இக்கட்டுரையானது கனடாவிலே இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளாகத் தமிழில் படைத்த சிறுகதை இலக்கியம் பற்றிய ஒரு பருந்துப் பார்வை ஆகும். இது எனது வாசிப்பு அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை அன்று என்பதை மனதில் இருத்திக் கொண்டு மேலே வாசிக்கவும். வன்முறை காரணமாக 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலிருந்து தமிழர் அகதிகளாகக் கனடாவில் தஞ்சம் தேடியமையே ”கனடாத் தமிழ் இலக்கியம்” எனும் நாடு வாரியான இலக்கிய வகையின் தோற்றப்பாட்டிற்குக் காரணமாய் அமையும். இவ்வாறு கனடாவிற்கும், ஐரோப்பாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந்தவர்கள் படைத்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும், புலம் பெயர்ந்தவர் இலக்கியம் என்றும் அழைத்தார்கள். இரண்டையும் ஒரே பொருளில் வழங்குபவர்களும் உண்டு. அதே சமயம், புகலிட இலக்கியம் என்பது புலம் பெயர் இலக்கியத்திலிருந்து வேறுபட்டது என வாதிடுவோரும் உண்டு. பேராசிரியர் பாலசுந்தரம் தாம் எழுதிய கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் எனும் நூலில் கனடாத் தமிழ் இலக்கியம் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்துகின்றார்.

கண்டம் வாரியாக அல்லது நாடு ரீதியாகக் கதைகளை நோக்கும் முறைமையை 1994 ஆம் ஆண்டில் தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும், இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. வும் வெளியிட்ட பனியும் பனையும் எனும் நூலில் அவதானிக்கலாம். அத்தொகுப்பில் உள்ள கதைகளை ஆஸ்திரேலியக்கதைகள், ஐரோப்பியக்கதைகள், வட அமெரிக்கக் கதைகள் என முப்பிரிவினதாகத் தொகுப்பாசிரியர்கள் வகுத்துள்ளனர். மேலும், ஐரோப்பியக் கதை ஒவ்வொன்றும் எந்தெந்த நாட்டிற்குரியது என்ற செய்தியையும் அவர்கள் தந்துள்ளனர். இப் பகுப்பு முறையின் அடிப்படை என்ன என்பது குறித்து இந்திரா பார்த்தாசாரதி பின்வருமாறு கூறுகின்றார்.

” இவர்கள் குடியேறிய அந்தந்த நாட்டுக்கும் ஒரு கலாசார சரித்திரம் உண்டு. அந்தச் சரித்திரத்துக்கேற்றபடிதான், அந்தந்த நாட்டின் சமகாலத்தியச் சமுதாயம் அமைந்திருக்க முடியும். புதிதாகக் குடியேறுகின்றவர்கள், அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புக்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை இவ் வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும்” என்கிறார் (பக்கம் 2-3).

எனவே, பல்கலாசார நாடான கனடாவில் படைக்கப்படும் இலக்கியத்தை மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில், ஈழத் தமிழிலக்கியத்தின் நீட்சியாகப் புலம்பெயர் இலக்கியம் என்று நோக்காது, கனடாவில் வாழும் தமிழர்களால் படைக்கப்படும் இலக்கியம் என்று பார்ப்பது பொருத்தமானதே.

கனடாவில் தமிழர், சீனர் போன்ற சிறுபான்மை இனத்தவர் தத்தம் தாய்மொழியில் படைக்கும் இலக்கியத்திற்கும், உத்தியோக மொழிகளான ஆங்கிலம், பிரஞ்சு மொழி என்பவற்றில் படைக்கப்படும் பிரதான இரட்டை இலக்கிய நீரோட்டங்களுக்குமிடையே எதுவித தொடர்புமில்லை. சிறுபான்மை இனத்தவர் படைக்கும் இலக்கியங்கள் கனேடிய தேசிய இலக்கியமாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்ற குறையும் உண்டு. இது குறித்து அதபஸ்கா (Athabasca) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோசப் ஜெ. பிவட்டோ (Joseph J. Pivato) கூறியிருப்பதன் தமிழாக்கம் வருமாறு ” இந்த இலக்கியம் [இத்தாலிய கனேடிய இலக்கியம்] கனடாவில் இருக்கிறது; பெரும்பாலும் கனேடிய இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும் கூட, இது கனேடிய பிரதான இலக்கியத்திலிருந்து வேறுபட்டதே. ஏனெனில், இது பிறிதொரு நாடான இத்தாலி பற்றிய உணர்வினை அளிப்பதுடன், அதனுடனிருக்கும் தொடர்பினையும் நிரூபிக்கிறது. இத்தாலிய கனேடிய இலக்கியம் இத்தாலிய மொழியிலும் உள்ளது. இது கனேடிய இலக்கியம் இத்தாலிய மொழியில் இருக்க முடியுமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. கனடாவின் தேசிய இலக்கியமானது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிற்றான் இருக்கிறது என்பது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். பிற மொழிகள் இத் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியுமா?”

தாய்மொழியில் எழும் இலக்கியங்கள் அந்தந்த சமூகத்தினரிடையே முடங்கிப் போய்விடுகின்றன. அதே சமயம், சிறுபான்மைச் சமூகத்தவர் ஆங்கிலத்தில் படைக்கும் இலக்கியங்களைப் பல்கலைக்கழகமட்ட த்தில் புலமையாளர் கற்பித்தும், ஆராய்ந்தும் வருகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து, கனடாவை வாழிடமாகக் கொண்டவர்களைத் தென்னாசியர்கள் என்றழைப்பார்கள். ஆங்கிலத்தில் இவர்கள் படைப்பவை”தென்னாசிய இலக்கியம்” என்று வகைப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கப்படுகின்றன. இவ்விலக்கியம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. Mariam Pirbhai எழுதிய ” South Asian Canadian Literature: A Centennial Journey” எனும் கட்டுரை கனடாவில் வாழும் தென்னாசியர்களின் ஒரு நூற்றாண்டு கால ஆங்கில இலக்கிய முயற்சிகள் குறித்துத் தொகுத்துக் கூறுகின்றது. அதே சமயம், தமிழ்ப் படைப்பிலக்கியத்தைக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகத்திற்கு மொழிமாற்றம் மூலம் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்கியவர் ரொறன்ரோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் அமரர் செல்வா கனகநாயகம் அவர்கள். பேராசிரியர் செல்வா கனகநாயகம் (1952-2014) இலங்கைக் கவிஞர்களின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சர்வதேச சமூகத்திற்கு அறிமுகம் செய்ததுடன் (Wilting Laughter: Three Tamil Poets 2009, You cannot turn away: Poems in Tamil 2011), தமிழிலக்கிய ஆக்கங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் பதிப்பித்தார் ( Lute song and Lament: Tamil Writing from Sri Lanka 2001, In our translated world 2013, Uprooting the pumpkin: selections from Tamil Literature in Sri Lanka 2016).

