எக்காலத்திற்குமான நீதியின்போக்கு அண்டனூர் சுராவின் தீவாந்தரம் ( நாவல் ) - சுப்ரபாரதிமணியன் -
தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என் நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வு போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ உ சி அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம் ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
வ உ சி அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது நாவல். தீவாந்தரம் என்ற தலைப்பே ஒரு வகையான தண்டனையை காண்பித்துவிடுகிறது. அந்தத் தண்டனை கைதுக்குப் பின்னால் அவர் மீது அமல்படுத்தப்படும் போதும் அதன் இடையில் ஏற்பட்ட இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடலும் அல்லது நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் உரையாடலுமாக நாவல் நின்று பேசுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வழக்கு விசாரணை அம்சங்கள் இந்த நாவலில் பல இடங்களில் ஒத்துப்போய் இந்த நாவலின் போக்கை ஒரு சமகால தன்மை உள்ளதாக கூட மாற்றி விடுகிறது அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சரித்திர விஷயத்தைச் சமீபத்திய சரித்திர அம்சங்களுடன் கலந்து தருவதில் நம்பகத்தன்மை என்பது பற்றிய ஒரு குழப்பமும் ஏற்படுகிறது. முந்தைய சரித்திர விஷயத்தை இது தேவையில்லாமல் குறுக்கிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பது விதியாக இருக்கிறது.