முன்னுரை
பதினெண் மேற்கணக்குநூல்களில் இடம் பெற்ற பத்துப்பாட்டில், பத்தாவதாய் இடம்பெற்ற நூல் மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார், கல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்சூவன் நன்னன் சேய் நன்னனைப் பாடிய ஆற்றுப்படைநூலாகும். கூத்தரை ஆற்றுப்படுத்திப் பாடியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெறும்.
மலைபடுகடாம்
இலக்கியங்கள், அவை தோன்றிய காலத்திய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் 583 அடிகளைக் கொண்ட இந்நூல் அக்காலத்திய மக்களின் வாழ்க்கைமுறை, மன்னன் ஆட்சி, இயற்கை வளம் போன்றவற்றை அழகுற எடுத்துரைக்கிறது. காட்டில் கேட்கின்ற பலவகையான குரல்களும் ஒருங்கிணைந்து மலையில் மோதி எழும்புகின்ற முழக்கத்தை 56 அடிகளில் தொகுத்துக் கூறிமலையாகிய யானையின் பிளிறல் எனும் பொருள்படும் படி மலைபடுகடாம் என புதுமைப் பெயர் பெற்று இசைச் செறிவோடு, பண்பாடும் காட்டி நிற்கின்றது.
பண்பாடு
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியல் அமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழா, உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றைக் குறிக்கும்.
Culture என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லே பண்பாடு ஆகும். “மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு”என சி.சி. நார்த் குறிப்பிட்டுள்ளார். பண்பாடு என்றால் ஒரு குழுவின் வரலாறு, மொழி, பண்புகள், சமய நம்பிக்கைகள், தொழில்கள் போன்றவற்றை, அடுத்தடுத்து வரும் மற்ற மக்களுக்குக் காட்டும் அளவு கோலாகும். காட்டு மிராண்டியாய் சுற்றித்திரிந்த மனிதன் பல்வேறு கட்ட பண்பட்ட, பண்பாட்டு வளர்ச்சியினால் தனக்கென பல அடையாளங்களைப் பதித்துச் சென்றான். மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிக்கட்டுகளாய் பண்பாடு பயணித்து வருகிறது.
( 5 )
அதிர்ச்சி…. ஆச்சரியம்…. குழப்பம்….. சந்தேகம்….. எல்லாமே என்னிடம் சமத்துவம் புரிந்தன.
நல்லவேளை…. மயக்கம் மட்டும் வரவில்லை. ஒருவாறு என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.
“என்னக்கா சொல்றே…. நான் மனசு வெக்கணுமா….. அப்பிடீன்னா, ஏற்கனவே அறுத்துப் பொதைச்ச காலை, தோண்டி எடுத்துவந்து ஒட்டவெக்கப் போறீங்களா…..”
இலேசான கிண்டல்.
அக்காள் முகத்திலே இலேசான சிரிப்பு.
“உனக்கு எப்பவுமே இந்தக் கிண்டல் விட்டுப் போகாதில்ல…. ஒறிஜினல் காலுமாதிரியே பிளாஸ்டிக் கால் மாட்டி நடக்கலாமுன்னு நீ கேள்விப்பட்டதே இல்லியா….”
இப்போதுதான் எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படிக்கின்ற காலத்தில் என்னோடு படித்த மாணவி ஒருத்திக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டதும், பின்பு அவள் பிளாஸ்டிக் கால் மாட்டி பழையபடி நடமாடியதும், சமீபத்தில் திருமணமாகி கணவன், குழந்தையென மகிழ்ச்சியாக வாழ்வதும் ………
அப்படியானால்……,
உண்மையிலே அக்காளும், அதுபோல் எனக்குப் பிளாஸ்டிக் கால் போட முயற்சிக்கின்றாளா…..!
இனிமேல் நானும் மற்றவர்களோடு சேர்ந்து நடமாட முடியும்…. வண்டி ஓட்ட முடியும்…. எனது தோழிகளைச் சந்திக்க முடியும்…. சினிமா, நாடகம், திருவிழா, கொண்டாட்டங்கள் என்று கலகலப்புக்களைக் காண முடியும். நாளை எனக்கும் திருமணம் நடக்கும்….
"இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிபட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற வாயு புத்திரர் அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலையை இலங்கைக்கு வான் மார்க்கமாக எடுத்துச் சென்றார்......"
என்ன, காமிக்ஸைப்பற்றி எழுத வந்து இராமாயண கதா கலாட்சேபம் செய்கிறேன் என்ற குழப்பமோ?
காமிக்ஸ் எனும் வரைகதை என்றதும் நினைவில் வருவது மீனாயகர் எனும் சூப்பர்ஹிரோக்கள்தான் என்பது உண்மை. எமது இதிகாசக் கதைகளில் அனுமான் போன்ற மீனாயகர்கள் கொட்டிக் கிடந்தாலும் நவீன காமிக்ஸ்களின் ரிஷிமூலம் தேடுவது அத்தனை இலகுவானதல்ல.
