
* நன்றி - புகைப்பட உதவி - 'தடயத்தார்' கிருபா கந்தையா.
'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின் (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centre இல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக , மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது. 'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட் இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார். வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரன் இயக்கத்தில் மேடையேறிய, இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.