மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (4) - ஈழக்கவி -
நான்கு
நான் யாருக்கும் போதிக்க முடியாது.
ஆனால் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம். - சோக்ரடீஸ்சிந்தனை மலர்ச்சிக்கான பாதையைக் காட்டிய சோக்ரடீஸ் இன் அறிவுத் தேடல் இங்கு அலசப் பட்டுள்ளது. ஒழுக்க விசாரணைகளில் மிகுந்த கவனம் செலுத்திய போதும் அரசியலில் சோக்ரடீஸ் போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை. எனினும் அவருடைய சீர்திருத்தத் திட்டத்தில் அரசியலுக்கும் இடம் இருந்தது. நாட்டின் பொதுச் சேவைகளை அவர் வேண்டுமென்றே புறக்கணித்தார் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கவில்லை. நாட்டுப் பற்றில்லாதவர் எனும் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. ஆனால் தமது மெய்யியல் ஒழுக்கவியல் போதனைகளில் அவர் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் அவர் பதில் தேடினார். சோக்ரடீஸ் தமது சிந்தனைகளை எழுத்து வடிவில் தரவில்லை. எழுதுவதில் அவருக்கு நம்பிக்கையோ ஆர்வமோ இருக்கவில்லை. அவர் காலத்தில் அறிஞர்கள் பலரிடம் இருந்தது போல் நூலகங்களும் அவரிடம் இருக்கவில்லை. பிளேட்டோ, அரிஸ்டோட்டில், எபிக்கூரஸ் முதலானவர்கள் நடத்தி வந்தது போன்ற கல்விக் கூடங்களும் அவருக்குச் சொந்தமானவையாக இருக்கவில்லை. பொதுமக்கள் கூடும் சந்தை, பாதை ஓரம், விளையாட்டரங்கு அல்லது நண்பர்களின் வீடு போன்ற இடங்களில்தாம் அவருடைய கல்விச்சாலைகளாளவும் சிந்தனைக் கூடங்களாகவும் விளங்கின. பொதுவாக அவருடைய உரைகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீதும், மக்களின் சிந்தனை மாற்றங்கள் மீதும் அக்கறை கொணடவையாக இருந்தன. அதேவேளை அவ்வப்போது மெய்யியலாளர்களோடும் அரசியல் வாதிகளோடும் கலைஞர்களோடும் அவர் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துள்ளார். அவருக் கென்று மிக நெருக்கமான தோழர்களும் சீடர்களும் இருந்தனர் இவ்வாறு சோக்ரடீஸ் இன் சிந்தனை மலர்ச்சிக்கான பாதையை நூலாசிரியர் விரிவாக விபரித்துச் செல்கின்றார். ஐந்து பக்கங்களில் இது நீண்டு செல்கின்றது.
சோக்ரடீஸ் புதிதுதேடும் முயற்சியில் மிகுந்த உற்சாகம் காட்டினார். அவர் ஏதென்ஸ் நகரத்து வீதிகளில் முன்னணி மெய்யியலாளர்களின், விஞ்ஞானிகளின் பேச்சுக்களை செவி மடுத்தார். அவர்கள் கூறும் கருத்துகளில் காணப்படும் முரண் பாடுகள் பற்றிச் சிந்தித்தார். இவர்கள் பேசும் பிரச்சினைகள் பற்றித் தாமாகவே சிந்திப்பதற்கும் அவர் தூண்டப்பட்டார். இவ்வகையில் அவரது அறிவு தேடும் ஆர்வமானது படிப்படியாக அதிகரித்துச் சென்றது. சோக்ரடீஸ் காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய அவருடைய சமகாலச் சிந்தனையாளர்களான ஹெராக்கிளிட்டஸ், அனெக்சிமினிஸ், அனக்சகோரஸ், ஆர்ச்சலஸ் போன்றவர்களின் கோடபாடுகளையும் அவர் அறிந்திருந்தார். பிரபஞ்ச வாதியாக அல்லது இயற்கை மெய்யிலாளராக இருந்த ஆர்ச்சலஸ் பற்றி பற்றி சற்று விரிவாக துலக்கியுள்ளார்.