எகிப்திய பிரமிட்களில் தொடங்கி கற்குகை சுவரோவியங்கள் உட்பட பல ஆதி நாகரிகங்களில் ஒரு சம்பவக் கோர்வையை புரிய வைக்க மனிதன் தொடர் ஓவியங்களை (sequential art) ஒரு கருவியாகப் பாவித்தான். மொழி விருத்தியடையாத காலத்தில் இந்த ஓவியங்களே பேசும் படங்களாய் கதைகளை பல காலங்கள் கடந்தும் மக்களுக்கு சொல்லிற்று. மொழி கடந்த ஓவியக்கலையும் சிற்பக்கலையும் என்றும் பார்ப்பவர் மனதில் பசுமையாய் பதிந்து மன்னர்கள் சரித்திரங்களை ஆட்சிகள் கடந்தும் அறிவித்தது.
இந்தியாவின் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை துளிகளையும் ராஜஸ்தானின் காவட் (Kaavad) ஓவியக்கலை இராமாயண மகாபாரத கதைகளை தொடர் ஓவியங்களாய் மக்கள் மத்தியில் பரப்பிற்று. காவட் கதை சொல்லிகளின் காலம் இப்போது மலையேறிப்போய்விட்டது எனலாம்.
நம் ஊர் கோயில்களிலும் இவ்வகை தொடர் ஓவியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சித்தன வாசல் , தாராசுரம், கீழப்பமூர் கோவில் ஓவியங்களும் மகாபல்லிபுர மகிசாசுர மர்த்தினி அகர வதை சிற்பங்களும் சில உதாரணங்கள்.
பொருள் ஒன்றின் பயன்பாடு அல்லது பழக்கப்பட்டுப்போன நடத்தை ஒன்று எங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பது தெரிந்தாலும்கூட, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை அல்லது குறித்த நடத்தையில் ஈடுபடுவதை எங்களால் நிறுத்தமுடியாமல் இருக்கிறதெனில், அந்தப் பொருள்/நடத்தை எங்களைக் கட்டுப்படுத்துகிறது எனலாம், இல்லையா? இதுவே அடிமையாதல் (addiction) எனப்படுகின்றது.
இவ்வகையான அடிமையாதல் நிலை ஒருவரிடம் காணப்படும்போது, அது அவரின் தெரிவு என்றோ அல்லது அது அவரின் ஒழுக்கப் பிரச்சினை என்றோதான் நாங்கள் பொதுவாகக் கருதுகிறோம். அப்படி அடிமையாவதால், அவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தவருக்கோ பிரச்சினைகள் ஏற்படும்போது, ‘குறித்த பொருளின் பாவனையை/நடத்தையை நிறுத்த வேண்டியதுதானே,’ என நாங்கள் சுலபமாகக் கூறிவிடுகிறோம். அதேபோல, அந்தப் பழக்கத்தை நிறுத்தமுடியாமல் அல்லல்படுபவர்கள் மேல் கோபப்படுகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் அப்படி நிறுத்திவிடுவது என்பது ஒரு இலேசான விடயமில்லை என்கிறார், NIH’s National Institute on Alcohol Abuse & Alcoholism என்ற அமைப்பின் தலைவரான Dr. George Koob.
இந்த யதார்த்தத்தை எனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஊடாக நானும் விளங்கிக்கொண்டேன். என் தொழிலின்போது நான் இதுவரை சந்தித்திருந்த மனிதர்களின் அனுபவங்களும், அவர்களுக்கான சிகிச்சைகளின்போது நான் கற்றுக்கொண்டவைகளும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் உதவியிருக்கின்றன. அவ்வாறாக நான் கற்றுக்கொண்டவற்றை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வது சிலருக்காவது பயனளிக்கக்கூடும் என நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பத்தை கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா மலரில் வழங்கியிருக்கும் உதயன் ஆசிரியருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.
4
“நேத்தே வருவியளெண்டு பாத்துக்கொண்டு இருந்தம்.” என தயாநிதி சொன்னதற்கு தனபாலன் சலிப்போடு சொன்னான்: “நேற்றே வெளிக்கிட்டிட்டன். வரேலாமப்போச்சு. ஒரு பக்கம் சன நெரிசல். சாமான் ஏத்தின மாட்டு வண்டிலுகள் ஒரு பக்கம். ட்ராக்ரர் லாண்ட் றோவருகள் இன்னொரு பக்கம். காருகள் வானுகளெண்டு அதுகள் வேற. வன்னியில உவ்வளவு வாகனங்கள் நிக்கிறது நேற்று ராத்திரித்தான் தெரிஞ்சுது எனக்கு. அதுக்குள்ள பாதையெல்லாம் வெள்ளமும் சேறுமாய்க் கிடக்கு. பிரமந்தனாறு மேவிப் பாயுது ஒரு பக்கத்தால. அதுக்குள்ள மாட்டுப்பட்டு அரக்க ஏலாமல் நிண்டுகொண்டிருக்கு வாகனமெல்லாம். கண்டாவளை, தறுமபுரம், விசுவமடு எங்கயும் வெள்ளம்தான். வெள்ளம் வீடுகளுக்குள்ள ஏறி நிக்குது. இப்ப வந்ததே கடவுள் புண்ணியத்திலதான்.”
“சரியான நேரத்திலதான், தம்பி, வந்தியள். இல்லாட்டி இந்தக் குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு என்ன செய்யிறது, எங்க ஓடுறதெண்டு தெரியாம ரா முழுக்க தலை விறைச்சுப்போயிருந்தன்” என்றாள் நாகி.
