அண்டன் செகாவ்ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்…   செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ்.

பாவெலுக்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் அன்டன்செகாவ் மூன்றாவது மகனாய் பிறந்தார். பாவெல், டாகன்ராக் கிராமத்தில் ஒரு பல சரக்குக்கடை நடத்தி வந்தார். அவருக்கு வயலின் வாசிக்கவும் ஓவியம் தீட்டவும் தெரியும். தனது பிள்ளைகளை அடித்து உதைத்து இம்சிப்பார். கொடூர குணம் கொண்டவர். அவரது சொல்லை சிறிதளவு மீறினாலும் நையப்புடைத்து விடுவார். தனது பிள்ளைகள் சர்ச்சில் சுவிசேஷப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாவெல் விரும்பினார். அதற்காக மகன்களை அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பிப் பாடப் பயிற்சியளிப்பார். தூங்கி வழிந்தால் அடியும் உதையும் கிடைக்கும். கடைக்குட்டியான அன்டனுக்கும் அடிவிழும். இந்தக் கொடூரமான பாட்டுப் பயிற்சிக்கு பாவெல் ஒரு தத்துவ விளக்கமளித்தார். “பாடுவது உடலுக்கு உரமூட்டும் - சர்ச்சுக்குப் போவது ஆத்மாவுக்குத் திட மூட்டும்” என்று அடிக்கடி கூறுவார். அவரது அடாவடி முயற்சியால் இரண்டும் நிகழவில்லை. நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்ட சர்ச்சுக்குப் போகும் பழக்கம் பிள்ளைகளிடம் கடவுள் நம்பிக்கையை வளர்க்கவில்லை. மாறாக அவர்களை மதநம்பிக்கையற்ற நாத்திகர்களாக்கி விட்டது. தந்தையின் கொடூரமான வளர்ப்பினால் மூத்த சகோதரர்கள் இருவரும் குடிகாரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் மாறிப் போனார்கள். இதில் அன்டன் மட்டும் தனிரகமாக இருந்தார்.

பாவெலின் நடத்தையால் பல சரக்குக் கடை நஷ்டமாகி கடன்காரராகிவிட்டார். கடனுக்காக அன்டன் செகாவை ஈடாக கிராமத்துக் கடன் காரர்களிடம் விட்டுவிட்டு குடும்பத்தை மாஸ்கோ வுக்குக் கொண்டு போய்விட்டார். மூன்றாண்டுகள் கிராமத்தில் அடிமை வேலை செய்து கொண்டே படித்தார். பின்பு மாஸ்கோ பள்ளியில் அன்டன் சேர கிராமத்தைவிட்டு வெளியேறினார். 1879ம் ஆண்டு அவருக்கு டாக்டர் படிப்புப் படிக்க நிதியுதவி கிடைத்தது. மருத்துவம் பயிலத் துவங்கினார். தந்தை பாவெல் உழைக்க லாயக்கற்றவராகி விட்டார். மூத்த சகோதரர்கள் பொறுப்பற்றவர் களாக இருந்தனர். இருபத்தைந்து ரூபிள் உபகாரச் சம்பளம் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டே குடும்பத்தையும் அன்டன் கவனிக்க வேண்டியிருந்தது. தனது இருபதாவது வயதில் சிறுகதைகள் எழுதத் துவங்கினர்.

அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார். பீட்டர்ஸ்பர்க்கில் எழுத்தாளர்களுக்குள் போட்டியும் பொறாமைகளும் இருந்தது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாய் தாக்கி எழுதியும் பேசியும் வந்தனர். இதைக் கண்டு செகாவ் பயந்துவிட்டார். அதுவரை தனது மனம் போன போக்கில் எழுதிவந்தவர் கொஞ்சம் திட்டமிட்டு மாற்றிக் கொண்டார். இலக்கிய உணர்வு மேலோங்க எழுத வேண்டுமென்று ஆர்வம் ஏற்பட்டது.

