1
நான்கு நாட்களாய் மிகத் தீவிரமாக இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாய் இன்று முளைத்துள்ள பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே தொடர்வதாய் உள்ளன. அது “சிந்து நதி” சார்ந்த பிரச்சினைகளாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா ரத்து செய்யப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால், இவற்றை ஆழ நோக்கும்பொழுது, பிரச்சினைகள், இன்னும் பிரச்சினைகளாக உள்ளமை தெளிவாகின்றன.
சென்ற கட்டுரைத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக ட்ரம்பின் மதிநுட்ப கூற்றுக்களும், எப்படி அது, ஜெயசங்கராலும் மோடியாலும் நிராகரிக்கப்பட்டன என்பதனையும் விவரித்திருந்தோம்.
உதாரணமாக, “அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிந்து நாங்கள், ஜெர்மனி போன்ற பிறிதொரு நாட்டை, மத்தியஸ்தத்திற்கு அழைப்பதற்கு நாம் கனவில் கூட இடம் தருவதற்கில்லை”. ஜெயசங்கர் இவ்வாறு கூறுவது முக்கியமானது-மேல் வரும் நிலைப்பாட்டை நிரூபிக்கின்றது எனலாம் (25.05.2025). இதுபோலவே, மேலே கூறப்பட்ட, “சிந்து நதி” சார்ந்த இன்றைய பிரச்சினைகளுக்கு, இன்னமும் தீர்வொன்றைக் கண்டுப்பிடித்ததாக இல்லை.
பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் என்று தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளுமோ அன்றே “சிந்து நதியின்” பிரச்சினையும் தீர்க்கப்பட்டதாக இருக்கும். காஷ்மீர் என்பது, எம்மைப் பொறுத்தவரையில், தீர்மானிக்கப்பட ஒன்றுமே கொண்டதாக இல்லை. அது முற்றுமுழுதாய்த் தீர்வைக் கண்டுவிட்டது. அது, இந்தியாவினுடையது. இந்தியாவுக்கு உரித்தானது. இது குறித்து அளவளாவுதல் என்றால் அது, பாகிஸ்தான், காஷ்மீரை விட்டு, என்று-எப்போது, வெளியேற எண்ணியுள்ளது என்பதைப் பொறுத்தது மட்டுமே ஆகும் என ஜெயசங்கர் மேலும் குறிக்கின்றார். இக்கூற்றுடன், லெப்ரோவின் கூற்றும் தொடர்புபடக் கூடியதுதான். லெப்ரோவின், கூற்று: “இந்தியாவைத் துண்டு போட இடமளிப்பதா?” (24.05.2025).
இதுபோக, மேற்படி இந்தியா-பாகிஸ்தான் போரில், தொடர் வர்ணணையில் ஈடுபட்டிருந்த மேற்கின் ஊடகங்கள், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதை (சீண்டி விடுவதை), நோக்காக கொண்டு இயங்கின என்பதும், இது, இரு உலக ஒழுங்குகளின் போராட்டத்தையே பிரதிபலிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.
2
“மேற்கானது, இந்திய-சீன உறவு நிலையைச் சீர்குலைத்து சிண்டுமுடி வேலையில், இறங்கி உள்ளது”. (டாஸ்:15.05.2025).
அதாவது, சீன ஆயுதங்களைப் பாவித்து அல்லது சீன விமானங்களைக் கொண்டே இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைப் படம்பிடித்து, பெரிதாகக் காட்டும் நோக்கையே, தமது இலக்காக (மேற்கத்தைய ஊடகங்கள்) கொண்டிருந்தன.
உபகரணங்கள் வழங்கியது சீனா என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், எக்காலப்பகுதியில் இவை வழங்கப்பட்டன என்பதும் மறுபுறத்தில், அமெரிக்காவால் எவ்வெவ் ஆயுதங்கள் என்னென்ன காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்தும் இவை மௌனத்தையே கடைப்பிடித்தன.
இருந்தும், “ஒருமுனை உலக ஒழுங்கானது”, தன் இறுதி காலக்கட்டத்து மூச்சை விடும்போது இயல்பாய் நடக்கும் இந்த நகர்வுகளில், இந்திய மக்களை குழப்பியடிப்பதும் முக்கியமான ஒரு பகுதியாகின்றது. ஏனெனில், முதலாவதாய், இதுவே, ஓர் “இந்திய-சீன” கூட்டைக் குழப்பியடிப்பதில் சென்று முடிவடைவதாக இருக்கும். மறுபுறம், இத்தகைய குழப்பமானது ஒரு “ரஷ்ய-சீன-இந்திய” என்ற இணைப்புக்கு (முக்கூட்டின் இணைவுக்கு) எதிராக இருக்கும் என்பதிலும் ஆச்சர்யம் இல்லை. இது, பல்முனை துருவ ஒழுங்கு ஒன்று புதிதாய்த் தோன்றுதற்கான அடிப்படை என்றாகின்றது.
3
இச்சூழ்நிலையில்தான், ட்ரம்பின் அட்டகாசங்கள் வழமைபோல் தொடர்வதாய் உள்ளன. இந்தியா எனது மிக நெருங்கிய நண்பன் என்ற ட்ரம்பின் கூற்றாகட்டும் (இந்திய மாணவர்களைக் கை-கால் விலங்குடன் பிணித்து, 24 மணி நேரத்தில், விமானமேற்றி அனுப்பிய புகழ் ஈறாக) அல்லது செலன்ஸ்கியைத் தனது வெள்ளை மாளிகையில் இருந்து துரத்தியடித்த “கதையாகட்டும்”– உலகம் அவரைச் சற்று சந்தேகக் கண்கொண்டு பார்த்து வருவது வழமையாகியது.
இச்சூழ்நிலையிலேயே, புட்டினுடன் பேச்சுவார்த்தை என்பது அன்னார் தினசரி ஓதும் வேதமானது. “முதலில் 30 நாள் போர் நிறுத்தம். பின்னரே பேச்சுவார்த்தை” என அன்னார் முதன் முதலாகக் கூறியதை, அவரே மறந்திருந்தாலும் (நியுயோர்க டைம்ஸ்: 09.05.2025, கார்டியன்:11.05.2025) “போர்நிறுத்தம் என்ற ஒன்றைப் பற்றித் தான் பேசவே இல்லை” என அன்னார் பின்னர், சாதிக்க முற்பட்டாலும், அன்னாரின் கைப்பட எழுதிய அறிக்கையினாலேயே, இது நிரூபணம் ஆகின்றது. இம்முரண்பாடுகள் அல்லது ட்ரம்பின் பொய்மைகள் எப்படி இருந்த போதிலும், மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை, துருக்கியில் ஆரம்பமானதாகச் செய்திகள் வெளிவந்தன (15.05.2025).
