- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் - (3)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

மாமாவால் அவருக்கு வந்த சம்பளத்தில் எங்களையெல்லாம் ரஷிப்பது என்பது சாத்தியமாக இருக்கவில்லை. என் சின்ன வயதில் பாட்டி கொடுத்த செல்லத்தில், ஒரு சில சமயங்களில் நான் மாமாவை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்பதை பின்னர் வடக்கே வேலையில் சேர்ந்து என் பிழைப்பை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்த போது உணர ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் வரம்புக்கு மீறி நான் எதற்கும் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஆசைப்பட ஒரு உலகம் என்பதே என் பிரக்ஞையில் இல்லாதது. நான் தான் முன்னாலேயே சொல்லியிருக்கிறேனே. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை எதிரிலிருக்கும் கீற்றுக் கொட்டைகயில் படம் மாறும் என்று. அவற்றில் வரும் எல்லா புராணக்கதைப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். மாமா ஒன்றும் சொல்ல மாட்டார். பாட்டிக்கு மாத்திரம் தானே டிக்கட் வாங்கவேண்டும். அந்நாட்களில், தரை டிக்கட் முக்கால் அணாதான். அணா என்றால் இன்றுள்ளவர் எத்தனை பேருக்குப் புரியும் எனபது தெரியவில்லை. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு பன்னிரண்டு காசுகள். ஒரு காசுக்கு விலைக்கு வாங்கக் கூடிய பொருடகள் அன்று இருந்தன. ஒரு கூறு கடலையோ, இலந்தைப் பழமோ, சின்ன கொய்யாப் பழமோ ஒரு காசுக்குக் கிடைத்து விடும். முக்காலணா கொடுத்தால் நானும் பாட்டியும் ஒரு சினிமா பார்த்து விடுவோம். தான் பார்ப்பது மட்டுமல்லாமல், பாட்டிக்கு சில படங்கள் ரொம்பவும் பிடித்து விட்டால், எல்லோரிடமும் அதை மிகவும் சிலாகித்து நிறைய பேசுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அனேகமாக, ஹரிச்சந்திரா என்று நினக்கிறேன். பி.யு.சின்னப்பாவம் கண்ணாம்பாவும் நடித்த படம். அதில் கண்ணாம்பா நிறைய வசனம் பேசி நெடு நேரம் பாடி கதறி அழும் கட்டம் உண்டு. மயானத்தில் தன் பிள்ளை லோகிதாசனின் சடலத்தை வைத்துக் கொண்டு, அவனைப் பெற்று வளர்த்த கஷ்டத்தையெல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பாள். ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம், என்று ஒவ்வொரு மாத கஷ்டத்திற்கும் ஒரு வேதனை வர்ணணை, பாட்டு இப்படி. பாட்டி மனம் உருகிவிட்டது. வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க ஒரு கிழவி வருவாள். அவளுக்கு மாதம் சம்பளம் ஒன்றே கால் ரூபாய். அந்தக் கிழவியிடம் கண்ணாம்பாவின் உருக்கமான புலம்பலைச் சொல்லிச் சொல்லி அந்தக் கிழவியும், அவ்வப்போது, 'ஆமாம்மா இருக்காதா அம்மா, சும்மாவா இருக்கு ஒரு பிளையைப் பெத்து வளக்கறது, அதே செத்துப் போய், அதப் புரிஞ்சுக்காத புருஷன் முன்னாலேயே கொள்ளி வைக்கறதுன்னா,' என்று அவ்வப்போது சந்தர்ப்பத்தை ஒட்டி குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள். கடைசியில் கிழவிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாட்டிக்கு மனம் இளகி விட்டது. தன் கதையைக் கேட்க இப்படி ஒரு ரசிகை கிடைத்த சந்தோஷம். 'இந்தா கிழவி, நான் காசு தரேன். நீயும் போய்ப் பாரு' என்று சொல்லி விட்டாள் அந்த உணர்ச்சி வசத்தில். கிழவிக்கு எப்படி முக்காலணா கொடுத்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. கட்டாயம் கொடுத்திருப்பாள். ஆனால் காசு மாமாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். நான் கொஞ்சம் பெரியவனாகி விட்ட காலத்தில், எப்போதாவது மாமா எனக்கு காலணா கொடுப்பார், 'பாவம் பசங்க ஒண்ணுமே கேக்கறதில்ல, ரொம்ப ஏங்கிப் போயிட்டதுக" என்று பாட்டியிடம் சொல்லுவார். நான் அந்த காலணாவுக்கு மூன்று கொய்யாப் பழங்கள் வாங்கி, நான், என் மாமா பெண், பையன் மூன்று பேறும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்வோம்.

