2-ம் அத்தியாயம்: அழைப்பு

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]  

பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின்  வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.

   “எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!

 பல்கலைக் கழக நாடகமென்றால் ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும் என்பதை கூறவா வேண்டும்? மாணவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தார்கள், கூச்சலிட்டார்கள். சீழ்க்கை அடித்தார்கள். ஆனால் இதெல்லாம் நாடகம் தொடங்க முன்னர்தான். நாடகம் ஆரம்பித்ததும் சுக்கிரீவர் கூட்டம் என்று சாதாரணமாக வர்ணிக்கப்படும் பல்கலைக் கழக மாணவர்களே “கப்சிப்” பென்று ஸ்தம்பித்து, உட்கார்ந்து விட்டார்கள் என்றால், நாடகம் எவ்வளவு தூரம் நெஞ்சைப் பிழிப்பதாக இருந்திருக்க வேண்டும்!

இருளிலே சபையோர் அடுத்த சம்பவம் என்ன என்ற ஆர்வத்தோடு ஒளிமயமான நாடக மேடையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதர் மேடையில் கணீரென்ற குரலில் பேசி நடித்துக் கொண்டிருந்தான்.

அன்று காலையிலிருந்தே ஸ்ரீதரின் மனம் நாடக அரங்கேற்றத்தால் மிகவும்  பூரித்துப் போயிருந்த தென்றாலும் காளிதாசனின் “கணையாழி சாகுந்தலத்”தில் சூத்திரதாரி “பெரிய பயிற்சியுடையோருக்கும் அறிஞர் மகிழ்ந்து புகழும் வரை சிறிது மனத்தளர்ச்சி இருப்பது இயற்கையே” என்று கூறி இருப்பதற்கு இசைய, நாடகத்தின் வெற்றியில் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கவே செய்தன. ஆனால் சபையின் அமைதியும் இடையிடையே பட்டாசு வெடித்தது போல் இருளில் வெடித்துப் பரவிய கைதட்டலும் அந்தப் பயத்தை நாடகம் தொடங்கிய முதல் ஐந்து  நிமிஷங்களிலேயே எங்கேயோ தூக்கி எறிந்துவிட்டது. எனவே தானே இராஜா என்பதுபோல் சிம்மக் குரலெடுத்து முழங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

ஆனால், என்னதான் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த போதிலும் ஸ்ரீதரின் மனதில் ஒரு பெருங் குறை இல்லாமல் இல்லை. தாய் பாக்கியமும் தந்தை சிவநேசரும் நாடகத்துக்கு வர முடியாது போய் விட்டமையே அது. சிவநேசருக்கு நீரிழிவு வியாதி ஏற்கனவே உண்டு. அதன் விளைவாகக் கடந்த சில நாட்களாகக் காலில் ஒரு கட்டி ஏற்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு  ஏற்பட்டுவிட்டதால், இருவராலும் நாடகத்துக்கு வர முடியவில்லை. இல்லாவிட்டால் மகனின் நடிப்புப் புலமையைப் பார்க்க எங்கிருந்தாலும் அவர் வந்தேயிருப்பார். கூடத் தாய் பாக்கியமும் வந்திருப்பாள்.

ஸ்ரீதர் மனம் இதனால் ஏமாற்றமடைந்திருந்ததாயினும் சபையின் முன்னணி ஆசனங்களில் பத்மாவும் அவளது தந்தையார் வாத்தியார் பரமானந்தரும் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவனது கவலைகள் மறைந்து போயின.

பத்மாவின் தகப்பனார் வாத்தியார் பரமானந்தரை அவன் இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லையாயினும் பத்மாவின் பக்கத்தில் அவர் வீற்றிருந்த தோரனையிலிருந்தும், அவர் வயது, முகச் சாயல் என்பவற்றிலிருந்தும் அவர்தான் பத்மாவின் தந்தை என்பதைத் தெரிந்துக் கொண்டான்.

பரமானந்தர் நாடகத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தார்.

நாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன! இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்!

