எழுத்தாளர்  முருகபூபதி- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -


நீர்கொழும்புக்கு நிகும்பலை என்றும் ஒரு பெயர் கம்பராமாயணத்தில் சூட்டப்பட்டுள்ளது.

இராவணன் புதல்வன் இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் குளங்கள் வெட்டி நிகும்பலை யாகம் வளர்த்தானாம்.

அவ்விடங்களில் மழைக்காலங்களில் நீர்பெருகிவிடுவதையும் அவதானித்துள்ளோம். பிற்காலத்தில் அதில் ஒன்று தூர்வாராமல் மண் நிரப்பப்பட்டு பஸ் நிலையமும் அமைந்தது. மற்றும் ஒன்று விளையாட்டு மைதானமாகியது. மற்றும் இரண்டு இடங்கள் மக்கள் குடியிருப்பானது. பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்த குளத்தில் யானையை அழைத்துவந்து அதன் பாகன் குளிக்க வைத்ததால் நடந்த விபரீதத்தில் எனது பொலிஸ் தாத்தாவும் சிக்கி உயிர்தப்பினார்.

அந்தக்குளமும் தூர்வாரப்படாமல் நுளம்புகள் குடியிருந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைக்கண்ட எனது தாத்தா ( அவர் பொலிஸ் சார்ஜன்டாக நீர்கொழும்பில் பணியாற்றியவர். – அது பிரிட்டிஷாரின் காலம் )

அங்கு யானையை தோய வார்க்கவேண்டாம் என்று எங்கள் பொலிஸ் தாத்தா அந்த யானைப்பாகனை கண்டித்துள்ளார்.

அதனை அவதானித்த அந்த யானை, தனது எஜமானனை கண்டிக்க இவர்யார்…? இவர் யாருக்கு பொலிஸ்காரன்…? என்று நினைத்ததோ என்னவோ , தும்பிக்கையினால் தாத்தாவை சுழற்றி எடுத்து தூக்கி எறிந்துள்ளது. தாத்தா பொலிஸ் நிலைய கூரையில் விழுந்து சுருண்டு தரைக்கு வந்துள்ளார்.

அன்று அவர் தெய்வாதீனமாகத் தப்பினார். யானைக்கு தண்டனை இல்லை. ஆனால், யானைப்பாகன் நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்தியிருக்கிறான்.

அத்துடன் அந்தக்குளத்திற்கும் மண் நிரப்பி, அதற்கு மூடுவிழா செய்துவிட்டது நகர சபை. தற்போது அவ்விடத்தில் தபால் நிலையமும், தபால் அதிபரின் வாசஸ்தலமும் அமைந்துள்ளது.

இந்திரஜித்தன் வெட்டிய ஐந்து குளங்களும் இவ்வாறு மறைந்துவிட்டன. அந்தப்பெயரும் காணாமல்போய்விட்டது. எனினும் நிகும்பலையூரின் பின்னணியில் எனது மழைக்காற்று தொடர்கதையை அறுபது வாரங்கள் எழுதியிருக்கின்றேன்.

குளங்களின் மரணங்களின் பின்னால் பல கதைகள் இருக்கின்றன.

எமது ஊரில் இவ்வாறு குளங்கள் மறைந்துபோனாலும் மகா ஓயா நதியிலிருந்து கிளையாக ஓடிவரும் ஹமில்டன் கால்வாய் மீன்பிடித்தொழிலுக்கும் உதவுகிறது. அத்துடன் உல்லாசப்பிரயாணிகள் படகு சவாரிக்கும் இதனை பயன்படுத்துகின்றனர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது, தமது வர்த்தகத்தை வளம் படுத்துவதற்காக அமைத்ததுதான் இந்த ஹமில்டன் கால்வாய். இக்கால்வாய் நீர்கொழும்பு கடலில் சங்கமமாகிறது.