1980 களில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தோரிற் பெரும்பாலோர் ஆக்க இலக்கியத்துறையில் கவிதையிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளனர் என்று தன் நூலில் பேராசிரியர் பாலசுந்தரம் குறிப்பிடுகின்றார் (பக்கம் 205). கவிதைக்கு அடுத்தபடியாக அவர்களின் கவனம் சென்றது சிறுகதை மீதாகும். புலம் பெயர்ந்தோர் சிறுகதையில் ஈர்க்கப்பட்டமைக்கு அதன் வடிவமும் ஒரு காரணமாகும். தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிப் பேசும்போது, பேராசிரியர் சிவத்தம்பி, “சமுதாய அமைப்பிலும், மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து பெருகும் கால கட்டத்தில் வாழும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் உணர்வினைத் தாக்குவது புதிய சூழ்நிலையில் தோன்றும் மனித இன்னல் அல்லது புதிய சூழ்நிலையால் ஏற்படும் நடைமுறையே. இதுவே சிறுகதையின் கருவாக அமையும். குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனிதமனம் படும் பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை.” என்கிறார் (பக்கம் 16). எனவே, முற்றிலும் புதிய, அந்நியமான அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழலை எந்தவிதமான உளரீதியிலான முன் ஆயத்தங்களும் இன்றி சடுதியாகச் சந்திக்கும் மனிதர்களின் உணர்வனுபவங்களை வெளிப்படுத்த சிறுகதை வடிவம் பொருத்தமாக அமைந்து எனலாம். எனினும், புலம்பெயர் நாட்டனுபவங்கள் மட்டுமே சிறுகதைகளின் பொருளாக அமைந்து விடுவதில்லை. உறவுகளும், நட்புகளும் தாயகத்திலும், புலம் பெயர் மண்ணிலும் எனச் சிதறுண்டு கிடப்பதாலும், இளம் பருவத்தாயக நினைவுகள் நெஞ்சை நிறைத்திருத்தலாலும் தாயகத்தின் நேசமும், அக்கறையும் புலம்பெயர் எழுத்துகளிலே நீடிக்கின்றன. மேலும், கனடாவில் இருக்கும் தனிமனிதக் கருத்துச் சுதந்திரம் காரணமாக, தாயகத்திலே சொல்லவியலாத சேதிகளும் கதைகளின் கருப்பொருளாகின்றன. அதே சமயம், புது உலகம் பெண்களை வெளிப்படையாகப் பேசவும், இயங்கவும் வைத்திருக்கின்றது. கனடா தமிழ்ச் சமூக நடைமுறைப் பிறழ்வுகளைச் சுட்டிக்காட்டுவனவாகவும், அவற்றை விமர்சிப்பனவாகவும், சமூகப்பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவனவாகவும் பல கதைகள் காணப்படுகின்றன. சமூகத்தில் தாம் நம்பும் நல்ல மாற்றங்களைக் கொணர்வதற்கு இலக்கியத்தைக் கருவியாக எழுத்தாளர்கள் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். எனினும் எந்த அளவிற்கு அதனைக் கலாபூர்வமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு வரலாறு கொண்ட கனடாவின் தமிழ்ச்சிறுகதை இலக்கிய எழுத்தாளர் பட்டியல் நீண்டது. ”பதிவுகள்” இணையத்தளத்தில் 30.03.2015 இல் பதிவிடப்பட்ட ”கனடாத்தமிழ்ச் சிறுகதைகள்” எனும் கட்டுரையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் 47 சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைத் தந்துள்ளார். இப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டால், கனடாவிலே ஏறத்தாழ ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையினர் சிறுகதைத் துறைக்குப் பங்களித்தவர்கள் எனலாம். ஆங்கில மொழியிலுள்ள சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருபவர்களுள் என்.கே, மகாலிங்கம் குறிப்பிடத்தக்கவர். இரவில் நான் உன் குதிரை-சில தேசங்களின் சில சிறுகதைகள் எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை கனடா பத்திரிகைகள், இதழ்கள், சிறப்பு மலர்கள் முதலானவை வெளியிட்டு வருகின்றன. இணையத்தளங்களிலும் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றைவிடப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகளைத் தொகுத்துத் தாமே வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பெரும்பாலும் தமிழகப்பதிப்பகங்களையே நாடியுள்ளனர். அத்துடன் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கிய பனியும் பனையும் 1994 இல் வெளிவந்தது. வி. கந்தவனத்தினால் தொகுக்கப்பட்ட பன்னிரு எழுத்தாளர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய அரும்பு எனும் சிறுகதைத் தொகுதி 2000 ஆம் ஆண்டில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் வெளியிடப்பட்டது. கனடா உதயன் வார இதழில் வெளிவந்த பதினைந்து சிறுகதைகளை ஆர். என் லோகேந்திரலிங்கம் தொகுத்து தூரமும் துயரமும் எனும் தலைப்பில் வெளியிட்டார். இச்சிறுகதைத் தொகுதி சென்னை மணிமேகலைப் பிரசுரமாக 2001 இல் வெளி வந்தது.

