நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...

' சீ, நீ ஒரு பதர்'  அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ.... மீசையாம் மீசை.... நார் நாரா உதடுக்கு மேல ஈர்க்கில் போல ... பார்க்கவே சகிக்கல... உற்ற்ற்... உற்ற்ற்  ன்ன எப்பவும் வயிற்றுக்குள்ள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல ஏதாவது பாக்டரியா?
வால் மட்டும் என்னவாம்?  எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா  பஞ்சு மாதிரி  சாஃப்டான வாலு.... பாம்புக்கு ஸவெட்டர் போட்டாபல  இருக்கும். பூனையாம் பூன..... ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திட்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால  'உன்ன அப்புறமா வந்து கவனிச்கிறேன்னு' வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.

என்ன.... ஒரே குறையா சொல்றேன் சண்டைக்காரின்னு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார்.  "கொண்டு வர்ர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா?  அவளா பாத்து ஒரு டாக்டரையோ, ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிண்டு வரட்டும். ஜாம் ஜாம்னு நடத்தி நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறேன்."

மாமா மீது கோபம் பிச்சுண்டு வரும். டாக்டர் ஐ.ஏ.ஸ் ன்னா என்னா  கொம்பா?

எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா  'டாக்டர் மாப்பிள,  டாக்டர் மாப்பிளன்னு'  பீத்திண்டு  மூஞ்ச திருப்பிண்டு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல..... தனியா டாக்சில வந்து இறங்கினா.  பாவம்... அழுது அழுது முகமெல்லாம் வீங்கி.... என்ன எழவோ. 'டி..மஞ்சு... கோமதி கத தெரியுமோடி? அவ.....'. அம்மா தொடங்கும் முன்னே 'ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி' ணு சொல்லி கட் பண்ணிட்டேன். பொம்மனாட்டிக்குள்ள  இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்.... நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திரை குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம்  அவ வாழ்க்கை இப்போ.

கோமதி என்னமா இருந்தா...? சிட்டுக்குருவியாட்டம்  துரு துருன்ணு. சைக்கிளில லைப்ரரிக்கு போய் கட்டு கட்டா புஸ்தகங்க எடுத்துண்டு வந்து திண்ணையில ஒக்காந்திண்டு படிப்பா. அவளுக்கும் அந்த கதைகளில வர்ராப் போல யாரோ ஒரு கற்பனை காதலனோட என்னமா நேசம் இருந்திருக்கும்.

பெங்களூர்ல என்னெல்லாம் நடந்திடுக்கும்னு நா கற்பனை பண்றேன்.

அவ புருஷன வேலைக்கு அனுப்புனப்புறம் சாதம் செஞ்சி, கறிகாய் நறுக்கி சாம்பார், பதார்த்த மெல்லாம் நெய், கடுகு போட்டு தாளிதம் செஞ்சி, அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சி வச்சி, அப்புறமா வீட்ட எல்லாம் பெருக்கி அவன் டிரஸ் எல்லாம் மடிச்சி வைச்சி, அப்புறமா வாஷிங் மெஷின்ல துணிபோட்டு எடுத்து உலரப் போட்டு,பின்ன ஒரு புஸ்தகத்த படிச்சசுண்டே இருக்கச்ச  ஒரு குட்டி தூக்கம். ஆறு மணி..... அவன் வந்து கதவ தட்டறான். இவ ஓடிப்போய் கதவ திறக்கிறா.

'என்ன?.. முன் ஜன்னல் திறந்திருக்கு... அதுவழியா முன்ன்டி இருக்கிற ஜிம்முக்கு வார்ர போற பசங்கள....'.

என்ன ஆசையா அவனுக்காகவே அவ வாழறா...... அந்த எருமைக்கு அது புரியனுமே?  கோமதி பீரிட்டு வந்த அழுகய சேல தலப்பால மூடி அடக்கிண்டு கட்டில்ல குப்பற விழுந்து அழறா. அவ உடம்பு குலுங்கி குலுங்கி அதிருது. இந்த வேதன எல்லாம் யாருக்கும் தெரியறதில்ல.
'ஐய... புருஷன உட்டுட்டு வாழாவெட்டியா வந்தவனு'  ஒரு வசனத்தில ஜனம் என்னமா பச்சகுத்துது. கோமதி வேதன யாருக்கு புரியும்? அவ சுமைங்களை இறக்கி  வைக்க தோள்களில்ல!

