பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் மெய்நிகர் வழி நிகழ்வு - எழுத்தாளர். அ.ந. கந்தசாமியின் படைப்புலகம்! - தகவல்: பவானி -
கம்பராமாயணத்தில் புலவி நுணுக்கம்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

*ஓவியம் AI
முன்னுரை
புலவி என்பது காதலில் ஏற்படும் ஊடல் அல்லது செல்லக் கோபம் ஆகும். இது தம்பதியரிடையே தோன்றும் ஒரு குறுகிய காலப் பிரிவைக் குறிக்கிறது. இந்த ஊடல், கூடலின்பத்தை அதிகரிக்கவும், காதலின் ஆழத்தை மேலும் சிறப்பிக்கவும் உதவுகிறது. திருவள்ளுவர், காமத்துப்பால் கற்பியலில் உள்ள 'புலவி' அதிகாரத்தில், இந்த ஊடலின் நுணுக்கங்களை விவரித்துள்ளார்.
கம்பரும் தம் இராமாயணத்தில் புலவி நுணுக்கம் குறித்து நூலின் சில இடங்களில் கூறிச்சென்றுள்ளார்.அவற்றைக்குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
ஊடல்
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் காதல் வாழ்க்கையில் பெண், ஆண் தனக்கு மட்டுமே உரியவன் என எண்ணுவாள். இத்தகைய மனநிலை ஆணுக்கும் இருக்கலாம். பெண் இப்படி எண்ணும்போது, ஆண் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என தெரிய வரும்போது, அவள் அவனிடம் ஊடுவாள். அதாவது சிறு சண்டை இடுவாள்.
பரத்தை ஒழுக்கம் புரிந்து தலைவன் மீண்டும் வந்து இல்லம் புகுகையில் அவனோடு தலைவி வேறுபடும் பிணக்கு நிலை ஊடல் எனப்படும். காதல் வாழ்வில் ஊடல் இன்றியமையாத சிறப்புடையது. பரத்தை ஒழுக்கம் புரிந்து சென்றானோ என்று தலைவி எண்ணும் போதும், தலைவனுடன் ஊடுவாள்.
ஊடலினுடைய பண்பு
ஊடல், புலவி ,துனி,என்னும் சொற்கள் அகப்பாடலில் ஊடலின் பண்பை விரித்துரைக்கும்.
புலவி என்பது மன வேறுபாடு, (பொய் சினம்)
ஊடல் என்பது புலவி நீட்டம்
துனி என்பது ஊடல் நீட்டம்.
புலவியின் முதிர்ச்சி ஊடல்
ஊடலின் முதிர்ச்சி துனி
திருக்குறளில் புலவி நுணுக்கம்
புலவி நுணுக்கம் என்பது திருக்குறளின் காமத்துப்பால், கற்பியலில் வரும் அதிகாரமாகும். இது காதலிக்கும் இருவருக்கும் இடையில் நிகழும் ஊடல் அல்லது சண்டையை, அதாவது "போலிச் சண்டை" அல்லது "காதல் பிணக்கத்தின் நுட்பமான அம்சங்களை" விவரிக்கும் அதிகாரமாகும். இங்கு புலவி என்பது அன்பில் வெளிப்படும் சிறு சண்டையையும், நுணுக்கம் என்பது அதற்குரிய காரணத்தின் அல்லது காதலின் மறைமுகமான நுட்பங்களையும் குறிக்கிறது.
கதிர்காமத் திருமுருகன்: பதிப்பு வரலாறும் விசாரணையும்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -

