“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”
“எமது தேவஸ்தானங்களின் தந்தையர், மென்டல்சனை ஏற்றதாக தெரியவில்லை. ஒருமுறை, ஒரு துலா பாதிரி-(வுரடய) என்னிடம் பேசும் போது சொன்னார்: ‘ஏசு கிறிஸ்து பிறப்பில் ஒரு யூதர். ஒரு ஹீப்ரூ கடவுளுக்கும் ஹீப்ரூ பெண்ணுக்கும் பிறந்த ஆள். பின் அந்த துலா பாதிரியார் தன்னையே கேட்டுக் கொண்டார்: ‘அப்படி என்றால் என்ன இது? நடக்க கூடிய காரியம்தானா? நம்பவே முடியாமல் இருக்கின்றது. முடியாது… முடியவே முடியாது… அப்படி இருக்க முடியவே முடியாது…”.
“அப்படியென்றால் என்ன இது…?” -டால்ஸ்டாய்.
அந்த துலா பாதிரி தோள்களை குலுக்கியபடி சொல்கின்றார்: “ஆம்… அதுதான் எனக்கும் புரிந்தபாடாக இல்லை… ஒரே மர்மமாக இருக்கின்றது…”.
அதாவது, இசையின் போதையேற்றும் தன்மை, இக்கூற்றுக்குள் உள்ளடங்குகின்றதா என்பதும், திருக்கோயிலின் ஞானதந்தையர், இதனையா கைப்பற்றி உள்வாங்கி நகர்த்தினர் என்பதும் கேள்வியாகின்றது. இங்கேயே, மென்டல்சன் பொறுத்த கூற்றும் வந்து நிற்பதாய் உள்ளது.
2
மென்டல்சன் பற்றியும் அவரது பேரனான பீலிக்ஸ் மென்டல்சன் பற்றியும் (1809-1847) உள்ள பதிவுகள் மிக தெளிவானதாக காணக்கிட்டுகின்றன. (இங்கே தரப்படும் பதிவுகள் கார்க்கி-டால்ஸ்டாய் சம்பாசனையின் போது முகிழ்த்தவை அல்ல. கணனியின்ன் பதிவுகள் இவை).
தேவாலயங்கள் மீது தாத்தாவும் பேரனும் செலுத்திய செல்வாக்குகள் வித்தியாசம் பூண்டவை. ஒரு சிலரது ஆன்மாவை இவை ஆட்டி அசைத்திருக்கலாம். அத்தோடு இவை, வரலாற்று சிறப்புகளையும் ஏந்தியவைதாம்.
மென்டல்சன் ஒரு தத்துவஞானி. இவரது பேரன் பீலிக்ஸ் மென்டல்சனோ ஓர் இசை கோர்ப்பாளன். எனவே ஒருவர் தத்துவத்தின் அடிப்படையில் மதத்தை பாதிக்கையில் மற்றவர் இசையின் அடிப்படையில் தனது பாதிப்புக்களை ஏற்படுத்தினார் என்பது தெளிவு.
மென்டல்சனின் பார்வையில் மதமானது அரசியலிலிருந்து விடுபட்டாக வேண்டும் என அவர் ஆர்வப்பட்டிருந்தார். மத நல்லிணக்கங்களுக்கு அவர் ஆற்றிய சேவையை இட்டு, மறுமலர்ச்சி காலம் அவரை மத சுதந்திரவாதி என பிரகடனப்படுத்தியது.
மறுபுறத்தில், இவரது பேரன், பீலிக்ஸ் மென்டல்சனோ தனது, யூத தாத்தாவின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவராயினும், அவர் வளர்க்கப்பட்டது என்னவோ, ஒரு புரட்டஸ்தாந்து மத அடிப்படையிலேயே. ஏழு வயதில், அவர் புரட்டஸ்தாந்து மதத்தில், ஞானஸ்நானம் பெற்றவராகின்றார். இசை மேதையாக திகழ்ந்த அவர், நுடுஐதுயுர் போன்ற பல்வேறு இசை கோர்வைகளை கிறிஸ்துவ மதத்திற்கு தந்த சிறப்புகளை கொண்டிருந்தார். இதனாலேயே, இவரை அனைத்து தேவாலயங்களுக்கும் மேற்பார்வையாளராக உயர் பீடம் நியமித்திருந்தது-பெர்லின் சர்ச் உட்பட.
ஆனால், இவரது தாத்தாவான மென்டல்சனோ, இதற்கு நேரிடையாக செயல்பட்டவர். ஒரு யூத மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர். எனவே, தாத்தா யூத மறுமலர்ச்சியை நோக்கிய அதேவேளை, பேரன் கிறிஸ்துவ மறுமலர்ச்சியை நோக்கி பாடுபட்டவரானார். சுருக்கமாக கூறுவோமானால், கார்க்கி-டால்ஸ்டாயின் உரையாடலானது, மேற்படி வரலாற்று உண்மைகளை பொதிந்தவையாக காணக் கிடக்கின்றன. ஆனால், இவை, ரத்தின சுருக்கமாக இரண்டே இரண்டு வரிகளில் வந்து போகும் பதிவுகளாக காணப்படுவதே சிறப்பு. இவற்றின் மூல நாயகன் டால்ஸ்டாய்.
முதலில் துலா பாதிரி, பின் எமது ஞான தந்தையரின் நடத்தைகள், பின் ஈற்றில் மதங்களின் நகர்வுகள், அவற்றில் உள்ளடங்கும் விடயங்கள்-இவை அனைத்தும் மேற்படி இரண்டொரு வரிகளில் வந்து போவதை கார்க்கி பதிகின்றார்.
இன்றைய அமெரிக்க-இஸ்ரேலின், முரண்படுவதாய் தோன்றும் உறவுகள்(?) (யூத-கிறிஸ்தவ முரண்கள்) அல்லது உடன்பாடுகள் அல்லது உடன்படிக்கைகளை நாம் இன்று கற்பதில், மேற்படி கார்க்கி-டால்ஸ்டாய் சம்பாசனையும் உதவுவதாய் இருக்ககூடும். காலம் காலமாய் தொடரும் நகர்வுகள் இவை. இவற்றின் ஒரு துளியைத்தான் டால்ஸ்டாய் எனும் மாபெரும் கலைஞன் உள்ளடக்கி கொள்கின்றான். அவனை போலவே கார்க்கியின் பதிவுகளும் காலத்தை கடந்தவையாகின்றன. இன்றைய எமது சிந்தனை உலகோடு இவை சம்பந்தப்படுகின்றன என்று கூறலாம்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.