பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.
பெண்கள் பலம்:
ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
„நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்“
என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது.
மனிதர்களுக்கு தாம் என்ன இனம் என்று அடையாளத்தை தருவதே தாய் தான். உதாரணமாக மிருகக்காட்சிச் சாலையிலே பணி செய்கின்ற ஒரு பெண்ணுக்குப் பிள்ளைகள் இல்லை. ஒரு குரங்கு குட்டியை எடுத்துப் பிள்ளை போல் வளர்த்தார். அந்த குரங்கு குட்டி மிகச் சிறப்பாகப் படங்கள் வரையக்கூடிய தன்மை உடையதாக இருந்தது. ஒரு மனித பெண்ணோடு வளர்க்கப்பட்ட குரங்கு தன்னை மனிதனாகவே நினைத்தது. சிம்பன்சி பெண்களை அந்த குரங்குக்குப் பிடிக்கவில்லை. அவற்றுடன் பழகுவதற்கு அது விரும்பவில்லை. ஆகவே என்ன இனம் என்று அடையாளத்தை ஏற்படுத்துவது கூட தாயே தான். எந்த இனமோ அந்த இனத்திலேயே துணை தேடுவது உயிரினங்களில் களவியல் லாஜிக்.
அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணே தன்னுடைய கணவனைத் தெரிவு செய்கின்றாள். காட்டுவாசிப் பெண் காம சுகம் விகிதத்தை வைத்துத்தான் ஆண்களைத் தெரிவு செய்தாள். குகை வாசியான பெண் வேட்டுவ வீரியத்தை வைத்து ஆண்களை தெரிவு செய்தாள். ஆதிவாசியான பெண் பாதுகாப்பு விகிதத்தை வைத்து ஆண்களைத் தெரிவு செய்தாள். இளவட்டக்கல்லைத் தூக்கித் திருமணம் செய்தது. சீதையை மணம் முடிப்பதற்காக சிவதனுசு வில்லை நாண் பூட்டி உடைத்தல் வீரமுடைய ஆண்மகளைத் தெரிவு செய்தமைக்கு அடையாளம். ஆரம்ப நாகரீக பெண் அறிவு விகிதத்தை வைத்து ஆணின் செல்வாக்கு செல்வத்தை வைத்து தேர்வு செய்தாள். ஆனால் இன்று பெண்கள் அந்தஸ்துள்ள ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்தாலேயே அவனுடைய உச்சகட்ட அந்தஸ்தைக் கொண்டு பிள்ளைகளை வளர்த்த ஆளாக்க முடியும் என்று நம்புகின்றாள். ஆனால், பொதுவாகத் தன்னுடைய வாழ்க்கையை சுயமாக வாழ முடியாத ஆண்களை எந்தப் பெண்களும் விரும்புவதில்லை. ஆனால், சில ஆண்கள் யாரையாவது தங்கி வாழுவார்கள். அம்மா சொல்வதைத்தான் கேட்பார்கள். இல்லையென்றால், மனைவியின் பேச்சுக்கு அடிமையாக இருப்பார்கள். இந்த வகையான ஆண்களை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. இதனாலேயே விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. இப்போது ஆண்களுடைய ஆண்மையைக் கொடுக்கின்ற Testosterone என்னும் ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதாகக் கூறப்படுகின்றது.
தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்:
மார்க்ரெட் மேலர் அமெரிக்காவில் பணியாற்றிய ஒரு மனநல மருத்துவர். தாய்சேய் உறவில் பல நிலை இருப்பதை ஆராய்ந்தாராம். ஒரு பிள்ளைக்கு மூன்றுமாதத்தின் பின் தாயை மட்டும் நன்றாகத் தெரியும். நான் என்றால் நான் என்பதும் அம்மா என்பதும் ஒன்றுதான். அம்மா என்னோடு இருந்தால் தான் என்னால் இயங்க முடியும். அம்மா என்னோடு இருந்தால் பாதுகாப்பு உணர்வை நான் பெறுகின்றேன் என்று ஒரு பிள்ளை நினைக்கும். ஆண் குழந்தைகள் எல்லாம் தன்னுடைய தாயைத்தான் முதலில் காதலிக்கிறார்கள். இரண்டு மூன்று வயதில் இவளை ரசித்து இவள் எனக்கே எனக்குத்தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் இதை எடிபெஸ் காம்ப்ளெக்ஸ் என்பார்கள். ஆண் மகன் ஒருவன் முதலாவது நிலையில் தாயை இவ்வாறு உணர்கின்றான். இதுதான் முதலாவது நிலை.