சிறுகதையின் பொருட்பரப்பு
கனடா சிறுகதை இலக்கியத்தின் பொருட்பரப்பு மிக விரிவானது. புதிய அனுபவங்களை மையமாகக் கொண்து. மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதப்பட்ட இச் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்திற்குப் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கின்றன என்று கூற்று மிகையானதன்று. எடுத்துக்காட்டாக, வ.ந. கிரிதரன் எழுதியுள்ள ”நீ எங்கிருந்து வருகிறாய்?”, ”யன்னல்”, ”சுண்டெலிகள்”, ”மனிதமூலம்”, ”ஆபிரிக்க அமெரிக்கக்கனடாக் குடிவரவாளன்”, ”ஆசிரியரும், மாணவனும்”, “ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை” எனும் ஏழு புகலிடச் சிறுகதைகளும் கனடா மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்தல் எனும் அனுபவ ஊற்றிலிருந்து பிறந்தவை ஆகும். அது போன்று அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் சிறுகதைத் தொகுதியிலுள்ள ”வலி”, ”அம்மா எங்கே போகிறாய்?”, ”ரேடியோப் பெட்டி”, ”பெரிய கல்வீடு”, ”இது இவர்களின் காலம்” என்பன புதிய களத்தை அறிமுகப்படுத்தும் அற்புதமான சிறுகதைகளாக இருக்கின்றன என்கிறார் இதற்கு அணிந்துரை வழங்கிய கலாநிதி. க. குணராசா.

நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, கனடா சிறுகதை இலக்கியம் பல்வேறு விடயங்களைக் கருவாகக் கொண்டது. தாய்நாடு குறித்த ஏக்கம், மரணம், இழப்புகள் குறித்த துயரம், அடையாளச்சிக்கல், இனவாதம், இளையோர் பிரச்சினைகள், முதியோர் பிரச்சினைகள், ஆண்மையக் குடும்ப அமைப்பின் செல்வாக்குத் தொடர்வதால் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உண்டாகும் பிரச்சினைகள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை உண்டாக்கும் உள வடு என்றும், இன்னும் வேறு பல விடயங்களும் கதைகளின் பொருளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். இவை கனேடிய சிறுகதை இலக்கியத்தை முற்று முழுதாகப் பிரதிநிதித்துவப்படுத்துவன அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. முதலில் தாயக நினைவுகள்.
2009 ஆம் ஆண்டுப் போர் குறித்தும் அதன் பின்னரான தாயக நிலை குறித்தும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் கதை 2009 ஆண்டு இறுதிப் போர் இழப்புகளின் வலியைச் சுமப்பவனின் கதை. கனடாவில் நடைப்பிணமாகத் திரியும் ஓர் இளைஞன் தெருவிலே காரில் அடியுண்ட குருவியையும், அதன் நிலை கண்டு அந்தரிக்கும் அதன் துணையையும் காண்கிறான். இறந்த அக்குருவியை அவன் மெல்ல எடுத்து அட்டைப்பெட்டிக்குள் வைக்கின்றபோது அவனுக்குத் தன் மனைவின் இறுதித் தருணங்கள் நினைவிற்கு வருகின்றன. போர் நடந்து கொண்டிருக்கும்போது, முள்ளிவாய்க்காலிலிருந்து வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து செல்லும் வழியில் கர்ப்பிணியான மனைவியைக் குண்டு வீச்சில் இழந்தவன் அவன். அதன் பின்னர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்த அவ் இளைஞனின் துயரத்தை இக்கதை விவரிக்கின்றது. இக்கதையை வாசித்தவுடன் “மௌனசோகம் நம்மையும் ஆட்கொண்டு விடுகின்றது” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார்.

33 வருடங்களின் பின்னர் தாயகத்தில் சொந்தவூரைப் பார்க்கச் செல்லும் பெண்ணின் குறுகுறுக்கும் மனவுணர்வுகளை, தமிழ்நதியின் மாயக்குதிரை சிறுகதைத் தொகுதியுள் காணப்படும் “மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை” என்ற சிறுகதை சித்திரிக்கும். போரினால் கிராமத்தில் ஏற்பட்ட அழிவுகளையும், உயிர் இழப்புகளையும் பேசுவது. தெரிவுகள் அற்றுத் தங்கி விடுபவர்களின் வாழ்வியல் அவலமே இக் கதையின் கரு.

2. இனவாதம்
கனடாவில் குடியேற்றத்தை வடிவமைப்பதில் இனமயமாக்கல் மைய இடம் வகித்தது என்பதைப் புலமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஐரோப்பிய குடியேற்றவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை, ஆபிரிக்கர்கள் உட்பட வேறு பல நிறக்குழுக்களின் குழுக்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க உருவான பாகுபாடான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் என்பன 1960 களின் பிற்பகுதி வரை கனடாவில் நீடித்திருந்தன. இவை ஒரு வெள்ளையர்கட்கான கற்பனை சமூகத்தை உருவாக்கின என்பதுடன், தொடர்ந்தும் இனமயமாக்கல் செயல்முறைகளை வடிவமைத்து வருகின்றன என்று Gillian Creese எனும் சமூகவியலாளர் கூறுகின்றார் (“Where Are You From?”: Growing Up African-Canadian in Vancouver (Toronto: U of T press, 2020), page 4.) 1970 களிலேயே இந்நிலை மாறத் தொடங்கியது. இதற்குக் காரணம் லிபரல் அரசாங்கம் அறிமுகம் செய்த பன்முக கலாசாரக் கொள்கையாகும். இது வெள்ளையரல்லாதோரும் கனடாவில் குடியேற வழி வகுத்தது. எனினும் கனடாவில் இனவாதம் இன்றும் இல்லை என்று சொல்லி விட முடியாது. இத்தகைய சமூக சூழலில் வெள்ளையரல்லாத ஒருவரிடம் கேட்கப்படும் "Where are you from?" என்ற கேள்வி ஒரு அப்பாவித்தனமான கேள்வி அன்று. கனடாவை வாழிடமாகக் கொண்ட வெள்ளையரல்லாதவர்களை மற்றம்மையாக (பிறத்தியாராக) உருவாக்கும் முயற்சிகளுள் ஒன்று. இக்கருத்தினை அடிநாதமாகக் கொண்டு வ. ந. கிரிதரன் ”நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற சிறுகதையைப் புனைந்துள்ளார். ஒரு வெள்ளையினத்தவருக்கும், இருபதாண்டு காலம் கனடாவில் வசிக்கும் வெள்ளையரல்லாத ஒருவருக்குமான உரையாடல் காலநிலை பற்றிய குறிப்புடன் தொடங்குகிறது. வெள்ளையரல்லாதவர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் என்று அறிய வெள்ளையர் விரும்புகிறார். இதற்கு விடையளிக்க விரும்பாத வெள்ளையரல்லாதவர், வெள்ளையரின் பூர்விகத்தை விசாரிக்கின்றார். அது வெள்ளையருக்கு ஆத்திரமூட்டுகிறது.