புத்தகத்தில படிச்ச அந்த காதல் கதைகளில என்னமா அவன் ஆபீஸ்ல இருந்து பூ வாங்கிண்டு வந்து அவ கூந்தல்ல வைச்சி அப்படியே கட்டி அணைச்சி..... கணவன பிரிஞ்சி வாழனும்ணு எடுக்கிற முடிவு எவ்ளோ பெரிய முடிவு! வாழ்க்கையின் எல்லையில நின்னு எடுக்கிற முடிவு. 

அம்மா தெனமும் கல்யாண பேச்ச எடுக்கப்ப எனக்கு கோமதி ஞாபகம் வரும். பெங்களூர்ல நடந்த ஒண்ணும் எனக்கு தெரியாது. ஆனா என் கற்பனையே உண்மையா இருந்திடுத்தின்னா?  அம்மம்மா.....அதேல்லாம் நேக்கு முடியாதம்மா. தெரிஞ்சே தன்ன பலி கொடுக்கற வாழ்க்க தேவைதானான்னு எனக்கு தோன்றது.

"ஒய் டோண்ட் யூ கெட் மேரிட் "...... என்னமாய் கேட்டான்  ராகவன்? அட, ராகவன பற்றி சொல்லவே இல்ல இல்ல? நா பி.ஏ முடிச்சதும்  சென்னை ரெயில்வே ஆபீஸ்ல அக்கவுண்டிங் செக்சன்ல  வேல பார்த்துண்டு இருக்கறச்ச.... ஒரு நாள் ராமனாதன் சார்தான் ராகவன அழைச்சுண்டு வந்து எனக்கு இன்டரடியூஸ் பண்ணறார்... "ஹி இஸ் ராகவன்... இண்ணையில இருந்து உங்க அண்டர் ஸ்டடி. டீச் ஹிம் ஆல்".

நா நிமிர்ந்து பார்த்தேன்.. ஆறடி உயரம்.... வெள்ள சர்ட் பாண்ட் போட்டு 'காதலிக்க நேரமில்லை' ரவிசந்திரனாட்டம் அடக்கமா சீவின முடி..... எக்ஸ்ரா கிறீம் போட்டாப்போல..... மினுக்குது. அடர்த்தியா புருவம்......ரெண்டு புருவமும் நடுவுல சந்திக்குது....நோ இடைவெளி. காலேஜ் பையனப் போல துரு துருணு கண்கள்... அரும்பு மீசை.பிகாம் படிப்பு .... இள வயசு.. என்ன இள வயசு?..... என்ன விட ஒண்ணர வயசு குறைய. அதால சொன்னதெல்லாம் சும்மா பஞ்சுல மை கொட்டினாப்போல  மூளைல ஊறி நின்னிடிச்சி….. கற்பூர மூள!

நா சொல்லிக் கொடுக்கிறதல்லாம் கவனமா கேட்டு ஸ்கூல் பையனாட்டம்  நோட்ஸ் எழுதிண்டுடுவார். எழுதிண்டுடுவான் அப்பிடினு சொல்ல தயக்கமா இருக்கறது அட, அப்படி ஒன்றும் என் மனசில இல்லீங்க. மனுஷாளுக்கு ஒரு பொம்மனாட்டி கொடுக்கிற மரியாதன்னு வச்சுக்கங்களேன்.

ராகவனப் பற்றி அப்படி ஒன்னும் பெரிசா தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வம் இல்ல. என்ன?... நான் என்னா கட்டிக்கவா போறேன்?
அவரா சொல்லுவார் : ஊர் வேலூர் . சென்னையில் அத்தை வீட்டில் குடியிருப்பு. வீக்கென்ட் ஊருக்கு போயிருவார். வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், இலட்சுமி பொற்கோயில் அப்புறம் திப்பு சுல்தான் வரலாறுன்னு  கதகதையா சொல்வார். ஏ குட் ஸ்டோரி டெல்லர். கோட்டை கோயில் பற்றி யெல்லாம் சொல்றப்ப  சட்டணு நிறுத்தி "டெல் மி.... வாட் டிட் ஐ சே நவ்?" அப்படிணு கேள்வில்ல கேப்பாரு! அதனால நா ரொம்ப உன்னிப்பா ஸ்கூல் பொண்ணு போல கேட்டுண்டு இருப்பேனாக்கும்.

