முன்னுரைவள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாயச் சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் போன்று வாழவேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்படைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். உலகம் பல சமுதாயங்களால் ஆனது என்றாலும் ஒவ்வொரு சமுதாயம் அச்சமுதாயத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் சமுதாயத்தின் நன்மைக்கு என அமைந்த அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்குமானால் உலகில் உள்ள எல்லா சமயங்களும் பிணக்கு இன்றி, பகையின்றி அன்போடும், நட்போடும் விளங்கும் எனவும் ஒரு குலம் போல் வாழும் எனவும் உணர்ந்தார். ஆகவே, ஒவ்வொரு நாடும் அதனைச் சார்ந்த குடும்பங்களும், சமுதாயமும், அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலத்தார் போல் வாழ்வதற்கு திட்டமிட்டார். அத்திட்டமே திருக்குறளாக விளங்குகிறது. மறுபிறப்புச் சிந்தனைகள் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழும் மக்கள் சிறந்ததாகக் கருதிப் போற்றும் மனித நடத்தையையும் வழக்கங்களுமே ஒழுக்கமாகும். இவ்வொழுக்கம் முதலில் சான்றோர்களை நிலைக்களமாகக் கொண்டு புலப்பட்டு நிற்கும். அச்சான்றோர்கள் சிலவற்றை இவை செய்ய தகாதானா,தகாதனை என்றும் விதிக்கவும் விலக்கவும் செய்வார். உலகத்தின் இயக்கத்தைக் கூர்ந்து நோக்கும் இடத்து ஓர் உண்மை புலனாகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒர் ஒழுங்குக்கு உட்பட்ட நிலையிலே இயங்கி வருகின்ற என்பதுதான் அது. அவ்ஒழுங்குக்கு உட்பட்ட நிலைதான் அறம் என்பது.
தனி மனித அறம்:
அறத்தை வளர்ப்பதற்கும் மறத்தைக் குறைப்பதற்கும் வாழ்வு என்ற பெரும் வாய்ப்பு மனிதச் சமுதாயத்திற்கு உள்ளது. ஆகவே, ஒவ்வொருவரும் அறத்தை வளர்க்காதது போனால் வீடு கெடும், சமுதாயம் கெடும், அரசியல் கெடும், தொழில் கெடும், முயற்சி கெடும் இவை எல்லாம் கெடுவதால் தனி மனிதன் வாழ முடியாது, கடமையாற்ற முடியாது. இத்தகைய தீமையெல்லாம் அறத்தைச் செய்யாமல் அறத்தை மறுப்பதனால் ஏற்படுகிறது வேறு எதனாலும் இவ்வளவு தீமை ஏற்படாது. அதனால்,
“ அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு” (32)
என்கிறார். அறத்தாலும் மறத்தாலும் எதிர்காலத்தில் விளையவிருக்கும் நன்மையையும், தீமையையும் சுட்டிக்காட்டும் முகத்தான் இம்மையும் மறுமையும் வாழ்வும், முயற்சியும் நலமாய் அமைவதற்கு இன்பமும் புகழும் தோன்றுவதற்கு தீமை, பழி முதலினை ஏற்படாமல் இருப்பதற்கு அறம் அவசியம் என்பது புலப்படுகிறது.
அடக்க முடையவனாய் வாழ்பவனுடைய சிறப்பைப் பற்றி கூறுகையில் அத்தகைய அடக்கமுடைய மனிதனுக்காக அறம் அவன் வழியில் சென்று காத்திருக்கும் என்று கொள்கையை வெளிப்படுத்துபவராய்
“கதங் காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து”(130)
என்று கூறுகிறார். ஆசையை அடக்கி வாழ்பவன் மறு உலகிலும் போற்றப்படும் சிறப்பைப் பெறுவான் என்றும், அழிவில்லாத இன்பம் வாழ்வைப் பெறலாம் என்று கூறுவதைக் காண முடிகிறது.
“ நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்”(320)
என்பது குறள். ஆசைக்கு அடிமையாகாதவர்கள் பிறவியற்றவர்கள் என்றும் கூறி இத்தகைய பண்புகளால் மேன்மையான மகிழ்ச்சியைப் பெறலாம் என்கிறார் வள்ளுவர்.