அவன் கூறினான்: " இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்.... அது உனக்குத் தெரிகிறதா?"

"எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்" இவ்விதம் கூறிவிட்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான் என்று கதை நிறைவுறுகின்றது.

3. அடையாளமிழத்தல்
கனடாவிற்குப் புலம் பெயர்பவர்கள், தாயகத்தில் பெற்றுக்கொண்ட கல்வி அனுபவங்கள், வேலை அனுபவங்கள் என்பன பொதுவாகக் கனடாவில் தகுந்த அங்கீகாரம் பெறுவதில்லை. பொருத்தமான கல்வித்தகைமைகள் இருப்பின், ” Upgrade your skills” என்பார்கள். கனடாவில் வேலை செய்த அனுபவம் வேண்டும் என்பார்கள். இதைவிட, மொழிப் பிரச்சினை வேறு. எனவே, தாயகத்தில் படித்து வேலை பார்த்த பலர் கனடாவில் உயிர் தரித்திருப்பதற்கான தொழில்களில் (survival jobs) ஈடுபட வேண்டியவர்களாக இருந்தார்கள். இத்தகைய அடையாளமிழந்த மனிதர் ஒருவர் பற்றிய கதையே பனியும் பனையும் கதைத்தொகுதியிற் காணப்படும் ஆனந்த பிரசாந்தின் ”அவர் நாண” எனும் சிறுகதையாகும். தாயகத்தில் ஆசிரியராக இருந்து பின்னர் தொழிற்சாலையில் பணிபுரியும் நாற்பத்தெட்டு வயதினரான ஒருவர், தன்னினும் பாதி வயதினான மேற்பார்வையாளன், அவன் சகாக்கள் ஆகியோரின் பரிகாச, அவமதிப்புப் பேச்சுகளுக்காளாவதால் ஏற்படும் வலியைக் கூறுகிறது. இக்கதை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் இன்னொரு பிரச்சினை ஊழியர்களை வயது அடிப்படையில் பாரபட்சமாக நடாத்துதலான ageism என்று கூறப்படும் பிரச்சினை.

4. முதியோர் பிரச்சினைகள்
பிள்ளைகளினால் ஸ்பொன்சர் செய்யப்பட்டுக் கனடாவிற்கு வந்த முதியவர்களின் அவலநிலை குறித்து முத்துலிங்கம், அகில், நிரூபா முதலானோர் எழுதியுள்ளனர். முத்துலிங்கத்தின் கதை ஒன்றில் தனது வீட்டு நிலவறையில் வசிக்கும் தகப்பனார் இறந்தது இரண்டு நாட்கள் கழித்தே மகனுக்குத் தெரிய வருகிறது. அதுவும் மேல் தளத்தில் உள்ள குளிர்பதனப்பெட்டியிலிருந்த உணவை இரண்டு நாட்களாக அவர் உண்ணவில்லை என்று தெரிந்த பின்னரே நிலவறைக்குச் செல்கிறான். அங்கு தந்தையின் விறைத்த சடலத்தைக் காண்கிறான். அடுத்து, அகிலின் ”அம்மா எங்கே போகிறாய்?” எனும் கதையில், பணத்திற்காகத் தம்முள் சச்சரவிட்டு பகைமை பாராட்டும் இரு பிள்ளைகளுடன் வாழப் பிடிக்காத அன்னை ஒருத்தி முதியோர் இல்லத்தைத் தனது வாழிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். “பொருளியல் சார் நிர்ப்பந்தங்களும், நெருக்குதல்களும் பாசப்பிணைப்பை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன என்பதற்கான சமூக யதார்த்த அம்சமே இக்கதையின் தொனிப்பொருளாகும் என்று பேராசிரியர் சுப்பிரமணியன் விளக்கமளிக்கின்றார்.

5. பேசாப் பொருள்கள்
1970 களின் பிற்பகுதில் இலங்கையில் தொடங்கிய ஈழவிடுதலைப் போராட்டமானது போராளி இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள், இயக்கத்திற்குள் உருவான அக முரண்பாடுகள் என்பவற்றைக் கண்டது. இவை காரணமாகவும் பலர் தம் உயிருக்கு அஞ்சி, மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் படைத்த இலக்கியமே புகலிட இலக்கியம் என்று வாதிடுவோர் உண்டு (பார்க்க காலம், இதழ் 18 இல் வெளிவந்த கொ.றொ. கொன்ஸ்ரன்ரைன், ”புலம்பெயர்தலும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும்”). இது தமிழ்த் தேசியம் எடுத்த நிலைப்பாடுகளையும், செயற்பாடுகளையும் விமர்சித்தது. கனடாவில் எழுதப்பட்ட சில சிறுகதைகள் இத்தகையனவே. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிங்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குமார் மூர்த்தியின் ”ஹனிபாவும் எருதுகளும்” என்ற கதையைக் குறிப்பிடலாம். கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு சீர்குலைந்த காலத்தை மையமாகக் கொண்டு சக்கரவர்த்தி எழுதிய ”என் அல்லாஹ்” என்ற கதையும் முக்கியமானது. பொதுவாக, குமார்மூர்த்தியினதும், சக்கரவர்த்தினதும் கதைகள் அக்கால போர்அரசியல் நிலைப் பின்னணியில் எழுதப்பட்டவை.

