இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம் - 1 - ஶ்ரீரஞ்சனி -
- கல்வட்டம் ('ஸ்டோன்ஹெஞ்ச்' - Stonehenge) -
எங்களின் குடும்பப் பெறுமானங்களில் அறத்துக்கு அடுத்ததாக கல்வி மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. பட்டம்பெற்றால்தான் புத்திசாலியா, படிப்பிருந்தால் மட்டும் போதுமா என வைக்கப்படும் தர்க்கங்களில் உண்மை இருந்தாலும்கூட, கல்வித் தகமை எப்போதும் என்னை ஈர்த்திழுப்பதுண்டு. எனவே, இலங்கையிலிருந்து பெறாமகள் ஒருவர் இங்கிலாந்துக்குப் படிக்கப்போகிறார் என்பது எனக்குப் பெரிய விடயமாகத் தெரிந்தது. அதனால், அனுமதி கிடைத்தபோதே, அவவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வேன் என அவவுக்குச் சொல்லியிருந்தேன்.
பேராதனையில் நிகழ்ந்த என் பட்டமளிப்புக்கு யாழ்ப்பாணத்திலிருந்த என் பெற்றோர் வராததால் எனக்கேற்பட்டிருந்த வருத்தம், இலங்கையிலிருந்து லண்டனுக்கு அவவின் பெற்றோர் போவது சாத்தியமில்லை என்பதால் நானாவது அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலை எனக்குத் தந்திருக்கவும்கூடும். எதுவோ அந்தப் பட்டமளிப்பு விழாவுக்காகக் கடந்த ஒக்ரோபரில் லண்டனுக்குப் பயணமாகியிருந்தேன்.
கற்றல் செயல்பாட்டின் அறுவடையைப் பரவசத்துடன் கொண்டாடும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றை ஐரோப்பிய நாடொன்றிலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் London South Bank University வளாகத்துக்குள் கால்பதித்தேன். பட்டமளிப்பு நிகழவிருந்த அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குப் பல வாசல்கள் இருக்கின்றன என்பது மண்டபத்தின் அளவை எதிர்வுகூறப் போதுமானதாக இருந்தது. என் ரிக்கற்றில் குறிக்கப்பட்டிருந்த வாசலைத் தேடி உள்நுழைந்த என்னை முதலில் ஏமாற்றமே வரவேற்றது. அந்தப் பென்னம்பெரிய மண்டபம் வெறிச்சோடிப் போயிருந்தது. பட்டம் பெறவிருந்த சில மாணவர்கள்கூட நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை என்றால் பாருங்களேன்.