கட்டுரையாளர்: முனைவர். ப. தமிழ்ப்பாவை, துணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை  Retd , ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
உடுமலைப்பேட்டை -


125ம் இதழை கனவு ஏட்டி உள்ளது. பெரிய சாதனை. தமிழ் இதழியல் வரலாறு என்பது கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றிய வண்ணமும் மறைந்தவண்ணமுமாக உள்ளன. 1842 தொடங்கி இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் தமிழ் இதழ்கள் 2500 க்கும் மேற்பட்டன (தமிழ் இதழியல் வரலாறு(1842-1950), ரோஜா முத்தையா நூலகத்தரவுகள்). இவ்விதழ்கள், சிற்றிதழ், பேரிதழ் என்று இரண்டு வகைப்பாடுகளில் அடங்கும். தமிழ் இதழியலின் எண்ணிக்கையிலும், ஆழத்திலும் பரப்பிலும் சிற்றிதழ்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன." சிறுபத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை” (குருசாமி,மா.பா. இதழியல் கலை,ப.1-2) என்று தி.ஜ.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். சிற்றிதழ் என்றும் சீரிதழ் என்றும் சொல்லப்படும் இவ்விதழ் தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்வட்டத்தைச் சென்றடையும் இதழ் ஆகும்.

இச்சிற்றிதழ்கள், கட்டுரை, கருத்துரை, விமர்சனங்கள், திறனாய்வு, துறை ஆய்வு, நேர்காணல்கள், விவாதம், கவிதை ஆகிய பலவகைப்பட்ட உள்ளடக்கங்களுடன் தொடங்கின. பொருளீட்டும் நோக்கம் இல்லாமல் வெளிவருகின்ற இச்சிற்றிதழ்கள் கருத்துச் சுதந்திரம் கொண்டவை. புனிதங்களைக் கட்டுடைப்பதிலும், அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதிலும் சிற்றிதழ் பெரும்பங்கு வகிக்கின்றது. "எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டும் நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்" என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் உலகச் சிற்றிதழ்களின் சங்கத்தலைவர் கவிஞர் விதிலை பிரபா (தமிழ்ச் சிற்றிதழ் - கருத்துருவாக்கத்தில் பங்கு, இணையம்).