சினம்:
மனிதனின் உள்ளிருந்து அவனை அழிப்பவனவற்றுள் முதன்மையானது சினம். சினம் கொள்வதால் உடல் பாதிப்புகள் ஏற்படுவதோடு மனமும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகிறது. தன்னிலை இழந்த மனிதன் பிறவியும் அழித்து சில வேலைகளில் தன்னுயிரையும் மாய்த்துக் கொள்கிறான். அதனால் தான் வள்ளுவர்
“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்”(306)
என்று கூறுகிறார். எதிர்காலத்தில் துன்பத்தைப் பேரிழப்பை உருவாக்கி விடக் கூடிய சினத்தை ’கொல்லி’ என்று வள்ளுவர் குறிக்கக் கடுவெளி சித்தர்,
“சாதநிலைமையை கொல்லு - பொல்லா
சண்டாளக் கோபத்தை சாதித்துக் கொல்லு”(8)
என்று கோபத்தைச் சண்டாள கோபம் என்று அடையாளம் விட்டு கூறுவதன் மூலம் இதன் இழிவை உணர முடிகிறது. நெருப்புக்கு ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்னும் பெயர் உண்டு. இது காரணப்பெயர் என்று கூறுவார்கள்.
பொருள் செய்து வாழும் மாந்தர்களிடம் பண்பாடு வளர்ந்து ஓங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் திருவள்ளுவர் மாந்தர் மனம் செம்மையுற்றால் மாநிலம் செம்மையிடும் என்பது அவர் கொள்கை. அழிக்கும் திறன் வாய்ந்தது வெம்மையான சினம் எனும் கருத்தையே அவர் கூறுகிறார். சேர்ந்தாரைக் கொல்லி என்பது நெருப்பை குறிக்கும் பெயர்களுள் ஒன்று. தான் சேர்ந்த இடத்தை அழிக்கும் தொழில் உடையதால் அப்பெயர் அதற்கு உடையது சினம் என்னும் நெருப்பு உள்ளத்தில் தோன்றுமானால் செம்மை என்னும் பண்பாடு எரிந்து அழிந்துவிடும் என்பது சான்றோர் கருத்து. இது ஒருவருக்குச் சினம் வருமேயானால் அது அவருடைய பெருமையையும், புகழையும் பண்பையும், அழித்துவிடும் என்ற கருத்து அமைந்து எதிர்கால சிந்தனையைக் குறிப்பிடுவதாக எழுதியுள்ளார்.
ஒருவன் தன்னை காக்க விரும்பினால் கோபம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு காத்துக் கொள்ளவில்லை என்றால் அக்கோபம் அவனையே முடிவில் கொன்றுவிடும் எனும் எதிர்காலவியல் அணுகுமுறையில்,
“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்”(305)
என்னும் குறள் அமைந்துள்ளது. கோபம் வராமல் காத்துக் கொள்ளாவிட்டால் மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விளக்கிய அவர் அக்கருத்துகளை அப்படியே வள்ளலார் நெஞ்சு அறிவுறுத்தல் பகுதியில் ,
“செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல் அதனில் தீய”(302)
என்று போற்றி எடுத்துள்ளமை எண்ணுதற்கு உரியது.
பற்று:
எல்லா வகைப் பற்றுகளையும் உண்டாக்கி மனிதனை அகப்படுத்துவதும் படைப்பாற்றல் தான். எல்லா வகைப் பற்றுகளிலிருந்து விடுதலை பெற மனிதனுக்கு உதவுவதும் படைப்பாற்றால் தான். அப்பற்றுக்கள் அல்லல்களை விளைக்கும் என்று தெரிந்தும் அப்பற்றை விடுவதற்கு உதவும் ஒரு நல்ல ஆசிரியரைத் தேட வேண்டும். அந்த நல்ல ஆசிரியரைத் தான் ,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” (300)
என்னும் குறளில் பற்றற்றான் என்று வள்ளுவர் குறிக்கிறார். பொருள்களின் நுகர்பவன் நுகர்ச்சி ஏதுவாகப் பொருள்களின் மேற் செலுத்தும் மனத்தொடபுர் பற்றாகும். இத்தொடர்பு இன்று நேற்று உண்டானதன்று உயிரினம் கண் வாசனையாய் ஒட்டி நின்று, உணர்வும் பசி ஏற்பட்டபோது வெளிப்பட்டுப் பொருள்களின் மேற்கொன்று பாய்வது பாய்வது. கரை புரண்டு வரும் வெள்ளத்தைத் திசை திருப்பி விடலாமேயன்றி அடியோடு தடுத்து விட முடியாது. அதுபோல அழியும் பொருளின் மேல் திரும்பினால் பற்று திசை மாறும் அப்போது அம்மாற்றம் நமக்குப் பேரின்பத்தைப் பயக்கும் என்பது இதன் கருத்தாகும்.