“அப்பிடி நீங்கள் செய்ததுதான் நல்லம், அன்ரி. வெளிக்கிட்டிருந்தியளெண்டா இந்தச் சனத்துக்குள்ள லேசில தேடிக் கண்டுபிடிச்சிடேலாது.”
வாகனம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.
வண்டில்களும், ட்ராக்ரர்களும், லாண்ட் றோவர்களும் சாமான்களோடு ஊர்ந்து செல்ல, வீட்டுக்குரியவர்களும் அவர்களது குழந்தைகளும் பின்னால் சென்றுகொண்டிருந்தனர். சைக்கிளில் சாமான்களைக் கட்டி சிறுகுழந்தைகளையும் அதில் ஏற்றிக்கொண்டு தள்ளியபடி செல்லும் கணவர்களைப் பின்தொர்ந்து மனைவிகளும் மற்றும் உறவினர்களும். பைகளை தோளில் கொளுவிக்கொண்டு, மூட்டைகளை தலையில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள் பலர். அந்த நெரிசலுள் கார்களும், வான்களும் உள் நுழைய முயன்று உறுமிக்கொண்டு இருந்தன. அவை எரிந்து கக்கிய மண்ணெண்ணெய்ப் புகை காற்றிலெங்கும் கனத்திருந்தது.
நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
புனைவிலக்கிய எழுத்தும், ரசனைகளும் இன்றைய இலக்கிய உலகின் முக்கிய பேசுபொருள். புனைவின் கலைத்தளமும் அதன் புரிதலும் வாசகரின் ரசனைக்குரியது மட்டுமன்றி வேறுபடக் கூடியதுமாகும். இதனால் சிறுகதைகள், நாவல் முதலான கலைப் படைப்புகள் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பானது. இலத்திரனியல் சாதனங்களும், சமூக ஊடகங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில் யாதும் ஊரே என்பது போல், எல்லோரும் எழுத்தாளர்களே. அனைவரும் மனங்கவரும் வண்ணமோ புலன்களில் பதியும் வண்ணமோ எழுதுவதில்லை என்பது உண்மைதான். எனினும் இதுதான் இலக்கியத்தின் இலக்கு என்ற முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள் யார்...?, எனும் வினா வாசகர் மனதில் உருவாவது இயல்பானதே. எனது மனதிலும் அவ்வினா உண்டு. இவ்வினாவுக்கு மூலகாரணமாக அமைந்தவர், இன்றைய தமிழ்இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள். அவரது இணையத்தளத்தில் சமீபகாலத்தில் வெளியான வாசகர் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக கீழ்வரும் கருத்துகள் கூறப்பட்டிருந்தன. கேள்விகள் அவரது இலக்கிய ரசனை பற்றியதும், எழுத்தாளர் முத்துலிங்கத்தின் புனைகதைகளின் ரசனை பற்றியவையும் ஆகும்.
மார்ச் 2, 2021 அன்று, அவரது இணையத்தளப் பதிவொன்றில் 'எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச் சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவா். அவர் எனக்கு அணுக்கமானவா்தான்' என்ற, ஜெயமோகனது சமீபகால கருத்தானது இலக்கிய மதிப்பீடுகளுக்கும், அவரது இளமைக்கால கருத்துகளுக்கும் முற்றிலும் மாறானது அல்லவா...?என்ற வாசகரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், 'இளமையில் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறி போல் பற்றிக் கொண்டிருந்ததாகவும், இன்று தனது பார்வை விரிந்திருப்பதாகவும்..., தான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வை தான்' என்ற பொருள்படப் பதில் கூறியிருந்தார். இந்தக் கூற்று எனக்கு மிகுந்த விருப்பையும், திருப்தியையும் அளித்தது. அதுவரை அவரது இலக்கியக் கருத்துகள் சிலவற்றின் மீது கொண்டிருந்த மனவிலக்கத்தில் இக்கூற்று ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. இது வரவேற்க வேண்டிய மனமாற்றமும் கூட. ஒரு வாசகர் என்ற முறையில் அவருக்கு அணுக்கமானவராகவே என்றும் தொடர விரும்புகிறேன். அதே சமயம் வேறு சில தளங்களிலும் இம்மனமாற்றம் ஏற்படுமா என்ற ஆவலையும் கொண்டிருக்கிறேன்.
