முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.
பாவிக அணி
பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர் நிலைச் செய்யுள் திறந்துக் கவியால் கருதி செய்யப்படுவதொரு பாங்கு ஆகும்..அது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு செய்யுளால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது ஆகும்.
"பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
. பொறையில் சிறந்த கவசம் இல்லை
வாய்மையிற் கடியதோர் வாளி இல்லை"
(தண்டியலங்காரம் 64)
பிறர் மனைவியை விழைந்தவர் கிளையொடும் கெடுவர் என்று கம்பராமாயணத்திலிருந்து அறியலாம்.
திருக்குறளில் பிறன் இல் விழையாமை
பிறன் இல் விழைவினால் வரும் தீமைகளைச் சொல்லி அப்படிப்பட்ட தீமைகளைச் செய்யாதே என்று வள்ளுவர் பிறனில் விழையாமை என்று தனி அதிகாரமே வகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதளவு கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறர் மனைவியை விரும்புதல், பிறர் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயல்களைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவித பயனும் இல்லை. பிற எல்லா பெருமைகளும் பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன.
“எனைத் துணைய ராயினும் என்னாந் தினைத் துணையும்
தேரான் பிறனில் புகல்”
(திருக்குறள்-பிறனில் விழையாமை 144)
என்று கூறுகிறார்.
கம்பராமாயணத்தில் பாவிக அணி
கம்பர் தம் காப்பியம் முழுவதும் பிறர் மனைவி மேல் ஆசைப்படுபவர் தான் மட்டுமல்ல, அந்த குலமே அழியும் என்பதைக் கூறியுள்ளார்.
பிருகு முனிவர் மனைவி கியாதி அவள் அரக்கர்களிடம் உள்ளம் உருகும் காதல் கொண்டு உறவு கொண்டாள். திருமால் அவள் உயிரை வாங்கினார்.
"வரு கயல் கண் கியாதி வல் ஆசுரருக்கு
உருகு காதலுற உறவாதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியோன்”
. (தாடகை வதைப்படலம் 381)
இந்திரன், அகலிகை மேல் கொண்ட மோகம்
தேவர்களின் தலைவன் இந்திரன் கௌதம முனிவர் மனைவி அகலிகை மீது காதல் கொண்டு, அவளை அடைய விரும்பினான். சேவல் உரு கொண்டு ஆசிரமம் அருகில் நின்று கூவ, பொழுது விடிந்து விட்டது என்று முனிவரும் குளிக்க ஆற்றுக்குச் சென்றார். அவர் இல்லாத நேரத்தில், அவர் உருவில் சென்று அகலிகையைச் சேர்ந்தான். ஞான திருஷ்டியால் உண்மையை உணர்ந்து வந்த முனிவர், இந்திரனுக்கு ஆயிரம் பெண் குறிகள் உடல் முழுவதும் வரவும், அகலிகைக்கு கல்லாக கிடக்கவும் சாபமிட்டர். அதன்படியே சாபமும் பலித்தது.
“தீ விழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்ய
தூயவன் அவனைநின் கைச்சுடு சரம் அனைய சொல்லால்
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்”
(அகலிகை படலம்478)
வாலி, ருமையை தன்னுடன் சேர்த்துக்கொள்ளல்
வாலி, சுக்ரீவனை நாட்டை விட்டு விரட்டியடித்து, அவன் மனைவி ருமையையும் கவர்ந்து கொண்டார். இதை அனுமன், இராமனிடம் கூறினான். உடனே இராமன் தலைமையோடு தாரமும் உனக்குப் பெற்றுத் தருவேன் என்று கூறினார். வாலியை வதைத்து ருமையையும் கிட்கிந்தா நாட்டையும் சுக்ரீவனுக்குக் கொடுத்தான்.(வாலி வதைபடலம் )
இராவணன், சீதை மேல் காமம் கொள்ளல்
இராவணன், இராமன் மனைவி சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். மாமன் மாரீசனிடம் சென்று உதவி கேட்ட பொழுது,மாரீசன், இராவணனிடம் மற்றொருவருக்கு உரிமை உடையவளாய் அவரது வீட்டில் வாழ்கின்ற மனைவியை வலிமையால் கவர்ந்து கொண்டோர் என்னும் இவர்களை அறக்கடவுள் தானே வந்து அறுத்து அழிக்கும். இதை நீ அறிவாய் ஐயனே, தீயவர்களுள் அழிந்து போகாமல் தப்பிப் பிழைத்தவர் யார் உள்ளார் ஒருவரும் இல்லை (மாரீசன் வதைப் படலம் 732)