ஏலம், கறுவா முதலான வாசனைத்திரவியங்களை படகுகளின் மூலம் எடுத்துவந்து, துறைமுகத்திற்கு சேர்ப்பிக்கும் நோக்கத்துடன் அன்று ஒல்லாந்தர் இந்த கால்வாயை அமைத்தார்கள்.

கால்வாயும் கடலும் சந்திக்கும் இடத்தில் ஒல்லாந்தர் அமைத்த கோட்டையை இன்றும் காணலாம். அந்த கோட்டையின் உள்வளாகத்தில்தான் சிறைச்சாலை அமைந்துள்ளது.

உலகவரைபடத்தில் தேசங்கள் தமது எல்லைகளை வரைந்தவாறு இருந்தாலும் தேசங்களின் நாகரீகங்கள், பண்பாட்டுக்கோலங்கள், வரலாற்றுச்சின்னங்கள் என்பனவே அவற்றின் பெறுமதியையும் உலகம் பூராவும் எடுத்துச்செல்வன. சர்வதேச அரங்கில் அவற்றின் புராதனத்துவ மகிமைகளையும் பதிவுசெய்கின்றன.

அதனால்தான் கடலோடிகளும் உல்லாசப்பயணிகளும் அவற்றின் தொன்மங்களை அறியவும் ஆராயவும் பயணிக்கின்றனர். ஒவ்வொரு நாடும் உல்லாசப்பயணிகளை கவரும்வகையில் அவற்றை ஊடகங்களிலும் இணயங்களிலும் நிரந்தரமாக பதிவுசெய்கின்றன.

தொன்மங்களே அந்த நாடுகளுக்கு அந்நியசெலவாணியை பெற்றுத்தரும் மூலதனங்களாகவும் மாறிவிடுகின்றன.

நீர்கொழும்பு : வாழ்வும் வளமும் - அங்கம் -02 - நிகும்பலையூர் குளங்களின் மறுபக்கம் !

ஒரு தேசம் அல்லது அந்தத்தேசத்தின் மாநிலம் - மாநகரம் - நகரம் - கிராமம் என்பன வரலாற்றில் இடம்பெறும்பொழுது அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வு முதல் அவர்களின் பழக்கவழக்கங்கள் மரபார்ந்த பண்பாடுகள், கலைப்பொக்கிஷங்கள், இலக்கியங்கள் என்பனவும் பதிவாகிவிடுகின்றன.

இன்றைய கணினி யுகத்தில் முழு உலகமும் கணினிக்குள் வந்துவிட்டிருக்கிறது. எந்தவொரு தேசம்பற்றியும் கல்வி, தொழில், பொருளாதாரம், வர்த்தகம், விஞ்ஞானம், சுகநலம், உலகத்தலைவர்கள் உட்பட இன்னபிற முழுமையான தகவல்களையும் மிகவும் எளிதாகவும் இலகுவாகவும் கணினியில் தேடிப்பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

முன்னர் போன்று உலக கலைக்களஞ்சியத்தின் (Encyclopedia) பெரிய தொகுப்புகளை வீட்டின் மூலையில் சேகரித்துவைக்கவேண்டிய காலம் எம்மைவிட்டகன்று கைத்தொலைபேசிக்குள்ளேயே உலகம் வந்துவிட்டிருக்கும் நவீன யுகத்தில் வாழ்கின்றோம்.

இந்தப்பின்னணிகளுடனேயே எமது நீர்கொழும்பின் வாழ்வையும் வளத்தையும் கண்டு நாம் பெருமைப்படுகின்றோம். எமது நீர்கொழும்பும் குறித்த உலக கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்று மாணவர்களின் உசாத்துணைக்கு வரப்பிரசாதமாகியிருக்கிறது.

எனவே எமது வரலாற்றுச்சிறப்பு மிக்க நகரின் சமுதாயப் பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த தகவல்களை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும்.

நீர்கொழும்பு சிங்களத்தில் மீகமுவ என்றும் ஆங்கிலத்தில் Negombo என்றும் அழைக்கப்படுகிறது.