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத் தெரியாது. அனேகமாக உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். காமாட்சிபுர அக்ரஹாரத்தினுள் நுழைந்தவுடனேயே அதன் இடது புறத்தில் காணும் முதல் வீடு முழுத்திண்ணையையும் அடைத்து கம்பி போட்டிருக்கும். கதவைத் திறந்து படியேறினால் திண்ணை. திண்ணையில் அகல் விளக்குப் பிறைக்கு மேல் ஏ. வைத்தியநாதய்யர் என்று கறுப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்கும். அப்போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. பின்னர் தான் மதுரை ஏ.வைத்தியநாதைய்யர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவர் பற்றியோ, அவர் காலத்தில் அவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் பற்றியோ இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஏ. வைத்திய நாதய்யர் என்ற பெயர் முடிவு பெறும் விதம் காரணமாக அது பற்றி பேசுவது இக்காலத்தில் விரும்பப் படுவதில்லை. ஒதுக்க வேண்டும் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் சொல்லப்படாமலேயே, தாக்கீது ஏதும் பிறப்பிக்காமலேயே புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் ஒதுக்கல் இது. இன்னும் எத்தனையோ இம்மாதிரி ஒதுக்கல்கள், நடந்த சரித்திரத்தை இல்லையென பாவனையில் நடந்து கொள்ளுதல், அது பற்றிப் பேசுவதே, நடந்ததைச் சொல்வதே, அங்கீகரிக்க மறுப்பதைச் சுட்டுவதே, ஜாதி வெறியாக குற்றம் சாட்டப்படும். இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முக்கால் நூற்றாண்டு கால அரசியல். ஆனாலும் சில வருடங்களுக்கு முன் சோ.தருமன் தன் எழுத்துக்களின் உந்துதல் பற்றி சாஹித்திய அகாடமியில் பேசும்போது, ஏ.வைத்தியநாதய்யர் அந்நாட்களிலேயே தலித்துக்களுக்காகப் போராடியதை யார் மறக்கமுடியும்? என்று ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறார். மறக்க என்ன, மறுக்கவும் முடியும் தமிழ் நாட்டு அரசியல் அதற்கு இடம் கொடுத்துள்ளது. வெகு அபூர்வமாக, அவரிடமிருந்து ஏ.வைத்தியநாதய்யர் பற்றியும் அவரது அரசியல் சமூக பங்களிப்பு பற்றி ஒரு இளைய தலைமுறை பேசியது எனக்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
பாடகி கல்யாணி மேனன் தனது எண்பதாவது வயதில் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஒரு கர்நாடகப் பாடகர். திரைப்படங்களிலும் பாடியுள்ளார். குறைந்த அளவிலேயே இவர் திரைப்படங்களில் பாடியுள்ளபோதும் ,இவர் பாடிய பாடல்களில் பல நெஞ்சில் நிலைத்து நிற்பவை. குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் எழுத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் , பாடகர் ஜெயச்சந்திரனுடன் பாடிய 'நீ வருவாய் என நான் இருந்தேன்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. நான் நினைக்கின்றேன் அந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் மெல்லிசை மன்னருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றாரென்று.
இவர் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனனின் தாயார். இவர் அதிகமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடனேயே இணைந்து பணியாற்றியுள்ளார். காதலன், முத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, அலைபாயுதே, 96 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 'அலைபாயுதே' திரைப்படத்தில் வரும் 'அலைபாயுதே' பாடலையும் பாடியவர் இவரே.
இரவுகளின் வெளிச்சத்தைத் திருடிய
ஒரு பகலவனைத்தேடி எனது கவிதைகளுடன்
என் இருப்பிடத்தை விட்டுப் புலம்பெயர,
என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன்.
போகும் இடமானது நெருப்பைப் பருகும்
இடமாக இருக்கக் கூடும் என்பதற்காக,
ஒரு பெண்ணிடம் உடற்சுகத்தைச் சிலகாலம்
கடனாகப்பெற்று வரலாம் என்கிற முனைப்புடன்
அவளது இருப்பிடத்தை அடைய எனது கால்களோடு
நான் எண்ணிருந்த குறிக்கோளுடனும் சென்றேன்.
1. நாவல்: கருங்காணு! - அ ரங்கசாமி
மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள்.
1940களில் தொடங்கி சுமார் 20 ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல் மலேசிய தமிழர்கள் மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .
இந்த நாவலில் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பாம் ஆயில் எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .
சவுமியா மருத்துவர் அறையிலிருந்து வந்து கொடுத்துப் போன மாத்திரை அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணமயமாக இருந்தன. வர்ணப் புள்ளிகளை கோலத்திற்காய் விட்டு விட்டுப் போன மாதிரி இறைந்து கிடைந்தன.
படுக்கை அறையின் சுத்தமும் வாசமும் அவளுக்குப் பிடித்திருப்பது போல் சுற்றிலும் பார்த்தாள்.சுவற்றில் இருந்த படங்களில் குழந்தைகள் வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் பிரசவம் சீக்கிரம் வந்துவிட்டது என்று நினைத்தாள். இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்று பட்டது. நான் எங்கு அவசரப்பட்டேன். கார்த்தியின் குடிவெறி அவளைப்படுக்கையில் கிடத்தி விடுகிறது. இரவு நேரத்தில் போதை இல்லாமல் அவனால் தூங்க இயலாது என்பது போல்தான் கார்த்தி இருந்தான். சீக்கிரம் கர்ப்பமாகி விட்டாள்.
அவளிடம் மருத்துவர் கேட்ட கேள்வியை அவள் நினைத்துக் கோண்டே இருந்தாள். “ இதற்கு மேல் ஏன் படிக்கலே ” என்று கேட்டார்.
“ முடியலெ.. வசதியில்ல டாக்டர்.”
“இங்க மலேசியாவுலே படிக்க நிறைய வசதிக இருக்கு இது ரெண்டாம் பிள்ளைங்கற ..நல்லா படிக்க வையி.நீ படிக்காட்டியும் ”
கோலாம்பூரின் சுத்தமும் அழகும் பிடித்திருப்பது போல் அந்த அரசு மருத்துவமனையும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஊரில் என்றால் ஒவ்வொன்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். இங்கு எல்லாம் சுலபமாக இருப்பதாக சவுமியாவுக்குத் தோன்றியது.