2 ஆவது நிலை object contancy அதாவது தாய் கண்ணுக்கு முன்னே இல்லாவிட்டாலும் அம்மா என்னோடுதான் இருக்கிறாள். அவளைத் தேடத்தேவையில்லை என்று பிள்ளை நினைக்கும்.
3 ஆவது நிலை நான் வேறு அம்மா வேறு என்று புரியும் நிலை Seperation – indivitualation. இந்நிலையில் தான் ஒரு தனிமகன் தனக்கு என்ற ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று புரிகின்ற நிலை. ஆனால், தாயானவள் தன்னுடைய மகனை முதலாவது நிலையிலேயே வைத்திருக்க நினைத்தால், தன்னுடைய பாதுகாப்புக்காகத் தன் மகனை வளர விடாமல் வைத்திருப்பது Persistent unbilical cord syndrom என்று சொல்லப்படுகின்றது. இப்போது எங்கே சந்ததி விருத்தி ஏற்படும். நான் உன்னைப் 10 மாதம் சுமந்தேன் என்னும் மந்திரத்தைப் பயன்படுத்துகின்ற தாயானவள், யானை தன் குட்டியை 22 மாதங்கள் சுமக்கின்றதே அதையும் நினைத்துப் பார்க்க வேண்டுமே. இந்தத் தாய்மை உணர்வானது குரங்குக் குட்டி, கெங்காரு என்று அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்றது. தான் மட்டுமே 10 மாதங்கள் தாங்குவதாக மனிதத்தாய் நினைத்தல் கூடாது. தொப்புள் கொடி வெட்டப்பட்டால், அக்குழந்தை தனி மனிதன் என்ற உணர்வைத் தாய் கொண்டிருக்க வேண்டும். ஆண்குழந்தை ஒன்று பிறக்க வேண்டுமானால், அங்கு தந்தைக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. தாய்க்கு ஓஇ ஓ என்னும் இரண்டு குரோமோசோம்கள் மாத்திரமே இருக்கின்றன. தந்தைக்கு மட்டுமே ஓ.லு என்ற குரோமோசோம்கள் இருக்கின்றன. எனவே தந்தையினுடைய லு குரோமோசோம் இருந்தால் மட்டுமே ஒரு ஆண்குழந்தையைத் தாயால் பிரசவிக்க முடியும். எனவே ஆண்குழந்தை பிறப்பதற்கு அம்மாவை விட அப்பா முக்கியம் என்னும் விடயத்தைத் தாய் கண்டு கொள்வதில்லை.
இந்தத் தாய் மகன் உறவினாலே தம்பதிகளின் உறவிலே விரிசல் ஏற்படுகின்றது. தன்னுடைய மனைவியைக் கணவன் தாயின் பேச்சைக் கேட்டு அடக்கி வைக்க முனைகின்றான். பாவப்பட்ட பெண்ணோ பொறுத்துக் கொண்டு அடிமையாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. நோயென்று ஒருநாள் கூட அவளால் ஓய்வு எடுக்க முடியாமல் போகின்றது. இது பல குடும்பங்களில் நடப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
கணவனுக்காக விதம் விதமாகச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் போது கணவன் தாய் வீட்டில் வயிறார உணவருந்தி விட்டு வருகின்ற போது “ஏன் சாப்பிட்டு விட்டு வந்தீர்கள்? என்று மனைவி கேட்கின்றாள். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிகின்றது. ஆண் தன்னுடைய பலத்தைப் பயன்படுத்திப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இங்கு ஆண் மகனின் தாய் வில்லி ஆகின்றாள். ஆண் பெண் சமத்துவம் ஏற்பட வேண்டுமென்றால், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க வேண்டியது அவசியம். ஒரு ஆண்மகன் தன்னுடன் வாழ வந்தவளுடைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெண்ணுக்குப் பெண்ணே பிரச்சினையாகின்றாள்.