                                                            - 'கனவு' ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் -

சிற்றிதழ்கள் தரம்மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தன. இத்தகு சிற்றிதழ்களுக்கெனத் தனியாக வாசகர்கள் உருவானதுடன், வாசகர் அமைப்புகளும் துவக்கப்பட்டன. 1958ஆம் ஆண்டு சி.சு.செல்லப்பா, 'எழுத்து' இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தமிழ்ச் சிற்றிதழ்களின் விதை எனலாம். 'எழுத்து' வழிநின்று பற்பல சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. இலக்கியவட்டம், சதங்கை , சூறாவளி, கசடதபற, வண்ணமயில், படிகள், வைகை, நிகழ், அ, முதலாய ஏராளமான சிற்றிதழ்கள் வந்தன. "சிற்றிதழ் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன எனினும், தனிப்பட்ட மனிதர்களால் தொடங்கப்பெறும் இதழ்கள் சில வெற்றி பெறுவதுமுண்டு. இதழ் நடத்துகின்றவரின் விசால நோக்கும், பிறரது கருத்துகளை மதிக்கும் இயல்பும், திறமையானவர்களின் நட்பையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து பெறக்கூடிய சாதுரியமும், தனது எண்ணங்களையும், கொள்கைகளையும் மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற வறட்டுப்பிடிவாதம் இல்லாத சுபாவமும் பெற்றிருந்தால், அவருடைய பத்திரிகை பலரது ஒத்துழைப்பையும் பெறுவது சாத்தியமாகின்றது (வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ப.2.). இவ்வகையில் 'கனவு' சிற்றிதழின் நிலை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1986ஆம் ஆண்டு செகந்திராபாத்தில் சுப்ரபாரதிமணியன் பணிநிமித்தமாகத் தங்கியிருந்தபோது கண்ட இலக்கியக் கனவு இதழாக வெளிவந்தது. இது பாரதி கண்ட கனவின் எச்சம் என்கின்றார் சுப்ரபாரதிமணியன் ('பாரதியின் நிறைவு பெறாத சுயசரிதையின் பெயர்’ கனவு'சுப்ரபாரதிமணியன், கனவு இதழ் தொகுப்பு தொகுப்புரை) பம்பாய் தமிழ்ச்சங்கத்திலிருந்து ஏடு' கேரளதிருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்திலிருந்து 'கேரளத்தமிழ்' என்பன தவிர தமிழில் இலக்கிய இதழ்கள் இல்லாத நிலையை (சுப்ரபாரதிமணியன், கனவு இதழ் தொகுப்பு, தொகுப்புரை) 'கனவு' இதழ் மாற்றியமைத்தது. எண்வழி இதழாகத் தொடங்கப்பெற்ற இவ்விதழ் மாத இதழாக செகந்திராபாத் தமிழர்களின் சிறப்பினை, இளைஞர்களின் எழுச்சிக்குரலைப் பதிவு செய்தது. 1986 தொடங்கி ஆறுமாதங்கள் வரை மாதம் ஒன்று வீதம் வெளிவந்த 'கனவு' இதழ் வரவேற்பின்மை காரணமாகவும், ஆசிரியர் தன் கைப்பணத்தைச் செலவு செய்யவேண்டியிருந்ததாலும், பின்னர் காலாண்டிதழாக மாறி வெளிவந்து கொண்டுள்ளது. செகந்திராபாத் தமிழ் இளைஞர்களின் ஆரம்ப முயற்சிக் கவிதைகள், அங்குள்ள தமிழ்ச்சமுகவியலி தென்படும் விசித்திரங்கள், தமிழர்களின் வாழ்க்கைபற்றிய சில சித்திரங்களைக் கொண்டதாகக் கனவு இதழின் தொடக்ககால இதழ்கள் இருந்தன.

பல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகள் இவ்விதழ் களில் இடம்பெற்றுள்ளன. ‘........ ஒரு நல்ல சிறுகதையையோ, கவிதையையோ, சிறுபத்திரிகைகளில் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அதிலும் கவிதைகளின் நிலைதான் கவலைக்குரியது. இடை வெளியை நிரப்ப மட்டுமே கவிதைகள் பயன்படுகின்றன” (சிற்றிதழ் இயக்கம், கவிதையில் எஞ்சும் காலச்சுவடுகள், இணையம்) என்ற குறையைப்போக்கும்வகையில் இலக்கியக் கட்டுரை, சிறுகதை, கவிதைகள், நாவல், ஆவணப்படம், புத்தக மதிப்புரை, குறும்படத் திறனாய்வு, நாடகம், திரைப்படம் நேர்காணல் எனப் பெரும் பான்மையும் படைப்பிலக்கியங்களில் ஆர்வம் காட்டி நிற்கின்றது கனவு. சிற்றிதழின் வெற்றிக்கு படைப்புத் தேர்வும், தொகுப்பு முயற்சியும் தான் முதலிடம் வகுக்கும். வெகுஜன இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இருக்கிற வேறுபாட்டில் முக்கியமானது ஆழமும் தீவிரமும் சார்ந்த கருத்துவெளிப்பாட்டு வாய்ப்பு" (சிற்றிதழ் இயக்கம், தூக்க நினைத்த கோவர்த்தனகிரி, இணையம்) என்கிற பழ. அதியமானின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் கவனம், அக்கறை, நேர்த்தியான தயாரிப்பு என இம்மூன்றிலும் 'கனவு' இதழ் சிறந்து விளங்குகின்றது.

