத் தன்னுடைய மகனுக்குப் பொருத்தினாராம். இதற்கு ஏன் யானையை வெட்டித் தலையைப் பொருத்த வேண்டும். தன்னுடைய மகனுடைய தலையையே ஒட்டியிருக்கலாமே. இவை போன்ற கதைகளைததான் புனை சுரட்டுக் குப்பைகள் என்று பாரதிதாசன் சொல்லுகின்றார்.

திராவிடர் கடமை போல திராவிடர் ஒழுக்கங்கள் என்னவென்றும் பாடல் பாடியிருக்கிறார்.

திராவிடர்களுடைய ஒழுக்கம் பற்றிக் கூறும்போது

திரும்பும் பக்கமெலாம் பெருமக்கள் தேவை யுணர்ந்திடடா!
தீயபொ றாமையையும் - உடைமையிற் செல்லும் அவாவினையும்
காயும் சினத்தினையும் - பிறர் உளம் கன்ற உரைப்பதையும்( தீயினால் சுடு;டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு)
ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்
அறம் பிறக்குமடா!

தூய அறவுளத்தால் - செயலினில் தொண்டு பிறக்குமடா!
ஏயும் நற்றொண்டாலே - பெரியதோர் இன்பம் பிறக்குமடா!
தீயும் குளிருமடா - உனையண்டும் நோயும் பறக்குமடா!
வாயில் திறக்குமடா! - புதியதோர் வழி பிறக்குமடாஇ

திராவிடர் புரட்சித் திருமணம் பற்றிக் கூறும்போது

திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலன்றிப் பெருமக்களால் மிகுதியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தம் ஊரில் உள்ளவர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும்; தலைவர்கட்கும் தொல்லை இராது.

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மணவீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.
2. இசை: திராவிடர் நாட்டுப் பண்.
3. மணமக்கள் அவைக்கு வருதல்.
4. முன்மொழிவோர் அவையில் எழுந்துஇ 'அவைத் தலைமை தாங்கி இத் திருமணத்தை முடித்துத் தரும்படி இன்னாரை வேண்டிக் கொள்கிறேன்' என்று முன் மொழிதல்.
5. அவையத்தாரின் சார்பில் ஒருவர்இ 'அதை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று வழி மொழிதல்.
6. முன் மொழிந்தார்இ வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்து வருவார்கள்.
7. அவைத் தலைவர் முன்னுரை.
8. திருமணம் நடத்தல்: மணப்பெண் 'இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன்' என்று சொல்ல மணமகனும் அவ்வாறு அப்படியே சொல்ல இருவரும் மாலை மாற்றுவார்கள் கணையாழி மாற்றுவார்கள்.

'வாழ்க' என முழங்குவார்கள் அதன்பின் தலைவர்இ அறிஞர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள்

வந்திருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு முதலியவை வழங்குதல்.

இந்த நடைமுறைக்கு முதல் நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வதுண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

பெண்களைப் பற்றிக் கூறுகின்ற எழுதுகின்ற போது பெர்னாட்ஷா கூறிய மொழி, கைம்மைப்பழி. கைம்மைக் கொடுமை. அதாவது கணவனை இழந்தவள். மூடத்திருமணம் அதாவது மணமகளுக்குப் பொருந்தாத திருமணம், எழுச்சியுற்ற பெண்கள். குழந்தை மணத்தின் கொடுமை. அதாவது குழந்தை மணத்தின் கொடுமை என்றால், சிறுவயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலே இருந்திருக்கின்றது. உதாரணமாக பாரதியாருக்குத் திருமணம் நடக்கும் போது பாரதியாரின் மனைவி செல்லம்மாளுக்கு 7 வயதும் பாரதியாருக்கு 14 வயதுமாக இருந்திருக்கிறது. இது இப்போது சட்டப்படி குற்றம். இதை அன்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். பெண்ணுக்கு நீதி, கைம்பெண் நிலை, கைம்மைத் துயர், கைம்மை நீக்கம், இவ்வாறு உலகத்தைத் தன்னுடைய பாட்டுத் திறத்தாலே பாலித்திருக்கின்றார். பாலித்திருக்கின்றார் என்றால், பாதுகாத்திருக்கின்றார்.

இதேபோலக் காதல் உணர்வுப் பாடல்களையும் பாரதிதாசன் அதிகமாகப் பாடியுள்ளார்.

“கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

என்னும் வள்ளுவர் வரிகளுக்கொப்ப சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்னும் கவிதையிலே “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்று காதலியின் பார்வைக்கு இருக்கும் மகத்துவத்தைக் காண்கின்றார்.

காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரண பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாக பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைக்கப்படுகின்றார்கள்.

எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்
செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்
புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!
பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,

கீழுள்ள வரிகளில் காதலின் வர்ணனை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

பட்டாணி வண்ணப் புதுச்சேலை - அடி
கட்டாணி முத்தே உன் கையாலே - எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை – உடல்
பட்டாலும் மணக்கும் அன்பாலே

எட்டாத தூரம் இருந்தாலும் - உனை
எட்டும் என் நெஞ்சம் மென்மேலும் - அது
கட்டாயம் செய்திட வந்தாலும் - நீ
ஒட்டாரம் செய்வதென் போங்காலம்

ஆவணி வந்தது செந்தேனே – ஒரு
தாவணி வாங்கி வந்தேனே - எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்
போகவும் மனம் நொந்தேனே

காதலின் தவிப்பும் காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது

தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

எனக் கண்களை கெண்டைமீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.

இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும் வண்ணக்களஞ்சியப்புலவர்

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம்குளிர் புனல்என நெடிய
கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல் அசையாது
விரிசிறை அசைத்துஅந்த ரத்தில்நின்று எழில்சேர்
மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!

மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே விம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன. அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடுகின்றார்.

மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.

இதே கண்களை

வள்ளுவர் 1093 ஆவது குறளிலே

நோக்கினாள் நோக்கின் இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

என்னும் வரிகளுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என பொருள் கூறுகின்றார்.

இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளிலே

கூடத்திலே மனப் பாடத்திலே- விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை,
ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே,
பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்

என பாடியிருக்கின்றார்.

“உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே” என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கண்களுக்குக் கவிஞர்கள் எப்படி ஆலாபனை செய்திருக்கின்றார்கள். பாருங் கள்.

பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது.

செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள் அழகியோன் வந்தான்

இவ்வாறு பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவனை வெற்றிலை கொடுத்து அனுப்பிவிட்டு உணவுண்ணச் செல்கின்றாள் இங்கு அவளின் காதலுள்ளம் தௌ;ளத்தெளிவாகப் புலப்டுகின்றது.

உணவுண்ணச் சென்றாள், அப்பம்
உண்டனள், சீனி யோடு
தணல்நிற மாம் பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
மனம்ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
நிகராமோ இவைகள்' என்றாள்.

வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார்

புதுமலர் அல்ல காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்ப தொன்றே!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை மூதாட்டி உரைக்கும் போது

அறம் செய்த கையும் ஓயும்!
மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம் கேட்ட காதும் ஓயும்!
செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவரைச் சுமக்கும் என்றன்
மன மட்டும் ஓய்தலில்லை

என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணலாம்.

காதலிலும் பொதுவுடமையைக் கருத்துக்களையும் புரட்சியையும் கையாண்டவர் பாரதிதாசன்.

'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்
அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்
அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!
'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று
வார்த்தை சொன்னாள் குப்பன் யோசித்தனன்! -- தன்னை
இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'
என்றன மூட வழக்க மெலாம் -- தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்
கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில
கண்ணற்ற மூட உறவினரும்

வீதியிற் பற்பல வீணர்களும் வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்
தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்
கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!

கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!
காதல் அடைதல் உயிரியற்கை! -- அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி
சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்
கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில் வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன்.

இவ்வாறு அற்புதமான கவிதைகளை பாரதிதாசன் எமக்களித்து 21. 04. 1964 ஆம் ஆண்டு எம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.

கவிஞர் ஹீட்ஸ் வாழ்ந்த காலங்கள் - 22 வயதுவரை
ஷெல்லி வாழ்ந்த காலங்கள் - 26 வயதுவரை
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - 29 வயதுவரை
பாரதியார் - 39 வயதுவரை
பாரதிதாசன் - 73 வயதுவரை

மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற
மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்
உரத்தினிலே குண்டுபோகும் வேளையிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்