தந்தையைக் கொன்றவன் நான்!

தாயின் கணவன் நான்!

என் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்!

எடிப்பசுக்கு இதை விட  வரை வேறென்ன வேண்டும்!  வேறென்ன வேண்டும்!

உலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது.

‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர்! கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்.

இந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது!

பத்மா அவன் கண்களைக் குத்தும் கட்டத்தில் “ஐயோ” என்று அலற வந்தவள் எப்படியோ அதை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். பரமானந்தர், “பத்மா, நடிப்பென்றால் இதுதான் நடிப்பு! நடிகனின் பெயர் என்ன?” என்றார் மகளைப் பார்த்து.

“ஸ்ரீதர். அவர்தான் நாடகத்தைத் தமிழில் எழுதியவரும் கூட. இன்னும் அவர்தான் தயாரிப்பாளரும்!” என்றாள் விரிவாக.

“அப்படியா! அவன் மிகவும் கெட்டிக்காரன் போலிருக்கிறதே. நாடகம் முடிந்தப்பின்னர் அவனை நான் நிச்சயம் பார்த்துப் பாராட்டவேண்டும்” என்றார் பரமானந்தர்.

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2நாடகம் முடிந்து, சபை கலைந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு புரளிக்கார மாணவன் கலைந்து கொண்டிருந்த மக்களின் இரைச்சலுக்கு மேலே கேட்கும் படியான உரத்த தொனியின் “தந்தையைக் கொன்றவன் நான்..” என்று கூச்சலிட்டுச் சென்றான். சொபாக்கிளின் அவ்வுணர்ச்சி நிறைந்த கதையில் இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டி, கொழும்பில் அவ்வாறு ஒலித்ததைக் கேட்ட ஓர் இலக்கியப் பிரியர் இன்னோர் இலக்கியப் பிரியரின் முதுகில் தட்டி “கேட்டீரா, இதுதான் இறவாத இலக்கியம், காலத்தை வென்ற இலக்கியம்!” என்று கூறிவிட்டுச் சென்றார். ஜன சந்தடியில் ஒன்றிரண்டு வாக்குகள் அங்குமிங்கும் புரண்டன. சீக்கிரம் மோட்டார் வண்டிகளின் ‘ஹோர்ண்’ சப்தமும் இயந்திரங்களின் உறுமலும் கேட்டன. நாடகம் முடிந்து ****

ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வேஷம் கலைக்கும் (அதுதான் வேஷம் போடும் அறையும் கூட) அறைக்குள் வந்து மேக்கப்பைத் துடைக்க ஆரம்பித்தான். சுரேஷ் அவனை அங்கு எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். ‘சுரேஷ்! எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ போ. நான் அப்புறம் வருகிறேன். நாடகம் எப்படி!” என்று கேட்டான் உற்சாகத்தோடு “அற்புதம்!” என்று சுருங்கச் சொன்ன சுரேஷ் ஸ்ரீதரின் தோள்களைத் தடவி “நீ இவ்வளவு தூரம் நடிப்பாய் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வா. அப்புறம் பேசுவோம்.” என்று கூறுவிட்டு அவனிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டான். அவன் போன மறுகணம் பத்மாவும் பரமானந்தரும் அங்கு வந்தார்கள். வெயர்த்து விறு விறுத்து, பாதி கலைக்கப்பட்ட மேக்கப்புடன் நின்ற ஸ்ரீதர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றான். பத்மா பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்தானள்.

“ஸ்ரீதர்! உனது நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட நடிப்பைச் சிறந்த ஆங்கிலப் படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்” என்று மனமாரப் பாராட்டினார் பரமானந்தர்.

ஸ்ரீதருக்குப் பரமானந்தரின் பாராட்டு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. “எடிப்பஸ்” நாடகத்தை நடிக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை. அதை வெற்றியாகவே நிறைவேற்றி விட்டேன் என்று நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தாழ்மையுடன் பதிலளித்தான் அவன்.