தலையங்கம் இதழின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தலையங்கத்தின் சமுதாயப்பின்னணியை நினைத்துப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் விளங்கும்.......... எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம் என்பது போல தலையங்கம் இதழில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது (குருசாமி,மா.பா. இதழியல் கலை,ப.252) என்பது பொதுநியதி. எனினும், 'கனவு இதழில் தலையங்கம் இடம்பெற வில்லை. மாறாக, ஒவ்வொரு இதழிலும் முகப்பு அட்டை, ஏதேனும் ஒருவகையில் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக , பிகாஸோ, பிகாஸோவின் 122 ஓவியங்கள், சிற்பங்கள், சமீபத்தில் தில்லியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசியாவில் பிகாஸோவின் ஓவியங்கள் கண்காட்சியாக்கப்படுவதும் இதுவே முதல்தரம் ('கனவு'-எண்.38,ஜனவரி 2002) என்ற முன் அட்டை ஓவியம் பற்றிய செய்தி உள்ளே தரப்பட்டுள்ளது குறிக்கத்தக்கது. பெரீஸ் காட்டும் இலங்கையின் ஆன்மா பற்றிய தி.சு.சதாசிவத்தின் கட்டுரைக்கிணங்க, சிங்கள திரைப்பட இயக்குநர் டாக்டர். வெஸ்டர் ஜேம்ஸ் பெரீஸ் மற்றும் அவரது 'நிதானம்' பட நாயகியின் படம் முகப்புஓவியமாக வெளிவந்துள்ளது ('கனவு' - எண் 42/43,மார்ச் 2003). இந்து முஸ்லீம் பிரச்சனையும், சினிமா என்னும் காட்சி ஊடகமும் என்ற யமுனா ராஜேந்திரனின் கட்டுரைக்கிணங்க, முன் அட்டையில் ஷியாம் பெனகலின் மம்மோ திரைப்படக்காட்சி இடம் பெற்றுள்ளது ('கனவ - எண்.41, செப் 2002). சில இதழ்களில் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. தூரிகாவின் ஓவியம் ('கனவு' - எண் 66,மே2011) இடம்பெற்றுள்ளது. தூங்கிகள் என்ற ஆறுமுகத்தின் முழுநாடகம் உள்ளடக்கத்தில் இருக்க, முன் அட்டை துங்கிகள் நாடகக் காட்சியைப் பிரதிபலிக்கின்றது ('கனவு' - எண் 39/40, மே 2002).

கனவு இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் இலக்கியம் சார்ந்தவை, சமூகவியல் சார்ந்தவை, படைப்பிலக்கியம் சார்ந்தவை, திரைப்படம் சார்ந்தவை என ஒவ்வொன்றும் தனிச் சிறப்புடை யனவாகத் திகழ்கின்றன. பாவண்ணன், ராஜமார்த்தாண்டன், கோ. கேசவன், ஞானி, அ.மார்க்ஸ், பாலா, பொன்னீலன், சுஜாதா, தமிழ்நாடன், வல்லிக்கண்ணன், சூத்ரதாரி,என மிகச்சிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கிய முயற்சிகளைக் 'கனவு' நவம் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றது. (சுப்ரபாரதிமணியன், 'கனவு' இதழ் தொகுப்பு.ப.23). ஐரோப்பிய தமிழ் அரங்கு சில குறிப்புகள் குறித்து முத்தையாபிள்ளை நித்தியானந்தன் (சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ இதழ் தொகுப்பு, ப.60) பாரீஸிலிருந்து எழுதுகின்றார். தழுவலும் தமிழ் மேடையும் பற்றி சி. சிவசேகரம் (மேற்படி, ப.66) லண்டனிலிருந்து எழுதுகின்றார். பின்நவீனத்துவம் தேசிய சோசலிசம், கலாச்சாரச் சார்புவாதம் குறித்து ரேடிகல் பிலாஸபி இஜாஸ் அகமதுடன் உரையாடல் நிகழ்த்தியதை தமிழில் கேயார் கட்டுரை (மேற்படி, ப.178) விளக்குகிறது. அனைத்துக் கட்டுரைகளும் வெவ்வேறு தளங்களில் மிகச்சிறந்த திறனாய்வுக் கட்டுரைகளாக அமைந்துள்ளன.

