லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
கலாநிதி ஜெயந்தி யோகராஜாவுடன் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைந்து ஆரம்பித்த ‘சாஸ்வதம்’ என்ற நாட்டிய அமைப்பு, அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
பிரதம விருந்தினர்களாக பாரதியவித்ய பவனின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீ நேக்கா நாயகர் அவர்களும், கலாமண்டலம் பாபறா நந்தகுமார், மற்றும் கலாமண்டலம் நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீ ஜெயந்தினி ஸ்ரீகரக்குருக்கள், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்தியா, கங்கேரி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து சிறப்பு நடனங்களை வழங்கியமையைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ரூபேஷ் கேஷி, சமிக்ஷா திவாகர், சுருதி பாக்கியராஜா போன்ற மற்றும் சில நாட்டியத் தாரகைகள் வித்தியாசமான கோணங்களில் தமது நாட்டியத் திறமையை வெளிக்காட்டி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
'சாஸ்வதம்’ நிறுவனரான கலாநிதி ஜெயந்தி யோகராஜா அவர்களும் தனது நாட்டியத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். ஒவ்வொருவரின் நாட்டிய வெளிப்பாடுகளும்; உணர்ச்சிகளை அழகாகச் சித்தரிப்பதிலும், வெளியை மாறி மாறிச் சுருக்கவும் விரிவடையவும் செய்யும் அந்தக் கலையின் மாயத்தை அனைவரும் அங்கே வியாபித்துக் காட்டியிருந்தார்கள். நாட்டியத்துக்குரிய முக்கியத்துவத்தை ரசிகர்கள் உணர்வதை அங்கே நாம் அவதானிக்க முடிந்தது.
பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்தவர்களான பாரதிய வித்திய பவனின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்ரீ நேக்கா நாயரா, கதகளி நாட்டியக் கலைஞர் கலாமண்டலம் நந்தகுமார், கதகளி நாட்டியக் கலையின் ஓவியர் பாபறா நந்தகுமார் ஆகியோருக்கு ‘சாஸ்வதம்’ விசேட விருதுகள் வழங்கி கௌரவித்தமை மேலும் சிறப்பாக இருந்தது.
பிரதம விருந்தினர்கள் அனைவரும் அன்றைய நாட்டிய நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தி தமது உரைகளை வழங்கியதோடு தொடர்;ந்தும் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிச்சிப்படுத்த வேண்டுமென வாழ்த்தி நின்றார்கள். ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்களும் தனது சிறப்புரையை நாட்டியத் தாரகைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் வழங்கியதோடு, ‘சாஸ்வதம்’ நிகழ்வை முன்னெடுக்கும் கலாநிதி ஜெயந்தி யோகராஜா, ஸ்ரீமதி பவித்திரா சிவயோகம் மற்றும் அங்கத்தினர்களையும் பாராட்டிப் பேசியிருந்தார். நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் தொகுத்தளிதார் சஸ்கியா யோகராஜா கிஷான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.