சிறுகதை: ஜள்ளெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
1“கள்ளா! ஏய்… கள்ளா!
இன்னும் என்னதா பன்னுற…
எவ்ளோ நேரந்தா காத்திருக்கிறதோ…
ஏய்… கள்ளா! கள்ளா!”
குனிக்கியின் ஓலம் அந்த அடர்காட்டின் காதுகளை அடைத்தது. சில்லிடும் பனிக்காற்று, பொழியும் நிலா, சீகூரிப் பூச்சிகளின் இரைச்சல், மென்மையாக அசையும் மரங்களின் இலைகள் அந்த உலகம் வருணனைக்கு அப்பாற்பட்டது.
ஆதியின் அத்தனைச் சுவடுகளும் அதற்குள் அடக்கம். அதன் அடக்கத்துள் குனிக்கியின் கணவன் கோடனும் ஒருவன்.
பெண்கள் அணுகவியலா அந்தத் ‘தொட்டசோலெ’ அடர்ந்த காப்புக்காடு. பூவுடல் கடந்த பல்லோர் உறையும் இடமென்பது நம்பிக்கை.
‘ஜக்கக்கம்பை’ ஊரில் தொடங்கி ‘சிரியூர்’ வரை நீளும் பேரூலகம் இது. உள்ளே நுழைந்ததும் ஆதியால் அணைத்துக் கொள்ளுமது. வெளியே வரும்வரை எவ்வளவு முயன்றாலும் அது விடாது. அந்த விடாத உலகம் குனிக்கியையும் விடாது பிடித்திருந்தது.
பாதைதெரியாது தடுமாறுவதைவிடவும், கற்பனைக்கெட்டாத பெருநிலமொன்றில் தொலைந்த ஒன்றினைத் தேடுவது அவ்வளவு கடினமானது. அது பெரும் காட்டு ஆடின் பெரும் ‘ஜள்ளெ’ ஆனாலும் சிறு கடுகினும் நுண்ணியது.
பல்லைக் கடித்துக்கொண்டே உறுமும் சப்தம். ஒருவகையில் சீழ்க்கைக் கலந்த மிரட்டும் சப்தமும்கூட. அது மனிதனா? அல்ல, அல்ல… மிருகமா?... அல்ல, அல்ல… இரண்டும் கலந்த கலவையா? ஆம்.. ஆம்.. அதேதான். மிருகமல்ல... ஒருவகை மனிதன்தான். ஆனால், மிருகம் மிகுந்த மனிதன். மனிதம் மிக மிக குறைந்த மிருகம்.
பல நூற்றாண்டுகளாக ஓங்கிவளர்ந்த ‘பைகெ’ மரத்தின் பொந்துதான் அதற்கான இடம். வழிதவறி அந்தக் காடோடிய எருமைகளைத் தன்பக்கம் இழுப்பதே, அதை கண்ணியாய் வைத்து நரபலிக் கொள்வதே அதன் சீழ்கை உறுமலின் நோக்கம்.