முன்னுரைபண்டைக் காலத்திலே சமண சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலை பெற்றிருந்தது. இந்த சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றி விட்டது. சமணர்கள் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வது பேரறமாகக் கொண்டிருந்தர்கள். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டிலே சமண சமயம் வேரூன்றியது. சமண சமயம் தமிழின் சிறந்த சங்க இலக்கியங்கள் இலக்கண நூல்கள் அறநூல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
சமணம்
சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் போன்ற பெயர்கள் உள்ளன. சமணர் என்பதற்குத் துறவிகள் என்று பொருள். சமணம் என்பது துறவு எனப் பொருள்படும். சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. மேலும் சமணத்திற்குப் பலன்களையும் கர்மங்களையும் வென்றவர் எனவும் கூறலாம். ஆதலால் தீர்த்தங்கரருக்கு ஜீனர் என்னும் பெயருண்டு. ஜீனரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது.
சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும், அதனால் இந்த மதத்திற்கு ஆருகத மதம் என்று பெயர் வழங்கப்படுகிறது. சமணக் கடவுள் பற்றற்றவர். ஆதலின் நீர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதனால் நிகண்ட மதம் எனப் பெயர் பெற்றது.சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது.ஆகவே இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் எனப்பெயர் உண்டாயிற்று.
சமண முனிவர் ஒழுக்கம்
வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று சமணர் இரண்டு விதமாகப் பிரித்துள்ளார்கள் . இவ்விரண்டினையும் சாவக தர்மம் ஆதிதர்மம் என்றும் கூறுவர். இல்லறம் என்பது சாவக தர்மம் மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம் உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கம் ஆகும்.
திணைமாலை நூற்றைம்பது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் ஆகும். இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மாணாக்கர் கணியன் மேதாவியார் இவரைக் கணிமேதாவியார் என்றும் அழைப்பர். இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆவர். பெரியமலை தாம் நாடி புகுந்து தேடி தேன் முழுவதையும் குடித்து அரியமலை போன்றிருந்த யானைகளைப் பிணித்துக் கொள்பவருடைய தலைவியின் மார்புகள் மீது கொண்ட விருப்பத்தினால் நாணம் அழிந்து அறிவு முதலான பண்புனள் கெடுவதற்கு நாம் எடுத்துக்காட்டாக அமைந்தோம் என்று தலைமகன் கூறினான்.
“நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
யேணழிதற் கியாமே யினம்" (தி.மாலை.நூற்றைம்பது - 23)
சிற்றின்ப வேட்கையால் நாணமும் நலனும் கெட்டு நிற்பதாக தலைவன் கூறுகிறான். இது ஒரு சமயக் கருத்தாகவே படுகிறது. இச்சிந்தனை மேற்கணக்கு நூல்களில் காணப்படவில்லை.
குறைவு இல்லாமல் பெரியோர்களது வருகையினை ஏற்றுக் கொண்டவர்களாய் உடம்பாடு கொண்டு நீர் மணமுறையில் மகளை கொடுத்தாலல்லாமல் நம்முடைய மகளின் அழகும் மார்பும் இரண்டிற்கும் பரிசாகக் கொண்டாலும் ஈடாகாது. காதலை மதிக்க வேண்டும் என்று நற்றாய் கூறினாள்.
“வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்க்கொடுப்பி னல்லது – கோடா
பொழிலும் விலையாமோ போந்து" (தி. மா. நூ. ஐம்பது. 15)
என்னும் பாடலில் சான்றோர் வரவினைக் குறிப்பது சமண சமயத்தின் தாக்கத்தினாலேயே ஆகும்.
யாழினை இசைக்காமலே இசையானது மேன்மை அடையும். தேன் வண்டுகள் இசைக்கும் படியான கடற்கரைச்சோலை கைம்மாறு கருதாமல் காண வந்தவர்களுக்கு இனிய தெய்வமாகக் காணப்படும். இவ்வுலக வாழ்க்கையை எண்ணாமல் இறைவனையே எண்ணி இறந்துபடும் பெரியோர்களின் மன அமைதியாகிய உறுதிப்பாடு இல்லாமல் தலைவியின் பெற்றோர் வீட்டில் வைத்து பாதுகாக்காமல் கட்டுக்கயிற்றை அவிழ்த்து விட்டால் அது பலருக்கும் தீங்கு செய்வது போல தலைவியைப் போக விட்டுவிட்டார்கள் என்று தோழன் தலைவனிடம் கூறினான்.
"சாவர்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவர் கயிறுரீ, விட்டார்” (தி.மா.நூ.ஐம்பது. 47)
அகப்பாடல் ஒன்றிக் கைம்மாறு கருதாமல் செயல்படுதல் உலக வாழ்க்கையை எண்ணாமல் இறைவனை எண்ணி இறந்துபடுதல் முதலிய செய்திகள் வருகின்றமைச் சமயத்தின் தாக்கத்தினாலேயே ஆகும்.