ஒரு நாள் வேல முடிஞ்சாப்பறம் அவர எங்க ஆத்துக்கு கூட்டியாந்தேன். தயங்கி தயங்கித்தான் சம்மதிச்சு வந்தார்.  எங்க வீதில இருக்கிறவா எல்லாரும் என்ன ஏதுண்ணு பார்க்கிறா. அம்மா பஜ்ஜியும் காப்பியும் கொடுத்து உபசரிக்கறா. அம்மா ரொம்ப சிரத்தையோட துருவித் துருவி பூர்வீகம் எல்லாம் அறிஞ்சுண்டா. நேக்கு என்னவோ போல் இருந்தது. அவர் போனதும் அம்மா: "ரொம்ப நல்ல பையன். உன்ன விட அத்தன உசரமில்ல.... நல்ல குடும்பம்". அம்மாவின் பேச்சு எங்கு போகிறதுன்னூ எனக்கு தெரியறது. எல்லா தாய்மாருக்கும் உள்ள அந்த ஆதங்கம் அம்மாவிற்கும். அது எனக்கும் புரியறது.

நான் பொறந்து மூணு வருஷத்தில அப்பா மார்பு வலிணு நெஞ்ச புடிச்சுண்டு பரலோகம் போனப்புறம் அம்மாதான் மாமாவோட துணையோட தனிமரமா நின்னு என்ன படிக்கவச்சி ஆளாக்கினா. அவளுக்கு  புரியறது தனிமையோட வலி. ஒரு ஆண் துணை இல்லாம வாழற அந்த வாழ்க்கையோட  வேதனைய நானும் அம்மா முகத்தில கண்டிருக்கேன். சமையல் கட்டில  முந்தானய வாயில வைச்சு அடைச்சிண்டு அவ குலுங்கி அழறத நான் பாத்திருக்கேன். 'மா, ஆர் யு ஓகே?' ணு கேட்டா தன் கவல எனக்கும் தொத்துநோய் போல பரவிடக்கூடாதேன்னு 'ஒண்ணுமில்ல...... இந்த புகை' ணு ஏதோ சாக்கு சொல்லுவா. என்னதான் காலம் மாறிண்டே வந்தாலும் ஒரு பெண்ணோட கவல மாறாமலே இருந்திண்டிருக்கிறது ஒரு சாபம்னு  எனக்கு படறது. புருஷன் போனாப்புறம் தனிமைல வாழற வாழ்க்கை சோப்பு கட்டி தண்ணீர்ல கரையற மாதிரி கரைஞ்சி போகும் வாழ்க்கை. அத வாழ்ந்துதான் கழிக்கணும்.

'ஒன் ஸ்வீட் நியுஸ்' ணு ராகவன் ஒரு திங்கள் கார்த்தால சொல்றச்சே  நேக்கு உள்ள என்னவோ பண்றது. 'அம்மா ஒரு மேரேஜ் அரேஜ் பண்ணிட்டாங்க'.  இப்படி ஒரு நியூஸ் ஒரு நாள் அவர் வாயில இருந்து வரும்ணு நான் எதிர்பார்த்ததுதான். ஆனா அத உண்மையா கேட்கறப்போ என் காலுக்கு கீழ இருந்து யாரோ இந்த பூமிய இழுத்தவிட்ட மாதிரியும் நான் 'அலிஸ் இன் ஒண்டர் லாண்ட்' ல அந்த பொண்ணு கிடு கிடுணு பாதாளத்தல விழற மாதிரியும் ஒரு பிரமை. என்ன சுற்றி  ஆபீஸ்ல இருக்கிற டைப்ரைட்டர், காப்பி கப், ஃபான், மேசை, நாற்காலி எல்லாம் சுத்தறது.

'ஆர் யூ ஓகே?'

'யெஸ்.... யெஸ்'ணு நான் சமாளிச்சிகிறேன். கையால மேசைய இறுகப் பிடிச்சிண்மடு மெதுவா முகத்த திருப்பி இல்லாத பைல தேடறதா பாசாங்கு பண்றேன்.

அம்மா தோள்ல சாஞ்சி 'ஓ'ணு அழணும் போல தோணறது.

"ஒய் டோண்ட் யூ கெட் மேரிட் " னு ராகவன் எப்பவோ கேட்டப நான் 'ஏன்..... ஒரு பொண்ணு சிங்கிளா வாழப்படாதோ? ஒரு மனுஷாளுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரு அடிமை போல அவன சந்தோஷப்படுத்தற, சயன சுகம் தரும் சரீரமா,  புள்ள பெத்துகிற யந்திரமாதான் வாழனும்னு ஒரு நியதியா என்ன?' இத நியாயப்படுத்தறாப்பல ஒரு பெரிய லெக்சரே அடிச்சு முடிச்சேன். ராகவனுக்கு ஏன்டா கேட்டோம்ணு இருந்தது. இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு நான்தான்  அந்த உரிமையை அவருக்கு கொடுத்தேன் என்பதை ஏனோ என் மனம் ஏத்துக்க மறுத்தது.
இப்போ மட்டும் ஏன் ராகவனின் வெடிங் நியூஸ் என்னை இப்படி போட்டு உடைக்கணும்ணு  புரியல.

