நிழலின் நாயகன் : சத்யஜித் ரே! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இயக்குநர் சத்யஜித் ரே நூறாண்டு நினைவுக் கட்டுரை!
"ஆக்ஷன்"
இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது 'இந்திய திரையுலக மேதை' என அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "பதேர் பாஞ்சாலி " திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் நிதி தட்டுப்பாட்டால் பாம்பாய் பெட்டிக்குள் படுத்துக் கொண்டது. அதை எழுப்புமுன் ரேயின் பூர்வீகத்தை சிறிது பார்ப்போமா?
ரேயின் தந்தை வழி தாத்தா ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளரும் கூட. 'சந்தோஷ்' எனும் சிறுவர் இலக்கிய இதழ் வேறு நடத்தி வந்தார். அவர் மகன் சுகுமார் ராய் அனேக சிறுவர் இலக்கியங்கள் படைத்த எழுத்தாளர், விரிவுரையாளர். இந்த கனவுத் தொழில் சாலையில் மே 02, 1921 பிறந்த ரே பல்கலைகளையும் இயற்கையாகவே தன்னகத்தே கொண்டிருந்தார். பல்கலை என்று சொன்னேனா? எண்ணிக் கொள்ளுங்கள்..... எழுத்து, இசை ஈர்ப்பு, ஓவியம், வரைபட வடிவமைப்பு, பதிப்பகத்துறை, விமர்சனம்.....போதுமா? இந்த துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் திறமையும் அவரை திரைப்படத்துறைக்கு இயல்பாகவே இழுத்து வந்ததில் ஆச்சரியமில்லை!