தோழியே பொறுக்க இயலாத துன்பத்துடன் நாம் தலைசாய்க்கும் படியாகக் குளிர்ந்த முல்லைச்செடிகள் நமது நிலையினை எண்ணிச் சிரித்துக் கொண்டு பூக்க,மலைகள் அதனைப் பார்த்து தலைவிக்கு முன்பு அருமையானவராய் இருந்ததலைவர், இப்பொழுது தொலைவில் உள்ளாரே என நினைத்து பொறுக்காதவனாய் மழை நீரினைக் கண்ணீராக வழிய விட்டு அழுதன இதனைக் காண்பாய்.பெரியவர்களாக உள்ளவர்களின் பெருமைக்குணம் உண்மையில் கொண்டாடத் தகுந்ததாகவே காணப்படும் என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
“பெரியார் பெருமை பெரிதே யிடர்க்கா
ணரியா ரெளியரென் றாற்றாப் - பரிவாய்த்
தலையழுங்கத் தண்டளவந் தாநகக்கண் டாற்றா
மலையழுத சால மருண்டு" (தி.மா.நூ.ஐம்பது. 110)
தலைவனின் செயலைப் பற்றிக் குறிப்பிடும்போது அவனைப் பெரியோர் செயலோடும் பெருமையோடும் ஒப்பிட்டுத் தலைவிக் கூறுவதாக அமைவது சமயத்தாக்கத் தாலேயே என்பது பெறப்படும்.
பெருந்தன்மை முதலிய நற்பண்புகள் மிகுந்த மக்கட்கு தமக்கு உரியர் எனக் கொண்டாடும் தன்மை, பழமையானவைகள் மக்கட்குப் பல்லாற்றானும் பயனுறுதலை நினைத்துப் பார்த்தமையால் உரிமைகள் பல வாய்ந்த குடிமக்கள் தக்க தலைவர்களை பெற்றார்களைப்போல மிகவும் தாழ்மையுள்ள நான் சுற்றம் போன்று வாயில் நேர்தற்குக் காரணமாக அடைந்தத் தலைவி காட்டிய இவ்வருளானது எனக்கு வாயத்தது என்று விறலி தோழியிடம் கூறினாள்.
“கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயனோக்ர்கிக் கொல்லோ - கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரிற் கேளா
வடிநாயேன் பெற்ற வருள்” (தி.மா.நூ.ஐம்பது. 134)
நல்ல மணம் மிக்க தகர, மகிழ மரம் போன்றவற்றை பயனில்லாத புதர்களைப்போல் வெட்டியெறிந்து, பயிர் செய்தலை விரும்பி, பண்படுத்தி, திணை விதைப்பவர்களாகிய மலை நாட்டில் இருக்கும் தலைவி பிறர்படும் துன்பத்துக்கு வருந்துவது தகுதி உடையவளோ என்று நீ ஆராய்ந்து என்பர் என தலைவன் தோழியிடம் கூறினான்.
“நறுந்தேன் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி -எறிந்துழுது
செந்தினை வித்துவர் தங்கை பிறர் நோய்க்கு
நாந்தினைய வல்லளோ நோக்கு. (தி.மா.நூ.ஐம்பது.24)
இப்பாடலில் சமண சமயத்தில் கூறப்படும் உயிர்த்துன்பம் உயிர் இரக்கம் பற்றி கூறப்பட்டுள்ளன. காட்டை அழித்து நாடாக்கி விவசாயம் செய்தல் நாகரிக வளர்ச்சி அதனை இப்பாடல் கேள்விக்குட்படுத்துகிறது. மரம் வெட்டுதலையே பெரிது படுத்தாத இனத்தைச் சேர்ந்த தலைவன் தன்துன்பத்தைப் பெரிதுபடுத்தமாட்டான் என்பதாக இப்பாடல் அமைகிறது.
முடிவுரை
திணை மாலை நூற்றைம்பது என்னும் நூல் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். சமண சமயம் வேரூன்றி விளங்கிய காலம் இதுவாகும். அது இலக்கியச் செய்தியை இந்நூல் பாடினாலும் அதிலும் சமயக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளமையினை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
துணை நின்ற நூல்கள்
தெ.பொ.மீ, சமண இலக்கிய வரலாறு, பரிசல் வெளியீடு, சென்னை.
ராகவன்,சமணம், எழுத்து பிரசுரம், சென்னை.
திணைமாலை நூற்றைம்பது (பதினெண்கிழ்கணக்கு நூல்கள்), கௌரா பதிப்பகம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.