பரமானந்தர் அவன் தோள்களைத் தட்டி “சரி, நான் வருகிறேன். ஸ்ரீதர் சமயம் இருக்கும் போது நீ வீட்டுக்கு வரலாம். முடியுமானால் நாளையே வா. உன்னுடன் நாடகங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். உண்மையில் நானும் உன்னைப்போல் ஒரு நாடகக் கலைஞன் தான். வாலிப வயதில் நானும் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுது நான் இது போல் மீசை வைத்திருக்கவில்லை. பெண் பாகங்களில் கூட நடித்திருக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டு.

ஸ்ரீதரும் சிரித்தான். “ஓ! அப்படியா! அப்போது நாங்கள் இருவரும் ஒரே திசையை நோக்கிச் செல்பவர்கள். பத்மாவுக்கு நாடகத் துறையில் இருக்கும் ஆர்வத்துக்கும் இப்போது காரணம் புரிந்துவிட்டது. தந்தைக்கு இருக்கும் கலையார்வத்தில் பாதியாவது மகளுக்கு இருக்காதா? என்னை வீட்டுக்கு வரும்படி கூறினீர்களல்லவா? கட்டாயம் நாளைக்கே வருகிறேன்” என்றான் ஆர்வத்துடன்.

அதன்பின் பரமானந்தரும் பத்மாவும் ஸ்ரீதருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மரமடர்ந்த இருள் படர்ந்திருந்த வீதி வழியே கொட்டாஞ்சேனைக்குச் செல்ல, பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்கள். வழியில் நாடகத்தைப் பற்றித் தந்தையும் மகளும் விரிவான விமர்சனம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரீதர் அன்றிரவு வீடு வந்து சேர்ந்தபொழுது இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. சுரேஷ் ஏற்கனவே வீடு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான். ஸ்ரீதர் அறைக்கு வந்த பொழுது சுரேஷின் “கார்-புர்” குறட்டை ஒலி தான் அவனை வரவேற்றது. அதைச் சற்று உற்றுக் கேட்ட ஸ்ரீதர் “சுரேஷின் குறட்டை ஒலி பல சங்கீத வித்வான்களின் கச்சேரிகளிலும் பார்க்க இனிமையாக இருக்கிறதே!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டான். ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று மிக்க மகிழ்ச்சி. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று நாடகத்தின் வெற்றி. மற்றது பரமானந்தர் அவனைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தமை. இவ்வழைப்பின் பயனாகப் பத்மாவுக்கும் தனக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தொடர்பு மேலும் இறுகி வலியுறும் என்று அழுத்தமான எதிர்ப்பார்ப்பு அவன் மனதிலே ஏற்பட்டது.

ஸ்ரீதரின் அறையில் வெளிச்சம் தெரிந்ததும் வேலைக்கார சுப்பையா மாடிக்கு ஓடி வந்தான்.

“சின்ன ஐயா வீடு வந்ததும் உடனே தனக்கு ***  ஐயா டெலிபோனில் பேசினார்” என்றான் அவன்.

“அப்படியா!” - என்று கொண்டே ஸ்ரீதர் டெலிபோன் இருக்கும் இடத்துக்குப் போய் கிராமத்துக்கு ஒரு “ட்ரங்க் கோலை” “புக்” பண்ணிவிட்டுச் சாப்பாட்டு மேசையிலமர்ந்து, சிறிது சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் கையும் வாயும்தான் சாப்பாட்டோடு சேர்ந்து நின்றனவல்லாமல், மனமென்னவோ பத்மாவின் பின்னாலே தான் போயிற்று. அவள் தங்க மேனியும் தளிரிடையும் மனத்திரையில் தோன்றின.

“பத்மா மிகவும் கெட்டிக்காரி. எவ்வளவு நாகரிகமாகவும் மரியாதையாகவும் என்னைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாள்! பரமானந்தரும் ஒரு நாடகக் கலைஞராக இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலல்லவா? இனி நான் அவர் வீட்டுக்கு அதைச் சாக்காக வைத்துக்கொண்டு எத்தனை தடவையும் போகலாம்” - என்று தன்னோடு தானே பேசிக் கொண்டான் ஸ்ரீதர்.

