“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
தனிமையும் மௌனமும், ஒன்றுசேர,ஒரு மோன நிலையில் தரிசிக்க தெரிந்த மனிதர். இவ்விரண்டையும் பல்வேறு மனிதர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம் வாழ்நாட்களில் சந்தித்து இருக்கலாம். கண்ணதாசனில் இருந்து கலாம் வரையிலும் அல்லது பாரதியில் இருந்து கைலாசபதி வரையிலும் இவை இரண்டினதும், (தவத்தின் வலிமையானது) அவரவர் தெரிவு செய்யும் மட்டங்களிலேயே இருப்பதாய் இருக்கும். அதாவது, அவர்கள் எந்த மட்டங்களில் எவ்வாறு இவற்றை தரிசித்தனர் என்பதற்கான விடை அவர்களின் செயற்பாட்டின் சாரமாக வெளிப்படவே செய்யும்
(எழுத்திலும்).
‘தனிமை கண்டதுண்டு
சாரம் நிறைந்ததம்மா’
என்ற வரிகளின் ஆழத்தைக் கண்டுப்பிடித்து கோடிட்டவர் கைலாசபதி.
இதனைப் போலவே, தனிமையின் அழகை, தன்னளவில் கண்ணதாசனும் காணத்தவறினார் இல்லை:
‘தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி…’
எனக் கண்ணதாசனும் ஓர் உரையின்போது கூறியதும் கவனிக்கத்தக்கதே.
டால்ஸ்டாய் பற்றி எழுத நேரிடும் கார்க்கி அவரது மௌனம் எத்தகையது என்பது குறித்துக் குறிக்கின்றார்.
பிரமாண்டமானதும், ஈர்க்கக்கூடியதுமாக, முற்றுமுழுதாய்க் கரைந்துவிட்ட ஒரு துறவியின் நிலையில் நின்றே அவரது மௌனம் செயற்பட்டது என்பது கார்க்கியின் அபிப்பிராயம்.
பெரிதும் மனம் விட்டு கதைக்க விருப்பம் கொண்ட இம்மனிதர் சமயங்களில், உள்வாங்கிக் கொள்வதும், மௌனம் காப்பதும், சில சிந்தனைகள் பொறுத்து அஞ்சி விலகி நிற்பதும் இவருடைய குணாம்சங்களில் சில என்பார் கார்க்கி.
இந்நினைவுகளே, இச்சிந்தனைகளே என்னை என் சவக்குழிவரை அழைத்து செல்லக்கூடியவை என ஒரு தருணத்தில் கூறியவர் கார்க்கி. அதாவது, தனது மௌனத்தின் பின்னால், எத்தகைய ஓர் போராட்டத்தைக் கார்க்கி நடத்தியுள்ளார் என்பதும், அதில் ஓரளவில் வெற்றி பெற்ற மனிதராய் அவர் இருந்துள்ளார் என்பதும் அவரது எழுத்துக்கள் நிரூபிக்கும் ஒன்றாய் இருக்கின்றன.
இந்தப் புரிதலில் இருந்தே கார்க்கி, டால்ஸ்டாயின் மௌனத்தை அணுகினார் எனலாம்.
முன்பு கூறியவாறு, டால்ஸ்டாய் சிலவற்றை வெளிப்படுத்த அல்லது தீண்ட அஞ்சி ஒதுங்கி நிற்கின்றார் அல்லது அவற்றை மௌனித்து தனக்குள் அடக்குகின்றார் எனக் கார்க்கி வர்ணிக்கத் துணிவது பரிசீலிக்கத்தக்கது.
இலக்கியத்தின் பொதுத்தன்மை குறித்துக் கூறும் லெனின், கார்க்கியுடன் அளவளாவும் போது கேட்பார்:
“கூறுங்கள், இது எங்களை இறுதியில் எங்கு கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடும்…”
லெனினின் இந்தக் கேள்வியில் அவர் பயணிக்கும் பாதையின் ஆழம் தெளிவாகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தைக் கடக்கக்கூடிய இக்கேள்வியின் சாரம் அளப்பரியது எனக் கூறுதல் முறைமையானது.