'ஆம் ஐ இன் லவ் வித் ஹிம்?'னு நான் என்னையே கேட்டுகிறேன். இதுதான் மனுஷாள் சொல்லற ஊமைக் காதலோ? 'டோண்ட் பி ஸ்டுப்பிட்' னு  மனசு சொல்லறது. மனசு, இதயம், ஏக்கம், சோகம்,...... இதெல்லாத்தையும் ஒரு அஞ்சாறு பாட்டிலில அடைச்சு பொம்மனாட்டிங்க  பொறக்கறச்சயே ஆண்டவன் கூடவே கொடுத்து அனுப்பி வச்சானோன்னு  தோன்றது. அப்பப்ப தொட்டுக்க சொட்டு கண்ணீரும் சேத்து வெச்சுட்டான்.

ராகவன் திருமணத்திற்கு நானும் ஆபீஸில இருந்த எல்லார் கூட போயிருற்தேன். பொண்ணு வாட்டசாட்டமா லட்சணமா இருந்தா. நல்லா இருங்கணும்னு வாழ்த்தி எனக்கும் ராகவனுக்கும் இருந்த ஆபீஸ் பந்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளிய வெச்சுண்டேன். இனி ராகவன் அவளுக்கு சொந்தம். அவரை என்றும் என் சொந்தமாக வெச்சுண்டுடனும்னு நான் நினைச்சதே இல்லையே!

நா அவரை எப்படி பார்த்தேணு இன்றைக்கு கூட தெளிவா தெரியல. ஒரு வேள அவரா வந்து 'ஐ லவ் யூ' ணு சொல்லியிருந்தா 'ஓகே'ணு அந்த பந்தத்தில என்னை இணைச்சிண்டு நாலு புள்ள குட்டிய பெத்துண்டு மற்ற பொண்ணுக போல ஒரு லெளகீக வாழ்க்கையை நானும் அமைச்சுண்டு இருந்திருப்பேனோ தெரியாது. இது ஒரு அவிழாப் புதிர்! இப்போ நெனைச்சு என்ன பண்ண?

*.     *.     *.     *.     *.      *.      *.        *.       *

வருஷங்கள் என்னமா உருண்டோடிப் போச்சு? அம்மா இப்போ படுத்த படுக்கையா பாரிசவாதம் வந்து இடது கையையும் காலையும் இழுத்துண்டு  ஒரு குழந்த மாதிரி  'மஞ்சு. அத தா, இத எடு'ணு கேட்டுண்டே இருக்கா. நா கண்ணாடில எம் மூஞ்சிய பார்க்கிறேன்..,,, தலமுடில வெள்ள கீற்று பரவி காது வரைக்கும் வந்தாச்சு. முகத்திலும் மடிப்புகள் மெதுவாய் கோழிக் கீறல்களாய், விஷேசமா கண்ண சுற்றி வரையத் தொடங்கிடறது.  காலம் என்னமாய் தன் கொடிய கலப்பையால பொம்மனாட்டிங்க  செளந்தரியத்தை உழுது சின்னாபின்னப்படுத்திடறது?

அம்மாவுக்கு முந்திரி போட்டு பால் பாயாசத்தை அடுப்பில் கிளறி மெதுவா  இளம் சூட்டில கரண்டியால புகட்றேன். பாயாசமும் அவா எச்சிலும் கலந்து ஒரு பால் ஆறாகி மெதுவாய் கடைவாயில வடிஞ்சி கழுத்தில ஓடி அவளோட சுருங்கின கழுத்து மடிப்புல தேங்கி நிற்கறது. மெதுவாய் அதை துடைத்து அவள் கண்களை உற்றுப் பார்க்கிறேன்.  ஆண்டவன் என்னமா மனுஷாள இப்படி வதச்சி அவாளுக்கின்னு இருந்த அடையாளத்த அழிச்சி 'நீ வாழ்ந்தது போதும்னு'  சொல்லாம சொல்லி .........

