தமிழுக்குப் புதிய சொல் `சதிவிரதன்’ – குரு அரவிந்தனின் சிறுகதைத்தொகுதிய முன் வைத்து - கே.எஸ்.சுதாகர் -
தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.
இயற்கையோடு மழை குளிருக்கு இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும் – மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.