"பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது" - கவிஞர் வைரமுத்து -\
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க - எஸ்.ஜானகி - https://www.youtube.com/watch?v=eXP2G8ocziU
மானுடப்பிறப்பில் இந்தக் காதல் உணர்வு இருக்கிறதே. இது ஒரு விசித்திரமான அனுபவம். இது ஏன் வருகின்றது, எப்படி வருகின்றது என்பது தெரியாது. ஆனால் வந்தால் இது மானுட வாழ்க்கையையே ஆட்டிப்படைத்து விடுகின்றது. இப்பாடலும் அதைத்தான் கூறுகின்றது.
நடிகர் திலகமென்றாலே உணர்ச்சிகளைக்கொட்டி, வசனங்களைக்கொட்டி நடிக்கும் அவரது திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். வசனங்களைக்குறைத்து, முகபாவங்கள், உடல் அசைவுகள் மூலம் சிறப்பாக அவரது நடிப்புத்திறமையினை வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா இத்திரைப்படத்தில். அவ்வகையில் மறக்க முடியாத சிறந்த திரைப்படமாக இத்திரைப்படம் இரசிகர்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத கானங்கள்தாம்.
பாரதிராஜா, இளையராஜா & வைரமுத்து கூட்டணி தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கூட்டணி. தமிழ் சினிமாவில் கிராமத்தைத் துல்லியமாக, உயிர்த்துடிப்புடன் காட்டிய கூட்டணி. சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகளையும் தோலுரித்துக்காட்டியவை பாரதிராஜாவின் திரைப்படங்கள். ஆனால் அவற்றைக் காதலை அடிநாதமாகக்கொண்டு வெளிப்படுத்தியிருப்பார். அதனால்தான் அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும், பாடல்களும் நெஞ்சில் எப்போதும் வளைய வந்துகொண்டிருக்கின்றன.