அறிமுகம்
தமிழரது அரசியல் சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான முக்கியத்துவம் மிக்க பல நூல்களை வெளியிட்டுவரும் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை, கடந்த வருடம் (2024) ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைச் செம்பதிப்பாக வெளியிட்டது. பதிப்பு வரலாற்றில், இதுவரை எட்டுப் பதிப்புகளைக் கண்ட இந்த நூல், திருத்திய செம்பதிப்பு எனும் புதிய பதிப்போடு ஒன்பதாவது பதிப்பினையும் கண்டுள்ளது. மலையக நூற்பதிப்பு வரலாற்றில் இந்த நூல் மாத்திரமே ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல். இது ஒரு வரலாற்றுச் சாதனை. மகிழ்வு தரும் விடயமுங்கூட.
பலரும் கண்டுகொள்ளாத, மலையகத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்றான இந்த நூலை, கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையினர் தேடிக் கண்டெடுத்து, திருத்திய செம்பதிப்பாக வெளியிட்டமை, மலையக நூற்பதிப்பு வரலாற்றில் முதன்மையான செயற்பாடாக அமைகிறது. இந்த நூலின் பதிப்பு வரலாற்றையும் இதன் மீதான விசாரணையையும் மேற்கொள்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
பதுளை வ. ஞானபண்டிதன்
‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூலின் ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்த, பதுளை வ.ஞானபண்டிதன் அவர்கள். அவர், பதுளை சமத்துவ சங்கத் தலைவர் பதவியிலிருந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிரான பிரசாரகராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர். சமூக சமத்துவப் போராளியாகத் திகழ்ந்தவர். சாதிய அடக்குமுறைக்கு எதிராக, அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களும் நிகழ்த்திய பிரசங்கங்களும் அவருக்கு எதிர்ப்பினை ஏற்படுத்தின. எனினும், சமூக மற்றும் சமயப் பணிகள் குறித்துத் தான்கொண்ட இலட்சியத்தில் அவர் பின்வாங்கியதில்லை. இதனை, அவரது வாழ்வு குறித்த பதிவுகள் காட்டிநிற்கின்றன.
நெடுங்கவிதை: வம்சாவழிப் பூவரசு! - இந்து.லிங்கேஸ் -

* ஓவியம் - AI
எம் மண்ணழகு.
என் தாய்மொழியழகு.
ஊரைக் கடந்தால்
உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் அழகு.
நாலடி எடுத்துவைத்து
மனம்மகிழ வீட்டுப்
படலையைத் திறந்தால்,
காவல் தெய்வமாய் நின்றுகொண்டு,
எங்கே போன ராசா?உள்ளே வா"
என்றொரு ஜீவன்
கூப்பிடுமே!
அதுதான் எங்களின் பூவரசு.
அதுவே என்றும் எனக்குப் பேரழகு.
சொந்த பந்தம் வந்துவிட்டால்,
பெரிசுகள் வேம்புக்குக்கீழே கூட,
சின்னஞ் சிறிசுகள் நாம்
கூடிச் சேர்ந்து விளையாடியது
பூவரசுடன்தான் !
பூவரசிலை பிடுங்கி
'பிப்பீ' ஊதினோம்.
பப்பாக் குழலுக்குள்
பூவரசம் இலை வைத்து
நாதஸ்வரம் வாசித்தோம்.
பூவரசம் பூப்பிடுங்கி
காதில் செருகி
சாமி கும்பிட்டு,
தகர டப்பாவும்,
வேப்பம் குச்சியும் கொண்டு
தவில் வாசித்து
பூவரசைச் சுத்தி வலம் வந்தோம்.
ஆடுகள் 'மே'என காட்டல் (கத்தல்) கொண்டாலும்,
மாடுகள் 'மூ' என மூசல் (கத்தல்) செய்யினும்,
இலங்கை வானொலியில்
இதமான மெட்டுக்களுடன்
பாட்டுக்கள் கேட்ட போதும்,
எங்கள் கூத்துக்கள் ஓய்ந்த பாடில்லை.
எங்கள் விளையாட்டுக்களைக்
கூடிநின்று பார்க்கும் காகங்களும்
கா கா வென்று கரைந்தும்,
வாலை அசைத்து அசைத்து
கீக் கீக்கென்று அணில்கள்
தாவித்தாவி பாய்வதுமாய், மட்டுமன்றி
வேடிக்கை பார்த்துக் கொண்டே
கெக்கட்டம் விட்டுச்
சிரித்த சொந்தங்களின்
சிரிப்பொலிகளும்
என்று..அப்பப்பா,
என்ன வாழ்க்கை,
எத்தனை சந்தோசம்?
சிந்தனைக்களம்: ' பரதநாட்டியத்தில் இன்றைய மார்க்கம் - ஐந்து பாரம்பரியங்களின் சங்கமம்'
Meeting ID: 811 9560 6664 | Passcode: 178162 | Join Zoom Meeting

