கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம். 493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை குமரன், எழுநா,ஆதிரை பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல். அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன பட்டிருக்கின்றோம். நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி.
தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய, சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை.
இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.
நான் இன்னும் நூலை முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்த பின்னர் விரிவாக என் கருத்துகளைப் பகர முடியும். ஆனால் நல்லூர் ராஜதானியின் நகர் அமைப்பு பற்றி அவர் தெரிவித்திருந்த கருத்து என் கவனத்தை ஈர்த்தது.அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ இதன் மையத்தில் அமைந்துள்ளது. எனினும், அக்கால நல்லூர் ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ, அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை இருந்தது எனறோ எடுத்துக்கொள்ள முடியாது. ஒல்லாந்தர் கால நல்லூர் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாக இருந்ததையே அக்கால நிலப்படங்கள் காட்டுகின்றன. தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்."
ஒல்லாந்தர் காலமென்பது போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்திற்குப் பின்னான காலகட்டம். போர்த்துக்கேயரால் நல்லூரில் இருந்த சமயக் கட்டடங்கள், அரச மாளிகைகள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டதனால் அப்பொழுதிருந்த நல்லூர் பல மாற்றங்களை நிச்சயம் கண்டு விட்டிருக்கும்.. இந்நிலையில் ஒல்லாந்தர் காலத்து நல்லூர் அமைபின் அடிப்படையுல் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பைத் தீர்மானிப்பதில் மிகுந்த சிக்கலுண்டு. ஆனால் அதே சமயம் ''தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." என்று அவர் கூறுவது நல்லூர் ராஜதானியானது ஒழுங்கான வடிவத்தில் இருந்திருக்கலாம் , அதன் மத்தியில் முத்திரைச் சந்தை இருந்திருக்கலாம் என்பதையே தெரிவிக்கின்றது.
- கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் -
நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். தமிழர்களின் கட்டடக்க்லை, நகர அமைப்பில் வாஸ்துசாத்திரம் மிக முக்கியமான பங்கினை வகித்தது. வாஸ்துசாத்திரம் புதிதாக அமைக்கப்படும் நகரங்கள் சதுர வடிவில் அமைப்பதையே வலியுறுத்துகின்றது. இயலாத பட்சத்தில் செவ்வக வடிவைப் பாவிக்கலாம் என்றும் கூறுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.
அவர் இவ்விடயத்திம் முடிந்த முடிபாகக் கருத்தினைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்பு மிக்க இந்நூல் , நல்லூர் ராஜதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருப்பதையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நல்லூர் ராஜதானி சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்பதும், அதன் பிரதான வீதிகளாக வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு வீதிகள் அமைந்திருகக் வேண்டும் என்பதையே என் ஆய்வு நூலில் தெரிவித்திருந்தேன். அவ்வீதிகளைப் பற்றிய மயூரநாதனின் நூலிலுள்ள தகவல்களும் அவற்றையே உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகின்றது.
மேலும் மயூரநாதனின் ஆய்வில் கிழக்கில் கோட்டை வாசல், கோட்டையடி ஆகிய காணிப்பெயர்களைக்கொண்ட பகுதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனது ஆய்விலும் அக்காணிப்பகுதிகளைக்குறிப்பிட்டு, அவை கோட்டையின் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மேலும் யாழ்ப்பாண வைபவமாலை சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் வடக்கு வாசல் இருந்ததையும், வரலாற்றுக் குறிப்புகள் , யாழ்ப்பாண வைபவமாலை உட்பட, வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அண்மையில் மேற்கு வாசல் இருந்ததையும் குறிப்பிடுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, இவற்றின் விளைவாகத் தெற்கு வாசலொன்று கையிலாசநாதர் கோயிலுக்கு அண்மையில் இருந்திருக்கலாம் என்ற ஊகத்துக்கு, தர்க்கபூர்வமான முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் , இது பற்றிப் போர்த்துக்கேயரின் குறிப்புகளை மேலும் ஆராய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.
- 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூலிலிருந்து.. -
மயூரநாதன் மேற்படி நூலில் கோட்டை வாசல்களைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகளைக் கவனத்திலெடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. கிழக்கிலுள்ள கோட்டை வாசல், ,கோட்டையடி, யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும் வடக்கு வாசல், மேற்கு வாசல், போர்த்துக்கேயரின் குறிப்புகள் குறிப்பிடும் கோட்டை மதில் , நகர அமைப்பு பற்றிய வாஸ்துசாத்திர விதிகள் போன்றவற்றையெல்லாம் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பைப்பொறுத்த வரையில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. அவற்றையும் கவனத்திலெடுத்திருந்தால் ஒரு வேளை மயூரநாதனின் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் வடிவம் பற்றிய கருத்துகளிலும் மாற்றங்கள் இருந்திருக்குமென்று கருதுகின்றேன்.
நல்லூர் நகர் பற்றிய நூலின் அத்தியாயம் விரிவானது.அதனை மேலோட்டமாக வாசித்ததன் விளைவுதான் எனது இக்கருத்துகள். மேலும் ஆழமாக வாசித்தபின் இவ்விடயம் தொடர்பில் என் மேலதிகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வேன்.
மிகச்சிறந்த , யாழ்ப்பாண நகரம் பற்றிய வரலாற்று ஆய்வினைத்தந்ததற்காக மயூரநாதனுக்கும், நூல் வெளியீட்டாளர்களுக்கும் மீண்டுமொரு தடவை என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.