தமிழ்மக்கள் அதிக கவனம் செலுத்தாத உலகத் திரைப் படங்கள் பற்றிய அரிய தகவல்களையும் தந்து கொண்டிருக்கின்றார் சுப்ரபாரதிமணியன். இக்கூற்றிற்கிணங்க மலையாள சினிமா, ஆறாவது சர்வதேசதிரைப்பட விழா ('கனவு'- எண்36,2001), அர்ஜென்டினா எதிர்பாலியல் இயக்குநர் ஜோர்ஜ் பொலாகோவின் திரைப்படங்கள் பற்றிய விஸ்வாமித்திரன் கட்டுரை ('கனவு' - எண்42/43 மார்ச் 2003) இந்துமுஸ்லீம் உடைகளும், சினிமா என்னும் காட்சி ஊடகமும் பற்றிய யமுனாராசேந்திரன் கட்டுரை ('கனவு' - எண்41, செப். 2002)காலம் என்ற கருதுகோள் மற்றும் திரைப்பட வெளிப்பாட்டில் அதன்பயன்பாடு பற்றி சித்தார்த்தாவின் கட்டுரை ('கனவு' - எண்64, மார்ச் 2010) என உலகத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. ஜெயாவும் எல்லியும் என்ற கட்டுரையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 14ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான 'ஸ்வர்ண சக்கரம்' விருதினைப் பெற்ற ஜெர்மல் என்ற இந்தோனேசியபடமும், 'அபவுட் எல்லி' என்ற ஈரான் படமும் பற்றிய செய்திகளைத் தமிழில் தந்திருக்கின்றார் சுப்ரபாரதிமணியன் ('கனவு' - எண் 64, மார்ச் 2010).

'ஷாஜியின் தோளில் அரவிந்தனின் கை' என்ற எஸ். ஜெயச்சந்திரன் நாயரின் கட்டுரை ('கனவு'- எண்35, நவம்பர் 2000) கேரள இயக்குநர் ஷாஜியின் சாதனைகளை அலசுகின்றது. அசோகமித்திரனின் திரையுலக கதாபாத்திரங்கள் பற்றியும், உலகத்திரைப்பட விழா சலனங்களும் திகைப்பும் பற்றியும் ஆர்.பி.ராஜநாயகம், அலை ஓய்கிறதா? என்ற தலைப்பில் ஈரானிய திரைப்படங்கள் சமீப காலங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆதிக்கம் செலுத்துவது பற்றி யோகநாதன், தங்கள் நாட்டில் பின்பற்றப்படும் தணிக்கைமுறை காரணமாக ஈரானிய திரைப்பட இயக்குநர்கள் படும் தொல்லைகள் குறித்து நாங்கள் நாட்டைவிட்டுக் கிளம்ப அவர்கள் விரும்புகின்றனர் என்ற தலைப்பில் டான்டைலூஸ் எழுதிய கட்டுரையைத் தமிழில் தந்துள்ள ப.ஜீவகாருண்யன் என சர்வதேச திரைப்படங்கள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் ('கனவு'- எண் 49/50 பிப்ரவரி 2005) அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. கேரள சர்வதேச திரைப்பட விழாக்களுக்குத் தவறாமல் செல்லும் சுப்ரபாரதிமணியன் இக்கட்டுரைகளைப் பெறுவதிலும் தருவதிலும் அதிக அக்கறை காட்டி வருகின்றார். இதனைக் காஞ்சீவரம் கசப்பான அனுபவம் என்ற கட்டுரையில் ('கனவு'- எண் 63, அக்டோபர் 2009) தெரிவித்துள்ளார்.