மயாக்குவாஸ்கியின் வரிகளையும் ஒரு சந்தர்ப்பத்தில் நிராகரிப்பதும் இதனாலேயே அவருக்குச் சாத்தியமாயிற்று:
“கையில் பீரங்கியுடனும்
தலையில் லெனினுடனும்
நாங்கள் முன்னேறுவோம்”
என் மயாக்குவாஸ்கி ஒரு சந்தர்ப்பத்தில் பாடவே செய்தார். ‘லெனினின் கவிதாஞ்சலி’ என்பதும் அவர் இயற்றிய நெடுங்கவிதை என்பது குறிக்கத்தக்கது. இருந்தபோதும், ‘எமது குழந்தைகள் புஷ்கினையே கற்றாக வேண்டும்’ எனச் சிபாரிசு செய்தவர் லெனின். (மயாக்குவாஸ்கியை உயரிய கவிஞனாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம் போற்றி வாழ்த்திய போதும்).
அதாவது, ‘வர்க்க இலக்கியம்’ என்பதனையும் தாண்டிச் சிந்திக்கும் திராணி கொண்டவராக லெனின் பயணித்தார் என்பது தெளிவு. வேறு வார்த்தையில் கூறுவோமானால், வர்க்கத்தின் போராடும் பண்பைத் தாண்டி, மனுகுலத்தின் நலனைத் தனது சிந்தனையின் மைய பகுதியில் இருத்தியவர் அவர் என்பது தெளிவாகின்றது. (இருந்தும், குறிப்பிட்ட ஒரு காலத்தில், இரண்டும் சேர்ந்தாற்போல் பயணிப்பதும் சாத்தியமானதே என்பது வேறு வகைப்பட்ட விடயமாகும்).
இந்தப் புரிதலின் பின்னணியிலேயே, கார்க்கி டால்ஸ்டாய் பொறுத்து கதைக்கின்றார் என்பதைத் தெரிந்தாக வேண்டிய கட்டாயச் சூழலில் நாமிருக்கின்றோம்.
இருந்தும், டால்ஸ்டாயின் பார்வையில் நான் ஓர் இனக்குழுமத்தைச் சேர்ந்தவன் என்பது அவரது அபிப்பிராயமாக இருக்கின்றது.
இருக்கலாம். ஆனால், அத்தகைய இனக்குழுமத்தைப் பற்றிய அவரது அறிவு போதுமானதாக இல்லை என்பதும் அது ஒன்றும் அறியாத பூச்சிய மட்டத்திலேயே இருந்தது என்பதையும் நான் கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்பார் கார்க்கி.
2
உள்நோக்குக் கொண்ட மிகத் தர்மசங்கடமான கேள்விகளை அடுக்குவது அவருக்குப் பிடித்தமான விடயமாகிறது:
“உன்னைப் பற்றி என்ன நீ எண்ணுகின்றாய்…”
“எனது மகன் lev திறமைசாலி எனக் கருதுகின்றாயா…?”
“எனது மனைவி Sophia பிரியப்பட கூடியவள்தானா–அவளை நீ விரும்புகின்றாயா…?”
அவரிடம் பொய் சொல்லித் தப்புவது என்பது நடவாத காரியம்.
ரஷ்ய ஐதீகத்தில் வரும் ராட்சச மனிதர்களின் விளையாட்டுப் போன்றது இது. ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு, பின் அடுத்ததிற்குத் தாவும் இவரது இந்தச் செயல்பாடு, ஒரு சண்டைக்கான முகாந்திரம்தான். இது சுவாரசியமானது. ஆனாலும், எனக்குப் பிடித்தமானதாக இல்லை. அவர் ஒரு பிரமாண்டமான ராட்~சன். ஆனால் நானோ இன்னும் வளரா பருவத்தில் இருந்த பேதை. நோகடிக்காது, என்னை, என்பாட்டில் வெறுமனே இருக்க விடுவது மேல்.