விண்ணுலகத்தின் ஆட்சியைப் பெற்ற இந்திரன் அகலிகையின் அழகிலே ஆசை கொண்டு, அதனால் கொடும் சாபம் பெற்று தீமை அடைந்தான். அந்த இந்திரனைப் போல பிறர் மனைவியை விரும்புபவர் எத்தனையோ பேர் இழிவு அடைந்தனர். சிவந்த நிறமுடைய இலட்சுமி போன்ற அழகிய மகளிர் எத்தனையோ பேர் உன் அழகை விரும்பி அனுபவிக்கின்றனர். அப்படி இருக்க, பின்னே வருவதை முன்னேஅறியும் ஆற்றல் அற்றவர்கள் சொல்வதற்கு ஏற்ற சொற்களை நீ கூறினாய். அதனால் அறிவு இழந்து விட்டாய். நீ திட்டமிட்டபடி செய்ய முயன்றாலும் பாவமும், பழியும் அல்லாமல் நன்மையும், இன்பமும் உண்டாகாது. புன்செயல் கை கூடினாலும் எல்லா உலகங்களையும் படைத்தவனான இராமன் சான்றோர்களின் சாபம் போல தப்பாமல் தாக்கும் அம்புகளைக் கொண்டு உன் சந்ததியுடன், உனது வலிமையை அழித்து, உனது கூட்டத்தை முழுவதையும் நிச்சயமாய் அறுத்து அழித்து விடுவான்.
“செய்தாயேனும் தீவினையோடும் பழியல்லால்
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம்”
(மாரீசன் வதைப்படலம். 734)
தவறு செய்து இறந்தவர்கள் இறந்தவர்களே ஆவார்கள். இறப்பவர்கள் செய்யும் கொடுந் தொழிலை இனி நீ செய்ய வேண்டாம். வேண்டவே வேண்டாம். நீ செய்தால் அதிலிருந்து தப்பிப் பிழைக்கச் செய்யும் நல்ல விதி உண்டாகுமோ? உண்டாகாது. இவ்வுலகத்தை ஒருவர் பின் ஒருவராய் ஆண்டவர்கள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியுமா? முடியாது. அவர்களுள் அறத்தைப் போற்றி, அதன் வழி செல்லாதவர்கள் தன் இனத்தைப் பெருக்க மாட்டார்கள். அவர்கள் நீண்ட காலம் நிலைத்தவர் யார்? அனைவரும் நிலைத்து வாழ முடியாமல் அழிந்து போய் விடுவார்கள் அல்லவா?
“மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கையின் அறம் நோனார்
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ”
(மாரீசன் வதைப்படலம் 737)
நீ நினைத்தபடி சீதையைக் கவர்ந்தால், உன் உறவினர்களோடு தப்பிப் பிழைக்க மாட்டாய் என்பதை எண்ணி, என் மனம் பறையடிப்பது போலத் துடிக்கின்றது. எனது அரிய உயிர் அஞ்சுகின்றது. அதை நீ நினைத்துப் பார்க்காமல் இருக்கின்றாய். விஷத்தை அறியாமல் அருந்துபவர்களை அவர்கள் செய்யும் செயலின் தீமை அறிந்து, அருகே நின்றவர்கள் இச்செயல் செய்வது நல்லது என்று கூறுவது நல்லதாகுமா? ஆகாது. (மாரீசன் வதைப் படலம் 745)
இவ்வாறெல்லாம் அறிவுரை கூறினான்.
கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுரை
கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுரை கூறும் போது, ஓவியங்கள் அமையப்பெற்ற இலங்கையை தீ உண்டிட மனம் வருந்தினாய். அரசை அழிந்தது என்று உலகமானது கூறுமாறு நல்ல குடியில் பிறந்த அயலான் ஒருவனின் மனைவியை விரும்பி, கவர்ந்து சிறை வைத்த உன் செயல் நல்லதோ? பாவச் செயல் உடையார் அடையும் இதை விட கொடிய பழியானது உண்டோ? அழகு வாய்ந்த இலங்கை நகரம் அழிந்துவிட்டது என்று நாணம் கொண்டாய். உன் உயிர் என்று சொல்லும்படியான மனைவியர் விருப்புடன் உன்னிடம் புன்முறுவல் செய்து, நின்னை நோக்கி நிற்கவும், நீ அவர்களை நோக்காமல், பிறர் மனைவியான ஒருத்தியின் அடிகளில் விழுந்து வணங்க, அவள் மறுத்து கூறுவதைக் கேட்டுக் கொண்டிருத்தல், உனக்குப் புகழைத் தருவது போலும். ஐயனே ஒருவன் மனையில் தங்கிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு இருந்த சீதையை உள்ளம் இரங்காமல் கொடிய செயலை மேற்கொண்டு அரச முறையைக் கைவிட்டு என்றைக்கு சிறையில் வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிந்தது. தீய செயலால் நாம் புகழடைய எண்ணல் அறிவுடைமையா. (இராவணன் மந்திரப் படலம் 63)என்று அறிவுரை கூறினான்.
