33 வருடங்களாக அஞ்ஞாத வாசம் செய்த தமிழர்கள்! - குரு அரவிந்தன் -
இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்ஞாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது.
‘முதன் முதலாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கின்றேன், காரணம் நான் அப்போது பிறந்திருக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது இராமாயண காலத்தில் நடக்கவில்லை, சென்ற வாரம் இலங்கைத் தீவின் வடபகுதியில் உள்ள, தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்த காங்கேசந்துறையில் நடந்ததொரு சம்பவமாகும். இதைப் பார்த்த இன்னுமொரு நண்பர் சந்துரு என்ற ஊடகவியலாளர் ‘புதிய பூமி புதிய வானம்’ என்று கைகளைத்தூக்கி மகிழ்ச்சியில் பாடினார். இது அவருக்குப் புதிய பூமியாக இருக்கலாம், ஆனால் இது எமக்கு எங்கள் மூதாதையர் வாழ்ந்த ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இம் மண்ணே!
யுத்தம் காரணமான வடபகுதியில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். காங்கேசந்துறையை அதிபாதுகாப்பு வலயமாக இராணுவம் பிரகடனப் படுத்தியதால் 1990 ஆம் ஆண்டு பரம்பரையாக அங்கு வாழ்ந்த மக்கள் சொந்த மண்ணைவிட்டு வெளியேற்றப் பட்டார்கள். எங்கே செல்வது என்று தெரியாமல், உறவுகள் எல்லாம் வலி சுமந்த நெஞ்சோடு திக்குத் திக்காய்ப் பிரிந்து விட்டார்கள். மீண்டும் அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க இப்போதுதான் சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. உடைந்து சிதைந்து போயிருந்த தங்கள் வீடுகளை, 33 வருடங்களின் பின் பார்த்த மக்கள் சில நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். ஆனாலும் சொந்த மண்ணில் மீண்டும் காலடி வைத்ததில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டனர்.