இறைவனுடைய வலுவான தொடர்பே அவனுடைய நிலையை மனிதன் எய்துவதற்கு உரிய முறையான தொடர்பு. அந்தத் தொடர்பு இடையறாமல் விளங்கினால் மனிதன் இறைநிலைக்கு உயர்வான். அந்த நிலையில் நெகிழாமல் இருந்து, மற்ற உயிர்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக விளங்குவான் என்பது திருவள்ளுவரின் முடிந்த முடிவு.
இல்லற வாழ்க்கை
வள்ளுவம் காட்டும் இல்லற வாழ்க்கை பொறுப்புகள் உடையது. தலைமுறையின் தோற்றத்திற்கு அடிப்படையாக வாயிலாக அமைவது மனையாம். அத்தகைய மனையறத்தில் அறிவறிந்து காதல் வாழ்க்கையில் தோய்ந்து தன் மக்கள் பேறடைதல் வேண்டும். புகழ்மிக்க குடும்பங்களில் கூட தந்தை தாய்க்கு நற்புகழ் வாங்கி கொடுக்கக்கூடிய பிள்ளைகள் தோன்றவில்லை என்பது மக்களிடையே காணப்படும் ஒரு கருத்தாக உள்ளது .மனையற வாழ்க்கை பெயரும், புகழும் சிறப்பும் பெறுவது அம்மனையற வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய மக்கள் பயனேயாகும். ஒரு குடும்பத்தில் செல்வமும், புகழும் விரிவடைய வேண்டிய ஒன்று. அது தேய்ந்து குறுகுதல் கூடாது. ஒரு குடும்பம் வளர்ச்சிக்கு இயற்கை நியதியின் படி வளர்ந்து வருமானால் குடும்பத்தின் முன்னோரை வைத்து வாழ்க்கைக் களத்தில் பூக்கள் பூத்திருக்கும். தந்தையை வைத்து மகனுக்கு வரும் அறிமுகம் வளர்ச்சியின் சின்னம் அன்று மக்களை வைத்துத் தந்தைக்கும் பாட்டனுக்கும் கிடைக்கும் அறிமுகமே சிறப்புடையது. போற்றுதலுக்குரியது, புகழ்ச்சிக்குரியது என்பதனை,
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”(70)
மகன் தந்தைக்கு செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும் என்பது இதன் கருத்து.
நெடுங்காலத்தைக் கருத்தில் கொண்டதாக அமைந்துள்ள இவ் எதிர்கால அணுகுமுறை ஒட்டியதாகவே தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய் அவனைப் பெற்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்வாள் என்னும் கருத்தமைந்த,
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” (69)
என்னும் குறள் அமைந்திருக்கக் காணமுடிகிறது
மக்கட் பேறு என்னும் அதிகாரத்தில் நன்மக்களைப் பற்றியும் குழந்தை செல்வத்தின் சிறப்பு, பெருமை பற்றியும் குறிப்பிட்ட வள்ளுவர் பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால் ஒருவனுக்கு எழும் பிறப்பும் தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுக என்னும் பொருளில் அண்மையையும் மீறிச் செல்வதாகிய எதிர்காலவியல் சிந்தனையைக் காட்டுகிறார். சிறப்பு வாய்ந்த மக்கட் பேறு என்னும் அதிகாரம் மூன்று விதமான எதிர்காலவியல் அணுகுமுறையில் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது.