துட்டகெமுனுவின் மனைவி சுகவீனமுற்றபொழுது வைத்தியர்கள் சிகிச்சைக்காக தேன் கேட்டார்களாம். கெமுனுவின் சேவகர்கள் தேன் தேடி அலைந்து இறுதியில் இந்த ஊரில்தானாம் பெற்றார்களாம். அதனால் தேனூர் ஆகியது. ‘’மீ’’ என்றால் தேன். கம என்றால் ஊர். மீகம பின்னாளில் மீகமுவ என மருவிவிட்டதாம்.

போர்த்துக்கீஸர் படையெடுத்து வந்து நீர்கொழும்பு கடற்கரையில் இறங்கியபொழுது, அந்த வேற்று மனிதர்களைப் பார்த்துவிட்டு நாய்கள் குரைத்தனவாம். அப்பொழுது அவர்கள் தமது போர்த்துக்கீஸிய மொழியில் இவ்வூர் மக்களிடம் “ ஊருக்கு என்ன பெயர்...? “ எனக்கேட்டபொழுது, “ நாய் ஏன் குரைக்கிறது...? “ என்று அந்த போர்த்துக்கீஸியர்கள் கேட்கிறார்கள் என நினைத்து “நிகம்புரனவா “ ( சும்மா குரைக்கிறது) எனச்சொன்னார்களாம்.

நிகம்புரனவா என்ற சொல்லில் நிகம்பு என்ற சொல்லை மாத்திரம் போர்த்துக்கீஸரின் செவிப்புலன் உள்வாங்கியமையினால், அவர்களே நிகம்பு எனச்சொன்னதனால் அன்று முதல் நிகம்பு ( Negombo ) என அழைக்கப்படுகிறதாம்.

இந்தக்கதைகளை எம்முன்னோர்கள் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளனர். இவற்றில் எது சரி…? எது பிழை…? என்பதை ஆராய்வது ரிஷிமூலம் நதிமூலம் தேடுவதற்கு ஒப்பான செயல்.

நீர்கொழும்பிலும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் பல இடங்கள் தமிழில் அழைக்கப்படுகிறது. முன்னக்கரை, குட்டித்தீவு, கலப்பு, மாங்குழி, மணல்சேனை, தோப்பு, கம்மல்துறை, பலகத்துறை, நஞ்சுண்டான் கரை, ஏத்துக்கால், பெரிய முல்லை, நயினா மடம், ஆண்டி அம்பலம், கன்னாரத்தெரு.

மேலும் தமிழ்ப்பெயர்கள் காலச்சக்கரத்தில் நசிந்து மறைந்துவிட்டன.

கடலை அண்டியிருக்கும் இந்நகரில் பெரும்பான்மையினராக வதியும் தமிழ்கத்தோலிக்கர்கள் கடலை நம்பியும் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். தோணிகளும் கட்டுமரங்களும் கடற்றொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக திகழ்ந்த காலம் மறைந்து தற்பொழுது இயந்திர இழுவைப்படகுகளையே கடற்கரைகளில் காண்கின்றோம். அம்மக்களின் வாழ்க்கைத்தரம் தற்பொழுது உயர்ந்துள்ளது. அவர்களில் பலர் இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

நீர்கொழும்பை சின்னரோமாபுரி எனவும் அழைப்பர். இங்கே நூற்றுக்கணக்கான கத்தோலிக்க தேவாலயங்களில் தினமும் மணியோசைகேட்கிறது. கைக்கடிகாரம் பாவனைக்கு வராத காலத்தில் இம்மக்களுக்கு நேரம்சொன்னது இந்தத்தேவாலயங்கள்தான்.

நீர்கொழும்பில் கன்னாரத்தெரு என்று முன்னர் அழைக்கப்பட்ட வீதி கடற்கரை வீதியாகிவிட்டது. புனித செபஸ்தியார் குதிரையில் ஆரோகணித்து பயணத்துக்கு தயாரான நிலையில் நிற்கும் குதிரைச்சுருவ சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கும் கடற்கரைவீதி நீர்கொழும்பு பொது விளையாட்டரங்கின் முன்பாக டச்சுக்கோட்டையும் நீதிமன்றங்களும் அமைந்துள்ள இடத்தில் சந்திக்கிறது.

