கவிஞர் ஜெயதேவனின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவாக எழுத்தாளர் பொன்.சுகுமார் எழுதிய கவிஞர் ஜெயதேவனின் 'கண்ணாடி நகரம்' கவிதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பிது. இக்குறிப்பு கவிஞர் ஜெயதேவனின் ஆளுமையை நன்கு விபரிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், சுற்றுச் சூழற் பாதுகாப்பு, விம்ப வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் நவகாலத்து மானுடர், விவசாயத்தின் தேவை, புலம்பெயர்தலின் வலி எனக் கவிஞரின் பன்முகப்பட்ட பார்வையினை வெளிப்படுத்தும் குறிப்பு. கவிஞர் நவீன தொழில் நுட்பத்தை நன்கறிந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதையும் மேற்படி குறிப்பு புலப்படுத்துகின்றது.
கவிஞர் ஜெயதேவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அதே சமயம் கவிஞரின் எழுத்தை, ஆளுமையை இத்தருணத்தில் அறிந்து கொள்ளலின் அவசியம் கருதிப் பொ.குமாரின் முகநூற் குறிப்பையும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள்.காம்
கண்ணாடி நகரம் -கவிதைகள்- ஜெயதேவன்- ஒரு பார்வை! - பொன்.குமார் -
கவிஞர் ஜெயதேவன் வானம் பாடி காலத்திலிருந்தே தொடர்ந்து கவிதை உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர் ஆவார். ஆயினும் காலத்திற்கு ஏற்ப கவிதை இயற்றுவதில் மாற்றத்தைக் கையாண்டு வெற்றிப் பெற்றும் வருகிறார். கவிதைகள் விமரிசனத்திற்கு உட்பட்டது எனினும் கவிஞர் ஜெய தேவன் கவிதைகள் மூலமே மானுடத்திற்கு எதிரானவற்றின் மீது விமரிசனத்தை வைத்துள்ளார்.
உலக அளவில் அமெரிக்கா ஆதிக்க மனப் பான்மையுடன், அதிகார போக்குடன் அனைத்து நாடுகள் மீதும் ஆளுமையைத் திணித்து வருகிறது. அடிமையாக்க எண்ணுகிறது. அனைத்தையும் உள்வாங்கத் துடிக்கிறது.'கழுகுகளின் சந்தை ' கவிதையில் அமெரிக்காவின் போக்கினை விமரிசித்துள்ளார். கழுகு என்பது அமெரிக்காவிற்குக் குறியீடாக்கப் பட்டுள்ளது உண்மையே யகும்.ஒ ரு சிலர்தான் வளர்த்தர்ர்கள் அப்படிபட்ட கழுகுகளை இப்போது உலகமே கழுகுகளின் சந்தையாகி விட்டது. கழுகுகளை வளர்த்து விட்டவர்களையும் குற்றம் சாட்டியுள்ளார்.உலகமே கழுகுகளின் சந்தை என்பது குறிப்பிடத் தக்கது.சிவப்பு சேவல்கள் என்பது இடது சாரிகளைக் குறிக்கிறது. அமெரிக்காவின் வல்லாதிக்கத்தைக் காட்டியுள்ளார். 'கழுகு முட்டைகளும் புறாக் குஞ்சுகளும் ' கவிதையும் வாழ்வு நிலை மாறி விட்டதைக் குறித்து பேசுகிறது.
மேற்கிந்தியம் தலைப்பில் மூன்று கவிதைகள். மரபனு விதையால் ஏற்படும் ஆபத்தை, விளைவைத் தெரிவித்துள்ளார் சோளத்திலிருந்து இனி சோளம் வராது என்னும் வரி சோகத்தையே வரவழைக்கிறது. மண் மலடாகி விடும் சூழ்நிலையே தொடரும் என்று எச்சரித்துள்ளார்.
கலீல் ஜிப்ரான் லெபனானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிவர். மானுட சிந்தனையாளர். சமூக அக்கறைக் கொண்டவர். ' ஜிப்ரான் செத்துக் கொண்டிருக்கிறான்' என்னும் தலைப்பில் ஒரு கவிதை. பூமி ரசாயணங்களால் புண் படுவது குறித்து எழுதப் பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான குழந்தை
முலை தடவிக் கொண்டிருந்தது
அங்கேயும் குமட்டியது பொட்டாசியம் வாசனை
ரசாயணக் கழிவுகளின் பாதிப்பு
பூமியில் இருந்து பெண் வரைத் தொடர்கிறது
என்றஉண்மையை வெளிப் படுத்தியுள்ளார்.
மனிதருக்கும் மரங்களுக்கும் மற்ற ஜீவ ராசிகளுக்கும் ஆதாரமானது பூமி. பூமியை மையமாக வைத்தே அனைத்தும் இயங்குகின்றன. பூமி மேலிருப்பிவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. அந்த கனவுகள்
அடிப் படை வாழ்விற்கு உதவாது.
