

எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்). தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம் (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.

- பேராசிரியர் அ.ராமசாமியின் 'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் நாடகவியலாளர் ப்ரசன்னா ராமஸ்வாமி பற்றியதொரு அறிமுகக் கட்டுரை ' நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்' என்னும் தலைப்பில் வெளியாகியிருந்தது. (ஆகஸ்ட் 19, 2017 ) இக்கட்டுரையில் அவர் ப்ரசன்னா ராமஸ்வாமியைத் 'தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி' என்பார். அத்துடன் 'தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி' என்றும் கூறுவார்.
ப்ரசன்னா ராமஸ்வாமி அவர்களைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். என் முகநூல் நண்பர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். அண்மையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அத்துடன் துயரையும் அடைய வைத்திருக்கும். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:
"வலி. இந்த வலியின் கொடுமையிலிருந்து விடுதலை என்று சாவை யாசிப்பது துயரமான நிலை. வாழ்க்கை போல மரணமும் இயல்பாக, விரைவில் நிகழ்ந்து விட அருள் புரிய வேண்டும் தெய்வமே."

'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா - https://www.youtube.com/watch?v=b5vJNf3l63s
ஒரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும்.
மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு. பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.
சமூக, பொருளியல் தாக்கங்களுக்கு உட்படாத உள்ளங்களில் ஏற்படும் காதலென்பதால் பெரும்பாலும் நிறைவேறாவிட்டாலும் வாழ்வு முழுவதும் நினைவுகளில் தொடருமோர் அனுபவமாக நிலைத்து விடுகின்றது அது. அதனைத்தான் இவ்வகையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைக் கேட்பவர்கள் எழுதும் எதிர்வினைகள் வெளிப்படுத்துகின்றன, உதாரணத்துக்கு இப்பாடலை யு டியூப்பில் கேட்டுச் சிலர் எழுதிய எதிர்வினைகளைப் பார்ப்போம்:
இப்பாடலின் சிறந்த வரி 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்'. உளவியல் அடிப்படையில் உண்மையான வரி. ஒருவர் அன்புக்குரியவரை மனப்பூர்வமாக, மனமொன்றி நினைத்தால் அவர் எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வார் என்பது உளவியல் அறிஞர்கள் சிலரின் கருத்து.
சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:
"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே" - பதுமனார் -
நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும். இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட, தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள். 'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேவும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. 'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.
எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.
யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர். தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.
இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்' எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.
இவரது ஓவியங்கள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். Shan Sundaram என்னும் இவரது முகநூற் பக்கத்தில் மேலும் பல ஓவியங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8
கவிஞர் புலமைப்பித்தனின் சிறந்த பாடல்களிலொன்று. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைஞானி, கமலஹாசன் , கே.பாலச்சந்தர் & ஜெமினி கணேசன் கூட்டணியில் உருவான சிறந்த கருத்துகளை உள்வாங்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 'உன்னால் முடியும் தம்பி'.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'உன்னால் முடியும் தம்பி', மற்றும் இந்தப்பாடல் இரண்டையும் கேட்கையில் உற்சாகத்தையும், மானுட வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கப் பாடுபட வேண்டும் என்னும் உணர்வினையும் , உத்வேகத்தினையும் எவரும் அடைவர்.
கமலஹாசன் தனித்துவம் மிக்க தன் நடிப்பின் மூலம் இப்பாடலை நினைவில் நிலைத்திடச் செய்திருக்கின்றார். எஸ்.பி.பியும் வரிகளின் உணர்வுகளை உள்வாங்கிச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். கேட்கையில் நாமும் வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அடைய வைக்கின்றது அவரது குரல்.
இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் அரசியலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தவறுகளையும் விமர்சித்துச் சிந்திக்க வைக்கும் வரிகள் கேட்பவரைச் சிந்திக்க வைப்பதுடன் பொங்கி எழவும் வைக்கின்றன.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சில ஊர்கள் கலைகளுக்குப் புகழ்பெற்றவை. அளவெட்டி இத்தகைய ஊர்களிலொன்று. இன்னுமொரு ஊர் கரவெட்டி. கலைஞர்கள் பலரை, சமூக,அரசியற் செயற்பாட்டாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய ஊர் கரவெட்டி. மார்கசியக்கருத்துகளை உள்வாங்கிய அரசியல் ஆளுமைகள் பலரைத் தந்த ஊர் அது. இந்நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமாரும் கரவெட்டிக்குப் புகழ் சேர்க்கும் கலைஞர்களில் ஒருவர்.
உண்மையில் இக்காணொளி மூலமே இவரைப்பற்றி அறிகின்றேன். இவருனான இந்நேர்காணல் முக்கியமானது. இக்கலைஞரின் உணர்வு பூர்வமான, உளப்பூர்வமான நாடகக் கலையின் மீதுள்ள ஈடுபாட்டை இக்காணொளி வெளிப்படுத்துகின்றது. கரவெட்டியில் 'கலைமதி' நாடக மன்றமொன்றினை நிறுவி , கலைப்பங்களிப்பைச் செய்து வரும் தகவலையும் இக்காணொளி மூலம் அறிந்துகொள்கின்றோம். மேலும் அரிச்சந்திரா, காத்தவராஜன் என்று கூத்துகள் பலவற்றில் நடித்திருக்கின், கலைஞர்கள் பலரை உருவாக்கியிருக்கின்ற தகவல்களையும் அறிந்துகொள்கின்றோம். இக்காணொளியில் அரிச்சந்திரா , காத்தவராயன் கூத்துகளிலிருந்து சில பாடல்களை இவர் பாடும் காட்சிகளையும் காண்கின்றோம்.
பாடலைக் கேட்டுக் களிப்புற - https://www.youtube.com/watch?v=MeH6OeIwhpI
கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு' இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன். திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.
கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி. இக்காணொளியின் இன்னுமொரு சிறப்பு - இதன் ஒளிப்பதிவு. சொற்களுக்கு உயிரூட்டும் , இயற்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஒளிப்பதிவு.
இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர்.
'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை ஈர்த்தவர். இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.
அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு' - https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc
கவிஞர் வேந்தனாரின் மகன் வேந்தனார் இளஞ்சேய். அவரது மகனே இளமைந்தன் இளஞ்சேய். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரைப்பற்றிய குறிப்பொன்றினை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இளமைந்தன் இளஞ்சேய் தன் இசைப்பயணத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.அறுபதுகள், எழுபதுகளில் கண்ணன், அருணா இசைக்குழுப் பாடகர்கள் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் பாடிய பாடல்களிலொன்று இந்தப்பாடல். வேதாவின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், ஜெய்சங்கர் & எல்.விஜயலட்சுமி நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின் 'இரு வல்லவர்கள்'.
அக்காலகட்டம் அழகான ஜெய்சங்கர் 'ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்க'ராகக் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த காலம். இவரும் , விஜயலட்சுமியும் அதிக படங்களில் இணைந்து நடித்த காலகட்டம். - https://www.youtube.com/watch?v=BD8qYBBEf9o

இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.
எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.
இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல்ச் Ye Zulf Kaisi Hai , எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின் உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ? - https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo
நவம்பர் 13 பி.சுசீலாவின் பிறந்ததினம்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
'இசைக்குயில்', 'கான கோகிலா', 'மெல்லிசை அரசி' & 'கான சரஸ்வதி' என்று அழைக்கப்படும் பி.சுசீலா (புலப்பாக்க சுசீலா) தமிழ், தெலுங்கு, கன்னடம், ,மலையாளம், இந்தி, சிங்களம் & சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இந்திய மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் ஐந்து தடவைகள் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். இவர் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து சுமார் 1000 பாடல்களைப் பாடியுள்ளதாக விக்கிபீடியா கூறுகிறது.

அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இசைக்குழுக்களில் இணைந்து பாடிப்புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் ஸ்ரனி சிவானந்தன். இலங்கைப் புகையிரதக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபடியே தன் இசைப்பயணத்தையும் தொடர்ந்தவர் இவர். இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனப் புகழ் ராமதாஸின் 'கோமாளிகள்' திரைப்பட வெற்றியைத்தொடர்து வெளியான 'ஏமாளிகள்' திரைப்படத்தில் ‘வா இந்தப் பக்கம்’ என்னும் பாடலைப் பாடியவர் இவர். 'இலங்கை இந்தியக் கூட்டுத்தாபன'தயாரிப்பான 'நெஞ்சுக்கு நீதி'யிலும் பாடியிருக்கின்றார். இந்தியத் தமிழ்க் கதாநாயகன் ஒருவனுக்காக (நடிகர் ஶ்ரீகாந்த்) முதலில் குரல் கொடுத்த இலங்கைத் தமிழ்ப் பாடகர் இவரே. வேறு யாரும் பாடியிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.

நடிகை சிலுக்கு சிமிதா பற்றி முகநூலில் செய்திகளைப் பார்த்தபின்னர்தான் புரிந்தது இன்று, செப்டம்பர் 23, அவரது நினைவு தினமென்று.
அம்மா கனடாவுக்கு வந்த புதிதில் பாலச்சந்தரின் 'கையளவு மனசு' தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்ப்பா. அதில் கதாநாயகன் பிரகாஸ்ராஜ். நல்ல குணமுள்ள கதாநாயகன். அந்தப்பாத்திரமும், நடிகை கீதாவின் பாத்திரமும் அம்மாவுக்குப் பிடிக்கும்.
சிறந்த நடிகரான பிரகாஸ்ராஜை வில்லனாக்கி விட்டது தமிழ்ச் சினிமா. அதுதான் சிலுக்கு சிமிதாவுக்கும் நடந்தது. சிறந்த நடிகையான சிலுக்கைக் கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது தமிழ்ச் சினிமா.
சிறந்த நடிகர்கள் எந்தப் பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார்கள். பிரகாஸ்ராஜ், சிலுக்கு சிமிதா இருவருமே தமிழ்ச் சினிமா தமக்குத் தந்த வேடங்களில் சிறப்பாக நடித்தார்கள்.

நான் தொலைக்காட்சிச் 'சீரியல்க'ளில் பெரிதும் ஆர்வம் கொண்டவனல்லன். வீட்டில் எந்நேரமும் பார்ப்பார்கள். அதனால் அவ்வப்போது நானும் இலேசாக எட்டிப் பார்ப்பதுண்டு. அவ்விதம் எட்டிப்பார்த்தபோது என்னைக் கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாரிமுத்து. இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'எதிர்நீச்சல்' மூலம்தான்.
அதன் பின்பே இவர் தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநராக, இயக்குநராக, நடிகராக விளங்கியவர் என்பதை அறிந்துகொண்டேன். அண்மையில் வெளியான விஜய், ரஜனி திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