பெண்களின் பாரிய பிரச்சினைகளைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்றோம். சென்ற மாதம் பெண்களுக்குப் பெண்களே பிரச்சினை என்றும் ஆண்பிள்ளைகளில் அதீத பாசம் வைத்திருக்கின்ற தாய்மாரினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களைப் பற்றியும் பார்த்தோம். இன்று ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை பற்றியும் இன்று ஆராயலாம் என்று இருக்கின்றேன்.
உலகத்தில் பெண்களுக்குப் பிரச்சினை எல்லாம் ஆண்களாலேதான் வருகின்றது. ஆண்களே பிரச்சினைதான் என்று கூறுகின்ற இளந்தலைமுறைப் பெண்களைத்தான் நாம் அதிகமாகக் காண்கின்றோம். ஆண்களே இல்லாத உலகில் வாழ வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஜெர்மனியிலே ஒன்றுவிட்ட ஒருநாளுக்கு ஒரு பெண் இறப்பதற்கு ஆண் காரணமாகின்றான் என்று புள்ளிவிபரம் கூறுகின்றது. பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தல், தற்கொலைக்குத் தூண்டுல், ஆத்திரம் கொண்டு அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்தல் என்று பல காரணங்களால் உலகநாடுகளில் பெண்கள் இறக்கின்றார்கள். பெண்ணின் முள்ளந்தண்டை உடைத்து படுக்கையில் போட்டு வைக்கும் ஆண்களின் மிருகக் குணத்தையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இயல்பாகவே வேட்டைக் குணம் கொண்ட ஆடவர்கள், யுகம் யுகமாகத் தொடருகின்ற மரபணுக்களைத் தாங்கி வருவதனால், தம்முடைய கோபம், ஆத்திரம் என்னும் குணத்திலிருந்து விடுபட முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
பெண்கள் சில இடங்களில் பேசுவதற்கு ஆசைப்பட்டாலும் பேச்சு சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏன் வீடுகளில் எத்தனை பெண்கள் தாம் விரும்பியதைப் பேசக்கூடியதாக இருக்கின்றது. உனக்கு ஒன்றும் தெரியாது. பேசாமல் போ என்றுதான் பல வீடுகளில் பெண்கள் நிலைமை இருக்கின்றது. பேச்சு உரிமை கிடைக்கின்ற போது கூட சில சந்தர்ப்பங்களில் ஊமையாகி விடுகின்றார்கள். பொருத்தமில்லாத துணையைப் பணம் இருந்தால் வாழ்வு இனிக்கும் என்று திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றார்கள். இதனாலேயே பெண்ணும் ஆணும் இணைந்து சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை இல்லாமல் போகின்றது.
செங்கமல வாள்விழியாட்
சேர்க்கக் கருதுமுவன்
மங்கை தனக்கேற்ற
மணவாளனோ புகலாய்
நங்கை நிலைக்கேற்க
நடக்கவலனோ புவியில்
கொங்குமலர் மாலை
குரங்கிற் களிப்பாரா
கோதையிட மிம்மாற்றங்
கூறுதியாற் பைங்கிளியே
என்று கிளியிடம் தூது சொல்லி வருமாறு தலைவியிடம் அனுப்புவதாக இப்பாடல் அமைகின்றது.
பணத்துக்காகப் பெண்களைப் பேதையர்க்குத் திருமணம் செய்து கொடுத்து மண்ணில் அவர்கள் வாழுகின்ற காலமெல்லாம் வருந்தித் துன்புறுவதற்கு புலியின் வாயில் மானைக் கொடுக்கும் தந்தையர்கள் நரகத்திற்குரியவர்கள் என்றும் கூட்டுக்குள் கிளியை அடைத்து வைப்பதுபோல் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து பூட்டித் திறக்கும் பொருளாகப் பெண்ணை நினைக்கின்றார்கள். உண்பதும், உறங்குவதும், ஊர்க்கதைகள் பேசுவதும் பெண்கள் தொழில், பெண்களுக்குத் தமது கணவனே கடவுள், பெண்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு இல்லை என்று உளமார எண்ணுகின்றார்கள். ஆனால், பெண்கள் இல்லாவிட்டால் வீடு ஒரு காடாகும். பெண்கள் இருந்தால் காடும் ஒரு வளம்பொருந்திய வீடாகும். ஆனால் பெண்களோ இந்த உலகத்தில் வருந்துகின்றார்கள் என்பதை தத்தைவிடு தூதிலே சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
மாதரார் தாமிலரேல்
மனையும் வனமா நல்
மாதரார் தாமுளரேல் வனமும் வளமனையாம்
மாதரன்றோவிவ் வாழ்விற் கருங்கலமாம்
மாதரன்றோ
வருந்துலரிம் மாநிலத்தில்
மாது சிரோன் மணிக்கிவை நீ
வகுப்பாய் பசுங்கிளியே
ஆனாலும் தற்காலத்தை எடுத்துப் பார்க்கின்ற போது அது எதிர்மாறாக நடப்பதையும் அவதானிக்க் கூடியதாக இருக்கின்றது.