பின்னர் திடீரென மற்றோர் எண்ணம் உண்டாயிற்று. “இன்று நான் பத்மாவுடன் மாறாட்டமாகத்தானே பழக வேண்டியிருக்கிறது! ஆனால் என்றோ ஒரு நாள் உண்மையைக் கூறித்தானேயாக வேண்டும்! அப்பொழுது அவள் என்னைப் பொய்யன் என்று ஏற்க மறுப்பாளோ! காலையில் சுரேஷிடம் நான் இந்தக் கேள்விக்கு மறுமொழி கேட்க வேண்டும். அவன்தான் இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலளிக்கக் கூடியவன்,” என்று எண்ணிய ஸ்ரீதரின் மனதில் எதற்காக அவன் தந்தையார் நள்ளிரவில் டெலிபோனில் தன்னுடன் பேச முயல வேண்டும் என்ற கவலையும் ஏற்பட்டது. “** செய்தியோ அவச் செய்தியோ? எதுவும் இப்போது தெரிந்துவிடும் தானே” என்று அவன் எண்ணவும் டெலிபோனில் “ட்ரங்கோல்” வரவும் சரியாய் \இருந்தது. சாப்பிட்ட கையைக் கழுவாமலே டெலிபோனுக்கு ஓடினான்.

 -- யாரது, ஸ்ரீதரா?

 -- ஆமப்பா, என்ன விசேஷம்?

 -- நாடகம் எப்படி இருந்தது?

 -- மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னார்கள். என் நடிப்பை மிகவும் புகழ்ந்தார்கள் அப்பா.

 -- அப்படியா? எனக்கும் அம்மாவுக்கும்தான் வர முடியவில்லை. இன்னும் எனது கால் புண் ஆறவில்லை. இல்லாவிட்டால் இருவரும் வந்திருப்போம்.

 -- அது சரி, அப்பா. இப்பொழுது கால் புண் எப்படி?

 -- நோவடங்கி விட்டது, என்றாலும் புண் ஆறவில்லை. புண் ஆற இன்னும் இரண்டு வாரங்களாவது பிடிக்குமாம்.

 -- அப்படியா? சரி அப்பா. வேறென்ன விசேஷம்?

 -- ஒன்றுமில்லை.

 -- அப்போது வைக்கட்டுமா? குட் நைட் அப்பா.

 -- குட் நைட். ஆனால் நில்லு. அம்மா பேசவேண்டுமாம்.

 -- ஸ்ரீதர்!

 -- அம்மா!

 -- நாடகம் நன்றாய் இருந்ததா?

 -- ஆம் அம்மா.

 -- அப்படியா... அடுத்தபடி நாடகம் போட்டால் நான் எப்படியும் வருவேன். அப்பாவுக்குக் கால் சுகமில்லாததால் அவரை விட்டுவிட்டு வரமுடியவில்லை.

 -- இப்போது அதற்கென்ன! நான் கோபித்துக் கொள்வேன் என்று பயமா? அப்பாவுக்குச் சுகமில்லாதிருக்கும்போது நான் அப்படிக் கோபிப்பேனோ!

 -- அது சரி ஸ்ரீதர், என்ன சாப்பிட்டாய்?

 -- இப்பொழுது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறும், மீனும் சுப்பையா நன்றாகச் சமைத்திருக்கிறான்.

 -- காலையில் சுப்பையாவிடம் சொல்லி முட்டைக் கோப்பி குடிக்க மறக்காதே.

 -- சரி அம்மா. சாப்பாட்டுக் கதை போதும். நான் என்ன குழந்தைப் பிள்ளையா.. சரி வைக்கிறேன். வைக்கட்டுமா?

