ஈழத்திலும் ஐரோப்பாவிலும் நீண்ட காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த, மூத்த பத்திரிகையாளர் 'ஈழநாடு" எஸ். கே. காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா பாரிஸ் மாநகரில் கடந்த மாதம் 25 -ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (25 - 05 - 2025) மாலை சிறப்பாக நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலை இலக்கியப் பத்திரிகைத் துறையினர், சமூக நிறுவனங்களின் பிரிதிநிதிகளெனப் பெருந்தொகையானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் விழா நாயகனின் உறவினர்கள், நண்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.
சுவிஸ் - லவ்சான் நகரசபையின் மூத்த உறுப்பினரும், 'குத்துவிளக்கு" திரைப்பட நாயகனுமான தம்பிப்பிள்ளை நமசிவாயம், மொழிபெயர்ப்பாளர் நிஷா பீரிஸ், எழுத்தாளர் முகுந்தன், நாடக நேசர் எம். அரியநாயகம், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச. வி. கிருபாகரன், பத்திரிகையாளர் என். கே. துரைசிங்கம், எஸ். சஸ்பாநிதி, நடிகர் கே. பி. லோகதாஸ், 'தமிழாலயம்" சி. பாலச்சந்திரன், செ. ஸ்ரீபாஸ்கரன், மஞ்சுளா சுந்தரலிங்கம் ஆகியோருட்படப் பல சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.
வெளிநாடுகளிலிருந்து பத்திரிகைத்துறை நண்பர்கள் பலர் காணொளி மூலம் வழங்கிய வாழ்த்துரைகளும் காண்பிக்கப்பட்டது.
கலை இலக்கியப் பத்திரிகைத்துறையினர், நண்பர்கள் வழங்கிய கட்டுரைகள், படங்கள் அடங்கிய, அதிக பக்கங்கள் கொண்ட, அழகிய அமுதவிழா மலரும் வெளியிடப்பட்டது.
அமுதவிழா மலரை விழாத் தலைவர் வி. ரி. இளங்கோவன் வெளியிடச் சிறப்புப் பிரதிகளை த. நமசிவாயம், இரா. சிறிதரன், சி. பாலச்சந்திரன், இரா. குணபாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கவியரங்கம், வயலின் கச்சேரி, நடன நிகழ்ச்சி ஆகியனவும் விழாவில் இடம்பெற்றன. உலகத் தமிழ்க் கலையகம் ஒழுங்குசெய்த இவ்விழாவினை ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் தொகுத்து வழங்கினார்.
மேலும் சில விழாக் காட்சிகள்...