இப்பேச்சுவார்த்தையின் போது புட்டின் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்றாலும், செலன்ஸ்கி, துருக்கியில் பிரசன்னமாகியிருந்தார் எனவும் கூறப்படுகின்றது.
ஆனால், புட்டினின் மேற்படி நகர்வுகளே, ஐரோப்பிய யூனியன் நாடுகளையும், அமெரிக்காவையும் ஒன்றுசேர, பேச்சுவார்த்தையில் இருந்து முற்றாய் அகற்ற வழி வகுத்தன என்பது நிபுணர்களின் கருத்தாகியது. (ட்ரம்ப், தானும் துருக்கியில் கலந்து கொள்ளப் போவதாய், வழமைபோல், அடம்பிடித்து நின்றாலும்).
மறுபுறத்தில், உலகமானது ஒரு சூழ்நிலைக்கு, (அதாவது, பேச்சுவார்த்தை சூழலுக்கு) வந்துசேர மூன்று வருடங்கள் பிடித்தன என்பதும், இதற்கிடையே, 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்ஸ்க் பிரதேசத்தில் மாத்திரம், உக்ரைன் பலிகொடுக்க நேரிட்டது என்பதும் வேதனை தருவதாக இருந்தது. வேறு வார்த்தையில் கூறுவோமானால், ரஷ்யா பெற்றுள்ள இந்த வெற்றியின் காரணமாகவே, இப்பேச்சுவார்த்தையானது ஆரம்பமானது எனவும் கூறப்படுகின்றது.
இரண்டுமணி நேரத்திற்குக் குறைவாக நடந்திருக்கக்கூடிய, இப்பேச்சுவார்த்தையில், முடிவுகள் ஏதும் பெரிதாக எட்டபட்டிருக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. ஒன்று: பேச்சுவார்த்தையை இனி, எப்படி தொடர்வது என்பது. இரண்டாவது: ஆயிரம் யுத்த கைதிகளை இரு நாடுகளும் பறிமாறிக் கொள்வது. இவை தவிர, ஏனைய அனைத்து விடயங்களும், ரகசியமாகவே வைக்கப்பட்டதாயின என நாம் ஊகிக்கலாம் (16.05.2025).
இந்நிலையில், ட்ரம்பின் இரண்டு மணி நேர தொலைபேசி பேச்சு, புட்டினுடன் இடம்பெற்றது (19.05.2025). அதன் பின்னரே, ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், தனித்தனியே தொலைபேசியில் பேசினார் எனவும் இப்போது கூறப்படுகின்றது (Wall Street Journal -22.05.2025).
புட்டினுடன் தொலைபேசி உரையாடல் முடிந்த கையோடு (19.05.2025) ட்ரம்ப் அவர்கள், அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளுடன் பேசியபோது, புட்டினுக்குச் சமாதானத்தில் எவ்வித அக்கறையும் இல்லை என்று சொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின (22.05.2025).
இதனை, வெள்ளை மாளிகை, உடனடியாகவே மறுத்திருந்த போதிலும், இவ் உரையாடலானது, உண்மை எனில் இப்பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நிலவும் மறைமுக உறவுகளை அம்பலப்படுத்திக் காட்டுவதாய் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
வேறு வார்த்தையில் கூறினால், புட்டின் அமைதியை விரும்பாது, போரைத் தொடரவே விழைகின்றார் என்பது உண்மையானால், இதில் ஆச்சர்யம் கொள்ள ஏதும் இல்லை என்றாகின்றது. ஏனெனில், ரஷ்யா, வரலாறு காணாத, பயங்கர அடிகளை இன்று உக்ரைனுக்கு வழங்குவதாய் உள்ளது. உண்மையில் இந்த அடியானது அனைத்து மேற்குலக நாடுகளினதும், முதுகில் விழுந்த அடியைப் போன்ற ஓர் அடியாகும். (புட்டுக்கு மண் சுமந்த கதைதான்!).
ஆனால், இத்துடன் புட்டின், தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தத் தயாராக இருந்தார் இல்லை. ரஷ்யாவின் “ராணுவ யந்திரத்தை” அவர், மீள் வடிவமைப்பதில் முழு மூச்சாக ஈடுபடத் துவங்கினார்.
ரஷ்ய படைகளுக்குத் தலைமை தாங்கியிருந்த General Andrey Mordvichey என்பவர் தற்போது Commander-in-Chief ஆக, புட்டினின் ரஷ்ய படைகளுக்குப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். Break Through General என இவரை அழைப்பது வழக்கம். உக்ரைனிடம், பகைமை பாராட்டும் இந்த ஜெனரலின் நியமிப்பு, ரஷ்ய படைகளின் இன்றைய “மூர்க்கத்தை”, சரியாக வெளிப்படுத்தும் நபர் என்ற ரீதியில், உக்ரைனை அதிருப்தி கொள்ளவும் வைத்துள்ளது. இருந்தும், புட்டின், இவரை Hero of Russia என்று வீரப் பதக்கம் தந்து அலங்கரிப்பதிலும் ஈடுபட்டது குறிக்கத்தக்கதாகின்றது.
சுருக்கமாகக் கூறுவதெனில், ட்ரம்ப் தனது அமெரிக்கா-ஐரோப்பிய யூனியனின், தில்லுமுல்லுகளை, ரகசியமாக பேணும் அதேதருணத்தில், புட்டினும் தனது திருவிளையாடல்களை நிறுத்தினார் இல்லை எனலாம். படை நகர்வுகளையும், இராணுவ யந்திரத்தை புனரமைப்பதிலும், சர்வதேச உறவுகளைப் பேணி சீர்திருத்துவதிலும் (சீனா-வடகொரியா-ஈரான்) சிறப்பாகக் கவனம் செலுத்தினார் எனலாம்.
துருக்கியின் பேச்சுவார்த்தை முடிவை அடுத்து, ஒன்றையுமே சாதிக்க முடியாத செலன்ஸ்கி, அமெரிக்கா-இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளை விடுத்து, இன்று புதிதாய் பிரேசிலுக்குச் செல்லப் போவதாய் கூறியிருந்தாலும், இதனையும் யாரும் பெரிதாகச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை–பிரேசில் உட்பட.