அவள் கன்னத்தில் முகிழ்த்திருந்த சிறு பரு அவளின் சுண்டு விரலில் தட்டுப்பட்டது. இது என்ன இந்த சமயத்தில் வந்து கிடக்கிறது.முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோது அருவருப்பாய் பட்டிருக்கிறது.
இரண்டாம் குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானமாக நினைத்தாள். அத்தை கூட அப்படித்தான் சொல்லி இருந்தாள். தோட்டக்காட்டில் ஆகும் பிரசவங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வாலை ஆட்டிக் கொண்டே
என்னை ஏறெடுத்துப் பார்த்தது அந்தத் தெருநாய்
திரும்பவும் கண்ணை மூடுவது போல் படுத்துக்கொண்டது
மீண்டும் வேடிக்கையாக வீரியத்துடன் விழித்தது
பசிதான் காரணம் என்று நினைத்தேன்
மனிதர்களைப்போலவே
கொரோணாக் காலத்தின்
உணவுப் பிரச்சினை அதுக்கும்
முன்பெல்லாம்
மனிதர்களின் மிச்ச உணவாலேயே
பசியை போக்கிக் கொண்டதாம்
மனிதனால் கைவிடப்பட்ட
அவமானப்பட்ட
வேதனைப்பட்ட குரலாக
அன்றும் இன்றும் அந்தத் தெருநாய்
முகவுரை :
தமிழில் உள்ள உருபனியல், தொடரியல் கோட்பாடுகளில்; ‘புணர்ச்சி’ பற்றிய கருத்தாக்கங்கள் இன்றியமையாதவையாகும். புணர்ச்சி நிலைகளினைத் தொல்காப்பியம் அறிவியல் கலந்த மொழியியல் நுட்பத்துடன் விளக்கி நிற்கின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்மொழியின் புணர்ச்சிக் கட்டமைப்பையும் அவற்றின் இயல்புகளையும் ஆராயும் களமாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.
புணர்ச்சி :
எழுத்தோ சொல்லோ நிலைமொழி வருமொழி இடையீட்டில் ஒன்றோடொன்று இணைவதைப் புணர்ச்சி என்னும் கலைச்சொல்லால் குறிப்பிடுவர். “ஒரு வாக்கியத்தில் அல்லது வாக்கியங்களுக்கிடையே காணப்படும் தொடர்களும் சொற்களும் சொற்களில் காணப்படும் பல்வேறு உருபன்களும் தம்முள் தாம் சேரும்போதும் ஏற்படும் சேர்க்கை, மொழிப்புணர்ச்சி அல்லது புணர்ச்சி எனப்படும். இதனைச் சந்தி எனவும் அழைப்பர்” (அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், ப.326) என்று புணர்ச்சியைப் பற்றி ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். புணர்ச்சி இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் ‘புணரியல்’ என்ற இயலை எழுத்ததிகாரத்தின்கண் யாத்துள்ளார். இப்புணர்ச்சி இலக்கணத்தை மொழியியலாளர்கள் ‘உருபொலியனியல்’ ((Morphophonemics) என்று அழைப்பர். ‘சந்தி’ என்றும் ‘புணர்ச்சி’ என்றும் இது வழங்கலாகின்றது. “இலக்கண நூல்கள் சொற்களின் சேர்க்கையால் (புணர்ச்சி) மாற்றம் ஏற்படுகிறது என்று கொள்ள, மொழியியல் தனிச் சொல்லின் எழுத்து மாற்றமே உருபொலியன் அல்லது சந்தி என்று கொள்கிறது” (சண்முகம், செ.வை., எழுத்திலக்கணக் கோட்பாடு, பக்.203-204) என செ.வை.சண்முகம் குறிப்பிடுகிறார். சொற்களின் தொடரமைவுக்கேற்ப மொழிகள் புணரும்போது எழுத்துக்களில் உண்டாகும் மாற்றம் புணர்ச்சி என்றும் ஒலிமாற்றத்தேவையின் அடிப்படையில் எழுத்துக்காக உண்டாகும் புணர்ச்சியினைச் சந்தி எனவும் கொள்ளலாம். எழுத்துக்களின் புணர்நிலையை அடிப்படையாகக் கொண்டு புணர்வது அகநிலைப்புணர்ச்சி (Internal Assimilation) ஆகும். அதாவது சொற்களுள்ளேயே புணர்தல் என்னும் கோட்பாடமைவது. அகநிலைப்புணர்ச்சி பற்றி இங்கு கூறுவதன் நோக்கம் வேற்றுமை, அல்வழி புணர்ச்சிகளின் விரிவான செய்திகள் சொல்லதிகாரத்தில் அமைந்தாலும், எழுத்துக்களின் புணர்ச்சிதான் உருபொலியனியல் கோட்பாட்டை நெறிப்படுத்துகின்றது என்பதற்காகவாம். எழுத்துக்களின் புணர்ச்சியின் அடுத்தநிலை உருபன்களின் புணர்ச்சி அதாவது மொழிப்புணர்ச்சி ஆகும். இதனைப் புறநிலைப் புணர்ச்சி (External Assimilation) என்பர். முதலீறு, ஈற்றுமுதல் எழுத்துக்களின் புணர்ச்சியைப் புணர்நிலைச் சுட்டு எனவும், பெயர், வினைச் சொற்களின் புணர்ச்சியை மொழிபுணர்இயல்பு எனவும் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.