அவரைக் காசநோய் தொற்றிக்கொண்டது. எழுத்துப்பணி குறைந்தது. ஆனால் எழுத்தின் தரம் பிற எழுத்தாளர்கள் போற்றும் அளவுக்கு உயர்ந் திருந்தது. 44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார். செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார்.  “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை. அற்புதமான சிறுகதை எழுத்தாளரின் நாடகத்தை நன்றாக இல்லை என்று சொல்லவும் மனமில்லை. இவர்களுக்கும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர் களுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டு பின்பு கைச்சண்டையாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண் டனர். நாடகம் பெரும் குழப்பத்தில் முடிந்தது.

இரண்டாண்டுகள் கழித்து பீட்டர்ஸ்பர்க் நகரில் இவானோவ் நாடகம் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அரங்கேற்றப்பட்ட செகாவின் நாடகம் படுதோல்வியடைந்தது. அதே ஆண்டில் புகழ்மிக்க சைபீரியப் பயணத்தை தனது முப்பதாவது வயதில் மேற் கொண்டார். பத்தாண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்த அவர் அடிக்கடி ரத்தவாந்தி எடுத்தார். இத்தனை மோசமான உடல்நிலை யோடு பனி உறையும் சைபீரியாவுக்குப் பயண மாவதை அவரது நண்பர்கள் தடுத்துப் பார்த் தனர். அக்காலத்தில் கொடுந்தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு போய் அடைத்து வைக்கும் இடமாக சைபீரியா இருந்தது. ஆனால் செகாவ், கைதிகளைப் பற்றி தகவல்கள் திரட்டப்போவதாய் கூறிப் புறப்பட்டார். போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் அவர் சென்று திரும்பினார்.

பிற்காலத்தில் அவர் எழுதிய விசயங்களில் ஒரே ஒரு கதையைத் தவிர வேறு எதிலும் சைபீரிய அனுபவம் வெளிப்படவில்லை. செகாவ் தனது நிறைவேறாத காதலை மறப்பதற்கே சைபீரியா சென்றார் என்ற கருத்தும் உண்டு. லிடியா என்ற பெண் மீது அவருக்குக் காதல். ஆனால் அவள் திருமணமான பெண். எனினும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அதனால் அவர் எழுதுவது கூடக் குறைந்துவிட்டது. இதனால் அவரது வருவாய் குறைந்துவிட்டது. ஒரு மணமான பெண்ணை எப்படித் திருமணம் செய்ய முடியும் என்று அவர் சிந்திக்கவே யில்லை. சைபீரியா சென்றுவிட்டு அவர் மாஸ்கோவுக்குத் திரும்பிய பிறகும்கூட அவரால் லிடியாவை மறக்க முடியவில்லை. அவளை மூன்று நான்குமுறைதான் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புகளில் கூட இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில்லை. ஒரு நாள் இருவரும் ஒரு ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் இரவு அவர் ரத்தவாந்தி எடுத்தார். லிடியாவை மறுநாள் ஓட்டலில் சந்தித்தபோது அவர்கள் இருவரும் கொஞ்சிக் குலாவவில்லை. லிடியாவை ஏதோ ஒன்றைப் படிக்கச் சொல்லிக் கேட்கும் அளவுக்கே செகாவ் இருந்தார்.அவர் பேசக்கூடாது என்று டாக்டர்கள் தடைபோட்டிருந்தனர். அவர் “உனக்கு மிகவும் நன்றி” என்று ஒரு சீட்டில் எழுதி லிடியாவிடம் கொடுத்துவிட்டு நாளைக்கும் நீ வா என்று மட்டும் கூறினார். ஆனால் லிடியாவின் கணவன் தந்திமேல் தந்தி கொடுத்து அவள் உடனே வந்து சேர வேண்டுமென்று கட்டளையிட்டான். வேறு வழியின்றி லிடியா ஓட்டலைவிட்டு வெளியே வந்தார். லிடியா வெளியே வந்தபோது அங்கு டால்ஸ்டாய் நின்று கொண்டிருந்தார். அவர் செகாவைப் பார்க்க வந்திருந்தார். அவர் எழுதிய அன்னாகரினா நாவல்வந்து அனைவரது இதயங் களிலும் இடம்பிடித்திருந்ததால் லிடியா அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுப் போய் விட்டாள். செகாவின் அடுத்த நாடகமான “கடல் நாரை”யில் லிடியாவைத்தான் கதாநாயகியாக வரித்து எழுதியதாய் கூறப்பட்டது.