யாரும் கனவு காண்பது இல்லை
இத்தனை கனவுகளை சுமப்பதற்கு
ஒரு கொத்து நெல் நடுவது பற்றியும்
காட்டில் ஒரு விதை இடுவது பற்றியும்
விவசாயம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்கிறார். உணவிற்கு வழி வகுக்காமல் உயர்வதற்குக் கனவு கணடு என்ன பயன் என்றும் வினவியுள்ளார். எதார்த்த உலகில் வாழ வழி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்று விட்டது தொலைக்காட்சி. தொலைக்காட்சிகளால் மக்களின் வாழ்வு கொலைந்து போனது என்பதே உண்மை. தொலைக் காட்சி பேச்சின் முன் மக்கள் ஊமைகளாக உட்கார்ந்துள்ளனர். 'ஆண்டனாக்களில் குடியிருக்கும் குருவிகள்'
கவிதை மூலம் தொலைக் காட்சியினால் மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை விவரித்துள்ளார். இது சாட்டிலைட் யுகம் ஆகி விட்டது என்கிறார். புத்தகங்கள் பழுப்பேறி பரணில் என்பதன் மூலம் வாசிப்பு இல்லாமல் போய் விட்ட்து குறித்து வருந்தியுள்ளார். விளம்பரங்களே இன்று மூளையின் செல் முழுவதும் என்னும் வரிகள் குறிப்பிடத் தக்கது. தொலைக் காட்சியில் நிகழ்ச்சி என்னும் பெயரில் விளம்பரங்கள் முதன்மைப் படுத்தப் படுகின்றன. விளம்பரங்கள் நிகழ்ச்சியை விழுங்கி விடுகின்றன.
தொலைக்காட்சி பிம்பங்கள் நிரப்பட்டும்
சோம்பல் பொழுதுகளால்
'காலிக் கோப்பைகள் '
கவிதையில் மனிதர்கள் சோம்பல் ஆனதற்குக் காரணம் தொலைக் காட்சிகளே என்கிறார்.
தொன்மத்தை வைத்து எழுதப் பட்ட கவிதை' கால் வாசி ஏசு'. பூமியில் எங்கும் வன்முறைகளே பரவி விட்டன என்று வருந்தியுள்ளார். கலவரங்களே எங்கும் கால் பதித்து விட்டன என்று கவலைப் பட்டுள்ளார். 'கால் வாசி ஏசு' என்கிறார். அப்போது முக்கால் வாசி யார் என்னும் கேள்வி எழுகிறது. கவிதையின் முடிவில் முக்கால் வாசி யூதாஸ்கள் என்கிறார். இந்திய பாஷையில் சொல்லப் போனால் முக்கால் வாசி கோட்சேக்கள் என்று சொல்லலாம். நாட்டில் நல்லவைகளை விட அல்லவைகளே அதிகரித்து விட்டன என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். அகவை அறுபதைத் தாண்டியிருக்கக் கூடும். அறுபதைக் கடந்திருப்பினும் அண்மையிலான தொழில் நுட்பங்களையும் அறியப் பெற்றவராக உள்ளார். கணினி மொழிகளை எல்லாம் எளிதாகக் கையாண்டுள்ளார். 'வீட்டுக்கு வராத வெளி 'யில் எம். எஸ். வேர்டுகளையும் ஜாவாக்களையும் காண முடிகிறது. கணிணி யுகத்தில் முத்தமிடுவது என்பதும் மறந்த ஒன்றாகி விட்டது. வாழ்ந்த வீடு, வசித்த நிலம், வட்டமடித்த ஊர் விற்கப்படும் போதோ விட்டு விலகும் போதோ அதன் துயரம் அளவிட முடியாதது ஊர் இழந்தவன் துக்கம் ஊரில்லாதவன் மட்டுமே அறிவான்
என்று கவிஞர் 'முதல் தகவல் அறிக்கை' யில் தெரிவித்துள்ளார். எதை இழந்தாலும் துக்கமே. எது போனாலும் சோகமே. புலம் பெயர்ந்தவர்களின் புலம்பல் துக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். வாழ்க்கை என்பது மாறி வருவதுடன் வேகத்துடனும் செல்கிறது. வாழ்க்கை வேகத்தில் முந்தைய வாழ்க்கையைக் காண முடிவதில்லை. புரட்டிப் போடப் பட்டதாகவே படுகிறது. முன்பிருந்த நிலை தற்போது இல்லை என்பதே உண்மை.