உறக்கத்தில் இருந்த கும்பகர்ணனை எழுப்பி இராவணன் போருக்கு செல்லுமாறு கூறும் போது, அதற்கு விடை கொடுக்கும் முகமாக கும்பகர்ணன், கொடிய போர் தொடங்கி விட்டதா? எல்லையில்லாத கற்புடைய சீதையின் சிறை துன்பம் இன்னும் தீரவில்லையா? வானத்திலும், வையகத்திலும் ஓங்கிய உனது உயர்ந்த புகழ் அழிந்து போய்விட்டதா? அரக்கர்களுக்கு அழியும் காலம் வந்து விட்டதா?(கும்பகர்ணன் வதைப்படலம் 1291)
போர் நெருங்கி விட்டதா. அப்போர், ஒளி வீசும் பொன் போன்ற சீதையைக் காரணமாக கொண்டதோ? முன்னமே நந்தியும், வேதவதியும் சொன்ன சாப சொற்களை மனத்தில் கொண்டு, கண்ணில் விடம் கொண்ட நாகம் போன்றவளான கற்பினையே செல்வமாக கொண்டவளான சீதையை நீ இன்னும் விட்டுவிடவில்லையா? இச் செயல் உன் விதியின் வலிமையால் நடப்பதே. ?(கும்பகர்ணன் வதைப்படலம் 1292)
இந்த உலகினை சேர்த்து எடுக்கலாம் அல்லது இந்த உலகம் முழுமைக்கும் எல்லை கட்டுமாறு சொல்லலாம் இவை நடக்கக்கூடும் ஆனால் சிறந்த வலிமை பெற்ற இராமனுடைய தோள்களை வெல்லலாம் என்பது சீதையின் உடலை தழுவலாம் என்பதைப் போன்றதாகும். இவை இரண்டும் முடியாத செயல்கள் என்று கூறினான். ?(கும்பகர்ணன் வதைப்படலம் 1293)
புலத்திய முனிவரின் வழி தொடங்கி வந்த வஞ்சனை இல்லாத உனது குலத்தின் தன்மை உன்னால் குறைந்தது. உனது செயல் நம் குலத்தின் வெற்றித் தன்மையை வீழ்ச்சி அடைவதற்குக் காரணமாகும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. இது குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகவும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது (கும்பகர்ணன் வதைப்படலம் 1294)
வீடணன், இராவணனுக்கு அறிவுரை
வீடணன், இராவணனுக்கு அறிவுரை கூறும் போது, சிறப்பாகப் பேசப்படும் வரத்தால் மேன்மை கொண்ட முனிவர் எனப்படுபவர் தமக்கு உண்டாகும் இடையூறுகளைப் போக்கி பாதுகாக்கும் துணைவர் இல்லாதவரை மொழிக்கு எல்லையாய் பெரிய மேன்மையான தோள்களை உடைய இராம லக்ஷ்மணர்கள் எனும் இருவரும் தேவர்களுடன் எல்லா உலகங்களையும் வெல்வர் என்பதை நன்கு ஆராய்ந்து எண்ணி அந்த இருவரும் அரக்கர்களாகிய மரங்களின் அடிவேரும் அறும்படி ஒழிப்பார்கள் என்று துணிந்ததால், அவரை அங்கங்கு வந்து சேரும் செயலை மேற்கொண்டனர். (இராவணன் மந்திர படலம் 102)
அறிஞர்களுள் சிறந்தவனான வீடணன் புகழும், செல்வமும் உயர்ந்த நம்முடைய குலத்தினது நல்ல பண்பும் தாழ, பழியும் கீழ் மக்களின் இயல்பும் மிகுதியாகி, நீ சுற்றத்துடன் இறந்துபடாமல், மாறாத கற்பினையுடைய சீதையான தெய்வத்தை இராமனிடம் அனுப்புக. இவ்வாறு செய்வதை விட வெற்றியைத் தருவது ஒன்றுமில்லை என்று கூறினார். (இராவணன் மந்திரப் படலம் 110)
ஒரு பெண் நாரையும், இரு ஆண் நாரைகளும்
இராமன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு வருந்தினார். ஒப்பில்லாத தனித்திருக்கும் பெண் நாரை மேல் மனம் செல்வதால் மிக்க வலிமையை உடைய இரண்டு ஆண் நாரைகள் பின்வாங்காது மாறுபடுகின்ற கொடிய சினத்தைக் கொண்டனவாய், அஞ்சாமை தோன்றும் கண்களிலிருந்து தீப் பொறி பறக்கப் பெற்றனவுமாய் போர் செய்வதைப் பார்த்து இராமன் சினத்தால் தன் புருவத்தை வளைத்தான்.