நீர்கொழும்பு பிரதான பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் கொச்சிக்கடை - கட்டுநாயக்கா மார்க்க பஸ்சேவை முக்கியமானது.

இந்தப்பாதையில் பயணித்தால் நீர்கொழும்பு நகரின் பிரதான கடைத்தொகுதிளையும் வங்கிகளையும் முன்னக்கரை பாலத்தையும் டச்சுக்கோட்டையையும் சில நீதிமன்றங்களையும் பொது விளையாட்டு அரங்கையும் பொலிஸ்நிலையத்தையும் கடற்கரை வீதியில் (டட்லி மார்க்கட் - ( முன்னாள் பிரதமர் டட்லிசேனாநாயக்கா அடிக்கல் நாட்டிய சந்தை) பொதுச்சந்தையையும் அதனையடுத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் கதிர்வேலாயுத சுவாமி கோயிலையும் நிர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியையும் அதன் முன்பாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தையும் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழையும் கலைகளையும் சைவத்தையும் போற்றிப்பாதுகாக்கும் இந்து இளைஞர் மன்றத்தையும் ஸ்ரீ சிங்கமாகாளி அம்பாள் ஆலயத்தையும் புனித செபஸ்தியார் தேவாலயத்தையும் குடாப்பாடுவில் மாதாதேவாலயம் அதனையடுத்து வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை பெரிதும் கவரும் ஹோட்டல்களையும் விடுதிகளையும் கம்மல்துறை பள்ளிவாசல் மற்றும் பலகத்துறை தேவாலயங்களையும் கொச்சிக்கடை நகரையும் காணமுடியும்.

குறிப்பிட்ட பஸ்சேவை கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும்பொழுது இந்தப்பிரதேசத்தில் அமைந்த சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் போலவலான என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆசிரிய பயிற்சிக்கல்லூரி ஹங்குறுக்கார முல்லை என்ற இடத்தில் அமைந்த பிரசித்தமான பௌத்த விஹாரை, மற்றும் ஹரிச்சந்திரா மத்திய கல்லூரி நீர்கொழும்பு பிரதான ஆதார மருத்துவமனை ஆகியனவற்றையும் சில திரைப்பட அரங்குகளையும் கடந்து நீர்கொழும்பு பஸ்நிலையம் வந்து அங்கிருந்து மீண்டும் கொச்சிக்கடை நோக்கி புறப்படுகிறது.

இந்த பஸ்பயணத்தில் நீர்கொழும்பு மாநகரின் முக்கியமான இடங்கனை தரிசித்துவிடலாம்.

இந்நகரின் பெரும்பான்மை இன மக்களின் பேச்சுமொழிவழக்கு நீர்கொழும்பு இலக்கியத்தில் சிறுகதைகளில், நாவல்களில் மேடை நாடகங்களில் வானொலி நாடகங்களில் தொலைக்காட்சி நாடகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேச்சுமொழி பிரதேச மொழிவழக்குகள் பல்கலைக்கழக ஆய்வு ஏடுகளிலும் பதிவாகியுள்ளன.

நீர்கொழும்பு : வாழ்வும் வளமும் - அங்கம் -02 - நிகும்பலையூர் குளங்களின் மறுபக்கம் !

நீர்கொழும்பில் நூறாண்டுகளுக்கு முன்னர் கடற்கரை வீதி - கன்னாரத்தெரு என அழைக்கப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் கலைஞானம் மிக்க இளைஞர்கள் வாழ்ந்தார்கள். அத்துடன் இந்தப்பிரதேசத்திற்கு சுருட்டுக்கைத்தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து குடியேறியவர்களிடமும் கலை ஆர்வம் நீடித்திருக்கிறது. குறிப்பிட்ட சுருட்டுத்தொழிலாளர் குடும்பத்தினர் தமக்கென ஒரு சங்கத்தையும் அமைத்திருக்கிறார்கள்.

நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் முன்னர் ஒரு குடிசைக்கோயிலாக இருந்ததாகவும் இங்கு வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் இந்தக்கோயிலை ஸ்தாபித்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன.

இன்றைக்கும் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின்பொழுது பத்துநாட்களும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் திருவூஞ்சல் விழாவிலும் இறுதியில் பூசை சுவாமி உள்வீதி வலம் வருதலுக்குப்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கு முன்பாக ஆலய பிரதம பூசகரினால் தவறாமல் வழங்கப்படுகிறது கோயில் காளாஞ்சி. இந்த நிகழ்வு பண்டுதொட்டு மரபாகவே தொடர்கிறது.

அத்துடன் பூர்வகுடி மக்களான சுருட்டுத்தொழிலாளர்களின் திருவிழா உற்சவகாலத்தில் நான்காவது நாள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் தங்கொட்டுவை என்ற நீர்கொழும்பு அயல்பிரதேசத்தில் வர்த்தகம் மேற்கொள்ளும் வட இலங்கையின் காரைநகர் மக்களின் திருவிழா ஏழாவதாக நடைபெற்றுவருகிறது.

இந்த இரண்டு திருவிழாக்களும் பத்தாவது திருவிழாவான அரச உத்தியோகத்ததரின் திருவிழாவும் விசேட தவில் நாதஸ்வரக்கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் பெயர்பெற்றுவிளங்கின.

சுருட்டுத்தொழிலாளர்களினதும் தங்கொட்டுவை வர்த்தகர்களின் திருவிழாக்களிலும் சின்னமேளக்கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிகளும் ஆலயத்தின் முன்னாள் அமையப்பெறும் மேடைகளில் நடு இரவு முதல் விடியும் வரையில் மக்களை பெரிதும் கவரும்.

இந்த தங்கொட்டுவை ஊர், நீர்கொழும்பிலிருந்து குருநாகலுக்கு செல்லும் பாதையில் வருகிறது. இங்கு சட்டவிரோதமாக காய்ச்சப்படும் வடிசாராயம் ருஷ்யா வொட்கா மதுபானத்தின் சுவைக்கும் செறிவுக்கும் ஒப்பானது என்று அனுபவித்தவர்கள் சொல்வார்கள்.

நீர்கொழும்புக்கு அக்காலத்திய சின்னமேளக்கலையை அறிமுகப்படுத்திய பெருமை குறித்த தங்கொட்டுவை திருவிழாக்களின் உபயகாரர்களையே சாரும்.

இதர திருவிழா நிகழ்ச்சிகளில் பெங்களுர் ரமணி அம்மாள் உட்பட பல தென்னிந்திய பாடகர்களும் மிருதங்க கலைஞர் நேசம் தியாகராஜன் உட்பட பல உள்ளுர் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பிரபல நாதஸ்வரக்கலைஞர்கள் பஞ்சமூர்த்தி - கானமூர்த்தி தவில் வித்துவான்கள் நாச்சிமார் கோயிலடி கணேசன், இணுவையூர் சின்னராசா முதலானோரும் வருகை தந்து எம்மூர் மக்களை நாதஸ்வர - தவில் இசையில் மெய்மறக்கச்செய்துள்ளனர்.

அத்துடன் சிங்களத்திரைப்படங்கள் சிலவற்றில் நாதஸ்வர இசை வழங்கிய ராஜமாணிக்கம் என்ற கலைஞரும் அடிக்கடி இங்கே வருகைதந்துள்ளார். தற்போது அவரது புதல்வர் வந்து கச்சேரி செய்கிறார்.

கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் இந்திய நாட்டுக்கோட்டைச்செட்டிமாரின் பராமரிப்பில் இயங்குகிறது. நவாராத்திரி காலத்தில் விசேட பூசைகளும் இறுதிநாளன்று (விஜயதசமி) அம்மனும் கதிர்வேலாயுத சுவாமியும் நகர்வலம் வருவார்கள். முதல் நாள் மாலை தொடங்கும் ரதோற்சவம் மறுநாள் காலையில் நிறைவடையும்.