ஒரு சமயம் ஏதோ ஒரு படம் வந்திருந்தது கொட்டகையில். அது நிச்சயமாகப் புராணப் படமாக இல்லாதிருந்தக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாட்டி அழைத்துச் சென்றிருப்பாளே. நான் தனித்து விடப்பட்டேன். படம் பார்க்கவேண்டும், காசு வேணும் என்று மாமாவை நச்சரித்துக் கொண்டிருந்தேன் இரண்டு நாட்களாக. பாக்கலாம்டா என்று சொல்லி மாமா தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். காசு பெயரும் வழியாக இல்லை. அன்று தான் கடைசி நாள். எனக்கோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று மகத்தான ஒன்று என்றென்றைக்குமா இழக்கப்போகிறோம் என்ற துக்கம். இந்த சினிமா பார்க்க முடியவில்லை என்றால் வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்? நம் வாழ்க்கை ஏன் இப்படி ஒரு சுகமும் ஒருசந்தோஷமும் இல்லாமல் ஆகிவிட்டது? எத்தனை பேர் மூன்று நாட்களாக சினிமாவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்? எனக்கு என்று ஏன் இத்தனை துரதிர்ஷ்டம்? கடைசியாக, 'அடி பின்னிப் பிடுவேன் ராஸ்கல், ரொம்பத்தான் அடம் பிடிக்கிறே? எத்தனை சினிமா பாத்திருக்கே, ஒண்ணு பாக்காட்ட என்ன குடி முழுகிப் போறது?' என்று சீறினார். இன்னம் அதிகம் முரண்டு பிடித்தால் நாலு சாத்து சாத்திவிடுவார் என்று தோன்றியது. துக்கமோ, என் துரதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அஸ்தமனம் ஆயிற்று. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எங்கெங்கோ மனம் போனபடி சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. இப்படியும் ஒரு வீடு, ஒரு மாமா, ஒரு பாட்டி, ஒரு சினிமா பாக்க காசு கொடுக்காதா மாமாவும் பாட்டியும். சே. நினைக்க நினைக்க மனம் கொதிப்படைந்து கொண்டு வந்தது. ஓடையைத் தாண்டியதும், ஒரு பார்க் இருக்கும். அதில் தான் ஒரு வாசக சாலை, ஒரு ரேடியோப் பெட்டி; கூட ஒரு ஒலிபெருக்கியும் இருக்கும். . திருச்சி வானொலியை அதில் கேட்கலாம். திருச்சி மாத்திரமே. செய்திகள், பாட்டுக்கள், நாடகங்கள், இத்யாதி. நல்ல பார்க் அது. மாலை நேர பொழுது போக்குக்கு நிலக்கோட்டை வாசிகளுக்கு அது உகந்த இடம். நிலக்கோட்டை பஞ்சாயத்தின் பொறுப்பில் இருந்தது. பார்க்கில் இருக்கும் மரங்கள் கொடி செடிகள், நிறைய க்ரோட்டன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கிணறும் ஏற்றமும் உண்டு. அந்த வாசக சாலையில் நிறைய பத்திரிகைகள், யுத்த செய்திப் படங்கள் நிறைந்த பத்திரிகைகள் இருக்கும். அந்த பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இனி வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை. இவ்வளவு அநியாயம் நடக்கும் வீட்டுக்கு யார் போவார்கள்? பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். இருட்டியது. என்ன செய்யலாம்? எங்காவது மாமா கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப் போய்விடலாம். ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். வேலை கிடைகாதா என்ன? கிளப்பில், பஸ்ஸில் எத்தனை என் வயதுக் கார சின்ன பசங்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சினிமா பார்க்க யாரிடம் காசு கேட்க வேண்டும்? எவ்வளவு அதிர்ஷ்டம் அவர்களுக்கு? ரேடியோவில் ஒலி பரப்பு முடிந்தது. விளக்கை அணைத்தும் விட்டார்கள். பார்க்கைச் சேர்ந்த ரீடிங்க் ரூம் வட்ட வடிவில் இருக்கும். அதைச் சுற்றிய ஒரு வராண்டா. அந்த வராண்டாவில் யார் யாரோ படுத்திருப்பார்கள். நானும் அங்கேயே படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியாது.