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ. இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகாந்தனின் கனவுச்சிறை மகா நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீளக் கனடாத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா? அப்படிக்கூறுவதற்கில்லை. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
ஸ்கார்பரோ நகரில் எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் வெளியீடு! அனைவரையும் அழைக்கின்றோம். அழைத்து வருகையைப் பதிவு செய்யுங்கள். பதிவு இலவசம்!
எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் முழுமையாக , ஐந்து பாகங்கள், ஆய்வாளரும், மொழிபெயர்ப்பாளருமான நேத்ரா றொட்ரிகோவால் ஆங்கிலமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
'மாவென்சி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று இலக்கம் 1265 Military Trail, Scarboroughஅமைந்துள்ள AC-223 at UTSC Academic Advising & Career Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வெளியீட்டுக் குழுவினர் அழைக்கின்றனர். நிகழ்வுக்கு வருகை தர விரும்பினால் அழைத்து உங்கள் இருக்கையைப் பதிவு செய்யும்படியும் நிகழ்வுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர். பதிவு இலவசம்.
இந்நிகழ்வு பின்வரும் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. Mawenzi House, Ontario Arts Council, Tam Fam Lit Jam, The Tamil Literary Garden, Toronto Arts Council & Tamil Studies at the University of Toronto Scarborough.
நிகழ்வில் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு விற்பனை செய்யப்படும். நிகழ்வில் கிடைக்கும் நிதி முழுமையாக ஸ்கார்பரோ நகரில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கு (Tamil Community Centre) நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (3) - எல்.ஜோதிகுமார் -

- மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் இளமைக்காலத்தோற்றம். *டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) -
முன்னுரை:
தாகூரின் செல்வாக்கில் இருந்து, மாற்றமுற்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது. ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை அவர் தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் அழுத்தமாய்
குங்குமம் பள பளக்க இட்டு…
கன்றி சிவந்த இதழ்களும்
அழகியதாய்…
தூய்மையில் விட்டிருப்பர்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பர்…
அவுஸ்திரேலியாவில்,இலங்கைத் தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் -2024! - தகவல் - நடேசன் -

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுத் தொகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டன.
மீண்டும், இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
சிறுகதை: மலையனின் மனைவி - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

* ஓவியம் - AI
மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.
அது அவனுடைய ஆயிரத்தெண்ணூறாவது பிறந்தநாள். சிலர் அது அவனுடைய ஆயிரத்து நூறாவது பிறந்தநாள் என்றும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். கொண்டாட்டத்தில் மதி கலந்துகொண்ட போதுதான் மலையன் பற்றிய செய்தியை முதல்முறையாக கேட்ட நினைவு மெல்ல அவனுக்குள் எழ ஆரம்பித்தது.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த ஆண்டு நல்ல மழை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபொழுது, ‘பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஆறு நிறைய தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக’ தந்தைக் கூறினார்.
வழக்கம்போல பள்ளிக்கூடத்தில் மூன்றாவது இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டிருப்பான். ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைய அனைத்து மாணவர்களும் எழுந்து இருகைகள் கூப்பி வணக்கம் தெரிவித்து அமர்ந்தனர்.
பொறுமையின் வடிவமாய்த் திகழும் அந்த ஆசிரியர் பெயர் பொன்முடி. அன்று வழக்கமாய் ஏற்றும் மாயவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். அதை பல நாட்களாய்ச் சரியாகக் கவனிக்கத் தவறிய மதி மேசையின்மீது நிறுத்தப்பட்டு இருந்தான். விளக்கின் அவசியம் குறித்து அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மாயவிளக்கு ஏற்றுவதில் கைதேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த அந்த ஆசிரியர் தன்னுடைய வித்தையைச் சில காரணங்களுக்காக ஒரு வாரகாலமாகத் செய்யாமல் இருந்தார். அது பற்றி அவனுக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை.
இராஜேந்திரசோழன் சிறுகதைகளில் வழக்குச்சொற்கள்! - முனைவர் ஆ. சந்திரன், தவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