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2டெலிபோனை வைத்துவிட்டு ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான். பின்னர், மீண்டும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கை அறையை நோக்கி நடந்தான். “நாடகத்துக்கு வராததற்குக் காரணம் கூறித் திருப்திப் படுத்தவா இவ்வளவு முயற்சியும்!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட அவன் “ஒரு வகையில் அவர்கள் வராததும் நல்லதுதான். இல்லாவிட்டால் பத்மா தனது தந்தையார் பரமானந்தரை எனக்கு அறிமுகம் செய்துவைப்பதில் எவ்வளவோ சிரமம் ஏற்பட்டிருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முன்னர் வருவதற்கு நிச்சயம் பத்மா தயங்கியிருப்பாள். அத்துடன் எனது பொய்யும் அல்லவா வெளிப்பட்டிருக்கும். இன்னும் அப்பா வந்திருந்தால் பேராசிரியர்கள் கூட இருக்கையை விட்டெழுந்து அவரை வரவேற்றிருப்பார்கள். எல்லாம் ஒரே சிக்கலாக முடிந்திருக்கும்! “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தான் அவன். வாலிபப் பருவத்தில் வாலிபர்கள் எண்ணுவது வேறு. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிய முடியாதிருப்பதனால், அவர்கள் சமாதானமாக வாழ முடிகிறது. இல்லாவிட்டால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் ஏற்படும்! நாங்கள் **** ஸ்ரீதருக்கு இவ்வளவு சந்தோஷம் என்பது தெரிந்திருந்தால் அவனது பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வித சிரமங்களிலிருந்து எம்மைக் காப்பாற்றவே போலும். மற்றவர்களுக்குத் தெரியாமலே சிந்திக்கும் அற்புத சக்தியை இயற்கை மனிதர்களுக்கு அளித்திருக்கிறது!

காலையில் ஸ்ரீதர் கண் விழித்தபோது சுரேஷ் “ஷேவ்” எடுத்து முகம் கழுவிப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தான். தலையைக் ‘கிறீம்’ போட்டு வாரிக் கண்ணாடி மேசை  முன்னால் வெறும் மேலுடன் அவன் தன்னை அழகு பார்த்துக்கொண்டிருந்ததை சிறிது நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் “சுரேஷ்! என்ன அதிகாலையில் இவ்வளவு அலங்காரம்? பெண் பார்க்கப் போகிறயா?” என்று கேட்டான்.

சுரேஷ் “நான் பெண் பார்ப்பது இருக்கட்டும். முதலில் முட்டைக் கோப்பியைக் குடி. இதோ சுப்பையா கொண்டு வந்து வைத்திருக்கிறான். நேற்று நாடகத்தில் நடித்த களைப்பிற்காக இரண்டு முட்டை போட்டு விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உனது அம்மா நேற்று உத்தரவிட்டாளாம்” என்றான்.

ஸ்ரீதர் “என்ன அம்மாவின் உத்தரவா? சுப்பையா கனவு கண்டானா?” என்றான் ஆச்சரியத்துடன்.

“கனவில்லை. எல்லாம் உண்மையில் நடந்ததுதான். உன் அம்மா டெலிபோனில் போட்ட உத்தரவு” என்றான் சுரேஷ்.

“ஓ! டெலிபோனிலா. சரிதான். ‘டெலிகிராம்’ அடிக்காமல் விட்டாளே, அது போதும். இல்லாவிட்டால் தந்தி ஆபிஸ் கிளார்க் அதைப் பார்த்துச் சிரிக்கும்படி ஏற்பட்டிருக்குமல்லவா? “ஸ்ரீதருக்கு நாளைக் காலை இரண்டு முட்டை போட்டுக் காப்பி கொடு” என்று தந்தி வந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது? சில சமயம் தினசரிப் பத்திரிகைகளில் கூட அந்தச் **** பெண்களுக்குப் புத்தியேயில்லை. நான் என்ன குழந்தைப் பிள்ளையா? இப்படி நடத்தப்படுவதற்கு? எனக்கு இவை சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. சலிப்பைத்தான் கொடுக்கிறது. உடனே ஒரு ‘ட்ரங்கோல்’ எடுத்து அம்மாவைக் கண்டிக்க வேண்டும் போலிருக்கிறது. நான் என்ன சொன்னாலும் அம்மா கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் இப்படியே நடந்துக் கொள்கிறாள். ஏற்கனவே நான் நூற்றைம்பது இறாத்தல் குண்டோதரன் போல் இருக்கிறேன். அம்மா சொல்லுவதெல்லாவற்றையும் சாப்பிட்டால் வயிறு வெடித்துச் செத்துவிட மாட்டேனா?” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “நீ என்னவோ அப்படிச் சொல்கிறாய்? எனக்கோ எனது தாயார் அப்படித் தொல்லை கொடுக்கவில்லையே என்ற கவலை. ஆனால் அவளும் உன் அம்மாவைப் போல பணக்காரியாக இருந்தால் நிச்சயம் ‘ட்ரங்கோல்’ போட்டுப் பேசத்தான் செய்வாள்” என்றான்.

