அ.ந.கந்தசாமி -- வாழ்வும் எழுத்தும் - திக்குவல்லை கமால் -
தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.
இதில் எனது கவனத்தை ஈர்த்த விடயம் அ.ந.க.பற்றிய கட்டுரைகளே.அவர் தொடர்பாக மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1) அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை.
2) அ.ந.க.வின் - மனக்கண் -
3) ஈழத்து தமிழ் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு.
இம்மூன்று கட்டுரைகளும் நூலின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பது கவனத்திற்குரியது.இன்னும் சில விடயங்களையும் உள்ளடக்கி தனியே ஒரு நூலாக வெளியிட்டிருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.
அ.ந.கந்தசாமி என்ற நாவலாசிரியர் எனக்குப் படிக்கும் காலத்திலேயே அறிமுகமானார்.தினகரனில் 'மனக்கண்' தொடர்நாவலைப் போட்டிபோட்டுக்கொண்டு வாசித்தது இன்னும் ஞாபகமுள்ளது.அந்நாட்களில் வாசித்த - சிவகாமியின் சபதம் - கடல் புறா - கரித்துண்டு - பெற்றமனம் - குறிஞ்சி மலர் - முதலான நாவல்களைப் போன்ற ஒன்றாகவே ' மனக்கண்'ணும் தெரிந்தது.அ.ந.க. ஓர் இலங்கை எழுத்தாளர் என்பதைத் தெரிந்துகொள் ளச் சில ஆண்டுகள் சென்றன.இலங்கையிலும் இப்படி எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது வியப்பாக இருந்தது.