* Photo by David Edelstein on Unsplash
மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது.
எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது.
யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது.
ஷின்டோ மதத்தின் கொள்கைகள் எழுதப்படாததால் தற்போது பல பௌத்த கொள்கைகள் இதில் சேர்ந்துள்ளன. கிறிஸ்துவத்தில் பேகன் கொள்கைகளான ஈஸ்டர் முட்டை விடயங்கள்போல் எனலாம். மத்திய கிழக்கில் எப்பொழுது கிறிஸ்மஸ் மரம் (Fir tree) இருந்தது?
யப்பானில் உள்ள பௌத்தம், மகாஞான பௌத்தமானதால் வரலாற்றில் இருந்த புத்தரைவிட வான்வெளியில் உள்ள புத்தர்களும் (Celestial Bhuta) அத்துடன் தேவதைகளும் இங்கு நிறைந்துள்ளார்கள் . இவற்றிடையே புவியில் மனிதரகளாக வாழ்ந்தவர்கள் ஷின்டோ மதத்தில் தெய்வமாக்கப்பட்டதால் அவரவர் தேவைக்கேற்ப மக்களுக்கு நம்பிக்கை வைத்து வழிபட இடமுண்டு.
யப்பானிய ஆதிகடவுளர்களுக்கு நம்மைப்போல் தொன்மக் கதை உள்ளது. இரு தெய்வங்களால் யப்பான் உருவாகிறது (Male Izanagi and the female Izanami) இவர்களிடமிருந்து இயற்கையில் உள்ள சூரியன், காற்று, நெருப்பு என்ற தெய்வங்களும் உருவாகின்றன. அதேபோல் மக்களும் உருவாகிறார்கள். இவர்கள் மதத்தில், இறப்பு கெட்ட விடயம் அதாவது சோகமான முடிவு. இங்கே பௌத்தம் இறப்பை சோகமானதாக பார்க்காது, யதார்த்த வாழ்வின் ஒரு பகுதியாகமட்டுமல்ல புதிய அத்தியாயத்தில் ஆரம்பமாக பார்க்கிறது . இதனால் புதிய அணுகு முறையை யப்பானிய மக்கள் ஏற்கிறார்கள் . யப்பானியர் பிறப்பை ஷின்டோ கோவிலில் கொண்டாடி இறப்பைப் பௌத்த ஆலயத்தில் நடத்த முடிகிறது.
ஷின்டோ மதத்தில் முக்கிய தெய்வங்கள் சூரியனும் வாயுவும் அதில் அதில் சூரியனைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தி உள்ளதால் யப்பானிய மன்னர் சூரிய வம்சத்தில் வந்தவராவார் .
இவை எல்லாம் நாம் கேட்டது போல் இருக்கிறதா ?
பௌத்தம் இங்கு வாழ்வின் துன்பங்களைப் பேசுகிறது . ஆனால், சின்ரோ வாழ்க்கையின் வழியையும் அதற்கு சில வழிபாடுகளையும் கொண்டது. உண்மையில் ஷிண்டோ மதம் நமது இந்து மதம் போல் பல மக்களது நம்பிக்கைகளின் தொகுப்பாகும்.
சின்ரோ ஆலயத்தில் புத்தர் இருப்பார். அதேபோல் புத்த பகோடாக்களில் சின்ரோ வழிபாடு நடக்கிறது. தற்போது இரு மதங்களும் ஒன்றை ஒன்று தழுவியபடி உள்ளன. ஒட்டு மொத்தத்தில் இரண்டு மதங்களும் யப்பானிய மக்கள் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தழுவிச் செல்கிறது. உதாரணமாக மக்கள் நடந்து செல்லும் போது புல்வெளியில் ஒரு பாதை உருவாகிறது. பின்பு அந்த பாதையில் மக்கள் செல்வார்கள் என்பது போல எனக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. புத்த மதம் இங்கு மகாஜான புத்தமாக இருப்பதுடன் இங்குள்ள ஆரம்ப நம்பிக்கைகளுடன் நீரோடு பாலாக கலந்துள்ளது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.