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங்கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன. செகாவை ஒரு நாடக மேதையாக உலகுக்கு மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் அறிமுகம் செய்தது. மேலும், அவருக்கு எஞ்சியிருந்த சில ஆண்டுகளில் மணவாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் நடிகையான ஆல்கா நிப்பரை செகாவ் 1901ல் திருமணம் செய்து கொண்டார்.

புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப்பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.

செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் ஆல்கா நிப்பரைக் கதாநாயகியாகக் கொண்டு தொடர்ந்து மேடையேற்றப்பட்டது. செகாவ் அளவற்ற மகிழ்ச்சியோடு இருந்தார். பேடன்வீலர் என்ற இடத்தில் செகாவ் தனது மனைவியுடன் தங்கினார். 1904ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று இருவரும் உல்லாசமாய் பேசிக் கொண்டிருந்தனர். ஆல்கா சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று இரவே செகாவ் டாக்டரை அழைத்து வரும்படி கூறினார். டாக்டர் வந்து சோதித்தபோது அவரிடம் “நான் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். டாக்டர் செகாவுக்கு ஐஸ்கட்டியை வைத்தார். “எதற்கு என் காலியான இதயத்தின் மீது ஐசை” வைக்கிறீர்கள்?” என்று செகாவ் கேட்டார். அதன்பிறகு அவருக்கு நினைவு தவறிவிட்டது. சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார். ஜூலை 2ம்தேதியன்று தனது நாற்பத்தி நான்காவது வயதில் தனது ஆயுளை முடித்துக் கொண்டார்.

ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்றதாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.

டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.

டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய்வதுண்டு. “ஆறு அடி என்பது பிணத்துக்குத்தான். மனிதனுக்கு இந்த உலகம் முழுவதும் போதாது. ஏன்-இந்தப் பிரபஞ்சமே போதாது. இந்த இயற்கை முழுவதுமே உயிர்த்துடிப்புள்ள மனிதனுக்குப் போதாது” என்று ஆறடி நிலம் என்ற கதையை எழுதிய டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய்தார். எனினும் டால்ஸ்டாயைப் போன்று வேறு எவரையும் என்னால் நேசிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க் கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.

செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத் துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண்டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.