ஸ்ரீசிங்கமாகாளி அம்பாள் தேவஸ்தானம் திருவிளங்க நகரத்தரின் நேரடி பராமரிப்பில் பரிபாலிப்பில் இந்துக்களுக்கு மாத்திரமன்றி பௌத்த சிங்கள மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்குரியதாக எழுந்தருளியிருக்கிறது.

இவை தவிர நீர்கொழும்பில் மேலும் சில கோயில்கள் உருவாகியிருக்கின்றன. மீரிகம வீதியில் தவட்ட காவத்தையில் அம்மனும் , கடோல்கலை என்னும் இடத்தில் கருமாரியம்மனும் காமச்சோடை என்னுமிடத்தில் மற்றும் ஒரு அம்மனும், தலுப்பொத்தையில் முருகனும் அலஸ்வீதியில் அநுமாரும் கடற்கரை வீதியில் ஶ்ரீசபரிமலை ஐயப்பனும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

அக்காலத்தில் நீர்கொழும்பில் வாழ்ந்த பல தமிழ் இளைஞர்கள் வேடமிட்டு நாடகங்கள் கூத்துக்கள் மேடையேற்றியதாகவும் தகவல்கள் உண்டு. அவ்வாறு நாடகங்களை நிதியுதவிக்காட்சியாக நடத்தி சேகரித்த பணத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் கட்டிடத்தை அரசமர நிழலில் அமைத்திருக்கிறார்கள்.

இந்துவாலிபர் சங்கத்தில் சமயவகுப்புகளை நடத்தியும் பிரார்த்தனை வழிபாடுகளுக்கு குழந்தைகளை ஊக்குவித்தும் வாழ்ந்தவர் சாமிசாஸ்திரியார் என்ற பெரியவர். இவரும் இரா. சுப்பையா அவர்களும் இணைந்து கந்தசஷ்டி கவசம், முருகானந்த களிப்பு முதலான சமய நூல்களை பதிப்புத்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சங்கத்திலிருந்து உருவானதுதான் இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.

இச்சங்கம் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் ஒரு கிருஷ்ணர் கோயிலை அமைத்துள்ளது.

கலைத்தாகத்தின் ஊடாக அன்றைய மக்கள் மேற்கொண்ட அரிய பல பணிகளினால்தான் இன்று நாம் இந்நகரில் தலைநிமிர்ந்து வாழ்கின்றோம்.

கிராமங்களில் புல் புதர்களில் மக்களின் காலடித்தடம் பதிந்து ஒற்றையடிப்பாதை உருவாகி அதுவே பின்னர் மாட்டுவண்டி மற்றும் வாகனப்பாதையாகவும் மாறி பிற்காலத்தில் தார் போட்ட வீதிகளாகவும் நவீனமயப்படுத்தப்பட்ட கார்பட் அகல வீதிகளாகவும் மாறியிருக்கின்றன.

ஆனால் , அவற்றுக்கெல்லாம் பின்பலமாக இருந்தது மனித உழைப்பு. எம்முன்னோர்களின் கடும் உழைப்பிலே நாம் பவனி வருகின்றோம். அவர்களே எமது வழிகாட்டிகள். அவர்களை நினைவு கூர்தல் வேண்டும். அவர்களின் வாழ்வும் பணிகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

நீர்கொழும்பு வாழ் சைவத்தமிழ்ப்பெருங்குடி மக்கள் இவ்வாறு நாடகம் முதலான கலைத்துறைகளில் அந்நாட்களில் ஈடுபட்டிருந்தமைபோன்றே, நீர்கொழும்பு வாழ் தமிழ்கத்தோலிக்க மக்களும் நாடகம் கூத்து முதலான கலை நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

குறிப்பாக கடற்கரை வீதியில் அமைந்த புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவ காலங்களில் டயலோக் என்ற பெயரில் கத்தோலிக்க சமய வரலாற்று நாடகங்கள் மேடையேற்றப்பட்டதை சிறு வயதில் கண்டு களித்திருக்கின்றோம்.

