அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார! முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -
உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன் மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.
"நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?" என நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு, எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார் கமலி அக்கா கனடாவில் மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான செய்திகளே வந்துகொண்டிருந்தன.
கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது. மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன். ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சரியம் அடைந்தனர்.