6. போரும் வடுவும்
1990 களில் இலங்கையில் வன்முறைக்கஞ்சி, தமது பதின்ம வயதுகளில் கனடாவுக்குத் தனித்து வந்த இளைஞர்கள் உளர். இத்தகையவர்கள் தாயகத்தில் தாம் அனுபவித்திருந்த வன்முறைகள் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்படிப்பட்டோர் கனடாவில் தக்க வழிகாட்டிகள் இன்றித் தமது வாழ்வை அமைத்துக் கொள்வதில் சிரமமடைந்தனர். அத்தகைய இளைஞன் ஒருவனின் கதையைக் கூறுவது இளங்கோவின் ”சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்து போனவன்” என்னும் சிறுகதையாகும். இது அவரின் இணையத்தளத்தில் உள்ளது. மேலும், இயக்க முரண்பாடுகளினால் உயிரச்சம் காரணமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்த முன்னாள் போராளியின் உளப் பாதிப்பை பா.அ. ஜயகரனின் இருளில் மீள்பவர்கள் எனும் கதை பேசுகின்றது (ஜயகரன் கதைகள் (சென்னை: பரிசல் புத்தக நிலையம், 2019). Experience என்ற பிரெஞ்சு நாவலை வாசித்தமை அவனுக்கு பழைய எதிர்மறையான ஞாபகங்களைக் கிளப்புகின்றது. அந்நாவலின் பெண் கதாபாத்திரத்துடனான உரையாடலுடன் தொடங்கும் கதை பீதிநிறைந்த கனவுக்குள் கனவாக, முடிவிலியாகத் தொடர்கின்றது.

பெண் எழுத்து
பெண் எழுத்தாளர்களுள் தற்போது சிறுகதைத் துறையில் பங்களித்துக் கொண்டிருக்கும் மூன்று எழுத்தாளர்கள் பற்றிக் கூற விழைகிறேன். தாயக நினைவுகளுடனும், அரசியலுடனும் விடுபடவியலாதவாறு பெரும்பாலான ஆண் எழுத்தாளர்கள் திணறிக்கொண்டிருக்கும்போது, கனடாவை வாழ்விடமாக் கொண்ட இம்மூன்று பெண் எழுத்தாளர்களும் கனடா சமூகத்தில் தமிழ்ப் பெண்ணின் இருப்பு, அவளின் எதிர்காலம் குறித்த சமூக அக்கறையுடன் எழுதிக்கொண்டிருக்கின்றனர். ஒருவகையில் தமிழ்க் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கத்தைச் சிதறடிக்கும் பெண்ணியக் கோட்பாட்டினைத் தழுவியவர்கள் என நாம் அவர்களை அடையாளம் காணலாம் . எனினும் இவர்களின் சமூக அக்கறை பெண்களுடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் அப்பால் தமிழ்க்குடும்பங்களில் குழந்தை-பெற்றோர் உறவுகள், முதியோர் நிலை, சாதியம், நுகர்வுக்கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாடு என விரிந்து கொண்டே செல்கின்றன.

யாதுமாகி நின்றாள் (2005), உறையும் பனிப்பெண்கள் (2010), உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும் (2018) எனும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர் சுமதி. இவர் கதைகளில் சமூக அநீதியின் உச்ச வடிவமான ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது.. கனடாவில் சட்டரீதியாக ஆண்-பெண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டிருப்பினும், புலம்பெயர் சமூகக் குடும்ப அமைப்பினுள் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றாள் என்பதை அவர் கதைகள் உணர்த்துகின்றன. மனைவியின் உடல் மீது கணவனின் அதிகாரம், மனைவி எப்பொழுது கர்ப்பம் தரிக்கவேண்டும், எவ்வளவு குழந்தைகள் பெறல் வேண்டும் என்பதைக் கணவனே நிர்ணயித்தல், வீட்டிற்கு வெளியே மனைவியின் சாதனைகளைக் கணவன் அலட்சியப்படுத்தல், தாம்பத்தியம் கணவனின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாய் அமைதல், மனைவியின் உணர்வுகள் புறக்கணிக்கப்படல் முதலான பிரச்சினைகளை இவை தொட்டுச் செல்கின்றன.

மேலும், இங்கு சாதி குறித்த உரையாடல்கள் வெளிப்படையாக நிகழ்வதில்லை எனினும் சாதியச் சுவடுகள் அழியவில்லை என்பதை ”சைகையிற் பொருளுணர்” எனும் சிறுகதையில் பதிவு செய்கின்றார். கனடா பூர்விக சமூகக் குடிகளின் பிரச்சினைகளிலும் அவர் அக்கறை செலுத்துகின்றார். கனடா பூர்விகக்குடியினர் பலவந்தமாகக் குடியிருப்புப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பாதக விளைவுகளை அவரின் ”ஆகாயமங்கை” எனும் சிறுகதை விவரிக்கின்றது. தாய்த்தலைமைத்துவத்தைக் கொண்ட பூர்விககுடிச் சமூகங்களுடனான ஊடாடல் மூலம் கனடா வாழ் தமிழ்ப் பெண்கள் அகவெழுச்சி பெறல் முடியும் எனும் அவர் நம்பிக்கை இச்சிறுகதையில் இழையோடுகின்றது. அவர் அண்மையில் எழுதிய “மீண்டும் நீளும் தேவதையின் கைகள்” எனும் கதை கணவனின் வன்முறையினால் மரணிக்கும் பெண்ணைப் பற்றியது. இக்கதையைப் போர்தின்ற நாட்டிலிலிருந்து எதிர்காலத்துளிர்ப்பின் சிறு நம்பிகையோடு, பனிபடரும் நாட்டில் காலடி எடுத்து வைத்து தமது கணவரால் கொல்லப்பட்ட நான்கு தமிழ்ப் பெண்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். இக்கதையைக் கனலி இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