நுறைப் பால் குடித்திருக்கலாம் நீங்கள்
பாக்கெட் பாலுக்குத்தான் உதடு திறக்கிறான் என் மகன்
என்பது போல ஒவ்வொன்றையும் பொருத்திப் பார்க்கலாம். வாழ்க்கை முறையும் மாறி விட்டது. வாழும் முறையும் மாறி விட்டது. எல்வோரும் 'பட்டறை வாழ்க்கை' வாழ்வதாகவே தெரிவித்துள்ளார்.
' புறவயமாய் ' கவிதை பெண்ணியம் பேசியுள்ளது. பெண்கள் குறித்து பேசியுள்ளது. பெண்களின் நடை மாறி விட்டது, உடை மாறி விட்டது. ஹைஹீல்ஸ் அணிந்து தன்னை உயர்த்திக் காட்டிக் கொண்டாலும் வாழ்க்கை நிலை உயர வில்லை என்கிறார்.
இறகு முளைத்திருந்தாலும்
அவர்கள் சிறகுகள்
இன்னும் சிறைக்குள்தான்
பெண்கள் அடிமைத்தனத்திலிருந்தும், அடிமைத் தளத்திலிருந்தும் மீறவில்லை என்கிறார். கவிதையிலும் பெண்கள் நிலை குறித்தே கவலைப் பட்டுள்ளார்.
கடிதம் எழுதுவது என்பதே இல்லை என்றாகி விட்டது. பேசியிலேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. கடிதத்தில் காணும் கையெழுத்தில் அன்பைக் காணலாம். உறவைத் தரிசிக்கலாம். ' பழைய டைரியிலிருந்து'
எழுதப் பட்ட கவிதை நன்றாக இருந்தது.
இப்போதும் வருகிறார் தபால்காரர்
தபாலில்தான் மனிதர்கள் இல்லை
தபால் எழுதாமல் மனிதர்கள் காணாமல் போய் விட்டதற்காக வருந்தியுள்ளார். தபால் காரரும் உறவாகவே இருந்தார். இன்று இல்லை என்பது கவலைக்குரியது.
'கண்ணாடி நகரம்' கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் பிரதிபலிக்கிறது. எதிர்காலம் குறித்து சிந்திக்கச் செய்கிறது. உலக மயம், தாராள மயம், பொருளதார மயம் என அனைத்து 'மயங்களாலும் உலகம் மாறி விட்டதைக் கவிதைகளில் காண முடிகிறது. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது எனினும் இது முன்னேற்றமான இல்லை எனபதைக் கவிஞரின் கோபமாக, ஆதங்கமாக கவிதைகளில் வெளிப் பட்டுள்ளன.
விவசாயம் மனித குலத்திற்கு எத்தகைய அவசியம் என்பதை உணர்த்தியுள்ளார். முற்போக்குப் பாதையில் வளர்ச்சி இல்லை என்பதை வருத்தமுடன் தெரிவித்துள்ளார். கவிதை ஆக்குவதில் ஒரு தேர்ந்த கலைஞனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார். 'பாடு" பொருளிலும் சொற் தேர்விலும் ஒரு புதிய இளைஞனுக்குரிய பார்வையே வெளிப் பட்டுள்ளது. கண்ணாடியில் காணும் போது ஒரே முகத்தைக் காண்பது போல கணணாடி நகரத்திலும் ஒரே கவிதையைத் திரும்ப திரும்ப வாசித்தது போலுள்ளது. கவிதையின் போக்கு மாறினாலும் கவிஞரிடம் காத்திரம் குறையவில்லை. வானம்படி காலத்திலிருந்த வீரியம் குறையவில்லை. நிலம், நீர், காற்று மாசுபடுவது குறித்த கவலையை வெளிப் படுத்தியுள்ளார். ஒவ்வொரு தொகுப்பிலும் ஓர் அணிந்துரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ' இருக்கும். கண்ணாடி நகரம் வித்தியாசமானது. ஒவ்வொரு பகுதிக்கும் என நான்கு பகுதிகளுக்கு நான்கு ஆளுமைகளின் அணிந்துரைகள். கண்ணாடி நகரத்தை நான்கு கோணங்களிலும் அழகாகக் காட்டியுள்ளது. யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அமிர்தம் சூர்யா ஆகியோரின் அணிந்துரைகளை விட சக்திஜோதியின் அணிந்துரை வித்தியாசமானது.எடுத்துக் காட்டுக்களே இல்லை. கவிஞர் ஜெய தேவனின் மானுட அக்கறை மகத்தானது.பழமை கழிந்து புதுமை புகுத்தப் பட்டாலும் மக்கள் நலத்தை அடிப் படையாகக் கொண்டே அமைய வேண்டும் என்பதை " கண்ணாடி நகரம் 'பிரதிபலித்துள்ளது.
நன்றி - பொன்.சுகுமார் முகநூற் பதிவு