ஆணுடைய பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற பெண்கள்:
ஆணுடைய பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற பெண் வர்க்கம் அவர்களை அடக்கி ஆள்வதையும் நாம் புலம்பெயர்ந்த மண்ணிலே அறியக்கூடியதாக இருக்கின்றது. பெண்ணின் பெருமைகள் எவ்வளவு இருந்தாலும் ஆண்களின் நிலைமையையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனையே நான் வெற்றிமணியில் கத்தியின்றி இரத்தமின்றிக் கொலை என்று எழுதியிருக்கின்றேன். தற்கால ஆய்வுகளின் படி ஆண்கள் நீண்ட பயணத்தை மேற்கொள்வதாலும், அதிகமாகப் பெண்களைத் தங்கி வாழ்வதாலும், பெண்களுக்கு அடங்கிப் பின்னே செல்வதாலும் ஆண்களுக்கு ஆண்மையைக் கொடுக்கின்ற ரெஸ்ரோஸ்ரிரோன் (Testosterone) என்னும் ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால் தற்காலத்தில் ஆண்களின் வலிமை குறைந்த தோற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் திரைப்படங்களில் ஆண்களை தீவிர வீரர்களாகக் காட்ட முற்படுகின்றார்கள். அதனையும் மீறி நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற கதாபாத்திரங்கள் பெண்மையின் வீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் திரையில் தோன்றுகின்றார்கள். இவர்களை விடச் சிறப்பாக மாவல்;(Marvel) போன்ற அமெரிக்க திரைப்படங்கள், ஹிந்தி, கொரியா திரைப்படங்கள் பெண்களின் அதீத வீரத்தை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்க முன்வருகின்றார்கள். ஆண்களின் அச்ச உணர்வுகளும், இயலாமையும் ஒரு சந்தர்ப்பத்தில் நிலைதடுமாறுகின்றது. நலிவடைந்த ஆண்வர்க்கம் தவறான வழிமுறைகளைக் கையாள்வது அதிகரித்துள்ளது.
பெண்களை ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், உண்மையை மறைத்தல், பெண்கள் அறியாமல் அவர்களை தவறான முறையில் புகைப்படங்கள் எடுத்தல், பெண்களின் படங்களை எடுத்து போட்டோ சொப் மூலம் மாற்றி தவறான முறையில் சமூகவலைத் தளங்களில் இடல் போன்ற தகாத காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் உலகம் முழுவதும் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற ஆண்கள், பெண்களை மானபங்கப்படுத்தி உடல் முழுவதையும் சீரழித்து கொலை செய்கின்ற வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களின் உறுப்புக்களினாலும், ஆடைக் குறைப்பினாலும் ஈர்க்கப்படுகின்ற காரணத்தினாலேயே ஆண்களின் வன்புணர்வு ஏற்படுகின்றது என்று குறைகூறுகின்ற மக்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு ஏன் அவ்வாறான வன்புணர்வு எண்ணம் தோன்றுவதில்லை ஆண்களுக்கு மட்டுமே அந்த எண்ணம் ஏற்படுகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறு பிள்ளைகளை சீரழிக்கின்ற ஆண்களுக்கு ஆடையும், உடற்தோற்றமும் ஒரு பொருட்டே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறான உடற்கவர்ச்சியானது மறைத்து வைப்பதனாலேயே ஏற்படுகின்றது என்று எதிர்த்து நிற்கும் பெண்கள் தற்போது உடலின் அங்கங்கள் வெளிப்படுகின்ற ஆடைகளை அணிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது கலாசார சீர்கேடாகப் பேசப்பட்டாலும், மனிதர்களின் ஆரம்ப காலகட்ட நிலைக்கு எம்முடைய எண்ணப் போக்கைக் கொண்டு செல்கின்றது. மேலாடைக்காக உண்ணாவிரதம் இருந்ததும் பெண்களே, மேலாடை ஆண்களுக்கு மோகத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆடையில்லாது, அரைகுறை ஆடையுடனும், மார்புக்கச்சையை மட்டுமே அணியத் தொடங்கியுள்ளதும் பெண்களே. அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி இவ்வாறான ஆடைக்கலாசாரத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
திருமணம் பற்றி பெண்கள் கொண்டிருக்கின்ற கருதுகோளை அடுத்த மாதம் பார்க்கலாம்.