இவையன்றி குறும்படங்கள் பற்றிய திறனாய்வினையும் ' கனவு’ இதழ் சிறப்பான முறையில் அளித்து வருகின்றது. இவ்வகையில் மணிமேகலை நாகலிங்கத்தின் தனிமனித ஒழுக்கம் பேசும் ‘தத்துவத்'த்தா, மில் முதலாளிகளின் பெண் தொழிலாளர்களுக்கான சுமங்கலி திட்டத்தின் ஏமாற்று வேலையைப் பறைசாற்றும் சுப்ரபாரதிமணியனின் கமங்கலி, சிட்டுக்குருவிகளின் இருப்பு தொலைதலைப் பேசும் கோவை சதாசிவத்தின் சிட்டுக் குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை, வட்டிக் கொடுமையைச் சித்திரிக்கும் ஜோதிகுமாரின் வறுமையின் கனவு மாணவர்களைப் பற்றிய மாணவனின் நிலை சொல்லும் ராகுல் நக்டாவின் தூரம் அதிகமில்லை, விவசாயிகளின் நிலை சொல்லும் து.கோ.பிரபாகரனின் தக்காளி, ஏரிகள், குளங்கள் அழிந்து வருவதைப்பற்றிச் சொல்லும் சொர்ணபாரதியின் கொஞ்சம் கொஞ்சமாய்..., மரங்கள் வெட்டப்படுவதின் வலியைச் சொல்லும் தி.சின்ராஜின் மரம்.... மரம் அறிய ஆவல் என்று பல குறும்படங்கள் பற்றிய திறனாய்வையும் அறிமுகத்தையும் 'கனவு' இதழின் வழி பெற இயலுகின்றது ('கனவு' எண் 63, அக்டோபர் 2009).

மொழிபெயர்ப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் கிடைத்தற்கரியன. மைத்ரேயிதேவி எழுதியுள்ள வங்காளி நாவல் தமிழில் கொல்லப்படுவதில்லை என்ற தலைப்பில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில் சாகித்ய அகாதெமி வெளியீடாக வந்துள்ளது (சுப்ரபாரதிமணியன், கனவு இதழ் தொகுப்பு. 1.505). கன்னடத்தில் இளையதலைமுறை எழுத்தாளரான தேவனூரு மகாதேவ தன் இரண்டாவது நாவலான "குஸீம்பாலை”க்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார். அந்நாவலின் முதல் அத்தியாயம் பாவண்ணனால் 'கனவு' வாசகர்களுக்காக மொழி பெயர்த்து தரப்பட்டுள்ளது என்ற அறிமுகத்துடன் தொடங்குகின்றது, இந்நாவலின் மொழிபெயர்ப்பு (மேற்படி,ப.522). குரோசெஜ்தான் பல்யூஜிக் எழுதிய காற்று கூறியதாகக் கூறும் சர்போக்ரோசியன் கதையொன்றனை மலர்களும் மகாராணியும் என்ற பெயரில் தமிழில் தி.சு.சதாசிவம் தந்துள்ளார்(மேற்படி,ப.529). பி.கெ.நாயரின் திரைப் படங்களும் இலக்கியங்களும் ஒன்று என்பது குறித்த கட்டுரையைத் தமிழில் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்துள்ளார் (மேற்படி,ப.536)..

கவிதைகள் பகுதியில் க.நா.சு., பசுவய்யா, வ.ஐ.ச.ஜெயபாலன், நகுலன், பழமலை, பிரம்மராஜன், ஜெயமோகன், புவியரசு, கல்யாண்ஜி, தேவதேவன், பாவண்ணன், இளையபாரதி, மகுடேசுவரன், சுபமுகி போன்றோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவையன்றி, வரவரராவ் எழுதிய சூரியனைக் காதலிக்கிறேன் என்ற கவிதை தமிழில் இளம்பாரதியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (சுப்ரபாரதிமணியன், கனவு இதழ்தொகுப்பு, ப.641). நாங்கள் விரும்பியதில்லை என்ற தலைப்பில் இந்திக் கவிதையின் மொழிபெயர்ப்பை தாரிப்குமார் தந்துள்ளார் (மேற்படி, ப.643). திரும்புதல் என்ற தலைப்பில் ஸ்ரீஜன் சென்னின் வங்காளக் கவிதையும், உயிர் உருகும் பாம்பு என்ற தலைப்பில் தேஜ்சிங் ஜோதாவின் ராஜஸ்தானி கவிதையும், இனிப்பு என்ற பெயரில் ஆற்றூர் ரவிவர்மாவின் மலையாளக் கவிதையும் மொழி பெயர்ப்புக் கவிதைகளாகக் கனவு இதழில் இடம் பெற்றுள்ளன.

