எழுத்தாளர் பாவண்ணனின் இயல் விருது ஏற்புரையும் 'பதிவுக'ளில் வெளியான அவரது நெடுங்கதை 'போர்க்கள'மும்! - பாவண்ணன் -
(தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா) சார்பாக டொரோண்டோ நகரில் 04.06.2023 அன்று 2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் முருகபூபதிக்கும் வழங்கப்பட்டன. அவ்விருதைப் பெற்றுக்கொண்டு பாவண்ணன் ஆற்றிய ஏற்புரையின் எழுத்துவடிவம். பாவண்ணனின் வலைப்பூவில் வெளியானது. அவ்வுரையுடன் பதிவுகள் இணைய இதழில் அன்று அவர் எழுதிய போர்க்களம் நெடுங்கதையும் இங்கு மீள்பிரசுரமாகின்றன - பதிவுகள்.காம் -)
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
இயல் விருது பெறுகிறவனாக உங்கள் முன்னால் நின்றிருக்கும் இத்தருணத்தில் உங்களோடு ஒருசில சொற்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1982இல் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன். துன்பத்தை ஒரு பாரமாக நினைத்து நினைத்து நெஞ்சில் சுமந்தபடி செல்வதைவிட, அந்த பாரத்தை எழுதி எழுதி கரைத்துவிட்டுச் செல்வது நல்லது என்னும் மக்சீம் கோர்க்கியின் சொல் எனக்கு மிகப்பெரிய ஆதர்சமாக இருந்த காலகட்டம் அது. ஒவ்வொரு நாளும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்தேன். வாகனத்துக்கு எரிபொருளை நிரப்புவதுபோல, எழுத்து எனக்குள் எனக்குத் தேவையான உற்சாகத்தை நிரப்பியது.