இதற்கிடையே மேலும் இரண்டு மூன்று நகர்வுகளை ரஷ்யா நேற்றைய தினங்களில் மேற்கொண்டதாய் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒன்று, தனது எல்லை நெடுக Buffer Zone என்பதனை உருவாக்கிf் கொள்ள ரஷ்யா திட்டமிடுவது. இரண்டாவதாய், ரஷ்யாவுக்கு, செலன்ஸ்கியுடன் பேசுவதில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பது (25.05.2025).
இதற்கான காரணம், செலன்ஸ்கிக்குச் சட்ட வலுவில்லை என்பதேயாகும். ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், அவ் ஒப்பந்தத்தில், செலன்ஸ்கி, கையெழுத்திடவும், அவருக்கு எந்தவொரு அந்தஸ்தோ அங்கீகாரமோ இல்லை என்பதே லெப்ரோவின் குற்றச்சாட்டாகியது. “செலன்ஸ்கி, தற்போது ஜனாதியதியாக இருப்பதே உக்ரைனின் அரசியல் அமைப்புக்கு முரணானது. அதற்கான சட்ட வலு ஏதும் இருப்பதாக இல்லை. இதன்படி, அவர் வலிதான, சட்டரீதியான எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது. அது, செல்லுபடியற்றதாகவே இருக்கும்” (23.05.2025).
இதுதான் ரஷ்யாவின் நிலைப்பாடு என்றால், ரஷ்யா கோருவது புதிய ஒரு தேர்தலா என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாகின்றது (ஒரு புதிய ஜனாதிபதியை மக்கள் தேர்வு செய்யும் பொருட்டு).
இருக்கலாம். ஏனெனில் இது ஒருவகையில், ரஷ்யாவின் அறிவிக்கப்பட்ட இலக்குகளுடன் பயணிக்கத்தக்கதே. ஏனெனில், உக்ரைனில் இன்று ஆழப் பரவியிருக்கும் நாசிச அரசியலை, வேருடன் களைவது என்பதும் ரஷ்யாவின் கூறப்பட்ட குறிக்கோளாகின்றது.
இவை அனைத்தும், இன்று மாறிவரும் உலக நடப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றதா என்பதே கேள்வியாகின்றது.
4
“டொனாஸ்க் உட்பட நான்கு பிரதேசங்களில் இருந்து உக்ரைன் முற்றாக வாபஸ் பெற வேண்டியதாகின்றது” என்பது துருக்கியில் பங்கேற்ற, ரஷ்ய சிறப்புத் தூதரின் வேண்டுகோளாயிருந்தது. (இது, ரஷ்ய கட்டளையா, இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கப்பட வேண்டி உள்ளது). ஆனால், இது செலன்ஸ்கி முற்றிலும் எதிர்பாராதது.
பேச்சுவர்த்தையானது, “யுத்த நிறுத்தம்” ஒன்றைப் பற்றி மாத்திரமே பேசுவதாய் இருக்கும் என்பதே செலன்ஸ்கியின் அப்போதைய அனுமானமாக இருந்தது. அதனாலேயே, அவர், துருக்கியில் நேரடியாகப் பிரசன்னமாகியும் இருந்திருக்கக் கூடும் (ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளின் ஆசிர்வாதத்துடன்).
ஆனால், ரஷ்யாவின் சிறப்புத் தூதரின் பார்வையில், அது வியட்நாம் போராக இருக்கட்டும் அல்லது கொரிய போராக இருக்கட்டும்-யுத்தம் என்பது என்றும் நிற்காது. தொடர்ந்து கொண்டே கொண்டே இருக்கும். “பேச்சுவார்த்தை” என்பது, வேண்டுமானால், இதன்போது நடக்கலாம். அதாவது, யுத்தத்தை நிறுத்தி, பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது என்றுமே பொருந்தாதது -இதுவே, எமது நிலைப்பாடு என்றார் அவர் (MINSK அனுபவத்தால், மாறியுள்ள ரஷ்யாவின் பிரதிபலிப்பா இது, என்பதும் கேள்வியாகின்றது).
ஆனால், ட்ரம்பின் நிலைப்பாட்டிற்கும், இங்கிலாந்தின் நிலைப்பாட்டிற்கும் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிலைப்பாட்டிற்கும் இவ்வளவும் பொருந்துமா, பொருந்தாதா என்பதெல்லாம் புட்டினின் கவலைகளில் உள்ளடங்கவில்லை என்பது தெளிவு.
இது ஒருபுறமிருக்க, ரஷ்ய தூதர், இதனைத் தொடர்ந்து கூறியுள்ள கூற்றுக்கள் எமது அவதானத்துக்குரியன.
ஒரு ரஷ்ய ஊடகமானது, வெளியேற வேண்டிய நான்கு உக்ரைனிய பிரதேசங்களை, இப்போது ‘ஐந்து’ என மாற்றி எழுதியபோது, இது தொடர்பில் தெளிவாக்குமாறு யோசனை கூறப்பட்டது. அதற்கு, “நாங்கள் ‘ஐந்து’ என்று கூறவே இல்லை. ஆனால் அது உண்மையில் ‘எட்டாக’ இருந்திருக்கலாம்” என்று விளக்கமளிக்கப்பட்டது. (நொடிதோறும், போர்களத்தில் முன்னேறி வரும் ரஷ்யர்களையும், அவர்களது அண்மித்த அறிவிப்பான, Buffer Zone தொடர்பிலான நிபந்தனைகளையும், சுமி (Sumy) பிரதேசத்தில், அவர்கள் இன்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும், நகர்வுகளையும் கவனத்தில் கொண்டால், இவை ஒன்றும், வெறும் அர்த்தமற்ற புலம்பல்கள் அல்ல- (இலக்கங்கள்-எட்டா அல்லது ஐந்தா) என்பது தெளிவாகின்றது. இக்காரணம் பற்றியே, செலன்ஸ்கி பிரேசிலை நோக்கி ஓடப் போவதாக அறிவித்தாரோ-அறியோம் (அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகளின் ஆசிர்வாதங்களுடன்). (இதன்போது, BRICSஐ ஒரு கை பார்ப்பது, அவரது விஜயங்களின் பின்னால் இருந்தது என்றாலும், ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை எனலாம்).