முன்னுரை
மக்களின் பேச்சு மொழியைப் புனைவிற்குள் கொண்டுவரும் போக்கு இன்று தொடர்ந்து பெருகி வருகிறது. தமிழின் பொது அல்லது இலக்கிய வழக்கிலிருந்து மக்களின் அன்றாட வழக்கில் வெளிப்படும் (பேச்சு) மொழியைக் கொண்டு அவர்களின் வாழ்வியலை மிக அணுக்கமாகக் கூறுவது படைப்பாளரின் தனித்த அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிடுகிறது. மண்ணின் மரபை அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை மிக அணுக்கமாக கூறுவதற்கு ஏற்ற ஒன்றாக அதைப் படைப்பாளர்கள் கையாளுகின்றனர். பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் சார்ந்துள்ள சமூகத்தினைப் புனைவிற்குள் கொண்டுவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வரவேற்று மகிழ வேண்டிய ஒன்று. அது காலத்தின் தேவையும் கூட.
செந்தமிழ் / கொடுந்தமிழ் என்பன வெறுமனே தமிழ் மொழியின் இரு பிரவுகள்தானே ஒழிய. உயர்ந்தது x தாழ்ந்தது என்ற பொருளில் அவற்றை அணுகுவது தவறான ஒருபோக்காகவே அமையும். கொடுந்தமிழ் என்பதைப் பாமர மக்களின் பேச்சு மொழி என்று விலக்கிவிட முடியாது. காரணம், அம்மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அவை அதிகமாக்குகின்றன. இந்தக் கோணத்தில் சிந்திக்க முற்படுவதன் விளைவாகத்தான் பலர் அத்தகைய மொழிநடையைப் பின்பற்றுகின்றனர். அதனால் அவர்களுக்கு அம்மக்களின் வாழ்வியல் விழுமியங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்துவதும் சாத்தியமாகின்றன. சிலர் தங்கள் வட்டார வழக்குகளைத் தொடர்ந்து எழுவதன் மூலமாக முக்கியமான ஆளுமைகளாக வளர்ந்து வந்துள்ளதையும், அத்தகைய எழுத்தாளர்களைத் தமிழ் எழுத்து உலகம் கொண்டாடி மகிழ்வதையும் தற்போது பார்க்க முடிகிறது.
என்றாலும், பேச்சு மொழி பயன்பாட்டினைப் பற்றிய மொழியியல் பின்புலத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க பட்டனவா? என்றால், இல்லை. அதாவது, மக்களின் பேச்சு வழக்குகள் புனைவிற்குள் வந்துள்ள அளவிற்கு அவற்றைப் பற்றிய ஆய்வு முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய ஆய்வுகள் நிகழ்த்த வேண்டிய தேவை அவசியமாகிறது.
‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ - அகஸ்தியர் -

[இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளார் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 . அதனையொட்டி அவரது இக்கட்டுரை வெளியாகின்றது. இதனைப் 'பதிவுக'ளுக்கு அனுப்பி வைத்தவர் அவரது மகள் எழுத்தாள்ர் நவஜோதி யோகரட்னம். . ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ என்னும் தலைப்பில் கண்டியில் 29.6.1969 இல் இடம்பெற்ற இலக்கிய அரங்கில் அகஸ்தியர் ஆற்றிய உரையின் சுருக்கம். இந்த இலக்கிய அரங்கில் அரு.சிவானந்தன், இல.இராசு, இரா.அ.இராமன், சி.பன்னீர்ச்செல்வம், அபதுல் ரவுஹீம், அ.கணேஷ், பெரியசாமி, உமாபதி, சி.கந்தையா, பெரி. சுவாமிநாதன், செல்வி.சி;. இந்திராணி, செல்வி சித்தி.ஹமீதா, வெ. இராசம்மா ஆகியோரும், இன்னும்பல இலக்கிய முற்போக்கு இளங்கலை எழுத்தாளர்களும் பங்கு பற்றினர். ]
ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு. அது மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல இலக்கியங்களுக்கும் மிக அவசியமானதாகும். இந்த ஒழுக்கம் என்ற கோட்பாட்டை எப்படி நிர்ணயிக்க முடிகின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்ககும்போது, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது. அதுவுமல்லாமல், இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அல்லது நடுநிலைமை வாதம் பேசுபவர்கள் யார், அவர்கள் யாருக்காக இலக்கியம் படைக்கிகிறார்கள், அவர்கள் இலக்கியத்தில் ஒழுக்கவாதம்; பேசுவதன் மூலம், எந்த சமூக அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்கள் என்ற இன்னோரன்ன கேள்விகளுக்கும் நாம் விடை காணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சரி, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா? இந்தக் கேள்விக்கு ஒரு விடை காண்பதற்கு முன், நாம் இந்தச் சமூக அமைப்பில் ஒரு ஆழமான கண்ணோட்டத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில், இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
பரசுராம பூமி – வாசிப்புப் பகிர்வு! - ஶ்ரீரஞ்சனி -

2022இல், மகுடம் வெளியீடாக வெளிவந்திருந்த ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனக்கு அனுப்பும்போது, கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசை 2019இல் தனதாக்கிக்கொண்டிருந்த ‘பரசுராம பூமியின்’ பிரதியொன்றையும் அனுப்பிவைப்பீர்களா என மைக்கல் கொலின் அவர்களைக் கேட்டிருந்தேன். தொன்மங்களை மீளாய்வுக்குட்படுத்தும் படைப்பாக அது இருந்ததால் அதனை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது. ஆனால், அந்தத் தொகுப்புப் பற்றிய என் வாசிப்புப் பகிர்வை எழுதவேண்டுமென்ற எண்ணம் காலஓட்டத்தில் கரைந்துபோயிருந்தது. தற்போது, மூன்று வருடங்களின்பின்பு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான் அந்த எண்ணத்தைச் செயலாக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பாரதம், இராமயணம், விவிலியம் ஆகிய நூல்களின் சில கதாபாத்திரங்களை அல்லது சம்பவங்களை, கேள்விக்குள்ளாக்கும் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் மைக்கல் கொலின் அவர்களின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ‘வரம்’, ‘ஓர்மம்’, ‘ஞானம்’ ஆகிய மூன்று கதைகளும் என்னைக் கவர்ந்திருந்தன. மைக்கல் கொலின் அவர்களின் கவித்துவத்தைப் புலப்படுத்தும் அற்புதமான மொழியில், ‘வரம்’ என்ற கதை அகலிகைக்குப் புதுப்பரிமாணம் கொடுத்துள்ளது.
அகலிகை பற்றிப் பல கதைகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்திரனால் அவள் வன்புணர்வுக்குட்பட்டாள் எனக் கூறும் ‘அகலிகையும் அகல்யாவும்’ என்ற குறுங்காப்பியம், வன்புணர்வுக்குட்பட்டதால்தான் கெளதமர் அவளுக்குச் சாபவிமோசனம் கொடுத்தார் என்கிறது. ஆனால், ‘அகல்யா’ என்ற குறுங்காப்பியமோ, தன்னுடன் புணர்ந்தவன் யாரென்பது அகலிகைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், இருப்பினும், அதைப் பற்றி உலகம் என்ன பேசுமோ என்று கெளதமர் கவலைப்பட்டார் என்றும் கூறுகிறது. இந்த இரண்டு கருக்களினதும் அடிப்படையில் ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ என இரண்டு கதைகளை புதுமைப்பித்தன் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்திரன் தன் தவறை உணர்கிறான், மனத்தூய்மைதான் கற்பென அகலிகைக்குக் கெளதமர் ஆறுதல்சொல்கிறார் என்றவகையில், ‘அகலிகை’ என்ற கதையை அவர் 1934இல் எழுதியிருந்தது பாராட்டுதலுக்குரியது. சாபவிமோசனம் கிடைத்தும், பாவவிமோசனம் கிடைக்காதா என ஏங்குமொரு பரிதாபநிலையை 1943இல் எழுதிய ‘சாபவிமோசனம்,’ என்ற கதையில் அவர் காட்டியிருக்கிறார். அத்துடன், யாரைப் பார்த்தாலும் அகலிகைக்குச் சந்தேகம் வருகிறது என்றும், கெளதமரின் வார்த்தைகளுக்கும் இரட்டை அர்த்தம் இருக்குமாவென யோசிக்கிறாள் என்றும், கெளதமராலும் அவளுடன் முன்போலப் பழகமுடியவில்லை என்றும் தொடரும் அந்தக் கதை முடிவில், சீதையின் தீக்குளிப்புப் பற்றி அறிந்தவள், மீளவும் கல் ஆகிறாள் என நிறைவுகிறது.
இளைஞர்களே! சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்துங்கள்! - நந்திவர்ம பல்லவன் -