“ஒரு தனிப் பேடை மேல் உள்ளம் ஓடலால்
பெருவலி பவயக் குருகு இரண்டும் பேர்கில
திருகு வஞ்சினத்தன பெரு தெறுகண் தீஉகப்
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்”
(வீடணன் அடைக்கலப் படலம் 335)
அனலன் விடை
மயிந்தன் வினாவுக்கு, அனலன் விடை கூறும்போது, சுடும் நெருப்பினை ஆடைக்குள் மூடி வைத்த தீய அறிவுடையவனே, இராமனின் மனைவியை சிறை வைத்துள்ளாயே, அந்த சீதையை விடுவாயாயின் நீ வாழ்வாய், அவளை சிறையினின்று விடாது வைத்திருக்க விரும்புவாயாயின் நீ வீழ்வாய் என்று உறுதிமொழிகள் பலவற்றை இராவணனுக்கு, வீடணன் எடுத்துச் சொன்னான் என்று கூறினான். (வீடணன் அடைக்கலப் படலம் 349)
மயிந்தன் இராமனிடம் செய்தி தெரிவிக்கும் போது, அந்த வீடணன் இராவணனை நோக்கி சீதையை, இராமனிடம் விடாமல் நீ சிறையில் வைத்திருப்பாயானால், இந்த இலங்கையானது அரக்கர்களின் எலும்பாலாகிய மலையாகிவிடும். அன்றியும் அறிவில்லாதவனே உன் அழகிய முடியை அணிந்த தலையும், தரையில் புரளும் என்று ஒரு நல்ல அறிவுரை கூறினான் என்பதையும் இராமனிடம் தெரிவித்தார்.
“கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்
எற்புடைக் குன்றமாம் இலங்கை ஏழை நின்
பொற்புடை முடித்தலை புரளும் என்று ஒரு
நற்பொருள் உணர்த்தினன் என்றான் நாட்டினான்”
(வீடணன் அடைக்கலப் படலம் 358)
விலங்கினத்தின் கற்பு
ஐந்தறிவுடைய குரங்கினத்திற்கும் கற்பு வேண்டும் என்றே கம்பர் தம் காவியத்தில் வலியுறுத்துகிறார். வாலி, சுக்ரீவனின் மனைவி ருமையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இராமனின் கைகளால் இறந்தும் பட்டான். சுக்ரீவன் அரசனான பிறகு, வாலியின் மனைவி தாரையை, ராஜமாதாவாக ஏற்றுக் கொண்டான். தன் மனைவியாக்கிக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்.
பறவையான காகம் இந்திரன் மகன் ஜெயந்தன் சீதையின் முலைகளை காம எண்ணத்தில் கொத்தினான். இதைக் கண்ட இராமன் அதன் மீது பாயும்படி ஒரு தர்ப்பையை அம்பாகச் செலுத்தி அக்காக்கையின் ஒரு கண்ணை இராமன் அழித்தார். அதேப்போல் எல்லாக் காக்கைகளுக்கும் ஒரு கண் இழக்குமாறு இராமன் செய்தார்.
“ஏக வாளி அவ் இந்திரன் செம்மல்மேல்
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண் இல ஆக்கிய
வேக வென்றியைத் தன் தலை மேல் கொள்வாள்”
(காட்சிப்படலம் 356)
பறவையாகவே இருந்தாலும் தவறான எண்ணத்துடன் செயல்படக் கூடாது என்று கம்பர் கூறுகிறார்.
முடிவுரை
பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர் நிலைச் செய்யுள் திறந்துக் கவியால் கருதி செய்யப்படுவதொரு பாங்கு ஆகும்.அது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு செய்யுளால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது ஆகும். பிறன் இல் விழைந்தோர் தான் அழிவது மட்டுமல்லாமல் தன் குலத்தையும் அழித்துவிடுவர் என்பதைக் கம்பர் தம் கம்பராமாயணம் முழுவதும் கூறிச் சென்றுள்ளதை நாம் தண்டியலங்காரத்தின் வழிஅறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
2.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
3.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.