செகாவின் பார்வை வித்தியாசமானது. அவர் ஒருமுறை ஹாங்காங் சென்று வந்தார். அதுபற்றி அவரது நண்பர் சுவோரினுக்கு எழுதிய கடிதத்தில் “பிரிட்டிஷ்காரன் காலனி நாடுகளில் மக்களைச் சுரண்டுகிறான் என்று கூக்குரலிடு கிறோம். பிரிட்டிஷ்காரன் சுரண்டுகிறான். அத்துடன் நல்ல சாலைகளை அமைக்கிறான். சுகாதாரமான சாக்கடை வசதிகள் கட்டுகிறான். ரஷ்யாவில் உங்கள் சங்கதி என்ன? நீங்களும்தான் சுரண்டுகிறீர்கள். பதிலுக்கு என்ன தருகிறீர்கள்? “என்று கேட்டார். அதே போல் விஞ்ஞான வளர்ச்சியில் செகாவுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. “விஞ்ஞானம் கற்பதால், வருவதால் மனிதன் கெட்டுப் போவதில்லை. வளர்ச்சிதான் அடைகிறான். இலக்கியமும் விஞ்ஞானமும் கரங்கோர்த்து இணைந்து செல்ல வேண்டியவை யாகும்” என்றார். எமிலிஜோலாவும், டால்ஸ்டாயும் தங்கள் படைப்புகளில் மருத்துவம் பற்றிய பகுதிகளில் தவறாக எழுதியிருப்பதாகவும், அது தனக்கு எரிச்சலூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலக்கியவாதி ஒரு ஆராய்ச்சியாளனைப் போல சரியான விபரங்களை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அற்ப ஆயுளில் காலமாகிவிட்ட செகாவ் தனது வாழ்நாளில் பாதிக்குமேல் எழுதியுள்ளார். அவர் ஒரு டாக்டர் என்றாலும் மருத்துவம் பார்க்காமல் எழுதுவதற்கே தனது வாழ்வை அர்ப் பணித்தார். ஒவ்வொரு முறையும் தன்னைத் திருத்திக் கொள்ளவும், அழகுபடுத்திக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. எழுதிவிட்டு தானே சுயமாக மதிப்பீடு செய்வார். நண்பர்கள், வாசகர்கள் கூறும் கருத்துக்களையும் ஆலோசனை களையும் கவனமாகப் பணிந்து ஏற்றுக் கொள்வார். ஆனால் விமர்சகர்களின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. “நானும் எனது கதைகளின் விமர்சனங்களை இருபத்தைந்தாண்டுகளாகப் படித்து வருகிறேன். ஒருமுறை கூட ஒரு பயனுள்ள கருத்தையோ வார்த்தையோ காணமுடியவில்லை. உழுது கொண்டிருக்கும் குதிரையை உபத்திரப் படுத்தும் ஈயைப் போன்றுதான் விமர்சகர்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரது காதல் வாழ்வும், மணவாழ்வும் மிகவும் கசப்பான முடிவாகவே இருந்தது. முதலில் செகாவ், ஓல்கா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஓல்காவுக்கக் கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் ஓல்கா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு லிடியா என்ற பணக்காரச் சீமாட்டி செகாவைக் காதலித்தார். செகாவும் அவளை மிகவும் நேசித்தார். இடையில் செகாவ் லிடியாவை ஒரு நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் காதல்வயமாகி லிடியா அந்த நண்பனுடன் ஓடிப்போனாள். நண்பனின் இந்தத் துரோகமும், லிடியாவின் ஓடுகாலித்தனமும் செகாவை நிரந்தரமாகப் பாதித்துவிட்டது. லிடியாவால் ஏற்பட்ட மன பாதிப்பிலிருந்துதான் அவர் “நாய்க்காரச் சீமாட்டி” கதையை எழுதியதாய் கூறப்படுகிறது.

செகாவ் ஒரு டாக்டர் என்பது அவருக்கே மறந்துவிடும். அவர் ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை ஒன்றைத் திறந்தார். அது ஏழைகளுக்கு ஓரளவே பயன்பட்டது. எழுதுவதில் மூழ்கியதால் ஏழைகளுக்குப் பயன்தரும் விதத்தில் அவரால் இயங்க முடியவில்லை. செகாவ் மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவை 13 தொகுதி களாக வெளி வந்துள்ளன. அவரது நாட்குறிப்புகளும், கடிதங்களும் தனித்தொகுதிகளாக வெளியாகியுள்ளன. எழுத்துலகில் நீடித்து நிலைக்க விரும்புவோர் அவைகளைத் தேடிப் பிடித்துப் படித்தாக வேண்டும். அவரது நாடகங்களில் இவானோவ், கடல்நாரை, காட்டுப்பேய் ஆகி யவை புகழ்பெற்றவையாகும். தமிழில் வான்கா, பந்தயம், ஆறாவது வார்டு, நாய்க்காரச் சீமாட்டி போன்ற சில கதைகள் மட்டுமே வந்துள்ளன.

செகாவ், பேடன் வீலர் என்ற ஊரில் மரண மடைந்த செய்தி மாஸ்கோவில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது உடல் மாஸ்கோ ரயில் நிலையத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எளிய நடை யில் பரிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகளும் நாடகங்களும் எழுதித் தங்களை மகிழ்வித்த அன்டன் செகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திட மக்கள் ஆயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்.

