கனடா மகாஜனாக்கல்லூரி & நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -
கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.