“ஏன் உனக்கு இரண்டு முட்டை போட்ட கோப்பி குடிக்க ஆசையா? அப்படியானால் சுப்பையாவிடம் சொன்னால் உடனே கொண்டு வந்துவிடுகிறான். சென்ற வாரம் தானே அம்மா நூறு முட்டைகள் அனுப்பினாள். அதில் பத்து முட்டை கூழ் முட்டையானாலும் தொண்ணூறு முட்டைகள் தேறுமல்லவா?”

“முட்டை ஆசையில் நான் பேசவில்லை. நான் ஏற்கனவே ஒரு முட்டை போட்ட கோப்பி குடித்துவிட்டேன். சுப்பையா கொண்டு வந்தான். நீ முதலில் படுக்கையை விட்டெழும்பி உன் கோப்பியைக் குடி. குடித்துக்கொண்டே பேசலாம்” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்திலிருந்த மேசையிலிருந்த கோப்பியை எடுத்துக் குடித்துக்கொண்டே “அப்படியானால் நீ சொன்னதின் அர்த்தமென்ன?” என்று கேட்டான்.

“உன் அம்மா இரண்டு முட்டை போட்டுக் கோப்பி கொடுக்கும்படி இருநூற்றைம்பது மைலுக்கு அப்பாலிருந்து டெலிபோனில் உன் வேலைக்காரனுக்கு உத்தரவிட்டது உன் மீதுள்ள அன்பினால்லவா? உன் உள்ளத்துக்கு ஒருவித இதத்தைக் கொடுக்கவில்லையா? இருநூற்றைம்பது மைலுக்கப்பாலிருந்தாலும் அவள் உள்ளமும் உன் உள்ளமும் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லையா? எனக்கு அப்படிப்பட்ட இதத்தை அனுபவிப்பதில் ஆசை. அதனால் தான் நான் அவ்வாறு சொன்னேன்” என்றான் சுரேஷ்.

“எனக்கென்னவோ ஒரு மனிதனைப் பிடித்துத் தன்னோடு சேர்ந்து அமுக்கி வைத்துக் கொள்ள முயலும் இவ்வித அன்பு இன்பத்தைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் தொல்லையாகத் தான் படுகிறது. உனக்கும் அப்படித்தானிருக்கும் அனுபவித்துப் பார்த்தால்! ஆனால் நான் இப்படிப் பேசுவதானால் எனக்கு அம்மாவைப் பிடிக்காது என்று எண்ணி விடாதே. உண்மையில் அப்பாவை விட அம்மாமீது தான் எனக்குப் பிரியம். அப்பாவைக் கண்டால் ஒருவித மரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. மரியாதைக்கும் பயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பயமும் அன்பும் எவ்வாறு ஒரே இடத்தில் குடிகொள்ள முடியும்?” என்று கூறிய ஸ்ரீதர் அந்த விஷயத்தை அவ்வாறு நிறுத்திவிட்டு “சுரேஷ்! நீ நாடகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஆர்வத்துடன்.

“அதுதான் நேற்றிரவே சொல்லிவிட்டேனே! அற்புதம்! இதோ காலைப் பத்திரிகை என்ன சொல்கிறது பார்” என்று கொண்டே மேசையிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீதரின் கட்டிலில் அமர்ந்தான் சுரேஷ்.