ரஷ்ய சிறப்புத் தூதர் தொடர்ந்தாற்போல் கூறியது, மேலும், மேலும் சிக்கல் நிறைந்ததாய்த் தோன்றியது: “நெப்போலியன் கூறினாராம்: ‘ரஷ்யாவிடம் ஏமாற்று, தில்லுமுல்லு, எதனையும் வைக்காதீர்கள். அவர்களின் சொத்துக்களையும் நீங்கள் திருடாதீர்கள். களவாடவும் எத்தணிக்காதீர்கள். அவர்கள் என்றாவது ஒருநாள் தமது சொத்துக்காக வந்து, உங்கள் கதவைத் தட்டவே செய்வர்”.
இக்கூற்றின் மொத்த அர்த்த பாவமானது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.
5
ரஷ்யா, போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என ரஷ்யா அறிவிக்கும் பட்சத்தில் அதற்கெதிராகப் பயங்கர தடைகள் பிறப்பிக்கப்படும் என்பது ட்ரம்பின் கூற்று (BBC:10.05.2025). ஆனாலும், இது, இன்று சீண்டுவார் இல்லாமல் கிடக்கின்றது. காரணம், இதுவரையில், ரஷ்யாவுக்கு எதிராக 21692 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல விமான சேவைகள், இன்று தங்கள் சேவைகளை, ரஷ்யாவில், மீளத் தொடரப் போவதாக அறிவித்துள்ளன (Tass:19.05.2025). இந்நிலைமையில்தான், “தடைகள்” (Sanctions) பொறுத்த அறிவிப்பானது, “இன்று” பிசுபிசுத்த நிலையை எட்டி விட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும் இது, ஒரு சீன-இந்திய வர்த்தக நிலைமைகளாலும், உலகின் ஏனைய வர்த்தக நிலைமைகளாலும், கூடவே ரஷ்யாவின் இன்றைய “திமிறினாலும்”, மேற்படி தடைகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டன என்பதும், தமது தர்க்க நிலையினை எட்டிப்பிடித்துவிட்ட ஒன்றாகவே தெரிகின்றது.
ஆனால், இவற்றில், “ரஷ்யாவின் திமிர்” என்பது சற்று ஆழமாகவே பார்க்கத்தக்கது.
தடைகளுக்கு எதிராக வர்த்தகத்தில் ஈடுபடுவது, ரஷ்யாவுக்கு கைவந்த கலையாகின்றது. காரணம், இந்திய-சீன நாடுகளுக்கு எரிவாயு அல்லது எண்ணை விநியோகிக்கும் நடைமுறையுடன் இது, சம்பந்தப்படுவதாய் உள்ளது. எஸ்டோனியாவின் கூற்றுப்படி, ரஷ்யாவின் வருமானம், இதில், 60 சதவீதமாய் இருக்கின்றது (19.05.2025). இதன் காரணமாகவே ரஷ்யா தனது கப்பல்களை பிறிதான ஒரு வழியில் செலுத்தவும் தீர்மானித்தது.
இக்கப்பல்களுக்கு எதிராக, அமெரிக்க நாடுகள் தமது தடைகளை அமுல்படுத்தின. இவற்றை Shadow Fleet என வரையறுத்தன. இவை, மேற்கு நாடுகளின் காப்புறுதி இல்லாமலும், சர்வதேச சட்டப்படி, கப்பல்களின் கொடி ஒன்றும் இல்லாமலும் கிளம்பியிருந்தன என்பது மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டானது. எனவே அவற்றை கைப்பற்றி சோதனையிடுவதும், பின் அவற்றைத் தடை செய்வது அல்லது தண்டனை வழங்குவது என்பதெல்லாம் வழமையான நடைமுறையாயிற்று.
அண்மையில், எஸ்டோனியா, இத்தகைய ரஷ்ய கப்பல்களில் ஒன்றில் புகுந்து தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கத் தொடங்கியது. தனது ஹெலிகொப்டர்களை, கப்பலில் இறக்கவும் முயற்சி செய்தது. பின், அக்கப்பலைத் தனது துறைமுகங்களில் ஒன்றிற்கு இட்டுச் செல்லவும் முயன்றது. இதன் காரணமாய், ரஷ்யா தனது ஜெட் விமானங்களில் ஒன்றை அனுப்பி (Su-35-S) எஸ்டோனிய படையினரைத் துரத்தியடித்து விட்டு கப்பலை மீண்டும் அதன் வழியில், செல்ல அனுமதி தந்தது (Jaguar: Reuters: 15.05.2025). குறித்த Jaguar ஆனது, மேற்கின் தடைகளுக்கு எதிராக எண்ணையைக் கடத்துகின்றது-இக்கப்பலானது ரஷ்யாவின் “நிழல் கடற்படையின்” (Shadow Fleet) ஒரு கப்பல் என்ற நியாயப்பாட்டிலேயே எஸ்டோனியாவும் இக்கப்பலைச் சோதனையிட துணிந்திருந்தது. ஆனால், (Su-35-S) என்ற நவீன சண்டை விமானமானது இவ் அனைத்தையும் கெடுத்து விட்டதாகf் கூறப்படுகின்றது.
ஆனாலும், இது ஒரு புது நடைமுறை. சண்டித்தன முகத்துடன், ரஷ்யா இன்று உலகை வலம் வர துணிந்து விட்டதை, இது காட்டுகின்றது. அதாவது, தடைகளுக்கு எதிராக, முதன் முறையாக, ரஷ்யா தனது படைபலத்தைப் பிரயோகித்துக் காட்டியது. இது, முதல் சந்தர்ப்பம் ஆகியது. இது ஒரு புது மாற்றம் என கருதப்படுகின்றது.
ஆனாலும், இதனை அடுத்து இடம்பெற்றதாய்க் கூறப்படும் இரண்டாவது சம்பவமே, உலகுக்கு மேலும் சுவாரஸ்யத்தைத் தருவதாய் இருந்தது.
முதலாவது சம்பவத்தை அடுத்து, இரண்டொரு தினங்களில், ரஷ்யா, எஸ்டோனியா கப்பல் ஒன்றைச் சிறைப்பிடித்து தனது துறைமுகங்களில் இருத்திக் கொண்டது (Green Admire: 18.05.2025).
இதற்காக, எஸ்டோனியாவானது, ரஷ்யாவிடம் விளக்கம் கூறியது: “நீங்கள் அனுமதித்ததின் பேரிலேயே இக்கப்பல் பயணித்திருந்தது”. ஆனால், ரஷ்யாவோ ஏதேதோ காரணங்களை அடுக்கியதாகவும் தகவல். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாய் கூறப்படுகின்றது.