ஸ்ரீரஞ்சனி நான் நிழலானால் (2010) உதிர்தலில்லை இனி (2018) எனும் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆணாதிக்க வன்முறையால் பாதிக்கப்பட்டு ரணப்படும் பெண்கள், குழந்தைகள், பெற்றோர்களினது போலி விழுமியங்களால் அல்லல்படும், குழந்தைகள்,  சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளிகள், சாதியத்தைப் புலம் பெயர்ந்த நாட்டிலும் நிலை நிறுத்த முயலும் மூத்த தலை முறையினர் என்று புலம் பெயர் வாழ்வின் மூன்று தலை முறையினரையும் தொடர்புபடுத்தி, நிகழ் காலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரின் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவருடைய கதைகளில் குறிப்பிடத் தக்க அம்சமாக அமைவது தாய்-மகள் உறவினை இவர் சித்திரிக்கும் விதம். இவரது நீயே நிழல் என்ற கதையை வாசிக்கும்பொழுது, சங்க கால உடன்போக்குப் பாடல்கள் நினைவுக்கு வாராது போகா.

ஆடம்பரமான சடங்கு சம்பிரதாயங்களைக் கண்டிக்கும் கதைகள் சிலவற்றை இவர் எழுதியுள்ளார். அவரின் “சிக்குண்ட சினம்” எனும் கதை பூப்புனித நீராட்டு விழா குறித்த விமர்சனமாக அமைகிறது. அதே சமயம், ”எனக்கும் ஒரு வரம் கொடு” எனும் சுமதியின் கதை குழந்தை பெறாத பெண்கள் இத்தகைய சடங்குகளில் முன்னே வந்து காரியங்கள் இயற்றத் தகுதியற்றவர் என்ற சமூகக் கருத்தினைக் கண்டிக்கின்றது.

வன்முறை காரணமாக் குடும்பங்கள் பிளவுபடுதலால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனப்பாதிப்பு, வலிகள் பற்றி ஸ்ரீரஞ்சனியின் கதைகள் சில பேசுகின்றன. ”உள்ளங்கால் புல் அழுகை” எனும் கதையில் தகப்பன் தாயை அடித்து விடுகிறார். அயலவரினால் பொலிஸ் அழைக்கப்படுகிறது. தந்தை கைது செய்யப்பட, தாய் மனக்கவலை என்று உள மருத்துவ சிகிச்சை பெறக் குழந்தைகள் இருவரும் தனித்தனியே அரச பாதுகாப்பில் வைக்கப்படுகின்றனர். அதில் விவரம் தெரிந்த மூத்த குழந்தையின் மனவோட்டங்களைச் சித்திரிப்பது உள்ளங்கால் புல் அழுகை. குடும்பத்தில் வன்முறை எவ்வாறு எழுகின்றது என்பதைக் குழந்தைப் பாத்திரம் மூலம் கேட்கலாம்:

”அம்மாவுக்குப் பைத்தியம் எண்டு பேசிப் பேசி அவவோடை சண்டை பிடிக்கிறது தான் அவருக்கு வேலை. அண்டைக்கும் அம்மா பேபியோடை சாய்ஞ்சாடம்மா பாடிக்கொண்டு இருக்கேக்கை ‘வீடு குப்பையாக் கிடக்குது’ எண்டு கத்தினார். அம்மா “தன்னாலை எல்லாம் தனியச் செய்ய ஏலாது” எண்டு சொன்னது அவருக்கு பிடிக்கேல்லை. தான் வேலைக்குப் போறன், அம்மா வீட்டிலை சும்மா இருந்து கொண்டு சட்டம் கதைக்கிறா எண்டு அவவின்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்து, அவவின்ரை தலையை சுவரிலை மோதி அடிச்சார். அதைப் பாத்து நானும் பேபியும் பெரிசா கத்தினதாலை தான் பக்கத்து வீட்டுக்கு கேட்டிருக்குதாக்கும்.”

இவர்கள் இருவரிலும் இளையவரான நிரூபா தமிழ்க்கலாசாரம், புகலிட கலாசாரம் என இருவகைக் கலாசாரங்களின் செல்வாக்கிற்கும் உட்பட்டவர். எனவே, அவரின் சில கதைகள் பேசும் சுய அடையாளம் தொடர்பான சிக்கல்கள் அவருக்கு மூத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர்களினால் பேசப்படாதவை. பொருளாதாரச்சுரண்டலும், சமூகச் சீரழிவும்தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவனவாய் அவரின் சில கதைகள் விளங்குகின்றன. முதலாளித்துவ பொருளாதாரம் வளர்த்தெடுத்த நுகர்வுக்கலாசாரத்தினை சாடுவதுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கு மாற்றீடான இயற்கையோடியைந்த குறைந்த தேவைகளுடன் வாழும் வாழ்க்கை முறைமையையும் அவை காட்டுகின்றன. மேலும், முதுமைப் பருவத்து வேதனைகளையும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பாதிப்பினையும் அவர் எழுத்துகள் வெளிக்கொணர்கின்றன. அவரது சில கதைகளில் உரைநடை-கவிதை, உண்மை-கற்பனை (reality vs. fantasy ) என்பவற்றுக்கான எல்லைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இத்தகைய எல்லைமீறலை அல்லது எல்லையழிப்பினை அவரது கதைத்தொகுப்பின் தலைப்பும் உணர்த்துகின்றது. இடாவேணி (இடு- + ஆ  + ஏணி) என்பது சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் இடம் பெறும் சொல்லாகும். ஏணி என்பதன் பொருள் எல்லை. இடாவேணி எனில் அளவிடப்படாத எல்லை . எல்லைகள் அதிகாரவர்க்கத்தினால் இடப்படுவவை; பிரிவினைகளுக்கும் வன்முறைக்கும், மனித துயரங்களுக்கும், உளச் சிக்கல்களுக்கும், போர்களுக்கும் காரணமாய் விளங்குபவை. ”தஞ்சம் தாருங்கோ” என்ற கதை ”நாட்டெல்லைகள் உயிருக்குப் பயந்து ஓடுபவர்களுக்கு அர்த்தமுள்ளவையாகத் தோன்றுமா?” எனும் வினாவை எழுப்புகின்றது. எல்லைகளினால் எழும் மனச்சிக்கல்களை ”மலர்” , ”காலஅமுது” என்பவை விவரிக்கின்றன. இடாவேணியின் கதை கூறும் பாங்கினை நோக்கும்போது ”படைப்பாளியின் கற்பனைக்கு எல்லையிடமுடியுமா? உண்மை/கற்பனை (reality vs. fantasy) இவற்றின் எல்லைகள் என்ன?” என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. ”மனிதக் கற்பிதங்களான எல்லைகளைக் கடத்தல் சாத்தியமானதா?” என்ற கேள்வி அவரின் கதைகளில் தொக்குநிற்கிறது. அவற்றை உடைத்தெறியும் சாத்தியப்பாட்டினையும் இத்தொகுப்பு உணர்த்துகிறது.

