பயனுள்ள மீள்பிரசுரம்: ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்! - விஷால் ராஜா -
- அகழ் இணைய இதழின் ஜூலை/ஆகஸ்ட் 2022 பதிப்பில் வெளியான கட்டுரையிது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படும் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் பற்றிய விமர்சகர் விஷால் ராஜாவின் கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.
வீடு கட்டுவது இந்த உலகின் ஆசைகளோடு மனிதன் செய்து கொள்ளும் நிபந்தனையில்லாத உடன்படிக்கை. மனிதனுடைய உலகியல் நாட்டம், வாழும் இச்சை, உரிமைக் கோரல் இவை அனைத்தின் பரு வடிவமாகவும் இருக்கிறது வீடு. அதனால்தான் எந்த கனவையும் அது எளிதில் உட்கொண்டு செரித்துவிடுகிறது. செருப்பை வாசலில் கழற்றி போட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், அதற்கு பிறகு நாம் உலகைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வெளியே இருக்கும் உலகம் மற்றமை ஆகிவிடுகிறது. உலகின் வன்முறை, சுரண்டல், ஆச்சர்யம் எல்லாமே தொலைக்காட்சி செய்திகள் மாத்திரமே. வீட்டுக் கூடத்தில் சௌகர்யமாக அமர்ந்து அவற்றை கண்டு களிக்கலாம். ஒருவன் தன் வீட்டினுள் இருக்கும்போது- அதன் சுவர்களின் அணைப்பிலேயே- முழுமையான தனி மனிதனாக உணர்கிறான். அங்கே அவனுக்கு சமூகப் பங்கில்லை. அல்லது சமூகப் பங்கை மறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சாயுங்காலம் வீட்டுக்கு வந்து சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு நாற்காலியில் சாய்வது சமூக பாத்திரத்திலிருந்து விடுபடுவதும்தான்.