இருந்தும், “இச்சம்பவங்களானவை” இரண்டு விடயங்களை உலகுக்குக் காட்டுவதாய் இருந்தது.
ஒன்று, ரஷ்யாவானது, மேற்கின் தடைகளுக்கு எதிராக “முதற்தடவையாகத்” தனது ஆயுத பலத்தைப் பிரயோகிக்கத் துவங்கி விட்டது என்பதும், இரண்டாவதாக, ரஷ்யாவின் செயற்பாடுகள் இப்போது தீர்மானிக்கப்பட முடியாதவையாக மாறிவிட்டன என்பதுமேயாகும்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த ரஷ்ய மாற்றமானது, உலகில் நடந்தேறும் மாற்றத்தால் ஏற்பட்ட ஒன்று என்றும் இவை இன்னமும் இழுபறி நிலையில்தான் உள்ளன என்பதும் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகின்றன.
இப்போது, அதாவது, நேற்றிலிருந்து, ரஷ்ய போர்க் கப்பல்கள், இந்த Shadow Fleet எனக் கூறப்படும் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்று, அவற்றுடன் பயணிக்கின்றன-முக்கியமாக பின்லாந்தின் நீரிணையில் (பால்டிக் கடலில்) (26.05.2025).
மறுபுறம், “நேட்டோ படையினரை நாங்கள் களமிறக்கப் போகின்றோம்! ஏற்கனவே, 50,000 நேட்டோ படையினரைப் போலந்தில் மறைந்து வைத்து விட்டோம்!! ரஷ்யாவில் ஊடுருவ!!!” என்று, அன்று நேட்டோ கூறியதற்கு எதிர்மறையாக இன்று, இது நேட்டோவினாலேயே மறுத்துரைக்கப்பட்டுள்ளது. “நேட்டோ படையினரை என்றுமே களமிறக்க நாங்கள் எண்ணிப்பார்த்தது கூட கிடையாது” எனக் கூறுவது, இன்றைய செய்தியானது. (18.05.2025).
சுருக்கமாய்க் கூறுவதென்றால், உலகத்தைப் போல், ரஷ்யாவின் முகமும், சீனாவின் முகமும், இந்தியாவின் முகமும், வேறு பல நாடுகளின் முகமும் உருமாறி உள்ளன என்பது தெரிய வருகின்றது.
6
தஞ்சம் புகுந்த ரோகின்யா முஸ்லீம் மக்களைத் துரத்தி அடித்தது முதல், இதே பாணியில் இன்று இலங்கைத் தமிழரையும், இந்திய உயர் நீதிமன்றமானது துரத்தி அடித்துள்ளது உலகை வியக்கச் செய்ததாய் உள்ளது. 140 கோடி மக்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டிய நாங்கள் எப்படி உலக அனாதைகளுக்கு, தர்மம் செய்து, “தர்மசாலைகள்” நடத்துவது என்பது இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகியது (21.05.2025).
வருட கணக்கில், இந்த இலங்கையரின் குடும்பமானது தமிழ்நாட்டிலேயே இருந்து வந்ததும், இவர் இந்தியப் பயங்கரவாத சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு, தண்டனைப் பெற்றவர் என்பதும் இந்தியப் பார்வையில் கேள்விகுறியாகி இருக்கலாம். இதற்கு, புலம்பெயர் அரசியலின் துணைபோதல் எந்த அளவில் அல்லது எந்த விகிதாசாரத்தில் இருந்தது என்பது வேறு விடயம். சுருக்கமாகக் கூறுவதென்றால், இப்போது, விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாய் தெரிகின்றது. ட்ரம்பின், கை-கால் விலங்குடன் மாணவர்கள் ஏற்றப்பட்டமை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒன்றுமே அறியா இந்திய சுற்றுலா பயணிகளைச் சுட்டுத்தள்ளியமை, மேலும் பங்களாதேஷின் அல்லது மாலைதீவின் எதிர்பாராத நடவடிக்கைகள், இவை யாவற்றுடனும், ரஜிவ் காந்தியை போட்டுத்தள்ளியமை-இவை போன்ற பற்பல மாற்றங்கள், இந்திய விதிமுறைகளையும், இன்று மாற்றத்திற்கு உள்ளாக்கிய அடிப்படைகளில் ஒன்றாகலாம். அதாவது, ஜெய்சங்கர்-டோவால்-மோடியின் ஆதிக்கத்தில் இந்தியா இப்புதிய நடைமுறைகளைக் கைக்கொள்வது உண்மை என்றாலும், இதன் மறுபக்கமாய்த் திகழ்வது, மேற்கின் நகர்வுகள் என்பதனை அறிந்து கொள்வது சிறப்பானது. (புலம்பெயரின் தாக்கமும், இவ்வகையில், மேற்கின் நலன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றதா என்பதும் தொடர்புபட்ட வினாவாகின்றது).
சுருக்கமாய்க் கூறுவதென்றால், இந்தியாவின் அரசியலானது, இப்போது புதிதாய்க் கட்டமைக்கப்படுகின்றது. இதனை மிக மிக கவனமாக உள்வாங்க வேண்டியதும், அணுக வேண்டியதும் எம்மவரின் கடமையாகின்றது.
அதாவது, சோவியத் ரஷ்யா போன்று “கைகூப்பி” இருந்த நேருவின் இந்திய காலமும் போய்ச் சேர்ந்து, இன்று, விறைத்த கைமுஷ்டிகளுடன், இந்தியா, விடயங்களை அணுகும் காலம் உருவாகி விட்டது எனலாம்.