பதிவுகள் பெப்ருவரி 2008 இதழ் 98


நினைவுகளின் தடத்தில் ( 4)

- வெங்கட் சாமிநாதன் -வெங்கட் சாமிநாதன்எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தியாருடன் மாமா நின்று கொண்டிருந்தார்.  "எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா" என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில். குரலில் சீற்றம் இல்லை. வெகு சாதாரண பாவத்தில் பொழுது விடிந்து விட்டதைச் சொல்லி எழுப்பும் பாவனையில் சொன்னார். அம்பி வாத்தியார் தான் திட்ட ஆரம்பித்தார். 'அறிவு இருக்காடா உனக்கு? ஏன் சினிமா பாத்துத் தான் ஆகணுமோ? ராஜாவைப் பாத்தியா? அவன் ஒன்னைப் போலவா இருக்கான்?  புத்தி வேணும்டா? வீட்டை விட்டு ஓடறதுக்கு நேரம் பாத்தே பாரு, அம்மா ஊருலேருந்து வந்திருக்கப்போ. மாமாவப் பத்தி என்ன நினைச்சுப்பா? கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? அம்மா ஊரிலேருந்து வந்ததும் வராததுமா அழுதுண்டு உக்காந்திருக்கா? போ. போய் சினிமாவுக்கு காசு குடுக்கலேன்னு ஒடினேன்னு சொல்லு உங்கம்மா கிட்ட" அவர் நிறுத்தவில்லை. திட்டிக்கொண்டே வந்தார். இடையில் "எல்லாம் நீங்க கொடுக்கற இடம் சார், அதான் இப்ப்டி கெட்டுப் போறான். நானா இருந்த வச்சு நாலு சாத்தற சாத்திலே, சினிமான்னு மூச்சு விடமாட்டான்." என்று மாமாவைப் பாத்தும் சொல்லிக்கொண்டே வந்தார். என்னைத் திட்டுவதற்கு அவர் உரிமை எடுத்துக் கொள்வார். மற்ற சமயங்களில் அவர் செல்லமாக கிண்டலும் செய்வார். பள்ளிக்கூடத்தில் அவர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வரும்போது மற்றவர்கள் சிரிக்க கிண்டலும் செய்வார். 'சரிப்பா அம்பி, விடு போறும். அப்பறம் இதுக்கு வேறே கோவிச்சுண்டு நாளைக்கு வேறே என்கேயாவது ஓடினான்னா நான் எங்கேன்னு போய் தேடுவேன். அவன் அம்மா வந்திருக்கா? நல்லபடியா போகணும்" என்று மெல்லிய குரலில் தன் வேதனையைச் சொல்லி வந்தார். அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தது அப்போது தான். அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்றாலும், அவள் ஊரிலிருந்து வந்திருக்கும் போது, என்னை பாட்டியும் மாமாவும் ஏதோ குழந்தையைக் கொடுமைப்படுத்தித் தான் நான் வீட்டை விட்டே ஓடிவிட்டேனோ என்று நினைத்துவிடுவாளோ என்ற பயம் இருவருக்குமே இருந்திருக்கும். அந்த வேதனையில் மாமாவால் என்னைத் திட்டக் கூட முடியவில்லை என்று நான் அதைப் பற்றியெல்லாம் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது தோன்றும். ஆனால் நடு ராத்திரியில் எங்கெங்கோ தேடி கடைசியில் பார்க்கில் அகப்பட்டது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால் அது வரை அவர்கள் எத்தனை வேதனைக்குள்ளாகியிருப்பார்கள் என்றெல்லாம் எனக்கு அப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை. என் துக்கம் எனக்கு. என்னால் சினிமா பார்க்க முடியவில்லை. அன்றுதான் கடைசி நாள். அது போய்விட்டது. இனி அது வருமா என்ன? வீட்டை விட்டு ஓடியும் பிரயோஜனமில்லாது போய்விட்டது. மாமாகிட்டவும் அம்பி வாத்தியார் கிட்டவும் திரும்பவும் மாட்டிக்கொண்டாய் விட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவும் ஊரிலேயிருந்து வந்திருக்கிறாள். அவளும் திட்டுவாள். இப்போது வழி நெடுக அம்பி வாத்தியார் திட்டிக்கொண்டு வருகிறார்.