அறிமுகம்
பாரி 1932-இல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை ஆராய்ந்த பாரிக்கு அவற்றில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஐயம். இந்த ஐயத்தைத் தீர்க்கும் முகமாக அமைந்ததே வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடாகும். இந்த ஐயத்தினைத் தெளிவுப்படுத்தும் முகமாக, பாரி யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணிச் செய்து வாய்மொழிக் காப்பிய பாடல்களைச் சேகரிக்கிறார். அவரது மாணக்கர் லார்டு தொடர்ந்து களப்பணிச் செய்து ஆய்வை முடிக்கின்றார். இவ்விருவரும் உருவாக்கிய ‘கோட்பாடு’ என்ற அடிப்படையில் ‘பாரி–லார்டு கோட்பாடு’ என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தக் கோட்பாட்டில் வாய்பாடு என்பது மையமாக அமைகிறது. இது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.
வாய்பாடுகள் (The Formula)
வாய்பாடு என்பதற்குப் பாரி ‘இன்றியமையாத கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்பு அமைப்பினைக்கொண்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் சில சொற்களின் கூட்டம்’ என்கிறார் (Formula is Group or words which is regularly employed ender the same metrical conditions to express a given essential idea Parry 1960: 30). ‘சி.எம். பௌரா வாய்பாடு’ என்பது எவ்வித மாற்றமுமின்றி ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் உறுதுணையாக வந்து அமைகின்றன எனவும், இவை பெயர், பெயரடைகளின் சேர்க்கைகளாக ஓர் ஆள் (அ) பொருளுடன் தொடர்புபடுத்தப் படுவதும், அவை அடுத்தடுத்த தொடர்கள் (fixed Epithet) எனவும் மீண்டும் வரக்கூடிய தொடர்களை வாய்பாட்டுத் தன்மைபெற்று வரியின் முன் அரையடி, பின் அரையடி, முழுவரி (அ) தொகுதி தொடர் வாய்பாடாக வெளிப்படுவதாக விளக்கம் அளிக்கிறார். தமிழகச் சூழலில் கைலாசபதி ஒப்பியல் முறையப்படி முதன்முதலில் சங்க இலக்கியத்தின் மீது வாய்பாடுகளைப் பொருத்தி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். இவற்றிலிருந்து வாய்பாடு என்பது ஒரு காப்பியத்தில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய யாப்பில் கட்டமைப்பு என்பதை அறியலாம். இந்த வாய்பாட்டில் அடைமொழிகளே மிகுதியாகப் பங்காற்றுகின்றன.
அண்மையில் மறைந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி என்றதும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆரம்பத்தில் நகைச்சுவை வேடங்களில் அவரைப்பாவித்த பாலச்சந்தர் பின்னர் 'இரு கோடுகள்', 'வெள்ளி விழா' போன்ற படங்களில் கதாநாயகியாக அவரைப் பயன்படுத்தினார். 'இரு கோடுக'ளில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று 'இரு கோடுகள்' திரைப்படத்தில் இடம் பெறும் 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' , 'வெள்ளி விழா'வில் வரும் 'காதோடு தான் நான் பேசுவேன்'. இரண்டிலும் அவர் ஜெமினி கணேசனுடன் நடித்திருப்பார்.
உலகின் பல்வேறு பாகங்களிலும் எழுதப்பட்ட இலக்கியத்தின் நாவல், நாடகம், கவிதை, சிறுகதை பல்வேறு வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துவதுதான் இந்த 'யு டியூப் சான'லின் முக்கிய நோக்கம். இவ்வகையான அறிமுகம் குறிப்புகள் ஒரு விதத்தில் முக்கியமானவை. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் படைப்புகளை அறிந்து கொள்ள, அவற்றைத் தேடி வாசிக்க இக்குறிப்புகள் தூண்டுகின்றன; உதவுகின்றன. இன்னுமொரு விடயம். இவ்வறிமுகக் குறிப்புகளைச் சுவையாக எடுத்துரைக்கின்றார்கள். அதுவும் முக்கியமானது. இத்தளத்துக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/c/WittyGarden/videos
- எழுத்தாளர் முருகபூபதியின் முதலாவது சிறுகதை. 1972 ஜூலை மாதம் '[மல்லிகை'யில் வெளியானது.
நீர்கொழும்பு கடற்கரையோரம்.
பேரிரைச்சலுடன், அலைகள் எகிறி விசிறிக்கொண்டு ஆவேசமுடன் – தாயை நோக்கி ஓடிவரும் சிறு குழந்தையைப்போல, அம் மோட்டார் எஞ்சின் பொருத்திய தெப்பங்கள் கரையை நோக்கி நெருங்குகையில்…. அப்பெருத்த ஒலி ஊளைச்சத்தம் போல் எழுந்து ஓய்கிறது.