புனைவு மொழியின் பண்புகள்
பேச்சு மொழியே பெரும்பாலான கதைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தவிர்த்து எழுதுவோர் வெகு சிலரே. சில கதைகளின் உரையாடல்களில் ஆங்கிலச் சொற்கள், ஆங்கில வாக்கியங்கள் என்பன இடம் பெற்றிருக்கக் காணலாம்.

மேலும் எழுத்தாளர்கள் தாம் பேச விழையும் பொருளுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்துவதில் சிரத்தை எடுக்கின்றனர் என்றே எனக்குத் தோன்றுகின்றது. எடுத்துக்காட்டாக பா. அ. ஜயகரனின் பாப்லோ எனும் உடைவடிவமைப்பாளனாகிய கலைஞன் பற்றிய கதையை எடுத்துக்கொள்ளலாம். பலவிடங்களில் மிகச் சிறப்பாக, கவி மொழியில் இது எழுதப்பட்டுள்ளது.

பெரும்பாலான சிறுகதைகள் கதாசிரியர் கூற்றாகவே அமைந்துள்ளன. அவற்றில் காலவரன் முறையாகச் சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கும். தன்மைக் கூற்று நோக்கு நிலைக் கதைகளில் உணர்ச்சிப் பெருக்கைக் காணலாம். சிலகதைகள் flashback உத்தியைப் பயன்படுத்துகின்றன.

வெவ்வேறு கதை உத்திகளின் பரிசீலனையை முத்துலிங்கம், நிரூபா ஆகியோரின் கதைகளில் காணலாம். நிரூபாவின் “கால அமுது” எனும் கதை கல்வெட்டுப் பாணியில் அமைந்துள்ளது. குறியீடு, மாயா யதார்த்தவாதம் (magical realism), உணர்வுநிலைஓட்டம் (stream of consciousness) முதலான உத்திகளை அவர் இலாவகமாகக் கையாளுகின்றார். பா.அ.ஜயகரனின் கதைகளிலும் குறியீடுகள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அவரின் ”அகதியின் றங்குப்பெட்டி” எனும் சிறுகதையில், றங்குப்பெட்டியானது கைவிட்டு விட முடியாதவையும், அதேசமயம் பிற்காலச்சந்ததியினர் அக்கறை காட்டாதவையுமான அகதிகளின் நினைவுகளினதும், விழுமியங்களினதும் குறியீடாக விளங்குகிறது.

நான் வாசித்த அளவில் தொன்மங்களையும் இலக்கியக் குறிப்புகளையும் தன் படைப்புகளில் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பவர் முத்துலிங்கம் அவர்களே. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கந்தபுராணம், இதிகாசங்கள் தொடர்பான குறிப்புகள் அவர் கதைகளில் இடம் பெற்றுள்ளன. அவரின் ”பூமாதேவி” எனும் கதையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைத் தருகிறேன்.

“மூடர்களில் மூடன், அதி மூடன் என இரண்டு வகைகள் உண்டு அல்லவா? இவன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். எங்கள் இதிகாசங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்ததில் மூடர்களுக்கெல்லாம் மூடன் கம்சன்தான் என்பது என் கணிப்பு. அல்லாவிடில் தன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு யமனாவான் என்று தெரிந்திருந்தும் தேவகியையும், வசுதேவரையும் ஒரே சிறையில் பூட்டி வைத்திருப்பானா? எங்கள் கம்பனி அதிபர் இந்தக் கம்சனிலும் பார்க்க ஒரு ஸ்தாயி மேலே என்றுதான் சொல்ல வேண்டும்.”

நகைச்சுவையுடனும் உள்ளார்ந்த எள்ளலுடனும் கதை சொல்லும் ஆற்றல் கொண்ட முத்துலிங்கம் நேரடி அனுபவமின்றி இலக்கியம் படைக்க முடியாது எனும் கருத்தினைப் பொய்யாக்கியவர். எடுத்துக்காட்டாக அவரின் ”கறுப்பு அணில்” என்ற இலங்கை அகதி பற்றிய கதையைக் குறிப்பிடலாம்.

