கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் - குரு அரவிந்தன் -
கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி மலரை 1918 ஆம் ஆண்டு இதற்காக அறிமுகம் செய்தார். 1921 ஆம் ஆண்டு கனடாவில் இந்த சிவப்பு பாப்பி மலர் இதற்காக அறிமுகமானது. கனடாவில் சில அமைப்புக்கள் வெள்ளை பாப்பி மலரை அறிமுகம் செய்தாலும் அது பெரிதாக மக்களிடையே பிரபலமடையவில்லை.
இதற்கு முன்பு தென்னாபிரிக்கப் போரின் நினைவு நாளாகக் கனடாவில் இந்தத் தினம் இருந்தது. முதலாம் உலப் போரின் போது சுமார் 61,000 கனடியர்கள் கொல்லப்பட்டனர். 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் தான் போர்நிறுத்தத்திற்கான கையெழுத்திடப்பட்டது. இதன் காரணமாக 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி கனடியர்கள் போர் நிறுத்தத் தினத்தை நினைவேந்தல் தினமாக நினைவு கூர்ந்தாலும், உத்தியோக பூர்வமான நினைவேந்தல் 1931 ஆம் ஆண்டுதான் இத்தினத்தில் இடம் பெற்றது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் இந்தத் தினத்தையே கடைப்பிடிக்கின்றன.
இந்த நினைவேந்தல், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர், அமைதி காக்கும் பணிகள் மற்றும் பிற சர்வதேச இராணுவ ஈடுபாடுகளின் போது போரில் இறந்தவர்களின் நினைவாகவும் இடம் பெறுகின்றது. இதுவரை சுமார் 118,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு மோதல்களில் இறந்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2020-2021 ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொது இடங்களில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவில்லை.