நடராஜன் என்று பெயர் இருந்தாலும் அவரை எல்லோரும் 'அம்பி' என்று தான் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் மற்ற வாத்தியார்களும் பையன்களும் அவரை 'அம்பி வாத்தியார்' என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அவரை மாமாவைத் தவிர வேறு யாரும் 'அம்பி' என்று அழைத்து நான் கேட்டதாக நினைவு இல்லை. நாங்கள் இருந்த தெருவில் சில வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது. நல்ல தாட்டியான சரீரம். நல்ல உயரம். மாமாவுக்கு உதவியாக இருப்பார் எப்போதும். ஏதும் உதவி தேவையானால், மாமா அவரைத் தான் கூப்பிடுவார். அவருக்கு மாமா 'ஸார்' தான்.

எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அகப்படுகிறேனோ என்னவோ, எங்கே போனேனோ என்று அவர்களுக்கு கவலை இருந்திருக்கும். அம்மாவும் பாட்டியும் ஆளுக்கு ஆள் மஞ்சள் துணியில் காசு முடிந்து ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டிருப்பார்கள். 'நல்ல படியா பிள்ளை திரும்பி வரணுமே, பகவான் தான் காப்பாத்தணும். இப்படி ஒரு புள்ளே கஷ்டப்படுத்துமோ'.

வீடு வங்ததும், 'பார்க்கிலே படுத்துண்டு இருந்திருக்கான். நடு ராத்திரிலே வேறே எங்கே போவான். நல்லபடியா வந்து சேந்துட்டான். ஒண்ணும் சொல்லாதேங்கோ. நிம்மதியா தூங்குங்கோ இனிமே. நாளைக்குப் பாத்துக்கலாம், சார் நான் வரேன்" என்று சொல்லிக்கொண்டு அம்பி வாத்தியார் தன் வீ ட்டுக்குத் திரும்பினார். "ஏண்டா இப்படி படுத்தறே? கதி கலங்க வச்சிட்டயே" என்று பாட்டிதான் வேதனையோடு சொன்னாள். "வா, வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்துக்கோ, உனக்காக யாருமே சாப்படாம கொட்டு கொட்டுனு முழிச்சிண்டுருக்கா" வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

அப்போது தீராத என் துக்கங்கள் எனக்கு. எனக்கென்று பெரிய ஆசைகள் ஏது இல்லையென்றாலும், ரொம்பவும் அடக்கமான பையன் என்று எல்லோரும் சொன்னாலும், சில சமயங்களில் எனக்கும் கூட சில ஏக்கங்கள் வந்து மாமாவை ரொம்பவும் கஷ்டப் படுத்தியிருக்கிறேன் என்பது பின்னாட்களில் எனக்கு உறைத்தது.

மாமாவின் வாழ்க்கை ரொம்பவும் வேதனைகள் நிறைந்தது. சில சாதாரண, இயல்பான எதிர்பார்ப்புகள் கூட அவருக்கு நிறைவேறியதில்லை. வறுமை. பொறுப்புக்களை நிறைய தன் சக்திக்கு மீறி தன் மீது சுமத்திக் கொண்டார். அவரால் ஓரளவுக்கு மேலே அப்பொறுப்புக்களை சமாளிக்க முடிந்ததில்லை. அவர் இயல்பில் மிக சாதுவான மனிதர். வெளியே யாரோடும் அவர் சத்தமிட்டுப் பேசியோ, முரண்டு பிடித்தோ, சண்டை யிட்டோ பார்த்ததில்லை நான். ஆனால், வீட்டில் அவருக்கு வேதனை மிகும்போது அசாத்திய கோபம் வரும். முன் கோபி. பின்னால் வருந்துவார். அவர் கோபம் வந்துவிட்டால் அந்தக் கணங்களில் அவர் தான் என்ன செய்கிறோம்
என்பதே அவருக்கே தெரியாது போய்விடும்.

