தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.
வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிப்பதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவில்லை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம்.
ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. 'மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு' என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
ஈழத்தில் மோகனாங்கியின் தொடர்ச்சியாக அவ்வப்போது பலர் வரலாற்று நாவல் எழுதுகையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சி.வை சின்னப்பபிள்ளையின் விஜயசீலம் (1916), செங்கை ஆழியானின் நந்திக்கடல் (1969), வ.அ. இராசரத்தினத்தின் கிரௌஞ்சப் பறவைகள் (1975), முல்லைமணியின் வன்னியர் திலகம் (1998), செங்கை ஆழியானின் குவேனி (2001), மு. சிவலிங்கத்தின் பஞ்சம் பிழைக்க வந்த சீமை (2015) முதலானவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஆனால் தனியே வரலாற்று நவீனம் என்று அல்லாவிட்டாலும் சமூக வரலாற்றைப் பதிவு செய்தவர்களும் வரலாறு பற்றிய பிரக்ஞையுடன் இயங்கியதையும் இங்கு மனங் கொள்ளவேண்டும். மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம் (1914) வெளிவந்தபோது கல்வியின் ஊடாக பெண்களின் முன்னேற்றமும் அவர்களின் எழுச்சியும் தெரியவந்தது. டானியலின் எழுத்துக்கள் வந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கலகக் குரல்கள் வெளித்தெரிந்தன. அருளரின் லங்காராணி (1988) வந்தபோது இனமுரண்பாட்டின் காரணமாக, தமிழர்தம் உரிமைகள் பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இவ்வாறுதான் ஈழத்து நாவல்களின் ஊடாக சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன.
நீ பி அருளானந்தம் அவர்கள் புனைகதை இலக்கியத்தில் தொடச்சியாக ஈடுபட்டு வருபவர். தனது எழுத்துப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். அவர் சோழப் பேரரசின் வரலாற்றுக் காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டு வரலாற்று நூல்களில் நமக்கு உதிரியாகச் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளை, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் அடிப்படையாகக் கொண்டு மாருதப்புரவீகவல்லி - உக்கிரசிங்கன் வரலாற்று நாவலான 'புண்ணியபுரம்' என்ற புனைவைத் தந்திருக்கிறார்.
திசையுக்கிரசோழன் தன் புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லிக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்கு எத்தனையோ பரிகாரங்களைச் செய்துங்கூட மகளின் துன்பம் தீராமை கண்டு மனங்கலங்கி வெதும்புகிறார். பின்னர் மந்திரியாரின் ஆலோசனைப்படி பிணி தீர்க்கும் புனித தீர்த்தத்தில் நீராடினால் மகளின் குறை தீரும் என்றறிந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறார். இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலுக்கு உள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நலம்பெற முடியும் என்று நம்பப்படுகிறது. மாருதப்புரவீகவல்லி இராமேஸ்வரம் வந்தபோது ஒரு மூதாட்டி வழிப்படுத்துகிறார். அவர் ஊடாக சாந்தலிங்கம் என்ற சந்நியாசியைச் சந்திக்கிறாள்.
'அந்த இலங்கா துவீபத்தின் வடபாகத்திலுள்ள ஒரு சிறு குறு நாட்டினுக்குள்ளே கீரிமலை என்கிற இடத்தின் பக்கம் ஒரு சிற்றாறு இருக்கிறது. அந்த இடத்திற்கு நீ யாத்திரை பண்ணி நற்தீர்த்தமாடினால் உன் ரோகமெல்லாம் மாறி நீ பழையபடி சௌந்தரவதியாகிவிடுவாய்' என்று சாந்தலிங்கம் சந்நியாசி கூறுகிறார்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு வந்து கீரிமலை அருகிலுள்ள குமாரத்திபள்ளம் என்ற இடத்தில் தங்கியிருந்து கீரிமலைக் கேணியில் நீராடி நகுலேஸ்வரத்தில் வழிபாடு இயற்றுகிறாள் இளவரசி. அதன்போது நகுலமுனிவர் பற்றி அறிந்து அவரைக் காணுகிறாள். நகுலமுனிவரால் அவளுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது. அந்த இடத்தின் மகிமையும் முன்னோர் கதைகளும் முனிவரால் சொல்லப்படுகின்றன.