சிறுகதைகளுக்கும் போதுமான கொடுக்கப்பட்டுள்ளது. அசோகமித்திரன், சா.கந்தசாமி, பிரமிள், நகுலன், சி.ஆர்.ரவீந்திரன், ஜெயமோகன், சுப்ரபாரதிமணியன், நாஞ்சில்நாடன், எஸ்.ராம கிருஷ்ணன், க்ருஷாங்கினி, தாண்டவக்கோன் என சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் அற்புதமான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் மட்டும் அல்லாது பிறமொழிகளில் வெளிவந்த சிறந்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகளும் கனவு இதழை அணி செய்கின்றன. ஏணஸ்ட் ஹெமிங்வே எழுதிய அமெரிக்கக்கதை சுத்தமானதும், ஒளிமயமானதுமான ஓர் இடம் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது (சுப்ரபாரதிமணியன், கனவுஇதழ்தொகுப்பு, ப.441).

புதிய புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதிலும் முனைந்து முன்நிற்கின்றது 'கனவு’. பாரதி வசந்தனின் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற புதினம் மட்பாண்டத் தொழிலாளர்களைப்பற்றி வெளிவந்துள்ளது. இது பற்றிய திறனாய்வினைத் (‘கனவு’ - எண் 64, மார்ச் 2010) தமிழ்நதி எழுதியுள்ளார். மேலும் இவ்விதழில் நகரத்திற்கு வெளியே என்ற விஜயமகேந்திரனின் சிறுகதைகளை ஆங்கரை பைரவி என்பவர் திறனாய்ந்துள்ளார். சிலவற்றில் புத்தகம் என்றும் ('கனவு'- எண் 63, அக்டோபர் 2009), சிலவற்றில் புதிய புத்தகங்கள் என்றும் ('கனவு'- எண் 64,மார்ச் 2010, இதழ் 49/50, பிப்ரவரி 2005) சிலவற்றில் நூல் மதிப்புரைகள் என்றும் ('கனவு' எண்35, நவம்பர் 2000) பல்வேறு பெயர்களில் இடம் பெற்றிருந் தாலும், கனவு இதழ் சிறந்த திறனாய்வுகளை வழங்கி வருகின்றது. நூல் கிடைக்குமிடம் பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளதால், நூல் வாங்க நினைப்பருக்கு உடனடிப் பயன் தரவல்லதாக உள்ளது.

இவ் ஆய்வின் மூலம் ‘கனவு’ இதழ் சிறப்பான உள்ளடக்கத்துடன் இலக்கிய இதழாக, படைப்பிலக்கியத்தினைப் பேணும் வகையில் இன்றளவும் செயல்பட்டு வருவதை உணர இயலுகின்றது. கனவு இதழைத் திறம்பட நடத்திவரும் திரு.சுப்ரபாரதிமணியன் படைப்பாளராகத் திகழ்வதால், இது சாத்தியமாகின்றது. விளம்பரங்கள் இல்லாத சிற்றிதழைக் காண்பது அரிது. ஆனால் கனவு இதழ் விளம்பரங்கள் இல்லாமல் வெளிவந்து கொண்டிருப்பது இலக்கிய உலகில் புதுமை எனலாம். 

மொழி பெயர்ப்புகளுக்கும், பிற கட்டுரைகளுக்கும் மூலநூல் பற்றிய விவரங்கள் இருப்பின் இவ்விதழ் பற்றி ஆய்வு செய்வோர்க்கு உதவும். இவ்விதழில் அமைந்துள்ள கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தனித்தனியே ஆய்வு செய்யத்தக்கன.

'கனவு' இதழ் தொடக்கம் முதல் இன்று வரை நிலைப்பாடு, செயலாற்றல், வெளிப்பாட்டுத்திறன், கட்டுக்கோப்பு எனப் பல்வேறு சிறப்புகளுடன் வெளிவந்துகொண்டிருக்கின்றது. நண்பர்களின் ஒத்துழைப்போடு சுப்ரபாரதிமணியன் என்ற தனிமனித ஆளுமையில் இயங்கிக்கொண்டிருக்கும் 'கனவு' விடாப்பிடியான அவரது முயற்சியையும், தன்னம்பிக்கையையும் தடம் பதித்துச் செல்கின்றது. ஒரு சிற்றிதழ் வாசகன் எதிர்பார்த்தே இராத அளவில் உலகசினிமா, மொழிபெயர்ப்பு, குறும்படங்கள் என்று புத்தம் புதிதான பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்ற 'கனவு' இதழ் இயன்றவரை அனைத்தையும் புதுமைமாறாமல் அளித்துவருவது பாராட்டிற்குரியது. கனவு இதழ் இதழியல் வரலாற்றில் தனக்கென தனித்த நிலைத்த இடம் பிடித்திருப்பதோடு, பேரிதழ்களும் பெற்றிராத பல இலக்கியச் சிறப்புகளையும், சிறந்த இலக்குகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது. உலகறிந்த ஓர் எழுத்தாளராகத் தான் இருந்தபோதும், தன் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்றவர் படைப்புகளை வெளியிடு வதில் உற்சாகமும், ஆர்வமும் கொண்டு ஆசிரியர் செயல்படுகின்ற காரணத்தால், ஓய்வின்றி தங்கு தடையின்றிப் பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளப் பெருக்காய் கனவு திகழ்கின்றது. பாரதி கண்ட கனவு பாதியிலே நின்றாலும், சுப்ரபாரதிமணியன் கண்டு கொண்டிருக்கும் 'கனவு' தொடரும், முழுமை பெற்று என்றும் வாழும், இலக்கிய வாசகர்களுக்கு இனிமை சேர்க்கும்.

"1987-இல் பிறந்து நல்லமுறையில் வளர்ந்து இப்பவும் வந்து கொண்டிருக்கின்ற இலக்கிய இதழே கனவு. சுப்ரபாரதிமணியன் செகந்திராபாத்திலிருந்து இக்காலாண்டிதழை நடத்திவருகின்றார். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், பாராட்டப்பட வேண்டிய விதத்தில் 'கனவு ஆண்டு மலர் வெளியிடப்படுகின்றது. சிறுகதைமலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ், கட்டுரைச்சிறப்பிதழ் , என்றெல்லாம் 'கனவு இதழ்கள் மலர்ச்சி பெற்றுள்ளன. படைப் பிலக்கியத்திற்கு 'கனவு' நல்ல தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றது (வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ப.341.) என்ற கூற்று உண்மையாகியுள்ளதை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இக் "கனவு" கலையாமல் வாழ்ந்துகொண்டிருப்பதைக் கொண்டு உணர இயலுகின்றது. ஓர் சிற்றிதழை இலக்கியத் தரத்துடன் உலகளாவிய நிலையில் கொண்டு சென்று, படிப்பாளிகளின் இலக்கியரசனைக்கு வித்திடும் முயற்சியை சுப்ரபாரதிமணியன் வெகுகாலமாக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றார்.

Kanavu : Subrabharathimanian , 8/2635  Pandian Nagar, Tiruppur 641602 , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்... 09486101003

துணைநூற்பட்டியல்

1.  குருசாமி,மா.பா., இதழியல் கலை, தேமொழிபதிப்பகம், திருச்செந்தூர்,முதல்பதிப்பு, 1988. 
2.  சுப்ரபாரதிமணியன், கனவு (இதழ் தொகுப்பு), காவ்யா, முதல்பதிப்பு 2008. 
3.  சுப்ரபாரதிமணியன், கனவு இதழ்கள் - எண் - 35, 2000-36, 2001 - 39/40, 2002 41, 2002 - 42/43, 2003 - 49/50, 2005-63, 2009 - 64, 2010 - 66,2011.
4. வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணைப் பதிப்பகம், முதற்பதிப்பு, 1991.
5. வல்லிக்கண்ணன், தமிழிச்சிற்றிதழ் - கட்டற்றகலைக் களஞ்சியமான விக்கிபீடியா, இணையம்.

பதிவுகளுக்கு அனுப்பியவர் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்