எங்கள் தெரு 'ட' வடிவில் இருக்கும். அந்த 'ட'வின் இரு கோடுகளின் சந்திப்பில் எங்கள் வீடு இருந்தது. தெருவின் ஒரு கோடி பெரியகுளம், வத்தலக்குண்டு போகும் மெயின் ரோடில் போய்ச் சேரும். இன்னொரு கோடியில் ஒரு பிள்ளையார் கோயில். சின்ன ஒரே ஒரு அறையே கர்ப்பக்கிரஹமாகக் கொண்ட கோயில். அதில் பிள்ளையாருக்குத் தான் இடம் இருந்தது. அது எப்படி எங்கள் பராமரிப்பில் வந்தது என்று எனக்குத் தெரியாது. சாவி எங்களிடம் இருக்கும். தினம் கோவில் கம்பிக் கதவைத் திறந்து, ஒரு குடம் தண்ணீர் பிள்ளையார் மீது கொட்டி அவரைக் குளுப்பாட்டி, விளக்கேற்றி வரவேண்டும். இது தினம் மாலை நடக்கும்.

ஒரு நாள் மாலை மாமா, '"போடா, கோவிலைத் திறந்து ஸ்வாமிக்கு விளக்கேத்திட்டு வாடா," என்று சொன்னார்: பித்தளைக் குடம் ஒன்று சின்னதாக நான் தூக்கக்கூடியது. அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டேன். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய். இடைகழிச் சுவற்றில் எனக்கு எட்டும் உயரத்தில் தான் கோவில் சாவியும் தீப்பெட்டியும் இருக்கும். ஒரு கையில் தண்ணீர் நிரப்பிய குடம். மற்றொரு கையில் எண்ணெய்க்கிண்ணம். எண்ணெய்க் கிண்ணக்கையோடு உயர இருந்த சாவியையும் தீப்பெட்டியைம் எடுத்தேன். என் சாமர்த்தியம் எனக்கு உதவவில்லை. கிண்ணம் சாய்ந்து எண்ணெய் கீழே சிந்தியது. அதை மாமா பார்த்துவிட்டார். 'ஒரு காரியம் உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியுமாடா கழுதே" என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவர், கிட்ட வந்தது தான் தெரியும். அடி விழுந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டே இருந்தார். குடத்தைக் கீழே வைத்தவன் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். அப்படியும் அவர் கோபம் அடங்கவில்லை. காலால் உதைத்தார். அடி விழுவதும் நிற்கவில்லை. இதற்குள் என் அலறலையும் மாமாவின் கூச்சலையும் கேட்டு புறக்கடையில் இருந்த பாட்டி ஓடி வந்தாள். மாமாவைப் பார்த்து சத்தம் போட்டாள், "ஏண்டா இப்படி அவனைப்போட்டுக் கொல்றே. இப்படியாடா ராக்ஷசன் மாதிரி. ஒன்னுக்கொன்னு எதாவது ஆயிட்டதுன்னுடா என்னடா பண்றது" என்ரு பாட்டியும் சத்தம் போட ஆரம்பித்தாள். "உனக்கொண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. நீ செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் அவன் ஒண்ணுக்கும் இல்லாமே போயிண்டு இருக்கான்." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எனக்கு அடி விழுவது நின்றது. 'சரி போறது போ" எண்ணெய் என்ன கொஞச்ம் போறத்தானே சிந்தியிருக்கு. போடா, வேறே எண்ணெய் விட்டுத் தரேன். போய் விளக்கேத்திட்டு வா, போ" என்று பாட்டி அந்த இடத்தை விட்டு என்னை விரட்டினாள்.