கரையில் மோதும் அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் தெப்பங்களும் போட்டுகளும் – அந்த தினமும் சுறாமீனும் பொடி மீனும் சாப்பிட்டதாலும் அச்சாப்பாட்டுக்காகவே உழைத்ததாலுமே மெருகேறியிருந்த கருங்காலி நிறத்து மீனவர்களது கரங்களால் கட்டுப்படுத்தி நிறுத்தப்படுகிறது.
“ செவஸ்தியான் புறகால புடிடா… ம்… ஏலோ….ம்…. ஏலோ…ம்ம்… மத்த அலை வரட்டும், ஆ… வந்திட்டுது… பிடி… ஏலோ…. “ தெப்பத்தின் ஒரு முனையை பிடித்தபடி மணலுக்கு இழுத்து நிறுத்த முயற்சிக்கும் பணியில் பெரும் பலத்தோடு இப்படி கத்துகிறான் அந்தோனி.
கடல்தாயின் அச்செல்வக்குழந்தைகள் மடியைவிட்டு கரையில் இறங்கின. அந்த மீனவர்களது கரங்களும் தோள்களும் என்னமாய் இயங்குகின்றன.! தினவெடுத்த தோள்களின் பலத்தை பார்க்கையில் , கணத்தில் பத்துவயதுச்சிறுவன் இருபது வயதுக்காளையாகி வேலை செய்யும் பக்குவம் அது.
நடு இரவில் தொழிலுக்குப்போகும் மீனவர்கள் மறுநாள் முற்பகலில் கரைக்குத் திரும்புவார்கள். தெப்பங்களையும் எஞ்சின் பொருத்தியுள்ள போட்டுக்களையும் கரைக்கு இழுத்து மணல் மேட்டுக்கு கொண்டு வருவதில் அம்மீனவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பர்.
ஏனெனில் அவர்கள் ஒரே வர்க்கத்தினர் அல்லவா…!
வலையில் சிக்கியிருக்கும் பொடி மீன்களை சற்றுப்பெரிய மீன்களை தரம்பிரித்துப்போடும் வேகமான செயல்பாட்டு அழகு அப்பரம்பரைக்கே உரித்தான பாணிபோலும்.
கப்பிட்டல் மகாராஜா குறூப் நிறுவுனர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மரணச் செய்தி ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தாலும், 1980 களில் என் நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது. அற்புதமான சிந்தனையாளர், எத்தனையோ போட்டிகள், பொறாமைகளுக்கு மத்தியில் மகாராஜா நிறுவனத்தைத் திறம்படக் கொண்டு நடத்தியவர். தமிழரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரின் திறமைக்கும் முதலிடம் கொடுத்து, ஒரு குடும்பமாகத் தன்னிடம் பணிபுரிந்த எல்லோரோடும் அன்பாகப் பழகியவர். சுருங்கச் சொன்னால் தமிழரைத் துணிச்சலோடு ‘எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல’ என்று இலங்கையின் தலைநகராம் கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கவைத்தவர். அவரது திடீர் இழப்பு எமக்கு, எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல, பேரினவாதத்தால் உயிர்களும் பறிக்கப்பட்ட மாதம். சொந்த மண்ணிலே நாங்கள் அகதிகளாக்கப்பட்டதும் அப்பொழுதுதான். இந்த இனக்கலவரத்தின் போது, இலங்கையிலே மிகவும் பிரபலமான தமிழர் நிறுவனமான மகாராஜா நிறுவனத்தை அடியோடு வீழ்த்துவதும் பேரினவாதத்தின் முக்கியமான ஒரு நோக்கமாக இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடு பேரினவாதம் அதைச் சாதித்திருந்தது. கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதே அதன் நோக்கமாக இருந்தது. இனக்கலவரத்தின் போது தமிழர்களின் வீட்டு முகவரிகள் காடையர்களுக்கு கொடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது போலவே, தமிழர்களின் நிறுவனங்களும், தேடித்தேடி அழிக்கப்பட்டன. ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற முன்நாள் ஜனாதிபதியின் அறைகூவலுக்குச் செவிசாய்த்த பேரினவாதம் இதை திறம்படச் செய்து முடித்தது. கொழும்பிலும், இரத்மலானையிலும் இருந்த மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்லோன் பைப், ஜோன் பேர்ணிச்சர் போன்ற ஆறு தொழிற்சாலைகளுக்கு மேல் எரியூட்டி அழிக்கப்பட்டன.
என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.