*எடிப்பஸ்  பல்கலைக்கழக மாணவர்களின் வெற்றி நாடகம் என்ற ஐந்து ‘கலம்’ தலைப்புடன் விரிவான விமர்சனம் வெளியாகிருந்தது பத்திரிகையில். எடிப்பஸாக நடித்த ஸ்ரீதரின் படமும் ** ராணியாக நடித்த நடிகையின் படமும் விமர்சனத்தோடு வெளியிடப்பட்டிருந்தன. ஸ்ரீதருக்குத் தலைகால் தெரியாத இன்பம், விறுவிறுவென்று வாசிக்க ஆரம்பித்தான்.

விமர்சனத்தில் ஸ்ரீதருக்கே முதலிடம் தரப்பட்டிருந்தது. “கண்மணிகளை ஈட்டியால் பல முறை குத்திக் குத்தி அலறி நிற்கும் கட்டத்தில் எடிப்பஸாக நடித்த ஸ்ரீதர் என்ற மாணவர் புகழ்பெற்ற உலகப் பெரும் நடிகர்களுக்குச் சமமாக நடித்தார்” என்று கூறியிருந்தான் விமர்சகன். ஸ்ரீதர் முகம் புன்னகையால் மலர்ந்தது “சுரேஷ்! பார்த்தாயா? என் நடிப்பைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“மீண்டும் மீண்டும் உன் முகத்துக்கு முன்னே உன்னைப் புகழ என்னால் முடியாது. ஏன், நான் புகழ்ந்து கூறுவது உனக்கு அவ்வளவு இனிப்பாயிருக்கிறதோ? எத்தனை தடவை அற்புதம், அபாரம் என்று சொல்லிக்கொண்டிருப்பது?” என்றான் சுரேஷ்.

அதைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியால் துள்ளும் மனதோடு விமர்சனத்தை மூன்று நான்கு தடவை வாசித்துவிட்டான் ஸ்ரீதர்.

காலைச் சாப்பாட்டு மேசையில் ஸ்ரீதர் சுரேஷிடம் தான் இரவு கேட்கத் தீர்மானித்திருந்த கேள்வியைக் கேட்டான்: “சுரேஷ்! நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் யார் என்பது பற்றிப் பத்மாவிடம் பொய் கூறியிருக்கிறேனல்லவா? என்றைக்கோ உண்மை வெளியாகும்போது அவள் என்னைப் பொய்யன் என்பதற்காக வெறுத்தொதுக்கக் கூடுமல்லவா? அதைத் தடுப்பது எப்படி, சுரேஷ்?”

அதற்குச் சுரேஷ் “ஸ்ரீதர்! தனது காதலைப் பெறுவதற்காக ஒரு நல்ல மனிதன் பொய்யனாய் மாறினான் என்பதற்காக எந்தப் பெண்ணும் ஓர் ஆணை வெறுக்க மாட்டான். உண்மையில் அது அவன் மீது அவளுக்குள்ள காதலை அதிகரிக்கவும் செய்யும். ‘என்னை அடைவதற்காகத் தானே அவர் அவ்வாறு பொய் சொன்னார்? அது அவர் என் மீது கொண்ட ஆசையை அல்லவா காட்டுகிறது?” என்று தான் அவள் யோசிப்பாள். இப்படிப் பட்ட விஷயங்களில் சொல்லப்படும் பொய் பொய்யல்ல. அரிச்சந்திரன் கூட இப்படிப்பட்ட பொய்களைப் பேசி இருக்கலாம்” என்றான். பின்னர் ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டான் சுரேஷ்: “ஸ்ரீதர் உன் பேச்சிலிருந்து எனக்கொரு விஷயம் தெரிகிறது. பத்மாவுக்கும் உனக்குமுள்ள தொடர்பு மேலும் மேலும் முற்றி வருகிறது என்பதே அது. அது உண்மையல்லவா?”