திருமணம்:
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”
பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணம் அவர்களுடைய வாழ்க்கையைத் திருப்பிப் போடும் ஒரு ஒப்பந்த சாசனம்.
மேலும் சிந்தித்தால், ஒரு ஜெனிடிக் ஒப்பந்தம் என்று சொல்லலாம். இரண்டு பாலினருடைய மரபணுக்கள் கலந்து ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக சமுதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அப்பா அம்மாவை திருப்திப்படுத்தவும், அம்மா அப்பாவை திருப்திப்படுத்தவும், ஒருவரை ஒருவர் பராமரித்துக் கொள்வதற்காகவும், உதவி புரிவதற்காகவும் திருமணம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களுடைய மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று தான் கருத வேண்டியுள்ளது. ஆரோக்கியமான மரபணுவைக் கடத்த வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருப்பது என்றால், அது திருமணத்தாலேதான் முடியும் என்றும் கூற முடியாது. ஒன்றாக வாழுகின்றோம் ஒன்றாகவா வாழுகின்றோம் என்று எத்தனையோ குடும்பங்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கின்றார்கள். காலம் கடந்து என்னை மதுரையில கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக, அந்த மாயாவரத்தில கேட்டாக என்று புலம்பித் தள்ளுவதைக் கேட்டிருக்கின்றோம்.
மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூக அமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை. விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை. பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது. நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர். இதற்குத் திருமணம் அவசியமாகியது.
விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol. IVP .28).
இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். இவை பற்றி எல்லாம் என்னுடைய பிளக் இல் விரிவாக எழுதியுள்ளேன். (kowsy2010.blogspot.com) ஆனால் இங்கு சொல்ல வருவது இளைய தலைமுறைப் பெண்கள் திருமணத்தை வெறுக்கின்றார்கள் என்னும் கசப்பான உண்மை. அவர்களின் பார்வையை இங்கு பதிவிடுகின்றேன்.
ஆண்கள் தம்முடைய ஆவேசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் குறைப்பதில்லை. அதைப் பொறுத்துப் போகின்ற பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஒரே வாழ்க்கை அதை எம்மால் தனித்து வாழமுடியும்;. மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நேரம் சென்று இரவில் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம். ஏனென்றால், நாலு பேர் தப்பாகப் பேசுவார்கள். தப்பாகப் பேசினால், திருமணம் பேசும் போது கெட்ட பெயர் வரும். இரவில் வெளியே போகின்ற போது ஏதாவது நடந்து விட்டால்! அதாவது ஆண்களால் பிரச்சினை வரும். அதன்பின் யார் உன்னைத் திருமணம் செய்யப் போகின்றார்கள். இங்கு எல்லாவற்றுக்கும் திருமணமே காரணம். அதனால், “திருமணத்தை வெறுக்கின்றோம். “ஏன் இரவில் வெளியே போகின்றீர்கள்” என்றால், “ஆண்கள் ஏன் போகின்றார்கள்” என்னும் கேள்வி பந்து போல் வந்து விழுகின்றது. இக்காரணத்தால் விரும்பிய ஆடை அணிய முடியாது, விரும்பிய இடத்துக்குப் போக முடியாது, ஆண் நண்பர்களுடன் வெளிப்படையாகப் பழக முடியாது.