Dialogue என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் உரையாடல். உரையாடல் நிரம்பிய அந்த நாடகங்களுக்கு எம்மூர் மக்கள் அந்நாட்களில் வழங்கிய அந்தப்பெயர்தான் நீண்டகாலம் நிலைத்திருந்தது.

இக்காலத்தில் தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் எம்மால் சின்னமேளக்காட்சிகளையோ மேடை நாடகங்களையோ பார்க்கும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். அந்தக்கலைஞர்களும் எம்மிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.

முன்னக்கரை குட்டித்தீவு முதலான இடங்களில் அமையப்பெற்ற தேவாலயங்களின் வருடாந்த உற்சவ காலத்திலும் இந்த Dialogue நாடகங்கள் மேடையேறியிருக்கின்றன. மறைந்த ஆசிரியர் அல்பிரட் நிக்கலஸ் அவர்கள் அவற்றின் நெறியாளராக இருந்துள்ளார்.

கத்தோலிக்க மீனவர்களிடம் கடற்றொழில் அம்பா பாடல் பிரசித்தம். ஏலோ... ஏலய்யா... (இதுபற்றியும் நாம் ஆவணப்படுத்தல் வேண்டும்.)

கடற்கரை வீதியில் முன்னர் விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பாடசாலையின் வருடாந்த பெற்றோர் தின விழா மேடைகளில் நாடகங்கள், இசை நடன நிகழ்ச்சிகள் முதலானவற்றில் தோன்றினர். அவர்களின் ஆற்றல்கள் வட்டார பாடசாலைகளுக்கிடையில் நடந்த கலைவிழா போட்டிகளிலும் வெளிப்பட்டு பரிசில்களுடன் திரும்பின.

பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கூட்டு முயற்சியில் தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் நீர்கொழும்பு கலை நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்றிருந்த நகரமாகும்.

காலப்போக்கில் பாடசாலைகளில் இசை மற்றும் நடனத்துறை ஆசிரியர்களின் நியமனங்கள் வந்தபொழுது கலைத்துறையில் மேலும் அபிவிருத்திகள் காணப்பட்டன.

கடற்கரை வீதி இளைஞர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி 1960 களில் ஒரு மன்றத்தையும் உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர் தலைமையில் உருவாக்கினார்கள். அவர்கள் தமது மன்றத்தின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் - பத்மினி நடித்த மன்னாதி மன்னன் திரைப்படத்தையும் நீர்கொழும்பு நடராஜா டோக்கீஸ் என்ற திரையரங்கில் காண்பித்தார்கள். இந்தத்திரையரங்கே நீர்கொழும்பின் முதலாவது சினிமா தியேட்டராகும். இங்கே அந்தக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் தம்பதியரின் நாடகங்களும் மேடையேறியுள்ளன.

1970 களில் கடற்கரைவீதி தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பு பொதுப்பணி மன்றம் என்ற அமைப்பினை சமூகப்பணிகளுக்காகவும் சிரமதானப்பணிகளுக்காகவும் உருவாக்கிய பொழுது இந்தப்பிரதேசத்தில் நீர்கொழும்பூர் சூட்டி என அழைக்கப்பட்ட க. ரட்ணராஜ், வின்சன்ட், காளிதாஸ், மகேந்திரன், ராஜதுரை, முதலான இளைஞர்கள் அதே நடராஜா டோக்கீஸ் கிங்ஸ் தியேட்டராக மாறியவேளையில் எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி படத்தை நிதியுதவிக்கு காண்பித்தார்கள்.

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும். நீர்கொழும்பு வாழ் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியிருந்தவர் மக்கள் திலகம்தான். அவரது படங்கள் நீர்கொழும்பு திரையரங்குகளில் பல நாட்கள் தினசரி பல காட்சிகளுடன் ஓடியிருக்கின்றன.