எனக்கு அன்று விழுந்த அடி மாதிரி அங்கு மாமாவோடு இருந்த பன்னிரெண்டு வருஷங்களில் என்றும் விழுந்ததில்லை. மாமா முன் கோபக் காரர் தான். ஆனால் வெகு சீக்கிரம் அவர் கோபம் அடங்கிவிடும். கொஞசம் சத்தம் போடுவார். இரண்டு அடி கொடுப்பார். பின் சரியாகிவிடும். ஆனால் அன்று, கொஞ்சம் எண்ணெய் சிந்தியதற்கு நான் பட்ட அடியும் உதையும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. "என்னடா அப்படி ஆயிடுத்துன்னு இப்படி போட்டு கொல்றே. செங்கல் தரையிலெ கொஞ்சம் எண்ணெய் சிந்தினாக் கூட அது வழிஞ்சி பரவிடும். ஏதோ வீசை எண்ணெய் போயிட்டாப்பலே. படாத இடத்திலே பட்டா என்ன ஆகும்" என்று பாட்டி திருபத் திரும்ப மாமாவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். மாமாவோ, "நீ பேசாமே இரேன்.உனக்கொண்ணும் தெரியாது போ" என்று தான் அவர் பதில்
சொல்லிக்கொண்டிருந்தார்,.

மறு நாள் காலை மாமா பேப்பர் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். சின்ன மாமா எஸ் எஸ் எல் ஸி பரி¨க்ஷ எழுதிய ரிசல்ட் வந்திருந்தது. அம்பி வாத்தியார் வந்து கொண்டிருந்தார். வீட்டுப் படி ஏறிக்கொண்டே, 'என்ன சார், பேப்பர் பாத்தேளா, சாமா நம்பரைக் காணோமே, நான் தான் சரியாப் பாக்கலையா, உங்க பேப்பர்லே இருக்கா" என்று கேட்டுக் கொண்டே படி ஏறினார். அவர் சாமா என்று சொன்னது என் சின்ன மாமாவை. சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன்.

"எந்த பேப்பரைப் பாத்து என்ன? போயிடுத்து. போயிடும்னு நேத்திக்கே எனக்குத் தெரிஞ்சுடுத்து" என்று வெகு தீனக்குரலில் சுரத்தின்றி மாமாவிடமிருந்து பதில் வந்தது. "நேத்திக்கே தெரியுமா? " என்று ஒன்றும் புரியாத திகைப்பில் கேட்டார், அம்பி வாத்தியார்.

பதிவுகள், மார்ச் 2008 இதழ் 99


- நினைவுகளின் தடத்தில் (5)

- வெங்கட் சாமிநாதன் -சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்..... எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக விஞ்ஞானிகளும் சொல்வது தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, நிர்வாணமாகத்தால் செல்கிறார்கள் என்றும், செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறுவார். வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர். இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.

எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல் வளையைப் பிடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில் இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? " அப்போது நான் சொன்னேன், "குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?" என்று. அப்போது உடனே எனக்கு மனதில் பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு அது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாம் என்று.

எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில், கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்களை அவன் தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்ல்து இது போல பல
விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப்படவுமில்லை. நாங்கள் அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும், அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.

ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில் நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதுன் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி செய்து வந்தார். முஸ்லீம்கள்கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. நிலக்கோட்டையில் நான் அதிகம் முஸ்லீம்களைப் பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல் இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப் என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சருக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க" என்று சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. 'சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு" என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன் என்று கேட்டதற்கு, "அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்" என்று சொல்வான்.

நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக் கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் 'ட' வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த 'ட' வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, "நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்.." என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்

ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்.

எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்த பெயர் வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப் பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து சேர்ந்து விடும். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். டிவிஎஸ் வண்டி வராது. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் ஷ¥வை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும். அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள்
குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான் பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டியிருக்கும். அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு
தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆ·ப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல் வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும் சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக்கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில்.  தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்போம்.

பதிவுகள் , மார்ச் 2008 இதழ் 99
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here