யார் இந்த பேங்க்ஸி? - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby's Auction House), லண்டன்; காலம்: ஆக்டோபர் 05, 2018
உலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக்கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலையியக்கியை - remote control device - ஒரு முறை பார்த்து புன்னகைத்துக்கொள்கிறது. ஏலம் ஆரம்பமாகிறது! முதலில் ஏலத்திற்கு வந்த பொருள்... உலகில் பெயர்போன ஆநாமதேய தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸியின் (Graffiti artist: Banksy) "பலூனுடன் ஒரு சிறுமி - Girl with the balloon" எனும் ஓவியம். மிக அழகாக தங்கமுலாம் பூசப்பட்ட அந்த பிஃறேமின் நடுவில் பதிக்கப்பட்டிருந்தது. நிமிடங்கள் நகர ஏலம் சூடு பிடித்து $1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதன் விலை நகர்த்தப்படுகிறது. இறுதி விலை அதுவாக நிர்ணயிக்கப்பட்டு சதபி விற்பனையாளர் தம் கையில் இருந்த மரச்சுத்தியலை பலமாய் மேசையில் மோதி "SOLD" என்ற வார்த்தையை உரக்கக்கூவி அந்த ஏலத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார். எல்லாம் முடிந்தது! கடைசி இருக்கையில் இருந்த அந்த உருவம் மெதுவாய் கதிரையை விட்டு எழுந்து தன் கையில் இருந்த தொலையியக்கியை ஒரு முறை அழுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறி லண்டன் சனக்கும்பவில் கலந்து மறைகிறது. அக் குமிழியில் இருந்து பிறந்த ஆணைக்கமைய $1.4 மில்லியனுக்கு விலைபோன அந்த ஓவியம் மெதுவாய் "ர்ர்ர்ர்....... " என்ற ஒலியுடன் கீழே நகர்ந்து சிறு கீற்றுக்களாய் துண்டுற்று ஒரு கிழிந்த திருவிழா அலங்காரம் போல் அலங்கோலமாய் காற்றில் அசைந்தது அமைதியானது. அக்கூடத்தில் இருந்த எல்லோர் முகத்திலும் ஒரு ஆச்சரியம் மிகுந்த அதிர்ச்சி! அந்த ஓவியத்திற்கான ஏலம் உடனே இரத்து செய்யப்படுகிறது.