'இருந்தது போதும். கிளம்பு போகலா'மின்னு அதே செளந்தரியத்தோட  அழைச்சிண்டு போனா என்னவாம்?

மனுஷாள் ஏன் வயசாகணும்னு விஞ்ஞானம் புட்டு புட்டு வச்சாலும் நேக்கு அத ஏத்துக்கற  மனசு இல்ல.

எனக்குள்ள நடந்துண்டு இருக்கிற இந்த தார்மீக விவாதம் எல்லாம் அம்மாவுக்கு  தெரியப் போறதில்ல. ஆனா அவளுக்காகத்தான்  நா என்னமா என்குள்ளேயே ஒரு ஞான தர்க்கத்த ஆண்டவனோட போடறேன்னு எப்படி அவளுக்கு புரியவைப்பேன்னு தெரியாம மெதுவா அவ கழுத்தில் தேங்கி நிக்கற பால  சேலத்தலப்பால அழுத்தி தொடைக்கிறேன்.

மனுஷாளுக்கு வர்ற சோகம், வஞ்சனை, குரோதம்...... இதேல்லாத்தையும் இப்படி தொடச்சி எறிய முடிஞ்சா எத்தனை நல்லா இருக்கும்னு  யோசிச்சி எனக்குள்ளேயே சிரிச்சிகிறேன்.

சுவர் கடிகாரம் 'டங்.... டங்... டங்' னு பத்து அடிச்சி ஓயறது. வெளி முற்றத்தில நல்ல இளவெய்யில் காயறது. அம்மாவ பன்னிரண்டு மணிக்குத்தான் குளிப்பாட்டணும். அதுவர என்ன செய்யலாம்னு யோசிச்சிண்டு முன் முற்றத்திக்கு வந்து அப்பாடானு  தூணில் சாஞ்சு வானத்த  அண்ணாந்து பார்க்கிறேன். வெள்ள பஞ்சு பஞ்சா  வானத்தில் மேகம் சோம்பலுடன் கும்பல் கும்பலா நகர்ந்துண்டே  இருக்கு. நா சின்ன குழந்தையாட்டம் வானத்தில முயல தேடறேன். என்னோட கவனமெல்லாம் வானத்தில.

"மியாவ்" ........" மியாவ்"

ஏதோ கனவுல இருந்து விழிச்ச மாதிரி சத்தம் வந்த திசையில கண்கள இடுக்கி பார்க்கிறேன். அடுத்த வீட்டு மங்களம் மாமி மதில்ல ஒரு பூனை. என்னை ஒரு அலட்சியமா பார்த்திண்டு, அப்புறம் எங்க தோட்டத்தில இருந்த வைக்கோல் கட்டில் பாய்ந்து ஒரு சின்னப்புலியாட்டம் நா பதியம் போட்ட தக்காளி செடிகளுக்கிடையில நடந்து என் முன்னால இருந்த படியில ஏறி எம்முன்னால வந்து முகத்தை நிமிர்த்தி என் மூஞ்சிய பார்க்கிறது. மெதுவா குனிஞ்சி முன் காலால தன்னோட முகத்த நீவி விட்டுக்கறது. 'இந்த சனியனுக்கு என்ன திமிர்'னு நா யோசிக்கறேன்.
இன்னைக்குத்தான்  நா இத முதல்ல பார்க்கிறேன்.

மங்களம் மாமியோட ஆத்துக்காரர் போன மாசம்தான் நெஞ்சு வலியால கண்ண மூடிண்டார். ஓ! அந்த தனிமய போக்கத்தான் இந்த செருக்கு புடிச்ச எழவ அவா வளர்க்கிறாளோ? இப்போ நா பூனய  அதனோட கண்ணுக்குள்ள உத்துப்  பார்க்கிறேன். என்னமோ...... அது கண்கள  சோகமா வைச்சிண்டு என்னையே பார்க்கிறது. அது என்னை என்னமோ பண்றது. வாழ்க்கையில் பல சமயம் நாம காரணம் புரியாம ஏதோ ஒரு ரசனயையோ, மனுஷாளையோ, வெஜிடபிளையோ வெறுகிறோமே? எல்லாத்துக்கும் காரணம் காரியம் பாத்தா செய்யறோம்? ஏதோ மனசுல 'டக்' குன்னு  அந்த வெறுப்பு அம்மியில உளியால அடிச்சாப்பல பதிஞ்சிடறது.