தெற்காசியாவின் இன்றைய இந்த அரசியல் நிலைமைகள்-கருத்தோடு ஊன்றி பார்க்கப்பட வேண்டிய அவசியத்தைக் கோருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்று, இந்தியாவில் இருந்து திறக்கப்பட வேண்டிய தரைவழி பாதை குறித்து, போராடுவது எதற்காக என்பதனை உலகம் அறிவதைப் போல நாமும் அறிய வேண்டிய நிர்பந்தம் உண்டு. ஏனெனில், இதனை, இந்தியாவும், உலகும், ஏற்கனவே அறிந்தே இருக்கும் என நாம் நம்பலாம். அதாவது, ராஜீவ் காந்தியைச் சுட்ட, கடந்த காலத்துடன் நாம் தொடர்ந்தும் அரசியல் செய்ய முடியாது. இதற்கான முன் நிபந்தனை, ஆக்கபூர்வமான சுய விமர்சனமே ஆகும் என்பதெல்லாம் வேறு விடயமாகின்றது. காரணம், சிந்து நதியைத் தடைசெய்த அதே மூர்க்கத்துடன் இந்தியா இன்று செயற்பட துவங்கிவிட்டது. இதனாலேயே, பங்களாதேஷின் 42சதவீத இறக்குமதியை இந்தியா தடை செய்தது முதல் (The Hindu:20.05.2025), இத்தியாவிற்கு எதிரான அரசியலைப் பங்களாதேஷ் அண்மையில் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற பின்னணியில், இந்நகர்வுகளின் பின்னால் யார் யார் நின்று பங்களாதேஷை இயக்குவிக்கின்றனர் என்பது குறித்த தெளிவும் எமக்கு தேவையாகின்றது.
7
இச்சூழ்நிலையிலேயே, புட்டின் தனது இலக்குகளை, வெளிப்படையாக மாற்றி அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது:
உக்ரைன் என்றுமே நேட்டோவில் அங்கம் வகிக்க முடியாது.
இதேபோல், உக்ரைனானது, எச்சந்தர்ப்பத்திலும் ஓர் அணு ஆயுத நாடாக இருக்கவும் முடியாது.
மேலும், உக்ரைனில் பரவியிருக்கும், இன்றைய நாசிச அரசியல் விஷமானது அடியோடு களைந்தெறியப்படல் வேண்டும்.
இவை மூன்றுமே, இன்றைய ரஷ்யாவின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக் கூடியவை என்பதே புட்டினின் கோட்பாடாகின்றது.
ஆனால், இவை மூன்றும், செலன்ஸ்கிக்கு ஆசை காட்ட, பிரான்சும், ஜெர்மனியும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் பாவித்த இனிப்பு மிட்டாய்கள் எனக் கூறுவதும் சாத்தியமானதே.
இந்த ரஷ்ய இலக்குகளின் பின்னணியில், முக்கியமாக, உக்ரைனானது போர்களத்தில், இன்று தினமும் அடைந்து வரும் பின்னடைவுகளின் பின்னணியில், புதிய ரஷ்யாவின் மூர்க்கத்தனமான எழுச்சியின் பின்னணியில் (ரஷ்ய தேசியவாதம்) இப்போது, புதிய தடைகளை அறிவிக்குமாறு, ஐரோப்பிய நாடுகள் கூட்டுக்குரல் எழுப்புகின்ற சூழலில், ட்ரம்ப் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கின்றார் எனச் சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதாயும் உள்ளது. இக்குழப்பங்களை இட்டு, புட்டின் வழமை போன்று புன்னகைப்பது என்பதும், உலக மாற்றத்தைக் குறிக்கின்றது. அதாவது, ரஷ்யாவின் முகமும், உலகின் முகமும் இன்று மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதும் தெளிவு. முக்கியமாக மொஸ்கோ கொண்டாட்டங்களின் பின்.
8
ஓர் அணுத்தளத்தை ரஷ்யாவும் சீனாவும் இணைந்து, நிலவில் நிர்மாணிக்கத் துணிந்துவிட்டன என்பது தகவல். (லூனா அணுத்தளம்: 13.05.2025).
உலகின் விண்வெளி சுற்றுப்பாதையில், அணு ஆயுதங்களை நிறுத்த, இவ்விரு நாடுகளும் திட்டம் வகுத்துள்ளமையும், இச்சுற்றுப்பாதைகளில் இருந்து வாஷிங்டனை அணு ஆயுதங்களால் தாக்குவது என்பதும் மிக எளிதானது என நேட்டோ அறிவித்துள்ளது. (Euro Asian Times:15.05.2025).
ஹைப்பர்சோனிக் விமானங்களை உலக நாடுகள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. ரஷ்யாவும் சீனாவும் ஏற்கனவே இவற்றில் கரை கண்ட நாடுகளாகி விட்டன. (Mig 41, Su-57> போன்ற AI தொழிநுட்பங்களைப் பாவிக்கும் விமானங்கள்). இவற்றுடன் சீனத்தின் Drone Mother Ship போன்றன இன்றைய வரவுகளாம் (22.05.2025).
ரஷ்யா தனது சண்டை விமானங்களில் MACH 6 வேகம் கொண்ட தனது அணு ஏவுகனைகளை (குரூசி ஏவுகணை) பொருத்தி விட்டது என்பதும் கணக்கில் எடுக்கத்தக்கது (25.05.2025).
இதுபோக, சீனா, தனது நவீன மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களைக் களமிறக்கி விட்டதாய்க் கூறப்படுகின்றது. இவற்றில், Fujian விமானம் தாங்கி கப்பலானது, அதிநவீன தொழிநுட்பங்களைக் கொண்டுள்ளதாய் கூறப்படுகின்றது- AI உட்பட. இதுபோக, விண்வெளியில் சீனம் இன்று நடத்தும் சாதனைகள், மனுகுல வரலாற்றில் முதன்முறையானது. தனது சொந்த Space Station ஐ மூவருடன் நிறுத்தியது மாத்திரமல்ல (இச்சாதனையைப் புரியும் ஒரே நாடு-இன்று) என்பது போல தினந்தோறும் ரொக்கட்டுக்களை விண்வெளிக்கு அனுப்பும் நாடு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதுபோக, புட்டினிடம் கேட்கப்படும் அதிகமான கேள்வி: “ஏன் உக்ரைன் போரை மூன்று வருட காலமாய் இழுத்தடித்தீர்கள். ரஷ்யாவின், 'பாசுபதங்களை' பாவித்து மூன்றே தினங்களில் முடித்து விட்டு, எமது பாதையில் தொடர்ந்து சென்றிருக்கலாமே” என்பதாகும் (முக்கியமாக, பைடன், வேசியின் மகன் என கூறிய பின்னரும்!).
