இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல். ஆழ்ந்த இரங்கல்.
என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுதெல்லாம் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் அதனை ஒலிபெருக்கி கட்டப்பட்ட காரொன்றில் அறிவித்தபடி வருவார்கள். விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் அவ்விதம் திரைப்பட 'நோட்டிஸ்'களை விநியோகித்துச் செல்கையில் அனைவரையும் கவரும் குரலில் அறிவித்தபடி வருபவர் அண்ணாமலை என்பவர். அவர் அப்போது யாழ் மனோஹராவின் உரிமையாளர்களாக இருந்த ஒருவரின் உறவினர் என்று கேள்விப்பட்டதாக ஞாபகம். உண்மை பொய் தெரியவில்லை. நான் அவரது இரசிகர்களில் ஒருவன். அவரது அறிவிப்புக் குரலினிமையை இரசிப்பவன்.
'பாரா வலலு' பற்றிய அறிவிப்பில் அவர் காமினி கொன்செகரா, மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு என்று அறிவித்திருந்தார். பொன்செகாவை அவர் கொன்செகராவாக மாற்றியதை அப்போது பெரிதும் இரசித்தோம். அவர் உண்மையில் அவ்விதம் அறிவித்தது அவரது அறியாமையினாலா அல்லது அவ்விதம் உச்சரிப்பது 'ஸ்டைலா'க இருக்குமென்று எண்ணியதாலா என்பதில் இதுவரை தெளிவில்லை. ஆனால் அவ்விதமான அவரது அறிவிப்பில் ஈர்க்கப்பட்டவன் நான் என்பதால் , என் நெஞ்சில் அச்சம்பவம் நிலையாக் நின்று விட்டது.
சிலரது முக வசீகரம் எம்மை முதற் பார்வையிலேயே வசீகரித்து விடும். அவ்விதமான முக ஆளுமையாளர்களில் ஒருவர் மாலினி பொன்செகா. மாலினி பொன்செகா சிறந்த நடிகையர்களில் ஒருவரும் கூட,. நடிப்புக்காகச் சிறந்த நடிகை விருதினைப் பல தடவைகள் பெற்ற நடிகை.
இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜாவின் திரைப்படங்களில் மாலினி பொன்செகா....
இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜாவின் 'நெவாத ஹமுவெமு' திரைப்படத்தில் இவர் நடிகர் விஜயகுமாரதுங்கவுடன் இணைந்து நடித்திருக்கின்றார். 'சொல்டடு உன்னகே - Sodadu Unnahe - Old Soldier இராணுவ வீரர், விலைமாது, குடிகாரன், விலைமாதினை வைத்து காசு உழைப்பவன் ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்வை விபரிக்கும். இலங்கையின் சுதந்திரதின நிகழ்வொன்றின் போது நடைபெற்ற வாண வேடிக்கைகள், கொண்டாட்டங்களின்போது இரண்டாவது உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியிருந்த நண்பர்களிலொருவரான இராணுவ வீரரின் நனவிடை தோய்தலின் மூலம் இந்நால்வரும் நாட்டின் சுதந்திரத்தின் மூலம் அடைந்தது எவையெவை, இவர்களின் எதிர்காலம் என்ன என்பது பற்றி நோக்கும் திரைப்படம் இத்திரைப்படம். மாலினி பொன்செகா, ஜோ அபே விக்கிரமா, ஹென்றி ஜெயசேன மற்றும் நீல் ஆல்ஸ் ஆகியோர் மேற்படி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.
மாலினி பொன்செகா, விஜய குமாரதுங்க நடிப்பிலுருவான 'பம்பரு அவிட் (bambaru ævit) - The Wasps Are Here - 1978- திரைப்படமும் முக்கியமானது. மீனவ சமுதாயத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ள திரைக்கதையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் இளம் பெண்ணான மாலினி பொன்செகாவுக்கும், அவளை விரும்பும் அக்கிராமத்து மீன்பிடி வர்த்தகத்தைத் தம் கைகளில் வைத்திருக்கும் விஜய குமாரதுங்காவுக்குமிடையிலான வாழ்வுப்பிரச்சினைகளை விபரிக்கும் திரைக்கதையானது பாரம்பரிய இலங்கைச் சமூகத்தின்மீது நவீனத்துவம், மற்றும் இன மோதல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்தும்.
விஜய குமாரதுங்க மற்றும் மாலினி பொன்செகா நடிப்பிலுருவான eyā dæn loku ḷamayek ‒ How to be an Adult • 1975 திரைப்படமும் இன்னுமொரு முக்கியமான திரைப்படம். சிறிய கிராமத்து மானுட வாழ்வானது எதிர்கொள்ளும் சிக்கல்கள், மன அழுத்தங்களை விபரிக்கும் திரைப்படம். கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் மகளைத்தனியாக வளர்த்தெடுப்பதையும், அதற்காக அவள் கிராம சேவகரின் அரவணைப்பில் வாழ்வதையும், இந்நிலையில் மகள் சுசீலா அழகாக வளர்ந்து வயதுக்கு வருவதையும் , அவளது அழகு அக்கிராமத்து சேவகர் உட்படக் கிராமத்தின் இளைஞர்களை ஈர்ப்பதையும்,எவ்விதம் கிராமத்துச் சூழலானது அவ்விளம் பெண்ணின் வாழ்வை நிர்ணயிக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தும் திரைப்படமிது.
இவையெல்லாம் இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜாவின் இயக்கத்திலுருவான திரைப்படங்கள்.
இயக்குநர் கலாநிதி லெஸ்டர் பீரிஸின் திரைப்படங்களில்..
இயக்குநார் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வேகண்ட வலுவ ( Wekande Walauwa ) , ரவீந்திரா ரன்டெனியா, மாலினி பொன்செகா நடித்தது , ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்திலுருவான இன்னுமொரு திரைப்படம் 'நிதானய '(புதையல் என்று பொருள்). காமினி பொன்செகா, மாலினி பொன்செகா நடிப்பில் உருவான இத்திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், பிரிட்டிஷ் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றதும் நினைவு கூரத்தக்கது.
தமிழில்
தமிழிலும் இலங்கை - இந்தியக் கூட்டுத்தயாரிப்பாக வெளியான 'பைலட் பிரேம்நாத்' திரைப்படத்தில் இவர் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பார். யாழ் வின்சர் திரையரங்கில் வெள்ளி விழா ஓடிய திரைப்படமிது. இதில் வரும் இலங்கையின் 'இளங்குயில் என்னோடு இசை பாடுதோ? ' புகழ்பெற்ற பாடல்களிலொன்று. ஆனால் இத்திரைப்படம் சாதாரண் வெகுசனத்திரைப்படங்களில் ஒன்று.