விமர்சனங்கள்
இறுதியாக, புலம்பெயர் எழுத்துகள் குறித்த பொதுவான விமர்சனங்களையும் நோக்கலாம். புலம்பெயர் இலக்கியம் எனில் புலம்பல் இலக்கியம் என்றொரு விமர்சனம் உண்டு. ”புலம்பெயர்தல் என்ற சொல்லோடு புலம்புதலுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றாலும் புலம்புதல், புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு முக்கியப் பொருளாக இன்று அமைந்திருக்கிறது” என்று சிறகு தமிழிணைய வார இதழில் நவம்பர் 22, 2014வெளியான “புலம் பெயர் இலக்கியம்” எனும் கட்டுரையில் ஆச்சாரி என்பவர் குறிப்பிடுகின்றார். மரணம், இழப்பு, குறித்த படைப்புகள் பரவலாகக் காணப்படுகின்றமையின் அத்தகைய எண்ணம் வாசகரிடத்து உண்டாகியிருக்கலாம். அல்லது அவ்விடயங்கள் குறித்த படைப்புகளே பொது வெளியில் செல்வாக்குற்றமையும் காரணமாகலாம். ஏலவே நான் எடுத்துக்காட்டிய சிறுகதை இலக்கியப் பொருண்மையின் பன்மைத்துவம் இக்கருத்தை மீள நோக்கவைக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்து, மொழி தொடர்பாக, பனியும் பனையும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் சுஜாதா குறிப்பிடும் கருத்தும் முக்கியமானது. “பொதுவாகவே இந்த எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது. இதனால் சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேச தன்மையை இழந்து விடுகின்றன. வட்டார வழக்கு கதைக்கு ஒரு நம்பத்தக்க நிலையை அளிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. அதிகப்படியான ஆங்கில வாக்கியங்களின் பிரயோகமும் இவர்கள் தங்கள் கதைகளைச் சொல்வதில் உள்ள அவசரத்தைக் காட்டுகின்றது”. கதையின் யதார்த்தப்பாங்கிற்கு வலுவூட்டுமு முகமாகவே உரையாடல்களில் வட்டார வழக்கு, ஆங்கிலம் என்பவற்றை எழுத்தாளர் புகுத்துகின்றனர் என்பது என் கருத்து. இவ்விடத்தில் வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட த. அகிலனின் மரணத்தின் வாசனை; போர் தின்ற சனங்களின் கதை என்ற நூலுக்குக் கி.பி. அரவிந்தன் எழுதிய முன்னுரையிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

த. அகிலனின் மொழி வழியாகப் பரவி நிற்கும் மரணத்தின் வாசனையை நுகர்வதற்கு ஈழத்து மொழிவழக்கு, பேச்சுவழக்குத் தடையாக இருக்கக்கூடும். ஆனால் இந்தப் படைப்புகளின் அழகே அந்த மொழிகளிற்றான் தங்கியுள்ளது.

நிறைவாக, கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியத்தை தமது சமூகத்திற்காக, தம்மக்கள் பேச்சு மொழியில் படைக்கின்றார்கள். தாம் கூறும் விடயம் தம் சமூகத்திற்கு தேவையானது, இன்றியமையாதது, சமூகத்தை மாற்றக் கூடிய சிந்தனைப்பொறி கொண்டது எனும் நம்பிக்கையில் இலக்கியம் படைக்கின்றனர். ”இலக்கியம் பொழுதுபோக்கிற்கானது” என்ற கருத்தை முற்றாக மறுதலிப்பவர்களாகவே இருக்கின்றனர். மேலும், இவர்கள் முழுநேர எழுத்தாளர்கள் அல்லர். இவர்களின் எழுத்து இவர்களின் ஊதியமற்ற உழைப்பின் விளைவு. பத்திரிகைகளோ மாத இதழ்களோ பணம் கொடுப்பதில்லை. புத்தகவெளியீட்டில் விற்பனையானால் மட்டும் ஏதாவது உண்டு. இவர்களது மன உணர்வுகளின் சத்தியத்திலும் நேர்மையிலுமேயே இவர்கள் எழுத்துகள் பிரகாசிக்கின்றன. சுய அனுபவங்களிலிருந்து முகிழ்ப்பதே இலக்கியம் என உறுதியாக நம்புவர்கள். தங்கள் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனையுடன் கலந்து தருகின்றனர். அகதியாய்ப் புலம்பெயர்ந்த இவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் தனித்துவமானவை. வரலாற்றின் குறிப்பிட்ட காலப்பகுதியின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலைமைகளை உணராது இவர்கள் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளல் கடினம். எடுத்துக்காட்டாக, குமார் மூர்த்தியின் “இறுதி அத்தியாயம்” என்ற சிறுகதை சமூக நலனில் அக்கறை கொண்ட புத்திஜீவிப் பெண் ஒருவர் ஆயுதத்தினால் மௌனிக்கப்படுவது பற்றிப் பேசுகின்றது. ஆனால் இக்கதையை விளங்கிக் கொள்ள, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள 1987-88 கால யாழ்ப்பாணப் பின்னணி பற்றிய அறிவு அவசியம். ஆனால். காஞ்சனா தாமோதரன்“அழுந்தும் மானிடம்:குமார் மூர்த்தி சிறுகதைகள்” எனும் தலைப்பில் காலம் இதழ் 19 இல் எழுதிய கட்டுரை குமார் மூர்த்தியின் சிறுகதைகளின் பொருண்மையின் உலகளாவிய பண்பினை (universality) வலியுறுத்துகின்றது. கதை உருவாக்கத்திற்கு உந்துதலாக விளங்கிட வரலாற்று, சமூக,பண்பாட்டுப் புல விவரங்களை அது கவனத்தில் எடுக்கவில்லை.

மேலும், இலக்கியவாதியினர் ”அழகியல் அம்சங்கள் புலம்பெயர் கதைகளில் உண்டோ?” என்று தேடலாம். ”இல்லை” என்றும் வாதிடலாம். ஆனால் ஒன்றை மாத்திரம் என்னால் உறுதியாகக் கூற முடியும். கனடா சிறுகதை இலக்கியம் என்பது ஒடுக்கப்பட்ட மானிடத்தின் குரல். அவர்களின் எழுத்து தமிழில் இருக்கலாம். அவர்கள் வெறுமனே தமது அனுபவங்களைத்தாம் எழுதியிருக்கலாம். ஆனால் எங்கெங்கு அரசுகளாலும், ஆயுதக்குழுக்களாலும், சக மனிதராலும் ஒடுக்கப்பட்ட, வதைக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் உயிர் காத்தற்காக அவர்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்களோ, எங்கெல்லாம் புகலிட வாழ்வின் சவால்களை அவர்கள் சந்திக்க நேர்கிறதோ, அங்கங்கே இருக்கின்ற அவர்கள் அனைவரும் இவ்விலக்கியத்தினைத் தத்தம் மொழிகளில் வாசிக்கமுடியுமானதாக இருப்பின், இவ்வெழுத்துகள் தம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்வார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி: தாய்வீடு.காம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here