இதற்குப் பதிலளித்த புட்டின், “உண்மைதான். ரஷ்யா, போதிய தகுதியும் வளமும் கொண்டுள்ளது உண்மைதான். இருந்தும், எமது தற்போதைய இலக்குகளை எட்ட இவ்வளவும் அவசியப்பட போவதில்லை. குறைந்த வளத்தையே நாம் உக்ரைனில் பாவிக்கின்றோம்”. (ஏனைய வளங்களை, ரஷ்யா, உலகம் முழுவதும் விஸ்தரிக்கப் போவதும், அதற்கான தேவை எழுந்துள்ளது என்பதுமே, புட்டின் கூற்றின் உட்கிடையாகின்றது. உதாரணம்: “Ocean 2024 Exercises: September 2024” (சென்ற தொடர்களைப் பார்க்கவும்)>
9
இச்சூழ்நிலையிலேயே, கனடாவின் தூதுதர், இன்றைய இலங்கை அரசின் அமைச்சர்களுடன் பேசும்போது, இனவாதத்தை அல்லது இனப்பிளவை இலங்கையில் உருவாவதற்கு அல்லது பலப்படுத்துவதற்கு நீங்கள் எவ்விதத்திலும் உதவக்கூடாது என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்.
ஆனால், இலங்கையில், தமிழ்த் தீவிரவாதமும் (அதேபோன்று) இஸ்லாமியத் தீவிரவாதமும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. அதற்கூடு, இவை, Uni Polar World ஒழுங்கின் நியதிகளை, நிலைநிறுத்தவும், இதற்கூடு தமது அரசியலை உறுதி செய்யவும் எதிர்ப்பார்த்துள்ளன. கூடவே, ரணில-கோத்தா-மைத்திரி வகையான ஆட்சியாளர்களை நிலைநிறுத்துதலும், தமது அரசியலை நிலைநிறுத்துவதும் அடிப்படைகளில் ஒன்றாகின்றது எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
இக்கருத்தானது, புலம்பெயர் சக்திகளின் தீவிர முகத்தினூடு அல்லது கட்டார்-சவுதி போன்ற நாடுகளின் அணுசரனையூடு, எத்தகைய ஒரு சர்வதேச வேலைத்திட்ட அடிப்படையில், இலங்கையில் ஊடுருவலாம் அல்லது களமிறக்கலாம் என்பது கேள்வியாகின்றது. ஆனாலும், இவற்றுக்கான மொத்த விலையைத் தரப்போகிறவர்கள் எமது சாதாரண மக்களே என்பதில்தான் துயர் தேங்குவதாய் உள்ளது. அருண் சௌத்ரி கூறுவார்: “ஐரோப்பாவிலேயே, படித்த நாடு ஒன்று உண்டென்றால், அது ஜெர்மனித்தான். ஆனாலும், அதனையே ஹிட்லர் மாற்றி அமைத்தார். படிப்பு அம்மாற்றத்திற்கான ஓர் கூறாகியது. அதாவது, ‘படிப்பு’ என்பது இப்படியும் பாவிக்கப்படலாம். இதனால்தான், புத்திஜீவிகள் என்றை விடவும், இன்று, அதிதீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது-அதாவது, ஆயிரக்கணக்கான மனிதர்களின் கண்ணீரையும், இறப்பையும், வாழ்வின் சிதைவுகளையும் தடுத்து நிறுத்துவதென்றால், இவர்களின் தீவிரமான செயற்பாடுகள்; வேண்டத்தக்கதாய் இருக்கின்றது”.
அதாவது, முள்ளிவாய்க்காலிலும், உயிர்த்த ஞாயிறு தேவஸ்தானங்களிலும் இக்கூற்றானது, மேலும் தெளிவுடன் ஒலிக்கக்கூடும். இதனாலேயே, எமது பணி இருமடங்காகின்றது.
10
தீவிரவாதங்களைத் தெற்காசியாவில் இறக்குமதி செய்வது மேற்படி சக்திகளின் முதல் வேலைத்திட்டமாகின்றது. இதனால், இன்றைய தெற்காசியாவின் முக்கிய மாறுதல்களை இனங்காணாமல் அல்லது கண்டு கொள்ளாமல் நாம் அடுத்த அடியை எடுத்து வைக்கவும் முடியாது.
இவ்வகை அரசியலானது, இந்திய-பாகிஸ்தான் போர்களாலும், ஜெய்சங்கர்-மோடி ஆகியோரின் கூற்றுகளாலும் மட்டுமே, ஒரு முடிவை எட்டி விட்டதாகக் கூறுவதற்கில்லை. ஓர் இழுபறிதான். இவ் இழுபறிகளின் மத்தியிலேயே ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றும் பிரகாசிக்கத் தொடங்குகின்றது. இவற்றை உள்வாங்கியே இலங்கையின் சிறுபான்மைகள் தத்தமது அரசியலைப் புனரமைக்க வேண்டியுள்ளது.
இவை, இரண்டு வித்தியாசமிக்க, எதிரெதிர் உலக ஒழுங்குகளின் (Uni Polar World and Multi Polar World) இழுபறிகளை மாத்திரம் எதிரொலிப்பது என்பதும் இல்லை. இவற்றின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய பிரதேச வல்லரசு நகர்வுகளுடன் இவையும் இணைந்தவையாகக் காணப்படுகின்றன. (பங்களாதேஷின் யூனூஸ், மாலைதீவின் முய்சூ (Muizzu), இலங்கையின் ரணில் போன்றோர் முன்னெடுக்கும் அரசியலில் இருந்து இவை வித்தியாசப்படலாம்). அதாவது, ஒரு Uni Polar World ஒழுங்கின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒரு Multi Polar World ஒழுங்கின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசங்களைத் தெளிவுறக் காண்பது தேவையாகின்றது.
இவ்வித்தியாசங்களை உள்வாங்கி, தெளிந்து, அரசியல் தீவிரவாதங்களை விட்டு தமக்குரிய யதார்த்தங்களுடன் நெருங்கி முடிவெடுப்பது எமக்குத் தேவையாகின்றது. ஏனெனில், கடந்த காலத்தில் கனவுகளுக்காகப் பெரும் விலை கொடுத்தவர் நாம்.