3
சீட்டாடுவது குறித்து இவரது ஈடுபாடு அதிசயப்படத்தக்கது. இவ்வளவு பிரியத்துடன், உயிரை உருக்கி, சீட்டாடுவதில் இவர் ஈடுபடுவதைக் காண்பது ஆர்வமூட்டக்கூடியது. அதிக கிளர்சியையும் எய்தி விடுகின்றார். சீட்டுக்களை இவர் பிடிப்பதே தனித்தன்மை வாய்ந்தது. சிறு பறவைகளை நசுக்காது, பொத்திப் பிடிப்பது போல், வேதனைக் கண்டுவிடாமல் மிகக் கவனமாகவும் பதற்றத்துடனும்… வெறும் அட்டைத் துண்டுகளையா இப்படி இவர் தன் நடுங்கும் விரல்களால் பற்றியிருக்கின்றார் என அதிசயிக்கும்படி…
4
புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் முற்றும் துறந்த துறவிகளை இவர் நினைவூட்டுவதாக இருக்கின்றது. கையில் ஒரு ஊன்றுகோலுடன், உலகத்தைச் சுற்றிவந்து ஆயிரக்கணக்கான மைல்களை கால்நடையாகவே கடந்து ஒரு மடாலயத்தில் இருந்து வேறொரு மடாலயத்திற்கும், ஒரு சந்நிதியில் இருந்து மற்றொரு சந்நிதிக்குமாக, இவர்கள் தனிமையில் செல்வதும், அனைத்திற்கும் மேலாக அனைத்துக்குமே-அனைவருக்குமே, -ஏன் தனக்குமே அந்நியமான ஒரு நிலையில் இவர்கள் நடந்து வரும் சித்திரத்தில் இவரும் நடக்கின்றார். இந்த உலகம் அவருக்கானதல்ல. அந்நியமானது என்பது போல், கடவுளும் அப்படியே இவர்களிடம் தோற்றம் கொள்வதாகத் தெரிகின்றது. இவர்கள் வணங்குவது கூட ஏதோ ஒரு பழக்க தோ~த்தால் ஏற்பட்ட ஒன்றுதான் என்பதைத் தவிர உள்ளூர இவர்கள் கடவுளைப் பகைப்பதாகவே தெரிகின்றது. பூமிப்பந்தின் ஒரு கோடியில் இருந்து மறுகோடி வரை இவர்களை துரத்தியடித்ததற்காகவா?
இவர்களும், மனிதர்களை வெறும் கட்டைகளாகவும், பாதையில் தடுக்கி விழச் செய்யும் தடித்த முரட்டு வேர்களாகவும் கற்களாகவும் கருதுவதும், சமயங்களில் மனிதர்களால் இவர்கள் தடுக்கி விழுந்து காயப்படுத்திக் கொள்வதும் உண்மைதான் என்றாகின்றது.
இதனால், மனிதர்கள் இல்லாவிட்டால் மெத்த நல்லதுதான். ஆனால், மனிதர்களை ஆட்டி வைப்பதில் இவர்கள் அடையும் இன்பமும் மனிதர்களில் இருந்து தாம் வேறுபட்டு உயரிய இடத்தில் இருப்பதைக் காட்டிக் கொள்வதும் சமயங்களில் தென்படவே செய்கின்றது.
5
சில வேளைகளில் அவர் எங்கிருந்தோ, ஓர் தொலை தூரத்து வேற்றுக் கிரகத்திலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து சேர்ந்தது போல் தோற்றம் தந்தார். அவ்வேற்றுக் கிரகத்து மக்கள், வேற்று மொழிகளை பேசுபவராயும், வேறு விதமாய் நடப்பவர்களாயும், வேறு விதமாய் விடயங்களை உள்வாங்கிக் கிரகித்துச் செயலாற்றுபவர்களாயும், வேறு விதங்களில் மனிதர்களோடு உறவு பூணுபவர்களாயும் இருத்தல் வேண்டும்.
புழுதி படிய, களைத்துப் போய் வந்தவர், ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு முகங்களாய் உற்று உற்று பார்க்க ஆரம்பித்தார் - ஏதோ ஒரு ஊமையை போல அல்லது செவிடரைப் போல, அந்நியப்பட்ட ஒருவகை கண்களுடன் உற்று உற்று நோக்கினார்.
நேற்று இரவு உணவுக்கு வந்து சேர்ந்த போதும் இதே மனப்பாங்குடன் ஏதோ தொலைவில் இருந்து வந்தவர் போல், நடக்க முற்பட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, முழங்காலையும் கைகளையும் ஒன்றாய்ச் சேர்த்து தேய்த்துக் கொண்டு, பின் முகத்தைச் சுழித்துக் கொண்டு, அது ஒன்றும் அப்படி முடியப் போவதாய் இல்லை - கூடாது. கூடவே கூடாது. அப்படி முடிவடைய கூடாது எனக் கூறினார்.