இவ்வாறு கவனமாக இருந்து திருமணம் செய்து விட்டால், இஷ்டம் போல் வீட்டில் வாழ முடியாது. எதற்கும் விட்டுக் கொடுத்தல், எதிர்பார்த்தல், வேலைச் சுமை என்று அனுசரித்து வாழ்வது கசப்பாக இருக்கிறது. அனுசரிக்கும் போது மோசமான ஒரு ஆண் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு மேலும் பிள்ளைகளைப் பெறுகின்ற மோசமான முடிவு எடுப்பது. பிடிக்காது என்று விவாகரத்து எடுக்க முயற்சித்தால், பலவிதமான நடைமுறைகள். அதன்பின் வாழாவெட்டி என்ற அவப்பெயர். எப்போது இந்த சமுகம் இல்லாத பூமி அமையப்போகின்றதோ என்ற அங்கலாய்ப்பு.
பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆண்களே அவள் தன்னைவிட உயரத்துக்குச் சென்று விட்டால், பொறாமை அடைந்து விடுகின்றார்கள். தம்மை விட ஒரு இஞ்சி உயரமான பெண்களையே திருமணம் செ;ய விரும்பாத ஆண்கள், அவர்களை பதவி உயரத்துக்கு வைத்துப் பார்க்க விரும்புவார்களா? பொறுப்பான பதவியை நேரம் எடுத்துச் செய்து முன்னேற்றத்தை அடையப் பெண்களால் முடிவதில்லை. கனவில் வாழ்வின் உயரத்துக்குப் போக நினைத்த பெண்கள் கல்யாணத்தில விழுந்து கனவு கற்பனையாகிப் போன துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிப் போன நிலை வேண்டுமா? மனிதனுடைய வாழ்க்கையில் எல்லோரும் போல் திருமணம் செய்தே வாழ வேண்டுமா? அதைவிட மனிதர்களுக்கு வாழ்க்கை இல்லையா? இவ்வாறான பல கேள்விகளைச் சுமந்து இளம் பெண்கள் திரிகின்றார்கள்.
உண்மையில் திருமண நிகழ்விலே பெண்ணைத் தத்தம் செய்து கொடுப்பது ஆணுக்கு உரிமைச் சாசனம் எழுதிக் கொடுப்பது போல் அவளை அடிக்கலாம் உதைக்கலாம். ஏனென்றால் தத்தம் பண்ணிக் கொடுத்த பொருளை திரும்பப் பெற முடியாது. அவனுக்கு உரிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தாயிற்று.
வடநாட்டில் பெண்களுக்கு முகத்திற்குத் திரை போடும் பழக்கம் இருந்து வந்தது. அங்கே யுத்தங்கள் அடிக்கடியும் அதிகமாகவும் நடந்து வந்தன. அந்தப் போர்களில் முதலில் பெண்களைத் தான் சூறையாடுவார்கள். அதன் பின்பே பொன், பொருள் இவைகளைக் கொள்ளையடிப்பது என்ற நிலை இருந்தது. எனவே பெண்களின் பாதுகாப்பைக் குறித்து, முகத்தைக் காண்பிக்காமல் திரை போட்டார்கள். போர்க்காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்திலும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டது. சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் இவர்களாலும் பெண்களுக்கு ஆபத்து இருந்து வந்தது. ஒரு குடும்பத்தில் மனைவி, அண்ணி, தம்பியினுடைய மனைவி இவர்களெல்லாம் இருக்கின்ற போது முகத்திற்குத் திரை போட்டு இருப்பதால் காலைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ள, திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு மெட்டி போட்டு காலை அடையாளம் கண்டு கொள்ள மணமகன் அம்மி மேல் மணமகளின் காலைத் தூக்கி வைப்பது என்ற சடங்கை ஏற்படுத்தினார்கள். இதுதான் காலுக்கு மெட்டி போடுவது. இவ்வாறான சடங்குமுறைகள் இந்தக் காலத்திற்குத் தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. ஆயிரம் பேரை அழைத்து அன்றைய நாள் முழுவதும் திருமண விழாவை நடத்தி ஆண்கள் கடனாளியாகவே திருமணத்தை ஆரம்பிக்கின்றார்கள்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களால் பெண்கள் மனது நிரம்பி வழிகின்றது. இதற்கு ஆண்கள் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.