மனித சமுதாய வாழ்க்கையின் இணைந்த இரட்டைகளாகத் திகழ்பவை பொருளும், அருளும் ஆகும். இவை இரண்டும் முரண்பட்டன அல்ல, ஒன்று இன்றி ஒன்று இல்லை. ஒன்றுக்கொன்று அரனும் ஆகும். ஒன்று பிரிந்தொன்றைக் கொண்டு வந்து சேர்க்கும். இவ்விரண்டை எங்காவது பிரிந்து காணப்பட்டால் அது பொருளும் அன்று அருளும் அன்று. பொருள் என்பது மனிதன் உண்டு, தின்று உடுத்தி அனுபவிக்க தக்கனவே ஆகும். உடல்நிலை பெற்று இயங்கு உணவு தேவையாக உள்ளது உணவு இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் உடலுடன் கூடி வாழ்வது என்பது இயலாது இதனை திருவள்ளுவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று கூறுகிறார் அடுத்து ‘அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை’ என்று கூறுகிறார். அவ்வுலகம் என்பது வீடு என்று பொருள் கொள்வது மரபாக உள்ளது. அவ்வுலகம் என்பது குடும்பத்தில் இருந்து விலகி சற்று தூரத்தில் இருப்பது. அதுவே மக்கள் சமுதாயமாக அமைந்திருப்பது. பொருள் உடையவன் அருள் உள்ளமுடையவனாக மக்கள் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறி விடுவானால் அவனுக்குச் சற்று தூரத்தில் விளங்கும் சமுதாயம் அவனை நினைத்துப் பார்க்காது. அவனை ஒரு பொருளாக மதிக்காது. சமுதாயத்தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சை இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பெருமையைத் தராது சிறுமையைத் தரும் எனவே,
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”(247)
என்னும் குறள் பொருள் இல்லாதவர்களையும், அறிவில்லாதவர்களின் சிந்திக்க வைப்பதாக அமைகின்றது. பொருள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அண்மையில் தோன்றக்கூடிய எதிர்காலச் சிந்தனையையும் அருள் இல்லாதவர்கள் வீடு பேறு கிடையாது என்னும் இப்பிறவியை மீறி செல்லும் எதிர்காவியல் சிந்தனையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
மறுபிறப்பும் ஏழு பிறப்பும்
பிறக்கும் உயிர்கள் அனைத்தும் அவ்வவற்றின் நிலைமைக்கு ஏற்ப மறுபிறப்பும் ஏழு பிறப்பும் எடுத்துப் பிறக்கின்றன என்பது எல்லாச் சமயங்கள் பலவற்றிலும் காணும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை திருக்குறளிலும் பதிவு பெற்றுள்ளது. ஒரு பிறப்பு எடுத்தவர் மீண்டும் பிறவாமை என்னும் இலக்கை நோக்கிய நெறியில் பயணித்தல் வேண்டும். அந்தப் பயணம் நிறைவிற்கு உரியதாக அமையவில்லையானால் அடுத்தடுத்துப் பிறக்கும் நிலை உருவாகும் என்றும், ஓர் உயிர் ஏழு முறை வரை பிறப்பெடுக்கும் என்றும் திருக்குறளில் பதிவு பெற்றுள்ளது. அடுத்தடுத்து வரும் பிறப்புகள் இன்பமாகவும் பாதுகாப்பாகவும் அமைய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் பதிவு பெற்றுள்ளது. ஒரு பிறப்பில் புகழ்ந்தவை போற்றிச் செய்வதன் வழியும் இன்பம் வாய்க்கும் என்றும், ஒரு பிறப்பில் ஆமை போல் ஐந்தும் அடக்கும் ஆற்றல் பெற்றவராகவும் அவை அடுத்தடுத்து வரும் பிறப்புகளில் பாதுகாப்பாக அமையும் என்கிறார் திருவள்ளுவர்.
முடிவுரை
உலகம் தனக்கு மட்டும் உரியது அன்று, எல்லா உயிர்களுக்கும் உரியது எல்லா உயிர்களுக்கும் உரிமை உடையது. இதுதான் இயற்கை நெறி. எல்லா உயிர்களும் சமம் எல்லா உயிர்களுக்கும் எல்லாம் சமமாக அமைய வேண்டும், சமமாக இல்லை என்றால் சமமாக அமைய வேண்டும் என்ற அறிவு வேண்டும். ஒரு பிறப்பு எடுத்தவர் மீண்டும் பிறவாமை என்னும் இலக்கை நோக்கிய நெறியில் பயணித்தல் வேண்டும். அந்தப் பயணம் நிறைவிற்கு உரியதாக அமையவில்லையானால் அடுத்தடுத்துப் பிறக்கும் நிலை உருவாகும் என்கிறார் திருவள்ளுவர்.
துணைநூற்பட்டியல்:
ராஜு செட்டியார் எஸ், திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கம்பன் பதிப்பகம், சென்னை 1982
சஞ்சீவி நா, திருக்குறள் அமைப்பும் முறையும், சென்னைப் பல்கலைக்கழகம் 1972
முருகன் ப.,வள்ளுவம் பண்ணோக்குப் பார்வை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,சென்னை 1991
முருகன். ப, குறள்வழி சிந்தனைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை 1991
திருக்குறள் எளிய உரை, தமிழ்ச்செம்மல் புலவர் சி.இராசியண்ணன், மீனா புத்தக நிலையம், சென்னை
முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.