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது.
தமிழ் இளைஞர்களே! நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது. அதன் பெயர் மக்கள் விடுதலை அணி, மக்கள் விடுதலை அமைப்பு என்று கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.
நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள். அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்படுங்கள்.
நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அடூர் கோபால்கிருஷணனின் மலையாளத் திரைப்படம் 'மதில்கள்'! - வ.ந.கிரிதரன் -

நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்'' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான் 25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர். அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.
கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும் பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி. ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.
பஷீருக்கும், நாராயணிக்குமிடையில் உரையாடல்கள் மூலம் காதல் மலர்கின்றது. படம் முழுவதும் நாராயணியைக் காட்டவே மாட்டார்கள். அவளது குரல் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும். அக்குரலுக்குச் சொந்தக்காரி மலையாள உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரும், அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் நடிகை K. P. A. C. லலிதா. 2022இல் மறைந்து விட்டார். அவரது குரல், அதில் தொனிக்கும் காதல், தாபம் எல்லாம் கேட்பவர் உள்ளங்களைக் கவர்வதுடன் உலுப்பியும் விடக்கூடியவை.
பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள் (1) - இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள்!

- பேராசிரியர் க.கைலாசபதி -
ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
செயற்கைத் தொழில் நுட்பம், 'கிராபிக்ஸ்' மென்பொருட்கள் பாவித்து இவர் உருவாக்கி வரும் 'டிஹிட்டல்' ஓவியங்கள், 'அனிமேஷன்'கள் முகநூலில் பலரையும் கவர்ந்தவை.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரின் புகைப்படங்களை மேற்படி தொழில் நுட்பங்களைப் பாவித்து , உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் 'டிஜிட்டல்' ஓவியங்களாக்கி வருகின்றார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah)
இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) ஒரு குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத்தாளர் ஆவார். ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (14) யப்பானியத் திருவள்ளுவர்! - நடேசன் -