துணி தேய்க்கும் தட்டை அழுத்தியைப் போல் தோற்றம் தந்த ஒன்றும் விளங்காத ஒரு நபர், அவரிடம் துணிச்சலுடன் கேட்டார்:
“என்ன சொன்னீர்கள்…”
அவர், அவனையும் உற்று உற்றுப் பார்க்க தொடங்கி விட்டார்.
பின்னர் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பார்வையைச் செலுத்தி அவர், நீங்கள் எல்லோரும் எதைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என வினவினார்.
Plehve சம்பந்தமாக…’
Plehve, Plehve என இரண்டொரு முறை திருப்பிக் கூறி பார்த்தார் - ஏதோ இந்த பெயரைத் தானே எங்கோ கேள்விப்பட்டது போலவும் இடையே மறந்து விட்டது போலவும்.
இறுதியில் ஒரு பறவை தன் உடலைச் சிலுப்பிக் கொள்வது போல ஓர் சிலுப்பு சிலுப்பிவிட்டு, ஏதோ நினைப்புடன் சிறிதாய்ச் சிரித்து, பின் கூறினார்:
“காலையில் இருந்து, ஏதோ ஒரு முட்டாள்தனம் என் தலையில் ஓடியபடி இருந்தது. யாரோ ஒருவர் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை என்னிடம் கூறி இருந்தார்கள்:
‘இதோ,
இக்கல்லறையின் அடியில் இருப்பது
இவான் எகரோயெவ்…
நாள் முழுவதும்
தோல்களைப் பதனிட்டு உழைப்பவன்.
கடும் உழைப்பாளி.
இவனது இதயமோ
கனிவு நிரம்பியது.
இறந்த பின்,
தன் பட்டறையைத்
தன் மனைவிக்கு
விட்டுச் சென்று விட்டான்.
இன்னுமே தோல்களை வெளுத்திருப்பான்.
ஆனால், இறைவன் அவனை அழைத்துவிட்டான்…
கடந்த வெள்ளியிரவு, புனித கிழமையின் போது…
விண்ணுலகத்து வாழ்வைப் பகர்ந்து கொள்ள –”
அதன் பிறகு அவர் அமைதியானார், மெலிதான களைப்புடன் சிரித்தபடி.
‘இதில் ஏதோ போற்றத்தக்க ஒரு நேர்த்தி உண்டு. துர்நோக்கம் இல்லாமல் ஆக்கப்படும் மனித செயல்கள் யாவும் இன்பமயமானது–போற்றத்தக்கதுதான்’.
6
குடிப்பவர்களை எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆனால், சிறிது, மது அருந்திய பின் சில மனிதர்கள் எவ்வளவு ரசனைமிக்கவர்களாக மாறுகின்றனர் - எப்படி அவர்களது வார்த்தையில் ஒரு ஒளி புகுந்து, கட்டுச்செட்டுடன் அவர்கள் பேச துணிகின்றார்கள் என்பதையெல்லாம் நான் அவதானித்துள்ளேன் - அத்தகைய நேரங்களில் நான் மதுவையும் வாழ்த்த தயாராகவே உள்ளேன்.
Suller, அவருடன் ஓர் வீதி வழியே நடந்து சென்ற போது, மார்புக் கவசமணிந்து இரு வீரர்கள் தங்களது வாட்டசாட்டமான குதிரைகளில் அமர்ந்து வருவதையும் அவர்களது மார்புக் கவசமானது சூரிய ஒளியில், மின்னியது எனவும் இருவரும் இளவயதுக்காரர்கள் என்பதால் அவர்களது இள ரத்தம் அவர்களது முகப்பூரிப்பிலேயே தெரிந்தது எனவும், டால்ஸ்டாய் அவர்களை எப்படி தூற்றினார் என்பதையும் குறிப்பிட்டார்:
“என்ன முட்டாள்தனமான கம்பீரம்… சவுக்கடிகளின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்கள்தான்’
ஆனால் அந்தக் குதிரை வீரர்கள் அவரை கடந்து சென்றவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து அவதானித்த அவர், பரிவுடன் கூறினார்:
“அவர்களின் அழகைப் பார்த்தாயா...? கொப்பளிக்கவில்லை? பழங்காலத்து ரோம வீரர்களைப் போல்… கடவுளே, எவ்வளவு அழகானவர்களாக மனிதர்கள் தோன்றுகின்றனர்… எவ்வளவு அழகாக…”
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.