நீர்கொழும்பூர் சூட்டி ஒரு நாடகக் கலைஞர். துடிப்பான இளைஞர். அவருடைய முன்முயற்சியால் கதிரவன் நாடக மன்றம் என்ற அமைப்பும் நாடகங்களை மேடையேற்றியது.

இவரது தம்பி விஜயரத்தினம் என்பவர் சிறந்த பாடகர். வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் அந்நாட்களில் தொடர்ச்சியாக ஊர்கள் தோறும் நடத்திய பாட்டுக்குப்பாட்டு என்ற பிரபல்யமான நிகழ்ச்சிகளில் பலதடவைகள் பாடி பல தடவைகள் பரிசில்களை வென்றவர்தான் விஜயரத்தினம்.

நீர்கொழும்பூர் முத்துலிங்கம் இலங்கையின் முக்கியமான படைப்பாளி. அவர் குறித்த விரிவான பதிவு எமது நெய்தல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அவருடைய கதைவசனம் நெறியாள்கையிலும் சில நாடகங்கள் நீர்கொழும்பில் மேடையேறியுள்ளன. அவரது சகாவாக திகழ்ந்தவர் மூத்த எழுத்தாளர் மு. பஷீர். இவர்கள் இருவரும் இணைந்து நாடகங்கள் மேடையேற்றினர். முத்துலிங்கம் ஒரு தொலைக்காட்சி நாடகத்தையும் இயக்கியுள்ளார். இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகியது.

நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம் பின்னாளில் இந்து இளைஞர் மன்றமாக பெயர் மாறியதுடன், முன்னர் அமைந்திருந்த இடத்திலிருந்தும் இடம்பெயர்ந்து விசாலமான மண்டபமாக காட்சியளிக்கிறது.

இந்த மன்றம் சமயம் சார்ந்து இயங்கியபோதிலும் இலங்கையின் நாலா திசையிலிருந்தும் இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் கலைஞர்களையும் அழைத்து பேசவைத்துள்ளது. தொடர்ச்சியாக தமிழ் விழாக்களையும் இலக்கிய மாநாடுகளையும் நூல் வெளியீடுகளையும் நடத்தியிருக்கிறது.

இம்மன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழா திரு. மயில்வாகனன் தலைவராக இருந்த காலத்தில் வெகு கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது. இம்மன்றம் வெளியிட்ட மலரில் மன்றம் பற்றிய மேலதிக தகவல்களை அறியமுடியும்.

மயில்வாகனன் அவர்கள் நடத்திய சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற சஞ்சிகை 1966 இல் வெளியானது. அவரே அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில் நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர், நாகராஜன் ( ஓட்டுமடத்தான்) ஆகியோர் இணைந்தனர்.

அச்சமயம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. செல்லையா இராஜதுரையின் தலைமையில் அண்ணி முதல் இதழ் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. அண்ணி இதழும் ஏனைய ஈழத்து இதழ்கள்போன்று அற்பாயுளில் நின்றுவிட்டது.

இதேசமயம் விஜயரத்தினம் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர் நகுலன் தங்கரத்தினம் அவர்கள் எழுத்தாளராகவும் இருந்தமையினால் அவரது இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது.

இந்து இளைஞர் மன்றம் மாதந்தோறும் நடத்திய பௌர்ணமி விழாக்களும் கலை நயம்மிக்க நிகழ்வாகியது. பட்டி மன்றம், நாடகம் என்பனவும் இடம்பெற்றன. இந்தப்பின்னணிகளில் நீர்கொழும்பில் கலை இலக்கிய ஈடுபாடு மிக்கவர்கள் பலர் இருந்தபொழுதிலும் 1970 இற்குப்பின்னர் பல இளைஞர்கள் தீவிரமான இலக்கிய வாசகர்களாக மாறினார்கள்.

( நிறைவு )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R