நா ஏதோ ஒரு மந்திரவாதியால மனோவசியம் செய்யப்பட்ட விக்டிம் மாதிரி எழுந்து போய் பிரிஜ்ஜை திறந்து ஒரு தட்டில பாலை ஊத்தி மெதுவா மெதுவா வந்து பூன முன்னால் வெக்கிறேன். அது தட்டையும் என்னையும் மாறி மாறி பார்க்கறது. ஒரு தயக்கம். அப்புறம் மெதுவா ரெண்டு அடி வச்சு முன்னால வந்து தட்ட மோர்ந்து பார்க்கறது. அப்புறம் அது குனிஞ்சி பால ஒரு நக்கு நக்கி அப்புறம் நிமிர்ந்து பார்க்கிறது. பார்வையில ஒரு நன்றி இருக்கிறதா எனக்கு படறது. "என்னை வாழவைத்த தெய்வமே. என் வாழ்நாள் பூரா உனக்கு கடமைப்பட்டிருக்கேன். செய் நன்றி மறவேன்".....ஏதோ சினிமாப் பாணில பூன பேசறதா யோசிச்சி நா சிரிச்சிகிறேன். நா பலமா சிரிச்சிருக்கணும்..... அம்மா உள்ள இருந்து "யாரும்மா வந்திருக்கா" ன்னு கேக்கறா. நா என்ன சொல்றதாம்?  'அம்மா, மிஸ்டர் பூனை இஸ் ஹியர்'னு  சொன்னா அவா நம்பவா போறா? இரு பரம விரோதிகளின் சந்திப்பு.

பூன தட்ட காலி செஞ்சி அப்புறம் விடாம தட்ட தொடர்ந்து  நக்குறது. ரோஜாப்பூ கலர் நாக்கு தட்ட தொட்டு மறையறத நா பார்த்திண்டே இருக்கேன்.  தட்டு 'சர்ர்ர்... சர்ர்ர்'னு  வழுக்கிண்டு மெதுவா நகர்ந்து நகர்ந்து என் காலடிக்கு வந்து நிக்கறது. நா மெதுவா குனிஞ்சி பூனையோட முதுக தடவறேன். ஜிம்மியோட ரோமமும் இதே மாதிரி சாஃப்டா இருந்தது இப்போ ஞாபகத்தில வர்றது. பூன நிமிந்து என்ன பார்த்து "மியாவ்" னு  என் அன்ப ஆமோதிக்கற மாதிரி ஏதோ சொல்ல நெனக்கறது.  என் கால்ல மெதுவா தன்னோட ஒடம்ப  உரசறது.  அதோட ஸ்பரிசம் என்ன என்னமோ செய்யறது. என்னை என்னமா நம்பி தன்ன பரிபூரணமா என் காலடியில் ஒப்படைத்து 'நீ என்னை என்னவேணுமானாலும் செஞ்சிக்கோ' அப்படடின்னு சொல்லற பரிசுத்தமான அன்ப நா உணர்ந்து பூரிக்கிறேன். அதோட நட்பின் அடர்த்தி எனக்கு இப்போ புரியறது. 'நமக்குள்ள என்ன பகை?' அப்படின்னு கேக்கணும் போல இருக்கறது. ஒரு அதீத உரிமையோடு இந்த ஜீவன் என்னுள் நுழைந்து என்னை ஆட்கொள்வதை நான் உணர்கிறேன். நா குனிந்து விரலால பூனையோட கழுத்துக்கு கீழ கீச்சு கீச்ச மூட்றேன். அது தன் முன் கால் இரண்டாலயும் என் கைய கவ்வுறது. தன்னோட கால் நகங்கள உள்ளிளுத்து 'நா இவாள காயப்படுத்தக் கூடாது'ணு ஒரு கரிசனையோட துளிர்க்கும்  இந்த புது உறவை கொண்டாடறது. இந்த விளையாட்டு இருபது நிமிடம் வரை தொடர்கிறது . அப்புறம் மெதுவா சில அடிகள் வைத்து என்னைப் பிரிந்து சென்று தன் கழுத்தை திருப்பி என்னைக் கனிவோடு பார்த்து  பின் மதிலின் மேல்  பாய்ந்து மறையறது.

நா இப்போ தினமும் காலையில அம்மாவுக்கு  பாயாசம் கொடுத்தப்புறம்  ஒரு தட்டுல பால் வார்த்து வச்சி என் நட்பிற்காய் காத்திருக்கிறேன்!

'யெஸ், ஐ டூ லைக் கேட்ஸ்!'

ஆமா, எனக்கு இப்போ பூனைகளை பிடிக்கும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்