என் ஜீவப்ரியே ஷ்யாமளா! - குரு அரவிந்தன் -
சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.
ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
முன்புபோல் அல்லாமல், இப்போதெல்லாம் தொழில் நுட்பவளர்ச்சியால் எல்லாமே உடனுக்குடன் கிடைக்கக்கூடியதாக இருப்பது, எங்கள் தலைமுறைக்குக் கிடைத்த அதிஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும். வீடு தேடியே சீடி, டீவீடி என்று சொல்லப்படுகின்ற குறும்தட்டு, காண்தட்டு என்று எல்லாம் ஒழுங்காக வரும். விரும்பிய நேரம் போட்டுக் கேட்கலாம், பார்க்கலாம் என்று எத்தனையோ வசதிகள் இருந்தன. இதைவிட இதற்கென்றே சில இணையத் தளங்களும் இருந்தன.
அப்பாவிற்கு பழைய பாடல்கள் என்றால் நல்ல விருப்பம். நான் சொல்வது சிவாஜி, எம்ஜிஆர் காலத்துப்பாடல்கள் அல்ல, அதையும்விட பழையது. கிராமபோன் காலத்துப் பாடல்கள். அப்போ, அவர்களது இளமைக் காலத்தில் இப்படியான வசதிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.