- இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா -
முகநூலில் எம்.எல்.எம். மன்சூர் ( MLM Mansoor) என்பவரின் இப்பதிவு என் கண்களில் பட்டது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. இவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வேண்டுபவை. அதனால் பகிர்ந்து கொள்கின்றேன்.
தற்போது ஆட்சியிலிருக்கும் அநுரா குமார திசாநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ளன. இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கைகளிலிருந்த ஆட்சி முதன் முறையாக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் கையில் சென்றிருக்கின்றது. மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றம். இதனை இதுவரை அதிகாரத்தைத் தம் கைகளில் வைத்திருந்த தமிழ், சிங்கள அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் பதிவு.
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இனவாதத்தை அநுரா அரசால் பதிலுக்குப் பதில் தோலுரித்து காட்ட முடியும். மேலும் அநுராவின் பலம் அவரது வர்க்கத்துப் பின்னணி. இதனால் தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செயயும் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதையே அம்மக்களும் விரும்புவார்கள். எனவே அவ்வளவு இலகுவாக அநுரா அரசைப் பதவியிலிருந்து கலைக்க முடியாது. அவர்களுக்குப் பின்னால் ஒழுங்காக,அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமொனறு அணி திரண்டு நிற்கிறது.
ஆனால் தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இன்னும் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத நிலையில் இனவாத அரசியலின் தாக்கத்தை அவ்வளவு இலகுவாக நீக்க முடியாது. இது அநுரா அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அநுரா அரசின் பலவீனமாக நான் கருதுவது பொருத்தமற்ற பலர் அவர் அரசில் (தமிழ், சிங்களத் தரப்புகளில்) இருப்பதுதான். இவர்கள் விடயத்தில் முறையான கண்காணிப்பு அவசியம். அவசியம் ஏற்பட்டால் தகுந்தவர்களால் அவர்கள் அகற்றப்படுதலும் அவசியம்.
ஊழல், இனவாத எதிர்ப்பு,பொருளாதாரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி அநுரவின் அரசு பதிவுக்கு வந்துள்ளது. மக்கள் இந்த அரசிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் மாற்றத்தை விரைவாக எதிர்பார்க்கின்றார்கள் என்பது அரசு எதிர் நோக்கும் சவால்களில் ஒன்று. அதை எவ்விதம் வெற்றிகரமாகக் கையாள்கின்றார்கள் என்பது அநுர அரசின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும்.
அண்மையில் யுத்தத்தின் முடிவினை நினைவு கூர்ந்த விடயத்தில் ஜனாதிபதியின் உரையினை முன்வைத்துத் தெற்கில் இனவாத அரசியல் தொடங்கியிருப்பதை இப்பதிவு எடுத்துக் காட்டுகின்றது. அதனால் என் கவனத்தை ஈர்க்கிறது.
மேற்படி பதிவில் பதிவாளர் எம்.எல்.எம். மன்சூர் பினவருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
1. 'போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் 'ரணவிருவா' (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக 'சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.... ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது மட்டுமன்றி, அவர் 'இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு', 'இறைமை' மற்றும் 'பிரிவினைவாத பயங்கரவாதம்' போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்........ இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது"
2. ",இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு 'Paradigm Shift' ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் -
அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க: ".....இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்...................தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ......... தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை........... நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்................ அதில் எந்தத் தவறுமில்லை."
இவை மிகவும் முக்கியமான விடயங்கள். இவை தற்போது தெற்கின் இனவாத அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவல்.
எம்.எல்.எம். மன்சூரின் முழுப்பதிவு கீழேயுள்ளது. முழுமையாக வாசியுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். பதிவுக்கு மின் மன்சூர் இட்டிருக்கும் தலைப்பு - " மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!"
MLM Mansoor முகநூற் பதிவு - மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி! - https://www.facebook.com/mlm.mansoor/posts/pfbid0MAZ5EBPAkVhDL6vVh7YV1QtA4avPLmscx71aHRBaWxm8NwLL82Q3e6SRYNrQTN8Al