நகுலேசுவரம் வரலாற்றுக் காலங்களில் முன்னோர் வழிபட்ட தலம் என்பதும் நளன் முதலான அரசர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் முதலான வரலாறுகளும் அவளுக்கு சொல்லப்படுறது. அப்புனித நீரின் மகிமையாலும் வழிபாட்டாலும் இளவரசியின் நோய் படிப்படியாக நீங்கிவருகிறது. அதனால் பிரதியுபகாரமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை அமைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபடுகிறாள். இக்காலத்தில் கதிரமலையிலிருந்து அரசாண்ட உக்கிரசிங்கனின் வரவு நிகழ்கிறது. அதன் காரணமாக மாருதப்புரவீகவல்லி இலங்கை அரசனின் பட்டத்து ராணியாகும் நிலைமை ஏற்படுகிறது. குழப்பகரமான நிலை பின்னர் ஒருவாறு நீங்கப் பெறுவதோடு புனைவு முற்றுப் பெறுகிறது.
இப்புதினத்தில் இராவணன் ஆட்சி, அவனின் முன் இருந்த அரசர்கள் பற்றிய சரித்திரச் சம்பவங்கள், நாகர்கள் பற்றிய கதைகள், குமரிக்கண்டம், பாண்டியர் ஆட்சி முதலானவை கூறப்படுகின்றன. இராவணன் பற்றி மிக விரிவான உரையாடல் மாருதப்புரவீக வல்லிக்கும் நகுலமுனிவருக்கும் இடையில் இடம்பெறுகிறது, நகுலேசர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கண்டகி தீர்த்தத்திற்குச் சென்று அங்கு நீராடி நகுலேசர் பெருமானையும் தரிசித்ததால் நளனின் கலி இடர் நீங்கப் பெற்றான் என்ற கதையும் முனிவரால் சொல்லப்படுகிறது.
இவ்வாறான புராண இதிகாசக் கதைச் சம்பவங்களினடியாக இப்புனைவு பயணிக்கின்றது. ஈழத்தில் மக்களின் வாழ்வு முறை, பௌத்தமதச் செல்வாக்கு, இந்துக்களின் வழிபாடு முதலானவற்றை கதைப்போக்கில் சம்பவங்களின் அடியாக ஆசிரியர் சொல்கிறார்.
ஈழத்து வரலாறு சம்மந்தமாக எழுதப்பட்ட நூல்களை நன்கு ஆராய்ந்து அவற்றில் வருகின்ற வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில் உரையாடல் ஊடாக எடுத்துக்காட்டி கதையை நகர்த்துகிறார். திசையுக்கிரசோழன் - அமைச்சன், மாருதப்புரவீக வல்லி – நகுலமுனிவர், மாருதப்புரவீக வல்லி – கயல்விழி, மாருதப்புரவீக வல்லி – குயிலி, மாருதப்புரவீகவல்லி - உக்கிரசோழன் ஆகியோரின் உரையாடல்களுக்கு ஊடாக புராண மற்றும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதிகமும் உரையாடல்கள் ஊடாகவே கடந்தகாலங்கள் மீட்கப்படுகின்றன.
எழுத்தாளர் நீ பி அருளாந்தம் அவர்கள் ஈழத்துச் சூழலில் மங்கிப்போயிருந்த வரலாற்றுச் சம்பவம் ஒன்றினைப் புனைவினூடாகச் சொல்லியிருக்கிறார். நினைவுகளும் வரலாறுகளும் மறக்கடிக்கப்படும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற புனைவுகள் இளையவர்களை மாத்திரமன்றி பெரியவர்களையும் சென்று சேரவேண்டும். எங்கள் புராதன வரலாறுகளை மீட்டுப்பார்ப்பதற்கும் அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதற்கும் ஒரு வழியாக இதுபோன்ற புனைவுகளின் வருகை அவசியமாக உள்ளது. எழுத்தாளர் நீ. பி அருளானந்தம் அரிதில் முயன்று இப்பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். அவரின் முயற்சிகள் மேலும் தொடரவேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.