- முன்றிலில் பெரிய நந்தியின் சிலை -
யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.
இந்த காளையில் உருவத்தில் இரகசியம் ஏதோ இருக்கவேண்டும் என்ற என் நினைவு மனதை கோடைகாலத்து இலையானாக மொய்தபடி இருக்க அந்த ஆலயத்தின் உட்சென்றேன். ஆலயம், மரங்கள் பூங்கா என அழகான பின்னணியில் இருந்தது . இந்த ஷின்டோ ஆலயம் 903இல் இறந்த ( Michizane) மிசிசான் என்ற ஒரு அறிஞரது சடலத்தை கொயோட்டாவிலிருந்து (Kyoto) வண்டியில் வைத்து இழுத்து வந்த இந்த காளை மாடு , வண்டி இந்த இடத்தை வந்ததும் நகர மறுத்துவிட்ட தாகவும், அதனால் மக்கள் இதுவே அந்த அறிஞரின் இறுதியான இடமென நினைத்து இங்கே அவரது சடலத்தை அடக்கம் செய்து அவருக்கு சமாதி கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த சமாதியருகே இந்த ஷின்டோ ஆலயம் உருவாகியது. ஆலய முன்றலில் சடலத்தை இங்+++++++++++++++++++++ கொண்டு வந்த அந்த காளையின் உருவம் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது என அறிந்தேன்.
குரு அரவிந்தனின் சிறுகதைகளில் சமூகப் பார்வை! - சி. ரஞ்சிதா (களனிப் பல்கலைக்கழகம், இலங்கை) -

ஈழத்து யாழ். மண் ஈன்றெடுத்த எண்ணிலடங்காத புலமையாளர்கள் பலர். அவர்களுள் எழுத்துத் துறையில் பிரவேசமாகி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மிகு சான்றோர்கள் வரிசையில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஈழத்தில் யாழ். மண்ணில் அவதாரம் எடுத்த அவர் இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் மணமும் தமிழ் உணர்வும் இலக்கிய படைப்பின் மீது கொண்ட தீராத அவாவினாலும் தன்னை ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொண்டு சிறுகதை, நாவல், மேடை நாடகங்கள், திரைக்கதை, சிறுவர் நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பயணிக்கின்றார். இவருடைய எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தையும், அதன் பண்பாடு, பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் அந்தப் பண்பாடு சார் பழக்கவழக்கங்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக சித்திரித்துள்ளன.
குரு அரவிந்தனின் படைப்புகளான இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைகளிலும் உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி… ஆகிய நாவல்களிலும் இவரது சமூக நோக்கு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இக்கட்டுரையில் குரு அரவிந்தன் அவர்களால் படைப்பாக்கம் செய்யப்பட்ட “இழப்பு” ,“மூன்றாவது பெண்”, “பனிச்சருக்கல்” , “என் காதலி ஒரு கண்ணகி” ஆகிய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை பற்றியே ஆராயப்படுகின்றது.
பெருங்கதையாய் விரியும் ஒரு சிறுகதை! 'காலச்சுவடு' சஞ்சிகையில் வெளிவந்த 'கங்காரு' சிறுகதையை முன்னிறுத்தி ஒரு ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


'அதிகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில் பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும்...
அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான்.....'
இந்த வரிகளை வாசிக்கும் போது கங்காருவுடனும் சயந்தனுடனும் சேர்ந்து, உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃபுரொய்ட் (Sigmund Freud )உம் ஞாபகத்தில் வரக் கூடும். கனவுகளுக்கு அர்த்தம் சொன்னவர்தான் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இந்த உளநோய் மருத்துவர்.
ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' சிறுகதைத்தொகுப்பு பற்றிச் சில குறிப்புகள்! - அ.வா. முஹ்சீன் -

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்தேன். அதை ஒட்டியதாக என்னுடைய இந்தக் குறிப்புகள் அமைந்துள்ளன.அவரது கதைகள் பிரதானமாக இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1 புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும். (இங்கு கனடா மையமாகக் கொள்ளப்படுகிறது.)
2 பெண்கள் மீது ஆண்களினால் பாலியல்ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும்!
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து கொள்வதில் பெரியளவிலான சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக முன்னர் புலம்பெயர்ந்தவர்களும் புதிதாகப் புலம்பெயர்ந்து செல்பவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். தலைமுறைகளுக்கு இடையிலான முரண்பட்ட நிலைமைகளும் புதிய சூழலை எதிர்கொள்வதில் அவர்கள் அடைகின்ற சிக்கல்களும் பல கதைகளில் நுணுக்கமாக எடுத்தாளப்பட்டுள்ளன.
கணனித்திருடன் திருடிய நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்கு! - ஊர்க்குருவி -

