யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம் - நடேசன் -
* Photo by David Edelstein on Unsplash
மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது.
எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது.
யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது.