அஞ்சலி: எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மலையகத்தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளில் ஒருவர்! - வ.ந.கிரிதரன் -
இலங்கை மலையகத் தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளில் ஒருவராக விளங்கிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (சந்தன்சாமி ஜோசப்) மறைந்து விட்டார். பதிவுகள் , பதிவுகள் வாசகர்கள் மற்றும் என் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
விருதுகள் பலவற்றைத் தனது எழுத்துக்காகப் பெற்றவர். கடந்த 62 வருடங்களாக இவர் எழுதிக்கொண்டிருந்தார். இவரைப்பற்றிய அறிமுகத்தில் விக்கிபீடியா பின்வருமாறு கூறுகின்றது:
"தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்."
தெளிவத்தை ஜோசப் என்றதும் என் ஞாபகத்துக்கு வரும் முதல் நினைவு என் பால்ய காலத்தில் பார்த்த 'மித்திரன் வாரமலர்' பிரதிதான். அப்பொழுதுதான் மித்திரன் வாரமலராக, அதிக பக்கங்களுடன், ஆக்கங்கள் பலவற்றுடன் , அத்தர் மணம் கமகமக்க வெளிவரத்தொடங்கியிருந்தது. அதன் முதலாவது இதழில் வெளியான முதலாவது தொடர்கதையாக தெளிவத்தை ஜோசப்பின் தொடர்கதையொன்று ஆரம்பமாகியிருந்தது இன்னும் நினைவிலுள்ளது. அதனைத்தொடர்ந்து யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்களின் தொடர்கதை வெளிவந்ததது.