“ஆம் சுரேஷ். பத்மாவும் அவள் தந்தை பரமானந்தரும் நாடகம் முடிந்ததும் வேஷம் போடும் அறைக்கே வந்துவிட்டார்கள். என்னை இன்று பிற்பகல் தங்கள் வீட்டிற்கு வரும் படியும் அழைத்திருக்கிறார்கள். போகலாமென்றுக்கிறேன். இதில் ஒரு ருசிகரமான விஷயமென்றால் பத்மாவின் தகப்பனாரும் என்னைப்போல் இளமையில் நாடகங்களில் நடித்திருக்கலாம்.”

“ஓ! அப்படியா விஷயம்! இன்று காலையில் விழித்துக் கொண்டதும் என்னைப் பார்த்துப் ‘பெண் பார்க்கப் போகிறாயா?’ என்று நீ கேட்டாயல்லவா? அது தப்பு. இன்று  பெண் பார்க்கப் போவது நானல்லவே, நீ அல்லவா?” என்றான் சுரேஷ் கிண்டலாக.

ஸ்ரீதர் குறுநகை புரிந்தான். “சுரேஷ், அதிருக்கட்டும். உனக்கெப்போது கல்யாணம்? நீ எப்போது பெண் பார்க்கப் போகிறாய்?” என்றான்.

அதற்குச் சுரேஷ் “எனக்கு இந்த விஷயத்தில் சுதந்திரமில்லை என்பதுதான் உனக்குத் தெரியுமா! எனது மாமா என்னை எப்போதோ விலைக்கு வாங்கி விட்டார். ஏழ்மையில் பிறந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் என் போன்றவர்களுக்கு வேறு வழி எது? ஆனால் இவற்றைச் சலிப்பின்றிப் பொறுத்துக் கொள்ள என் வகுப்பு இளைஞர்கள் எப்படியோ கற்றுக்கொள்கிறார்கள்ள்” என்றான்.

ஸ்ரீதர் “நீ பணக்கார வகுப்பினருக்கு இது விஷயத்தில் பரிபூரண சுதந்திரம் இருப்பது போலல்லவா பேசுகிறாய்! அது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. என் உண்மைப் பெயரைச் சொல்லிக் காதல் புரியதற்கே எனக்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரிகிறதல்லவா? பல மத்தியதர வகுப்பினருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே! பல்கலைக்கழகத்திலேயே பல மத்திய வகுப்புக் காதல் ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பொறாமை ஏற்படுகிறது தெரியுமா?” என்றான்.

சுரேஷ், ஸ்ரீதரின் வார்த்தைகளை அங்கீகரிப்பது போல் சிந்தனையுடன் தலையால் சமிக்ஞை செய்து கொண்டே மேசையை விட்டெழுந்தான். “இவை எல்லாம் இன்றைய சமுதாய அமைப்பின் கோளாறு!” என்று கூறிவிட்டு, அவன் போக ஸ்ரீதரின் மனமோ வேறு திசையில் திரும்பியது. பின்னே பத்மா வீட்டுக்குப் போவது பற்றிய பிரச்சினைகளை ஆராய ஆரம்பித்ததுதான் ஸ்ரீதர். எதை உடுத்துவது, பரமானந்தர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பத்மாவுக்குச் சொன்ன பொய்யைப் பரமானந்தருக்கும் சொல்லுவதா, பொய்யைச் சொல்லும் போது நாக்குக் கூசுகிறதே, அதை எப்படிச் சமாளிப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவன் விடை காண வேண்டியிருந்தது. உண்மையில் சின்ன விஷயங்கள் போல் தோன்றும் இவை மனிதர்களின் மனதை எவ்வளவு தூரம் அலைக்கழித்து விடுகின்றன! பார்க்கப் போனால் சின்ன விஷயங்கள் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒருவர் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் பெரிய விஷயமே!

[தொடரும்]

கடந்த அத்தியாயங்கள்

அத்தியாயம் ஒன்று: பணக்கார வீட்டுப் பிள்ளை


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here