அப்போது ஜப்பானுடன் ரஷ்யா போரிட்டுக் கொண்டிருந்த காலம். அப்போரில் ஜெனரல் கெல்லர் என்பவர் கொல்லப்பட்டு அவரது சடலம் ரயிலில் வந்தது. ராணுவத்தினர் அந்த உடலிருந்த பெட்டியைச் சுமந்துகொண்டு ராணுவ கீதங்களை இசைத்தபடி சென்றனர். செகாவின் சடலத்தைத்தான் கொண்டு செல்கிறார்கள் என்று நினைத்து மக்கள் கூட்டம் ராணுவ வாத்திய கோஷ்டியின் பின்னால் சென்று கொண்டிருந்தனர். செகாவ் என்ற தங்கள் மாபெரும் எழுத்தாளருக்கு ரஷ்ய அரசு ராணுவ மரியாதை அளிப்பதாக அவர்கள் தவறாகக் கருதிவிட்டனர்.

ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் செகாவின் உடல் “மீன்” என்று குறிக்கப்பட்ட குளிர்பதனப் பெட்டியில் மாஸ்கோ வந்து சேர்ந்தது. விபரம் தெரிந்த எழுபது எண்பது பேர் மட்டுமே அவரது உடல் பின்னால் சென்றனர். இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் தனது வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்து வந்து கொண்டிருந்தார். அவர் ஜெனரல் கெல்லரின் இறுதி ஊர்வலத்திற்காகத் தாமதமாக வந்தவர். தனது மரணத்தில் கூட செகாவ் சிறிது கேலியையும் நகைப்பையும் கலந்துவிட்டார்!

இதை அறிந்த மாக்சிம் கார்க்கி மிகுந்த கோபமடைந்தார். “ஐயோ! பெறற்கரிய இந்த அற்புத மனிதரையா மீன் பெட்டியில் கொண்டு வந்தார்கள்? என் நெஞ்சம் துடிக்கிறது. கதறிக் கதறி அழுது என்னைச் சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு அழுக்குக் கூடையில் எடுத்து வந்தது பற்றி செகாவுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் நமக்கு? நமது ரஷ்ய சமுதாயத்திற்கு? என்னால் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லையே” என்று கதறினார்.

செகாவ் இறந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்று மகத்தான சோவியத் யூனியன் உருவானது. சோவியத் அரசு அமைந்த பின்பு அவருடலை மீண்டும் ஒருமுறை விசேட ராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் உறுப்பினர்களுக்காகத் தனியே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அவரது மனைவி ஆல்கா நிப்பரும் வந்திருந்தார். செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் நடைபெற்றது. கதாநாயகியாக ஆல்காவே நடித்தார். ரஷ்யாவில் கார்க்கியின் “அடி ஆழங்கள்” நாடகத்திற்கு அடுத்தபடியாக மக்களால் விருப்பப்பட்ட நாடகம் செர்ரிப்பழத் தோட்டம்தான் என்று கூறப்படுகிறது.

செகாவின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டம் கூட மனித சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஊழல் தன்மையை இடித்துரைக்கும் அவரது கதை போலத்தான் தோன்றுகிறது. ஒரு போர்வீரனின் சடலத்தோடு மாறாட்டம் நிகழ்ந்ததிலும் ஒரு நியாயம் உள்ளது போலும். ஏனெனில் செகாவின் கடைசி நிமிடங்களில் சுயநினைவின்றி உளறும் போது அவரது வார்த்தைகள் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்ததில் “மஞ்சூரியா- ஐயோ அங்கே என் நாட்டு மக்களை ஜப்பானியர் கொன்று குவிக்கிறார்களே” என்று அவர் புலம்பியது கேட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ராணுவ மரியாதை இதற்குத்தான் போலும்.

செகாவின் 150வது பிறந்த ஆண்டில் புதிய தலைமுறைகள் அவரது படைப்புகளைப் பயிலட்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்