அண்மையில் 'வாட்ஸ்அப்' (WhatsApp) மூலம் நண்பர் ஒருவரிடமிருந்து செய்தி வந்திருந்தது. Please do me a favour என்ற தகவலைப் பார்த்ததும் விளங்கியது நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்கு கணனித் திருடன் ஒருவனால் அபகரிக்கப்பட்டு விட்டதென. அச்சமயம் நண்பரும் அலைபேசியில் அழைத்தார். தன் 'வாட்ஸ்அப்' கணக்கு இவ்விதம் கணனித் திருடன் ஒருவனால் திருடப்பட்ட விடயத்தைக் கூறினார். ஒருவர் இலங்கையிலிருந்து பணம் அனுப்பும்படி தகவலைத் தன் நண்பர்களுக்கு அனுப்புவதாகக் கூறினார். அவர் தன் 'வாட்ஸ்அப்' கணக்கை மீண்டும் இயுங்கும் நிலையில் பெறுவதற்கிடையில் அவரது நண்பர்களில் ஒருவர் பணம் அனுப்பி விட்டிருந்தார்.
இவ்விதம் அவரது 'வாட்ஸ்அப்' கணக்குத் திருடப்பட்டதை அவர் தவிர்த்திருக்க முடியாதா? இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் அவர் தடுத்திருக்கலாம். அவரது 'வாட்ஸ்அப்' கணக்கின் பாவனையாளர் பெயர், கடவுச்சொள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கணனித்திருடர் பெற்று விட்டிருக்கின்றார். அவர் அவற்றைப் பாவித்து நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்குக்குள் செல்ல முயற்சி செய்திருக்கின்றார். புதியதொரு அலைபேசியில் யாரோ ஒருவர் புக முயற்சி செய்வதைப்பார்த்த 'வாட்ஸ்அப்' நண்பரின் அலைபேசிக்குத் தகவலை அனுப்பி யாரோ ஒருவர் அவரது கணக்குக்குள் புக முயற்சி செய்கிறார். அவர் என்றால் அனுப்பும் இலக்கத்தைப்பாவித்து உட் செல்லவும். அத்துடன் அவ்விலக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கூறியுள்ளது.
கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.
நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.
அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.
சட்டமும் , முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்! - நந்திவர்ம பல்லவன் -

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அவர் குற்றமிழைத்திருக்கின்றார். கைது செய்யபப்ட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் ரணில் தன் வீட்டையே தான் படித்த கல்லூரிக்குக் கொடுத்தார். அதன் பெறுமதி 200 கோடி. அதைக்கொடுத்தார். இதைக்கொடுத்தார். பதவிக்குச் சம்பளம் வாங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியை சிறு குற்றத்துக்காகக் கைது செய்யக்கூடாது. இப்படி ஆளுக்கு ஆள் கூறுகின்றார்கள்.
இவர்களிடம் ஒரு கேள்வி?
மிகப்பெரும் பணக்காரரும், கொடை வள்ளலுமான ஒருவர் மிகவும் வேகமாகத் தன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றார். 40 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 100கிலோமீற்றர் / மணி வேகத்தில் செல்கின்றார். அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். அப்பொழுதும் இப்படித்தான் ரணில் 200 கோடி கொடுத்தார்,அவருக்கு அபராதக் கட்டணம் விதித்து 'டிக்கற்'கொடுக்கக்கூடாது என்பீர்களா?
'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) - வ.ந.கிரிதரன் -

அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும். அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.
அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார்.
பாரதியின் எழுத்தின் நோக்கமும், தன்மையும்
பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை. உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும்.
இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித் தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார். பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்:
“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "
இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.