ஆனால், இன்று, ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசு முழுமையானது எனவும் கூறுவதற்கில்லை. அண்மையில் நடந்த பொசன் தினக் கொண்டாட்டங்கள் அல்லது தலதா மாளிகையின் புனித தந்தத்தைப் பார்வையிடும் நிகழ்வு (வரலாறு காணாத மக்கள் கூட்டம், நான்கு பேர் வரை இறந்ததாகவும் தகவல்) அல்லது அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் அல்லது தமிழரசு கட்சியினர் கோரும் வர்த்தமானி சம்பந்தமான கோரிக்கைகள்-இவை யாவும் “கிரீஸ் மனிதன் காலத்தை” நியாயப்படுத்தக்கூடிய சமதையான செயல் என்றும் கூற முடியாது. ஆனால், இவற்றிற்கூடாகவே எமது அரசியலானது இன்று பயணப்பட வேண்டியுள்ளது. கடந்து முப்பது, நாற்பது வருடங்களாக எமது அரசியலானது சர்வதேசத்திடம் இருந்து அல்லது உள்ளூர் சக்திகளிடம் இருந்து எத்தகைய உறுதுணைகளை, ஆதரவுகளை பெற்றுள்ளன என்பதெல்லாம் கேள்விக்குறியாகின்றது. இனப் பிளவுகளைப் பாவித்து, அதிகாரத்தைக் கைப்பற்றும் மார்க்கத்தைக் கொண்ட, ஓர் சிறிய நாட்டில் நாம் வசிக்கின்றோம் என்பது அடிப்படையானது. கனவு காண்பது என்பது எம் யாவருக்கும் எளிதானதாகவே இருக்கின்றது, மறுபுறம், யதார்த்தத்தில் காலூன்றுவது எமக்கு மட்டுமல்ல அனைவருக்குமே சிரமமான நடைமுறையாகவே இருக்கின்றது.
இச்சூழ்நிலையிலேயே, உலக ஒழுங்குகளின் அரசியலும் சிறப்பாக, தெற்காசியாவின் அரசியலும் எமது அரசியலைக் கட்டமைப்பதில் செல்வாக்கு செலுத்துவதாய் உள்ளது.
லெப்ரோவின் இன்றைய கூற்றை ஆழ்ந்து நோக்குவோமானால், உக்ரைன் போரானது இப்போது முடிவதற்கில்லை என்பது வெளிப்படை. உலக ஒழுங்கின் மாறுதல் அல்லது இழுபறி என்பவை இன்றைய தலையாய அரசியலாகத் தொடரப்போகின்றது என்பது துயர் தரும் உண்மையாக காணப்படலாம். (இன்றைய தகவல்களின்படி, இரண்டாவது தொடரலையாக, ரஷ்யா உக்ரைனின் தலைநகரான கியெவ் நோக்கி 367 ஏவுகணைகளை (298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள்) ஏவியதும் உண்மையாகின்றது. (Reuters: 26.05.2025).
இவற்றுடன், இன்று பத்து Tu-95 விமானங்களை, அவற்றின் குரூஸ் ஏவுகணைகளோடு இறக்கி உக்ரைனை ஒருமித்து தாக்கின என்ற செய்தி வெளிப்பட்டு உள்ளது (26.05.2025). இது, ரஷ்யாவின் “புது” மூர்க்கத்தைக் காட்டுவதாய் உள்ளது. இவ்வளவும் துருக்கிப் பேச்சுவார்த்தைகளை அடுத்தே நிகழ்ந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. புட்டினின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பதிலடி இது என சிலர் அபிப்பிராயப் படலாம் (Kursk:20.05.2025). ஆனால், இது பதிலடியாய் மாத்திரம் இருப்பதற்கில்லை. தொடர்ந்தாற்போல் இரு நாட்களாய் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்கள். இனி மூன்றாவது நாளாய் Tu-95 விமானங்களின் குரூசி ஏவுகணை தாக்குதல். இவை பதிலடி மாத்திரம்தானா என்பதுவே கேள்வி. ஆனால், உக்ரைன் போரானது மேலும் தீவிரம் காட்டி வலுவுடன் நகரத் தொடங்கியுள்ளது. எனவே, ஐந்தா, எட்டா என்பதெல்லாம் வெறும் கேள்வியாக இருப்பதற்கில்லை.
இவ்அடிப்படையிலேயே, சீனத்தின் பாத்திரமும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. மாபெரும் வல்லரசாக மாறியுள்ள சீனாவானது, ரஷ்யாவுடன் இன்று கைகோர்த்துள்ளது திருப்புமுனையாகின்றது.
ட்ரம்ப், புட்டினுடன் இரண்டு மணி நேரமாய் தொலைபேசியில் உரையாடினார் என்பது பரபரப்பான செய்தியாக மேற்கு ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. இருக்கலாம். ஏனென்றால், “வேசியின் மகன்”, இப்போது தொலைபேசியில் பேசுவது அபூர்வமானதாகக் கருதப்படலாம்.
ஆனால், உலகின் மிகப் பெரும் நாடுகளாகிய சீன-ரஷ்ய தலைவர்கள் நான்கு தினங்களாய் நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியமாகின்றது. இவற்றில் ஒரு சில பேச்சுவார்த்தைகள் ஏழு மணி நேரம் நீடித்ததாகவும் தகவல். ஆனால், இதன் ஒட்டுமொத்த விளைவு இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள இன்றைய ஒப்பந்தமாகும். மொஸ்கோ கொண்டாட்டங்களின் போது, கையொப்பமிடப்பட்டதாகக் கூறப்படும் இருபது ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் இன்று பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால், சர்வதேச விவகாரங்களில் இனி இவை இரண்டும் இணைந்தே நடவடிக்கைகளை ஒன்றாக மேற்கொள்ளப் போகின்றன என்பது ஒருபுறமிருக்க இனியும் “வெறும் பார்வையாளராக” இருக்கப் போவதில்லை என்ற முடிவே முக்கியமானதாகப் படுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால் இப்புரிந்துணர்வானது உலகை வெகுவாகப் பாதிக்கப்போகின்றது என்பது தெளிவு. மேலும், இதன் ஒரு அலை, தெற்காசியாவிலும் இனி வீச இருக்கப்போவதை அண்மையில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் எமக்குத் தெளிவுற சுட்டிக்காட்டுகின்றது.
இதற்குரிய பின்னணிகளும், சூழல்களும், உதாரணங்களும் மேலே வாதிக்கப்பட்டுள்ளன.
இவை யாவற்றுடனும், இலங்கை-ரணிலின் கூற்றையும் இணைத்துப் பார்க்கும் போதே, எமது அரசியலானது பிரவாகம் கொள்ளலாம் என்றாகிறது.
அருண் சௌத்ரியின் கூற்று: “இதனால்தான் புத்திஜீவிகள் எனப்படுவோர் இன்று அதிதீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது-அதாவது, ஆயிரக்கணக்கான மனிதர்களின் கண்ணீரையும், இறப்பையும், வாழ்வின் சிதைவுகளையும் தடுத்து நிறுத்துவதென்றால்… இவர்களின் தீவிரமான செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றது…”.
[ தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.