- அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நலம்தானே...? உடல் நலத்தில் அவதானமாக இருக்கவும். இங்கு நாம் நலம். தங்கள் பதிவுகளில் தங்களின் வாசிப்பும் யோசிப்பும் பகுதியில் ( 366 ஆவது அங்கம் ) எழுதப்பட்ட குறிப்புகளைப்படித்துவிட்டு, - கடந்த 2019 இல் வெளியான எனது இலங்கையில் பாரதி நூலில் இடம்பெற்ற இரண்டு அங்கங்களை தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி - அன்புடன் , முருகபூபதி -
இலங்கையில் பாரதி - அங்கம் - 10
ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே பாரதியியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். ஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும். ஏராளமான இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே என்ற முடிவுக்கும் வரமுடியும். இலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம் ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். தமிழ்த்தேசியப்பத்திரிகையின் வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.
அதேபோன்று இலக்கியச்சிற்றேடுகளை அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின் வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.
இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்.... இவ்வாறு எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன. பூரணி என்னும் பெயரிலேயே இரண்டு சிற்றிதழ்கள் வந்திருப்பதும் அக்கினிக்குஞ்சு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்தும் சிற்றிதழ்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்துள்ளன.