கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு ! - முருகபூபதி -
ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.
அஷ்வினியை குழந்தைப் பராயத்திலிருந்தே நன்கு அறிவேன்.
சிட்னியிலும், மெல்பனிலும் நடைபெற்ற கவிஞர் அம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும், அஷ்வினி, கடந்த 2024 ஆம் ஆண்டு, சிட்னியில் தமது அபிமானத்திற்குரிய தாத்தா அம்பி அவர்களின் இறுதி நிகழ்விலும் உருக்கமான உரையை நிகழ்த்தினார்.
அஷ்வினி, கவிஞர் அம்பியின் மூத்த புதல்வி மருத்துவர் உமாதேவி – பொறியியலாளர் சிவகுமாரன் தம்பதியரின் மூத்த புதல்வியாவார். சிட்னியில் ஹார்ட்ஸ்வில் பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்த அஷ்வினி, இங்கு தனது ஆரம்பக்கல்வியையும் உயர்தரக்கல்வியையும் பயின்றார். சிட்னி பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானத் துறையிலும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பயின்று பட்டம் பெற்றார்.