யாழ்ப்பாணத்தின் அழிந்துபோன சுவரோவியங்கள் - இ.மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) -
யாழ்ப்பாணத்து நியமங்களின்படி பழையன என்று சொல்லத்தக்க சில சுவரோவியங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை காணப்பட்டன. இவை பெரும்பாலும் பிரித்தானியர் காலத்தின் பிற்பகுதிக்கு உரியனவே. இன்று இவற்றுட் பல அவை வரையப்பட்டிருந்த கட்டிடங்களுடன் அழிந்துவிட்டன. யாழ்நகரப் பகுதியில் இரண்டு இடங்களில் இருந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று யாழ்ப்பாணம் வங்கசாலை வீதியில் (Bankshall) இருந்த கிட்டங்கிக் கட்டிடத் தொகுதி. மற்றது காங்கேசந்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த கங்கா சத்திரம். இச்சத்திரத்தாலேயே இச்சந்தி முன்னர் “சத்திரத்துச் சந்தி” என அழைக்கப்பட்டது. இவ்விரு இடங்களிலும் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுவரோவியங்கள் காணப்பட்டன. கிட்டங்கிக் கட்டிடங்கள் போர்க் காலத்தில் அழிந்தன. சத்திரமோ அதற்கு முன்பே 1980களின் முற்பகுதியில் இடித்து அழிக்கப்பட்டது. இக்கட்டிடங்கள் இல்லாமல் போவதற்கு முன்பு அங்கிருந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் எடுத்த படங்கள் போர்க் காலத்தில் தொலைந்துவிட்டன. இங்குள்ள படங்கள் க. சிவபாலன், அ. சந்திரகாசன் ஆகியோர் மொரட்டுவைப் பல்கலைக்கழக, B.Sc. (BE) இறுதியாண்டுப் பரீட்சைக்குச் சமர்ப்பித்த, பதிப்பிக்கப்படாத கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டவை. படங்களின் படப்பிரதிகளே (Photocopy) கிடைத்ததால், படங்கள் தெளிவாக இல்லை.
கிட்டங்கிக் கட்டிடங்களில் பல வகையான ஓவியங்கள் இருந்தன. சில பிந்திய காலத்துக்கு உரியவை. இவை பெரும்பாலும் இலக்குமி, சரஸ்வதி போன்ற கடவுள் உருவங்கள். வாயில் கதவுகளுக்கு மேல் வரையப்பட்டிருந்தன. இக்கிட்டங்கிகள் பிற்காலத்தில் செட்டி வணிகர்களின் உடைமைகளாக இருந்தபோது இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்கிருந்த இரண்டு ஓவியங்கள் வேறுபட்டவை. இவை ஐரோப்பிய அதிகாரிகள் இருவர் குதிரையில் செல்ல, அவர்களின் நாய்களும், சேவகர்களும் பின்தொடர்ந்து செல்வதைக் காட்டுகின்றன. இதுபோன்ற காட்சிகள் ஓவியமாக வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் முன் சுவரிலும், சிற்பமாக உள்ளே விமானத்திலும் இருந்தது குறித்து முன்னைய இடுகையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். கிட்டங்கிகளில் இருந்த மேற்குறிப்பிட்ட ஓவியங்களைப் பற்றி “யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள்” என்ற அவரது நூலில் ஆ. தம்பித்துரை விபரமாக எழுதியுள்ளார். இந்த ஓவியங்களைத் தாவடியைச் சேர்ந்த ஓவியர் துரைச்சாமி என்பவர் வரைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.