நினைவு கூர்வோம்: ஜூன் 27 எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் பிறந்ததினம். - வ.ந.கி -
அமரர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு ஈழத்தமிழ் இலக்கிய உலகில் சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்குத் தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம். தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக் கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.
அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு, அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.