அவர், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பல தரப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாது. இதிகாச காலப் பாத்திரங்களான கர்ணன், பரதன், அத்துடன் நாரதர். முருகன் என்பதோடு மட்டுமல்லாது சாக்கரட்டிஸ்,ஓதெல்லோ போன்றவர்களையும் எங்கள் கண்முன் நிறுத்தியவர்.. நான் திரைப் படப் பட்டதரியாகப் படிப்பதற்குச் சென்ற காலத்தில்,பல பிரசித்தி பெற்ற படங்களும் அதையொட்டிய நாவல்களும். திரைப் படப் படிப்பு சார்ந்த செமினார்களுக்கு எடுக்கப் படுவது வழக்கம்.சத்தியத்ரேயின் 'பதர் பாஞ்சாலி' என்ற இந்திய கலைப் படம் தொடக்கம்,'சிட்டிசன் கேன்' என்ற மிகவும் பிரசித்தமான அமெரிக்கப் படம்வரை நாங்கள் பார்க்கவேண்டும். கலந்துரையாடவேண்டும். கட்டுரைகள் எழுதவேண்டும், செமினார் செய்யவேண்டும். அப்படியானவற்றில், 1899ல் ஜோசப் கொன்றாட் என்பரால் எழுதப்பட்ட 'ஹார்ட் ஒவ் டார்க்னெஸ்' என்ற நாவலை ஒட்டிய செமினாரும் ஒன்று. அது, 'அப்போகலிப்ஸ் நவ்' என்றொரு படமாக 1979ல் பிரான்ஸிஸ் போர்ட் கொப்பலா என்பரால் எடுக்கப் பட்டிருந்தது.இது ஒரு போர் சார்ந்த உளவியல சிக்கல்களைக் காட்டும் படம்.
அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!
'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.
"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."
அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.
‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஒரு தலைவன் தாம் சார்ந்த மக்களுக்கு நல்லதைச் சொல்பவனாக இருக்க வேண்டும்; சொன்ன நல்லதைச் செய்பவனாக இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாதவன், ஒரு சிறந்த தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நல்லனவற்றைச் சொன்னது மட்டுமன்றி, தாம் சொன்ன நல்லனவற்றை நடைமுறைப்படுத்தி, வாழ்ந்து காட்டிய ஒரு தலைமகனை நினைவு கூருவதற்கென்று நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம்.
சராசரி மனிதர்கள் போலன்றி, மாறுபட்ட விதத்தில் சிந்திக்கவும் செயற்படவும் துணிச்சல் பெற்றவர்களால்தான், மனித முன்னேற்றம் சாத்தியமாகின்றது. அத்தகைய சிந்தனைத் தெளிவும், செயற் திறனும் கொண்டவராக வாழ்ந்துவந்த பிரேம்ஜி அவர்கள், சமூகம், இலக்கியம், அரசியல் ஆகிய முக்கிய தளங்களில் ஆற்றிய பணிகள் குறித்துக் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால், இங்கு தரப்பட்ட நேரத்தை மனதிற்கொண்டு எனது கருத்துகளை “பிரேம்ஜியும் நானும்” என மிகச் சிக்கனமாகவும், “பிரேம்ஜியும் அவரது அரசியல் நிலைப்பாடும்” எனச் சற்றே விரிவாகவும் வகைப்படுத்தி உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
பிரேம்ஜி என்றே பெரிதும் அறியப்பட்டு வந்தவரான ஞானசுந்தரம் அவர்களை நான் ஏற்கனவே அறிந்திருந்த போதிலும், 1975ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்போது தான் முதன் முதலாக நேரில் கண்டேன். நன்கு திட்டமிடப்பட்டு அன்றைய தினம் விளைவிக்கப்பட்ட தடையூறுகளைத் தாண்டிக்கடந்த மாநாட்டு ஏற்பாடுகள், துணிச்சலான செயற்பாடுகள், திடமும் தீட்ஷண்யமும் மிகுந்த உரையாடல்கள், இனத்துவ ஒருமைப்பாட்டை இலக்காகக்கொண்டு முன்யோசனையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 12 அம்சத் திட்டங்கள் போன்றன ஊடாக பிரேம்ஜி என்ற ஆளுமையின் பிரமாண்டத்தையும், அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த மனிதர் என்ற உண்மையையும் அன்று நான் நேரில் கண்டுகொண்டேன்.
இன்று , ஜூலை 27, மருத்துவர் இராஜசுந்தரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இலங்கைத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மருத்துவர் இராஜசுந்தரத்துக்கு முக்கியமான, நிலையானதோரிடமுண்டு. அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பன்முகப்பட்டது. 'கட்டடக்கலைஞர்' எஸ்.ஏ.டேவிட்டின் கனவான 'காந்தியச் சமூகம்' என்னும் மானுட விடுதலைக்கான தீர்வுத் திட்டத்தினை வட,கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு அவருடையது. அப்பங்களிப்பு மூலம் அக்காலகட்டத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து வதில் முழுமூச்சுடன் உழைத்தவர் அவர். இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அச்சூழலில் தவிர்க்கமுடியாதவாறு காந்தியம் அமைப்பும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. எல்லைப்புறங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் மேலும் விரிவு படாமலிருக்கவும், எதிர்காலக் குடியேற்றங்களைத் தடை செய்யும் நோக்கிலும் காந்திய அமைப்பு வடகிழக்கின் எல்லைப்பிரதேசங்களில் அதிகமான குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியது. இச்சமயத்தில் காந்திய அமைப்பினுள் சந்ததியாரின் வருகை அவ்வமைப்பினைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டது. பின்னர் காந்திய ஸ்தாபகர் 'டேவிட் ஐயா' , மருத்துவர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காந்தியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டனர். கனடாவில் வாழ்ந்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களும் அவர்களிலொருவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அனுபவங்களைப் பதிவு செய்யும்படி கூறுவேன். அவரும் பதிலுக்குப் பதிவு செய்யப்போவதாகக் கூறுவார். இறுதியில் பதிவு செய்யாமலேயே மறைந்து விட்டார்.